வழக்கமாக அம்பாள் கோயில்களில், சன்னதியில் பூஜித்த எலுமிச்சை கனிகளைத்தான் பிரசாதமாகத் தருவர். இக்கோயிலில் எலுமிச்சை சாற்றைக் கொடுக்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே, இந்த பிரசாதம் கொடுக்கப்படும்.அம்பிகைக்கு இருபுறமும் ராகு, கேது நாக வடிவங்கள் உள்ளன. இவையிரண்டும் அம்பிகையின் கட்டுப்பாட்டின் கீழிருப்பதாக ஐதீகம்.
களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷத்தில் திருமணத்தடை ஏற்பட்ட பெண்களுக்கான பிரதான வழிபாட்டுத் தலம் இது. பெண்கள் அம்பிகைக்கு குளியல் மஞ்சள் படைத்து வேண்டிக் கொள்கிறார்கள். பின், அதையே பிரசாதமாகத் தருகின்றனர். தினமும் அந்த மஞ்சள் தேய்த்து பெண்கள் நீராடி வர, விரைவில் நல்ல வரன் அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த மஞ்சளின் வடிவிலேயே அம்பிகை, பக்தர்களின் வீட்டிற்கு எழுந்தருளுவாள் என்பது ஐதீகம்.
நோயால் பாதிக்கப்பட்ட கணவர் குணம் பெற, பெண்கள் இங்கு வேண்டி எருமைக்கன்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். எருமை எமதர்மனுக்குரிய வாகனம் என்பதன் அடிப்படையில் இந்த வழிபாட்டைச் செய்கின்றனர். |