|
|||||
ஒரு நாகரிகத்தின் பயணம் சிந்துவெளிமுதல் வைகைவரை |
|||||
முனைவர்.சித்ரா மகேஷ் ,டெக்சாஸ்,அமெரிக்கா ஒடிசா மாநில அரசின் ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய 'Journey Of A Civilization: Indus To Vaigai' என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. நீதியரசர் ஆர்.மகாதேவன் நூலை வெளியிட, `Early Indians' நூலின் ஆசிரியரும், பத்திரிகையாளருமான டோனிஜோசப் பெற்றுக்கொண்டார். விழாவில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி என்.கோபால்சாமி, உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், கே.ராஜன், பி.ஜே.செரியன், தொழிலதிபர் சுப்ரோடோ பாக்சி, நடிகர் சிவகுமார், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ஆனந்த விகடனின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றுப் பேசும் போது, 35 ஆண்டுகளுக்கு முன்னர் சங்க இலக்கியங்களின் இரண்டு தொகுதிகளை மட்டும் மசூரியில் (Civil Service Academy) செல்லும்போது எதற்காக எனத் தெரியாமல் தன்னுடன் எடுத்துச் சென்றதன் பரிசே இந்தநூல் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் இந்த நூல் முழுமையாகத் தன் புரிதலின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று.
சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் என்று தொடர்ந்து தமிழ்நாட்டு மேடைகளில் பேசிவருகிறேன். இது இரண்டும் ஒன்றே என்பது என் உறுதியான கருத்து என்றார். இந்தியவியலின் இருபெரும் புதிர்களான சிந்துவெளிப் புதிரும், தமிழ்த் தொன்மப் புதிரும் ஒன்றோடொன்று தொடர்புடையவை மட்டுமல்ல. அவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அத்துடன் சங்க இலக்கியங்கள் உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தையும் பகிர்ந்து கொண்டார். 1935 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்திருந்த கே.என் தீக்ஷித் ’அகழ்வாராய்ச்சியாளர்கள் அகழ்ந்தெடுக்கப்படுவார்கள்” என்று பேசியதைக் குறிப்பிட்டு அவருக்கும், அமர்நாத், சிவானந்தம், உதயச்சந்திரன் ஆகியோரையும் குறிப்பிட்டுத் தன் நன்றியைத் தெரிவித்தார்.
உருகும் பானை பன்மையை உருக்கி ஒன்றாக்கி உருவமைக்கும் இடம் ஒருவகையில் ஒன்றான அனைத்தையுமே உருக்குலைக்கும் கலம் உருகும் பானை கலந்தவைக்கு மெருகூட்டுகிறது, வலிமையூட்டுகிறது. ஆனாலும் அதில் காணாமல் போன தனித்துவங்கள் தவித்து அழுகின்றன கண்ணில் படாமல், காதிலும் விழாமல்.
சாலட் கிண்ணத்தில் பல வண்ணப் பழங்களும், பல வண்ணக் காய்களும் இருக்கின்றன. ஆனாலும் அவையனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவை. என்னதான் இருந்தாலும் கிண்ணம் கிண்ணம்தான். கிண்ணங்கள் ஒருபோதும் நிலமும், பொழுதுமாய் நிற்பதில்லை. சாலட் அறுவடையின் பின்விளைவு, வேர்பிடித்து நிற்கும் ஒரு கரிம அனுபவமல்ல. இந்தியப் பண்பாடு ஒரு மலைக்காடு. மலைக்காடு மண்ணில் முளைப்பது. மண்ணில் செழிப்பது. மண்ணில் நிலைப்பது.
தரையிலிருந்து கூரை வரை இன்னும் அதையும் தாண்டி அடுக்கடுக்காய் நின்றாலும், ஒவ்வொரு அடுக்கிலும் கணக்கு வழக்கற்ற அடுக்குகள் இருக்கின்றன. ஒவ்வொரு அடுக்கிலும் கலந்துரையும் சூழிகளின் சூதுவாதற்ற நிதானம். மலைக்காடு் ஒரு நடைமுறை எதார்த்தம். கலந்துரைதல் என்பது மலைக்காட்டின் மேடை மொழியல்ல. வாழ்வியலின் சாரம். அதுவே திணைக்கோட்பாட்டிற்கான திறவுகோல் ஆதாரம். மலைக்காடு சிந்துவைப்போல், சங்க இலக்கியம்போல் தூரக் கணக்குகளுக்கும், காலக் கணக்குகளுக்கும் அவ்வளவு எளிதாகத் துலங்காத தொன்மத்தின் தொடர்ச்சியின் சாட்சியம். இதுவே இந்த நூல் அனைவருக்கும் சொல்ல வருகின்ற செய்தி எனக் கவிதையில் நூலின் கதை சொன்னது தனி அழகு.
இறுதியாகத் தன்னைத் தமிழ் மாணவனாக, ஒற்றை அடையாளமாகத் திகழ்வதற்கான வழியமைத்துக் கொடுத்துத் தமிழ்படிக்க வைத்த பெற்றோர்கள், தமிழாசிரியர்கள் புலவர் சோமநாதன், தமிழ்க்குடிமகன், பேராசிரியர் சாந்தா மற்றும் வழிநடத்திய தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வி.ஐ. சுப்ரமணியம், ஐராவதம் மகாதேவன் ஆகியோரையும், திரு.சுந்தர் மற்றும் குழுவினரையும் நன்றியோடு நினைவு கூர்ந்து மகிழ்ந்தார். அழகான தமிழ் வணக்கக் கவிதையோடு் தன் உரையை இன்முகத்தோடு் தமிழ் வணக்கம் சொல்லி முடித்தார். |
|||||
by Swathi on 22 Jan 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|