கடுவினை அங்குரம் காட்டிஉள் அழுக்காறு எண்திசைச் சாகைகொண் டிருள்மனம் பொதுளி கொடுங்கொலை வடுத்து கடும்பழிச் சடைஅலைந்து இரண்டுஐஞ் ஞூறு திரண்டஅக் காவதம் சுற்றுடல் பெற்று, துணைப்பதி னாயிரம் (5)
மற்றதின் நீண்டு மணிவுடல் போகி ஐம்பது நூறுடன் அகன்றுசுற் றொழுக்கி பெருங்கவிழ் இணர்தந்து அவைகீழ்க் குலவிய அடல்மாக் கொன்ற நெடுவேற் குளவன் குன்றவர் வள்ளிஅம் கொடியொடு துவக்கிப் (10)
பன்னிரு கண்விரித்து என்வினை துரக்கும் அருட்பரங் குன்றம் உடுத்தணி கூடல் குறும்பிறை முடித்த நெடுஞ்சடை ஒருத்தனைத் தெய்வம் கொள்ளார் சிந்தைஅது என்னக் கிடந்தவல் இரவில் கிளர்மழை கான்ற (15)
அவலும் உம்பரும் அடக்குபுனல் ஒருவி தேஅருள் கல்லார் சிந்தையின் புரண்ட கவலையும் காற்குறி கண்டுபொழில் துள்ளும் இமையாச் சூரும் பலகண்டு ஒருங்காத் துடியின் கண்ணும் துஞ்சாக் கண்ணினர் (20)
கடியும் துனைவில் கையகன்று எரிமணித் தொகையிருள் கொல்லும் முன்றில் பக்கத்து இணைமுகப் பறைஅறை கடிப்புடைத் தோகை வயிற்றுள் அடக்கி வளைகிடை கிடக்கும் முழக்கிமெய் கவரும் முகக்கொலை ஞாளி (25)
அதிர்குரைப்பு அடக்கி இற்புறத்து அணைந்தநம் பூம்புனல் ஊரனை பொருந்தா நெடுங்கண் அன்னையின் போக்கிய அரும்பெருந் தவறு மாலையும் கண்ணும் மேனியும் உள்ளமும் மயங்காத் தேவர் மருந்துவாய் மடுக்க (30)
முகம்கவிழ் வேலையில் அறம்குடி போகிய மாயவல் அரக்கர் தட்டிக் காய்பார் உகுத்த விதிஒத் தனவே. (33)
|