காவல் தெய்வமான ஐயனார் தம்மைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபடும் பக்தர்களின் குடும்பங்கள் சீரோடும், சிறப்போடும் வாழும் வகையில் அருள்பாலித்து வருகிறார். தன் பக்தர்கள் யாரும் வாழ்வில் இன்னல்பட்டு முடங்கிப் போகாமல் காத்து வருவதால் இந்த ஐயனாருக்கு மங்காமல் காத்த ஐயனார் என்று சிறப்புப் பெயரும் உண்டு. ஐயனார் கோயிலின் தலவிருட்சம், சிற்பங்களின் அமைப்பு, கட்டடத்தின் கலையம்சம் போன்றவற்றை பார்க்கும் போது, இக்கோயிலின் காலம் ஐந்நூறு ஆண்டுகள் பழமையானது என்பது தெரிய வருகிறது.
ஆனால் அதற்கும் முன்பாகவே சோழ மன்னர்கள் காலத்தில் ஆலமரம் அல்லது வேப்பமரத்தடியில் சுடுமண் உருவத்தில் ஐயனார் இங்கு வழிபாட்டில் இருந்திருக்கலாம் என்கின்றனர். 15-ஆம் நூற்றாண்டில் ஓட்டுக் கட்டடத்தில் கற்சிற்பங்களைக் கொண்டு கோயில் கட்டி வழிபாடு செய்துள்ளனர். பிறகு 17- ஆம் நூற்றாண்டில் கருங்கல் மற்றும் செங்கல் கதை கொண்டு மூலவர் கருவறையும் முன்மண்டபமும் கட்டப்பட்டுள்ளது.
அப்பரடிகள் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிவன் கோயிலுக்கு வரும் அன்பர்கள் ஐயனார் கோயிலுக்கும் வந்து செல்வது மரபாகும். நம்பியாண்டார் நம்பிகள் வழிபாடு செய்த பொல்லாப்பிள்ளையார் இக்கோயிலில் அருள்பாலித்து வருகிறார். தற்போது உள்ள மூலவரின் காலம் 17-ம் நூற்றாண்டு ஆகும். ஐயனாரின் பழைய சிலை 15ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. |