இங்கு சிவன் மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகன், கோஷ்டத்தில் வனதுர்க்கை, கிராம தேவதையான செல்லியம்மன் ஆகியோர் உள்ளனர். ஆஞ்சநேயர் சன்னதி, சிவன் சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ளது. திருமால், ராமாவதாரம் எடுத்தபோது, அவருக்கு உதவுவதற்காக சிவனே ஆஞ்சநேயராக வந்தார். எனவே, ஆஞ்சநேயர் சிவஅம்சம் ஆகிறார். அவ்வகையில் இத்தலத்தில் சிவனே, தன்னை வழிபடும் கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.
எனவே இவரை, "சிவஆஞ்சநேயர்' என்றும், "சிவபக்த ஆஞ்சநேயர்' என்றும் அழைக்கிறார்கள். இவரே இத்தலத்தில் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது. சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும். அம்பாள் குந்தளநாயகி தனிச்சன்னதியில் அருளு கிறாள். வில்வம் இத்தலத்தின் விருட்சம். திருநாவுக்கரசர் இத்தலம் குறித்து பதிகம் பாடியுள்ளார். இக்கோயிலில் தெட்சிணாமூர்த்தி சற்று வலதுபுறமாக திரும்பியுள்ளார். |