கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
('பேதைக்கு என் கண் படல் ஒல்லா', என்பது பற்றி 'அறிவிலராய மகளிரினும் அஃது உடையராய ஆடவரன்றே ஆற்றற்பாலர்', என்றாட்குச் சொல்லியது.) கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின் - கடல்போலக் கரையற்ற காம நோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப்போல; பெருந்தக்கது இல் - மிக்க தகுதியுடைய பிறப்பு உலகத்து இல்லை. ('பிறப்பு விசேடத்தால் அவ்வடக்கம் எனக்கு இல்லையாகா நின்றது, நீ அஃது அறிகின்றிலை', என்பதாம், இத்துணையும் தலைமகன்
மணக்குடவர் உரை:
கடலையொத்த காமநோயாலே வருந்தியும், மடலேற நினையாத பெண்பிறப்புப்போல மேம்பட்டது இல்லை. இது நும்மாற் காதலிக்கப்பட்டாள் தனக்கும் இவ்வருத்த மொக்கும்: பெண்டிர்க்கு இப்பெண்மையான் மடலேறாததே குறையென்று தலைமகன் ஆற்றாமை நீங்குதற்பொருட்டுத் தோழி கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(அறிவிலராய மகளிரினும் அதனையுடைய ஆடவரன்றோ காமநோயால் வருந் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளற்பாலர் என்ற தோழிக்குச் சொல்லியது . ) கடல் அன்ன காமம் உழந்தும் - கடல் போலக் கரையற்ற காமநோயால் வருந்தியும் , மடல் ஏறாப் பெண்ணின் பெருந்தக்கது இல் - அதை நீக்குதற்கு மடலேறாது ஆற்றியிருக்கும் பெண்பிறப்புப் போலப் பெருந்தகுதியுடைய பிறப்பு இவ்வுலகத்தில் வேறொன்றுமில்லை . அத்தகுதி ஆடவர்க்கு இயற்கையாக இன்மையை நீஅறிந்திலை போலும் என்பதாம் . இதுவரையுந் தலைமகன் கூற்று . உம்மை உயர்வு சிறப்பு .
கலைஞர் உரை:
கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை.
சாலமன் பாப்பையா உரை:
அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
கடல் போல மிகுந்த காம வேதனை அடைந்தாலும் (ஆண்களைப் போல வெட்கம் கெடும்படி) பெண்கள் மடலேறுவ தில்லை என்பதனால் அந்தப் பெண்ணியல்பைப் போல் சிறந்தது வேறில்லை.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
கடல்போல மிகுந்து வருகின்ற காமநோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாமல் பொறுத்திருக்கும் பெண் பிறப்புப் போல மிக்க சிறப்புடைய பிறப்பு வேறு எதுவும் இல்லை.
Translation
There's nought of greater worth than woman's long-enduring soul,
Who, vexed by love like ocean waves, climbs not the 'horse of palm'.
Explanation
There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.