திருவிழாக்காலங்களில் அம்பிகையின் பஞ்சலோக சிலையே உற்சவ அம்பாளாக வீதியுலா செல்லும். ஆனால், இங்கு பஞ்சலோக விக்கிரகம் இல்லை. அதற்கு பதிலாக பனை ஓலையில் செய்யப்பட்ட அம்பிகையை, உற்சவராக கருதி வழி படுகின்றனர்.மூலஸ்தானத்தில் அம்பிகையின் முழு உருவம் கிடையாது. இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதி மட்டுமே இருக்கிறது.
மூவேந்தர்களின் வேண்டுதல்படி அவர்களது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் தங்கிய அம்பிகை, இங்கு சோழ மன்னனுக்கு பாத தரிசனம் காட்டியருளினாள். எனவே, இங்கு அம்பிகையின் இடுப்பிற்கு கீழுள்ள பகுதி மட்டும் வடிக்கப்பட்டிருக்கிறது. இவளிடமுள்ள சூலம், அசுரனை வதம் செய்தபடி இருக்கிறது.அபிஷேகத்தின்போது மட்டுமே, இந்த அமைப்பை காண முடியும்.
மற்ற நேரங்களில் இந்த உருவத்திற்கு, அம்பிகையின் முழு உருவம் போல அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள். இந்த அம்பிகைக்கு பின்புறத்தில் பிற்காலத்தில் அம்பிகையின் முழு உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவள் கிழக்கு திசையை நோக்கியபடி காட்சி தருகிறாள். |