திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேம் என்று சொன்னேனாக; கண் நிறை நீர் கொண்டனள் - அதனான் ஏனை மறுமையாகிய பிறப்பின்கண் பிரிவல் என்னும் குறிப்பினேனாகக் கருதி, அவள் தன் கண்நிறைந்த நீரினைக் கொண்டாள் ( 'வெளிப்படுசொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொள்கின்றதல்லது என்பால் தவறில்லை', என்பதாம்.)
மணக்குடவர் உரை:
இப்பிறப்பிலே யாம் பிரியோமென்று சொன்னேனாக, அதனால் மறுபிறப்பின்கண் பிரிவுண்டென்று கருதிக் கண்ணிறைய நீர் கொண்டாள்.
தேவநேயப் பாவாணர் உரை:
இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியால். இப்பிறப்பில் நாம் ஒருபோதும் பிரியோம் என்று கூறினேனாக; கண் நிறை நீர் கொண்டனன் - அதனால் மறுபிறப்பில் நான் பிரிந்துபோவேனென்று குறித்ததாகக் கருதித் தன் கண்நிறையக் கண்ணீரைப் பெருக்கிவிட்டாள்.
நான் சொன்ன வெளிப்படைச் சொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொண்டதல்லது என்பால் தவறில்லை யென்பதாம்.
கலைஞர் உரை:
"இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்" என்று நான் சொன்னவுடன்
"அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது
நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?" எனக் கேட்டுக்
கண்கலங்கினாள் காதலி.
சாலமன் பாப்பையா உரை:
காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதைக் கண்ட நான்) “நான் வேறு பெண்களைக் காதலிப்பவனல்லன். இந்தப் பிறப்பில் உன்னை விட்டுப் பிரிந்து வேறெங்கும் போய்விட மாட்டேன்” என்றேன். அதற்கு அவள் (இந்தப் பிறப்பில் பிரியமாட்டேனென்றால் இனி வரும் பிறப்புக்களில் நான் அவளை விட்டுப் பிரிந்துவிடுவேனோ என்று வருந்தி) நிறையக் கண்ணீர் விட்டு அழுதுவிட்டாள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
காதல் மிகுதியால் இப்பிறப்பில் பிரியேன் என்று கூறினேன். அதனால் மறுபிறப்பில் பிரிவேன் என்று குறித்ததாகக் கருதி, தன்னுடைய கண்களில் நிறைந்த நீரினைக் கொண்டாள்.
Translation
'While here I live, I leave you not,' I said to calm her fears.
She cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tears.
Explanation
When I said I would never part from her in this life her eyes were filled with tears.