அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - வீடு எய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட்கு உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும், வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் ; - கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுவதையும் ஒருங்கே விடுதல் வேண்டும். (புலம் என்றது, அவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானும் அன்றி வாராத பொருள்கள் மேலல்லது வீட்டு நெறியாகிய யோகஞானங்களில் செலுத்தாமையின், அதனை 'அடல் வேண்டும்' என்றும், அஃது அப்பொருள்கள் மேல் செல்லின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், 'வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
துறப்பார்க்குப் பொறிக ளைந்தினுக்கும் நுகர்ச்சியான ஐந்தினையுங் கொல்லுதல் வேண்டும்: அதற்காகத் தாம் விரும்பின எல்லாவற்றையும் ஒரு காலத்திலே விடுதல் வேண்டும்.
தேவநேயப் பாவாணர் உரை:
ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - வீடு பெற விரும்புகின்றவன் ஐம்புல இன்ப நுகர்ச்சியையுங் கெடுத்தல் வேண்டும்; வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல்வேண்டும் - அதன்பின் அந்நுகர்ச்சியின் பொருட்டுத் தான் தேடிவைத்திருந்த பொருள்களை யெல்லாம் ஒருங்கே விட்டு விடுதல் வேண்டும்.
புல இன்ப நுகர்ச்சி வீடுபேற்று முயற்சியில் மனத்தைச் செலுத்துதற்குத் தடையாதலின் அதனை 'அடல் வேண்டும்' என்றும், அந்நுகர்ச்சிக் குரிய பொருள்கள் தன்னிடமிருப்பின் அதை விட்டமனம் மீண்டும் அவற்றின் மேற்செல்லுமாதலின் 'ஒருங்கே விடல் வேண்டும்' என்றுங் கூறினார். இதனாற் புறப்பற்று விடுதல் கூறப் பட்டது.
கலைஞர் உரை:
ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப் புலன்கள்
விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அப்படிப் பற்றுக்களையெல்லாம் முற்றும் விட் டொழிப்பது மிகவும் கடினந்தான். அதற்காக) ஐந்து இந்திரியங் களோடும் போராட வேண்டும். அவை விரும்புகின்ற எல்லா இன்பங்களையும் ஒருமிக்க விட்டொழிக்க வேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளுக்கு உரியனவாகிய ஐந்து புலன்களையும் அடக்கிக் கெடுத்தல் வேண்டும். அப்படிக் கெடுக்கும்போது தாம் நுகர்வதற்குப் படைத்த பொருள் முழுவதையும் ஒருங்கே விடுதல் வேண்டும்.
Translation
'Perceptions of the five' must all expire;-
Relinquished in its order each desire.
Explanation
Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired.