செங்கோல் திருவுடன் தெளிந்தறம் பெருக்கிய மறுபுல வேந்தன் உறுபடை எதிர்ந்த கொடுங்கோல் கொற்றவன் நெடும்படை அனைத்தும் சேர இறந்த *திருக்தகு நாளில் அவன்பழி நாட்டு நடுங்குநற் குடிகள் (5)
கண்ணொடு கண்ணில் கழறிய போல ஒருவரின் ஒருவர் உள்ளத்து அடக்கித் தோன்றா நகையுடன் துண்டமும் சுட்டி அம்பல் தூற்றும் இல்வூர் அடக்கி கடல்கிடந் தன்ன நிரை நிரை ஆய (10)
வெள்ளமும் மற்றவர் கள்ளமும் கடந்து தாயவர் மயங்கும் தனித்துயர் நிறுத்தி பறவை மக்களைப் பரியுநர்க் கொடுத்து கிடைப்பல் யானே நும்மை தழைத்தெழு தாளியும் கொன்றையும் தழைத்தலின் முல்லையும் (15)
பாந்தளும் தரக்கும் பயில்தலின் குறிஞ்சியும் முடைத்தலை எரிபொடி உடைமையின் பாலையும் ஆமையும் சலமும் மேவலின் மருதமும் கடுவும் சங்கும் ஒளிர்தலின் நெய்தலும் ஆகத் தனது பேரருள் மேனியில் (20)
திணைஐந்து அமைத்த இணைஇலி நாயகன் வரும்தொழில் அனைத்தும் வளர்பெரும் பகலே எரிவிரிந் தன்ன இதழ்ப்பல் தாமரை அருள்முகத் திருவொடு மலர்முகம் குவிய மரகதப் பாசடை இடையிடை நாப்பன் (25)
நீலமும் மணியும் நிரைகிடந் தென்ன வண்டொடு குமுதம் மலர்ந்து இதழ்விரிப்ப குருகும் சேவலும் பார்ப்புடன் வெருவிப் பாசடைக் குடம்பை யூடுகண் படுப்ப துணையுடன் சகோரம் களியுடன் பெயர்ந்து (30)
விடும் அமு தருந்த விண்ணகத்து அணக்க சுரிவளைச் சாத்து நிறைமதி தவழும் எறிதிரைப் பழனக் கூடல் செறிக இன்றம்ம திருவொடும் பொலிந்தே (35)
|