எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பணிதல் எல்லார்க்கும் நன்றாம் - பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து - அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வம் ஆம் சிறப்பினை உடைத்து. (பெருமிதத்தினைச் செய்யுங் கல்வியும் குடிப்பிறப்பும் உடையார் அஃது இன்றி அவை தம்மானே அடங்கியவழி அவ்வடக்கஞ் சிறந்து காட்டாது ஆகலின், 'செல்வர்க்கே செல்வம் தகைத்து' என்றார். 'செல்வத்தகைத்து' என்பது மெலிந்து நின்றது. பொது என்பாரையும் உடம்பட்டுச் சிறப்பாதல் கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும் பொதுவகையான் அடக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அடங்கியொழுகல் எல்லார்க்கும் நன்மையாம்: அவரெல்லாரினுஞ் செல்வமுடை
யார்க்கே மிகவும் நன்மை யுடைத்தாம்.
செல்வம் - மிகுதி.
தேவநேயப் பாவாணர் உரை:
பணிதல் எல்லார்க்கும் நன்றாம் - செருக்கின்றியடங்குதல் எல்லார்க்கும் பொதுவாக நல்லதாம்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வந் தகைத்து - ஆயினும், அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையவர்க்கே அது வேறொரு செல்வமாந் தன்மையதாகும்.
எல்லாராலும் மதிக்கப்படும் இயல்பும், எண்ணியதைச் செய்து முடிக்குந் திறனும், ஒட்டோலக்கமாக (ஆடம்பரமாக) வாழ்ந்தின்புறும் உயர்வும், இடம்பொருளேவலால் வரம்பிறந் தொழுகத் தூண்டும் நிலைமையும், உடைய செல்வரின் வாழ்க்கை அடக்கமுடைமைக்குப் பெரிதும் ஏற்காததாயிருப்பதால், அவரிடத்து அவ்வறம் அமைவது அவர்க்கு மற்றொரு செல்வப்பேறாம் என்றார். செல்வந் தகைத்து என்பது இன்னோசை பற்றி மெலிந்து நின்றது.
கலைஞர் உரை:
பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே
செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு
செல்வமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அந்த அடக்கம் செல்வமுடையவர்களிடமும் இருந்தால்,) பிறரிடத்தில் பணிவாக அடங்கி நடப்பது எல்லாருக்கும் நல்லதுதான், ஆனாலும் செல்வமுள்ளவர்களிடத்தில் அந்தப் பணிவான அடக்கம் அமையுமானால் அது செல்வத்தோடு செல்வம் சேர்ந்தது போலாகும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பணிந்து அடங்கி வாழ்தல் எல்லோருக்கும் நல்லதாகும். அவர்களுக்குள்ளும் செல்வர்களுக்குப் பணிவு இருந்து விட்டால், வேறொரு செல்வம் சேர்ந்தது போன்ற சிறப்பினையுடையதாகும்.
Translation
To all humility is goodly grace; but chief to them
With fortune blessed, -'tis fortune's diadem.
Explanation
Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches.