ஆயிரம் பணாடவி அரவுவாய் அணைத்துக் கருமுகில் நிறத்த கண்ணனின் சிறந்து நிறையுடல் அடங்கத் திருவிழி நிறைத்துத் தேவர்நின் றிசைக்கும் தேவனின் பெருகி குருவளர் மரகதப் பறைத்தழை பரப்பி (5)
மணிதிரை உகைக்கும் கடலினின் கவினி முள்எயிற்று அரவம் முறித்துயிர் பருகிப் புள்எழு வானத்து அசனியின் பொலிந்து பூதம் ஐந்துடையும் காலக் கடையினும் உடல்தழை நிலைத்த மறம்மிகு மயிலோன் (10)
புரந்தரன் புதல்வி எயினர்தம் பாவை இருபால் இலங்க உலகுபெற நிறைந்த அருவிஅம் குன்றத்து அணிஅணி கூடற்கு இறையவன் பிறையவன் கறைகெழு மிடற்றோன் மலர்க்கழல் வழுத்தும்நம் காதலர் பாசறை (15)
முனைப்பது நோக்கிஎன் முனைஅவிழ் அற்றத்து பெரும்பக லிடையே பொதும்பரில் பிரிந்த வளைகட் கூருகிர்க் கூக்குரல் மோத்தையை கருங்கட் கொடியினம் கண்ணறச் சூழ்ந்து புகைஉடல் புடைத்த விடன்வினை போல (20)
மனம்கடந்து ஏறா மதில்வளைத்து எங்கும் கருநெருப்பு எடுத்த மறன்மருள் மாலை நின்வரற்கு ஏவர் நல்கின நின்வரல் கண்டுடல் இடைந்தோர்க் காட்டுதும் காண்மதி மண்ணுடல் பசந்து கறுத்தது விண்ணமும் (25)
ஆற்றாது அழன்று காற்றின் முகம்மயங்கி உடுஎனக் கொப்புள் உடல்நிறை பொடித்தன ஈங்கிவற் றடங்கிய இருதிணை உயிர்களும் தம்முடன் மயங்கின ஒடுங்கின உறங்கின அடங்கின அவிந்தன அயர்ந்தன கிடந்தன (30)
எனப்பெறின் மாலை என்னுயிர் உளைப்பதும் அவர்திறம் நிற்பதும் ஒருபுடை கிடக்க உள்ளது மொழிமோ நீயே விண்ணுழை வந்தனை என்னில் வரும்குறி கண்டிலன் மண்ணிடை எனினே அவ்வழி யான (35)
கூடிநின் றனைஎனின் குறிதவ றாவால் தேம்படர்ந் தனைஎனின் திசைகுறிக் குநரால் ஆதலின் நின்வரவு எனக்கே ஓதல் வேண்டும் புலன்பெறக் குறித்தே. (39)
|