திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இன்மையுள் இன்மை விருந்து ஒரால்-ஒருவனுக்கு வறுமையுள் வைத்து வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-அதுபோல வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகை செய்தாரைப் பொறுத்தல்.(இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன் அல்லாத விருந்து ஒரால் பொருளுடைமை ஆகாதவாறுபோல, மடவார்ப் பொறையும் மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
வலிமையின்மையுள் வைத்து வலியின்மையாவது புதுமையை நீக்காமை: வலியுடைமையுள் வைத்து வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல்.
புதுமை யென்றது கேட்டறியாதது. நீக்காமை- பொறுமை.
தேவநேயப் பாவாணர் உரை:
இன்மையுள் இன்மை விருந்து ஒரால் - ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது விடுதல் ; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை - அதுபோல வலிமையுள் வலிமையாவது அறிவிலார் செய்த மிகையைப் பொறுத்துக் கொள்ளுதல்.
இது ஓர் உவமியத்திற்கு வேறோர் உவமியத்தை உவமமாக்கிய எடுத்துக் காட்டுவமை. ஒரால்-ஒருவுதல். உவமியம் பொருள்.
கலைஞர் உரை:
வறுமையிலும் கொடிய வறுமை; வந்த விருந்தினரை வரவேற்க
முடியாதது. அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின்
செயலைப் பொறுத்துக் கொள்வது.
சாலமன் பாப்பையா உரை:
வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(முற்றிலும் மறந்து விடுவது கடினம். மன்னிப்பதற்கு மனப் பெருமை வேண்டும்.) மனப் பெருமை இல்லாமையிலும் இல்லாமை, விருந்தினரை உபசரிக்காமல் விட்டுவிடுதல். மனப்பெருமையின் வல்லமையிலும் வல்லமை, அறிவில்லாதவர்கள் செய்துவிட்ட தீமைகளைப் பொறுத்து மன்னித்து விடுதல்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவனுக்கு வறுமையுள் மிகவும் வறுமையாவது விருந்தினரைப் போற்றாமல் நீக்குதலாகும். அதுபோல வல்லமையுள் மிகவும் வல்லமையாவது அறியாமையால் தீங்கு செய்தவர்களை பொறுத்துக்கொள்ளுவதாகும்.
Translation
The sorest poverty is bidding guest unfed depart;
The mightiest might to bear with men of foolish heart.
Explanation
To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.