|
||||||||
நான்காம் திருமுறை-23 |
||||||||
4.023.கோயில்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர்.
தேவியார் - சிவகாமியம்மை.
229 பத்தனாய்ப் பாட மாட்டேன்
பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கே
னென்னைநீ யிகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை
யம்பலத் தாடு கின்ற
அத்தாவுன் னாடல் காண்பா
னடியனேன் வந்த வாறே.
4.023.1
அநாதியான வினையின் நீங்கியவனே! எல்லாருக்கும் முற்பட்டவனே! தில்லை அம்பலத்தே ஆடுகின்ற தலைவனே! மேம்பட்டவனே! மேம்பட்ட யோகியே! அடியேன் பத்தனாய்ப் பாடும் ஆற்றல் இல்லேன். யாதனால் அடியேன் பத்தி செய்வேன்? அடியேனை நீ இகழவேண்டா. அடியேன் உன் ஆடலைக் காணத் தில்லை வந்துள்ளேன்.
230 கருத்தனாய்ப் பாட மாட்டேன்
காம்பன தோளி பங்கா
ஒருத்தரா லறிய வொண்ணாத்
திருவுரு வுடைய சோதீ
திருத்தமாந் தில்லை தன்னுட்
டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
நிருத்தநான் காண வேண்டி
நேர்பட வந்த வாறே.
4.023.2
மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி பாகனே! ஒருவராலும் அறியமுடியாத அழகிய ஒளிவடிவு உடையவனே! பரிசுத்தமாயுள்ள தில்லையிலே விளங்குகின்ற சிற்றம்பலத்தில் உன் திருக்கூத்தைக் காணவேண்டி உன்னை உள்ளத்தில் இருத்தி கருத்தொன்றிப் பாடமாட்டாதேனாகிய அடியேன் வந்துள்ளேன்.
231 கோட்டிலேன் கிளைபி ரியேன்
கேட்குமா கேட்டி யாகில்
நாட்டினே னின்றன் பாதம்
நடுப்பட நெஞ்சி னுள்ளே
மாட்டினீர் வாளை பாயு
மல்குசிற் றம்ப லத்தே
கூட்டமாங் குவிமு லையாள்
கூடநீ யாடு மாறே.
4.023.3
அடியேன் இதற்குமுன் உன் பெருமையை உள்ளவாறு கேட்டறியேன். இப்பொழுது உன் அடியார்குழாத்தைப் பிரியாமல் உன் பெருமையைக் கேட்குமாறு கேட்பித்தருளி உதவுவாயானால், நீர் நிலைகளில் வாளை மீன்கள் பாயும் வளம் மிகுஞ் சிற்றம்பலத்திலே உன்னோடு கூடியிருக்கும் குவிந்த தனங்களை உடைய பார்வதியோடு கூட நீ ஆடுமாற்றால் (ஆடுதலின் பேறாக) உன் திருவடிகளை நெஞ்சின் நடுவிலே உறுதியாக நிலை நிறுத்தினேன் ஆவேன்.
232 சிந்தையைத் திகைப்பி யாதே
செறிவுடை யடிமை செய்ய
எந்தைநீ யருளிச் செய்யா
யாதுநான் செய்வ தென்னே
செந்தியார் வேள்வி யோவாத்
தில்லைச்சிற் றம்ப லத்தே
அந்தியும் பகலு மாட
அடியிணை யலசுங் கொள்லோ.
4.023.4
சிவந்த தீயை ஓம்பும் அந்தணர்களுடைய வேள்விச் செயல்கள் நீங்காத தில்லைச் சிற்றம்பலத்தே அந்தியும் பகலும் நீ கூத்து நிகழ்த்துதலால் உன் திருவடிகள் சோர்வு அடையும்போலும். அடியேன் உள்ளத்தை உலகப் பொருள் நுகர்ச்சியிலிருந்து மாறுபடும் படியாகச் செய்யாமலும் உன்னை அணுகிச் செய்யும் அடிமைத் திறத்தை அடியேனுக்கு அருள் செய்யாமலும் உள்ளாய். இனி அடியேன் செயற்பாலது யாது உள்ளது?
233 கண்டவா திரிந்து நாளுங்
கருத்தினா னின்றன் பாதங்
கொண்டிருந் தாடிப் பாடிக்
கூடுவன் குறிப்பி னாலே
வண்டுபண் பாடுஞ் சோலை
மல்குசிற் றம்ப லத்தே
எண்டிசை யோரு மேத்த
விறைவநீ யாடு மாறே.
4.023.5
அடியேன் அனுபவத்தில் கண்டவாறு ஞான நிலைக்குப் பொருந்தியவண்ணம் உலகியலுக்கு மாறுபட்டு உள்ளத்தில் நின் திருவடிகளை நிலையாகக் கொண்டு ஆடிப்பாடி உன் திருவருட் குறிப்பினாலேயே, வண்டுகள் பண்களைப்பாடும் சோலைகள் மிகுந்த சிற்றம்பலத்திலே எட்டுத் திசைகளில் உள்ளவர்களும் துதிக்குமாறு இறைவனாகிய நீ ஆடும் கூத்தினைக் காண்பதற்கு வந்து சேருவேன்.
234 பார்த்திருந் தடியனே னான்
பரவுவன் பாடி யாடி
மூர்த்தியே னென்ப னுன்னை
மூவரின் முதல்வ னென்பன்
ஏத்துவா ரிடர்க டீர்ப்பாய்
தில்லைச்சிற் றம்ப லத்துக்
கூத்தாவுன் கூத்துக் காண்பான்
கூடநான் வந்த வாறே.
4.023.6
வழிபடும் அடியவர்களுடைய துயரங்களைத் தீர்ப்பவனே! தில்லைச் சிற்றம்பலத்தில் உள்ள கூத்தனே! உன் கூத்தினைப் பார்த்து இருந்து உன்னை முன்னின்று துதிப்பேன். ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் உன்னை மூவரினும் முதல்வனாகிய மூர்த்தியே என்று அழைப்பேன். உன் கூத்தினைக் காண்பதற்கு அடியவருடன் நான் வந்தவாறு இதுவாம்.
235 பொய்யினைத் தவிர விட்டுப்
புறமலா வடிமை செய்ய
ஐயநீ யருளிச் செய்யா
யாதியே யாதி மூர்த்தீ
வையகந் தன்னின் மிக்க
மல்குசிற் றம்ப லத்தே
பையநுன் னாடல் காண்பான்
பரமநான் வந்த வாறே.
4.023.7
அழியும் பொருள்களிலுள்ள பற்றினை நீங்குமாறு விடுத்து அகத்தடிமையாகிய மெய்யடிமையைச் செய்ய, என் தலைவனே! எல்லோர்க்கும் ஆதியாய முதல் தெய்வமே! நீ அருள் செய்வாயாக. இவ்வுலகிலே மேம்பட்ட மிகுஞ் சிதம்பரத்தில் உன் கூத்தினை சற்றே காண அடியேன் வந்தவாறு இதுவாம்.
236 மனத்தினார் திகைத்து நாளு
மாண்பலா நெறிகண் மேலே
கனைப்பரா லென்செய் கேனோ
கறையணி கண்டத் தானே
தினைத்தனை வேதங் குன்றாத்
தில்லைச்சிற் றம்ப லத்தே
அனைத்துநின் னிலயங் காண்பா
னடியனேன் வந்த வாறே.
4.023.8
விடக்கறையை அணிந்த நீலகண்டனே! அடியேனுடைய மனம் நிலைகொள்ளாமல் தடுமாறி நாள்தோறும் பெருமை தாராத வழிகளிலே செருக்கித் திரிகின்றது. அடியேன் யாது செய்வேன். வேதங்களை ஓதுந்திறஞ் சிறிதளவுங் குறைவுபடாத தில்லைச் சிற்றம்பலத்தில் உன் இருப்பிடத்தைத் தரிசிப்பதற்கு அடியேன் வந்தவாறு இதுவாம்.
237 நெஞ்சினைத் தூய்மை செய்து
நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ
வானவர் தலைவ னேநீ
மஞ்சடை சோலைத் தில்லை
மல்குசிற் றம்ப லத்தே
அஞ்செலாள் காண நின்று
வழகநீ யாடு மாறே.
4.023.9
தேவர்கள் தலைவனே! அடியேனுடைய நெஞ்சினைத் தூய்மை செய்து உன்னை எப்பொழுதும் அடியேன் நினைக்குமாறு திருவுள்ளம் பற்றாமல் வஞ்சனை செய்கின்றாயே. மேகங்கள் தங்குதற்கு வந்து சேரும் உயரமான சோலைகளையுடைய தில்லையம்பதியிற் சிதம்பரத்திலே அழகிய சொற்களையுடைய பார்வதிக்கான நீ ஆடும் திறம் இருந்தவாறு என்னே!
238 மண்ணுண்ட மால வனு
மலர்மிசைமன்னி னானும்
விண்ணுண்ட திருவு ருவம்
விரும்பினார்காண மாட்டார்
திண்ணுண்ட திருவே மிக்க
தில்லைச்சிற்றம்ப லத்தே
பண்ணுண்ட பாட லோடும்
பரமநீ யாடுமாறே.
4.023.10
பூமியை உண்ட திருமாலும், மலர்மேலுறையும் பிரமனும் விண்ணளவும் ஒளிநிறைந்த உன் திருவுருவைக் காணும் வேட்கையராயிருந்துமே, தானாக நிலைத்துத் திணிந்திருக்கும் சிவத்திரு மேம்பட்ட தில்லைச் சிற்றம்பலத்தின் கண்ணே பண்ணுக்கு அமைந்த பாடல் ஒலிகளின் இடையே பரம்பொருளாகிய நீ வெளிப்படையாக ஆடுமாற்றை - அதன் மாண்பை (இன்னும்) காணமாட்டாராகின்றனர். (அவர் விதி இருந்தவாறென்னே!)
திருச்சிற்றம்பலம்
4.023.கோயில் |
||||||||
by Swathi on 25 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|