எதிர்பாராத முத்தம் - பகுதி 1
முதற்பகுதி
1. பெண்ணழகி தண்ணீர்த்துறைக்கு
உலகம் விளக்கம் உறக்கீழ்த் திசையில் மலர்ந்தது செங்கதிர்! மலர்ந்தது காலை!
வள்ளியூர் தன்னில் மறைநாய்கன் வீட்டுப் புள்ளிமான் வௌியிற் புறப்பட் டதுவாம்!
நீலப் பூவிழி நிலத்தை நோக்கக் கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச்
செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும் அப்படி இப்படி வலதுகை யசைத்தும்
புறப்பட்ட மங்கைதான் பூங்கோதை என்பவள். நிறப்பட் டாடை நெகிழ்ந்தது காற்றில்!
பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம் சீதளம் சிந்திற்றாம்! செவ்விதழ் மின்னிற்றாம்!
பெண்ணழகி அன்னப் பேடுபோல் செல்கையில், வண்ணக் கலாப மயில்போல் மற்றொரு
வனிதை வழக்கப் படிவந்து சேர்ந்தாள். புனிதை அவள்பெயர். புனல்மொள்ளு தற்கும்
குளிப்ப தற்கும் சென்றார் குளக்கரை நோக்கிக் கொஞ்சிப் பேசியே! |
2. நீராடு பெண்ணினத்தாரோடு பூங்கோதை!
வள்ளியூர்த் தென்பு றத்து வனசப்பூம் பொய்கை தன்னில் வெள்ளநீர் தளும்ப, வெள்ள மேலெலாம் முகங்கள், கண்கள்; எள்ளுப்பூ நாசி, கைகள் எழிலொடு மிதக்கப் பெண்கள் தெள்ளுநீ ராடு கின்றார்! சிரிக்கின்றார், கூவு கின்றார்!
பச்சிலைப் பொய்கை யான நீலவான் பரப்பில் தோன்றும் கச்சித முகங்க ளென்னும் கறையிலா நிலாக்கூட் டத்தை அச்சம யம்கி ழக்குச் சூரியன் அறிந்து நாணி உச்சி ஏறாது நின்றே ஒளிகின்றான் நொச்சிக் குப்பின்!
படிகத்துப் பதுமை போன்றாள் நீந்துவாள் ஒருத்தி! பாங்காய் வடிகட்டும் அமுதப் பாட்டை வானெலாம் இறைப்பாள் ஓர்பெண்! கடிமலர் மீது மற்றோர் கைம்மலர் வைத்துக் கிள்ளி மடிசேர்ப்பாள் மற்றொ ருத்தி! வரும்மூழ்கும் ஓர்பொன் மேனி!
புனலினை இறைப்பார்! ஆங்கே பொத்தென்று குதிப்பார் நீரில்! "எனைப்பிடி" என்று மூழ்கி இன்னொரு புறம்போய் நிற்பார்! புனைஉடை அவிழ்த்துப் பொய்கைப் புனலினை மறைப்பார் பூத்த இனமலர் அழகு கண்டே 'இச்' சென்று முத்தம் ஈவார்.
மணிப்புனல் பொய்கை தன்னில் மங்கைமார் கண்ணும், வாயும் அணிமூக்கும், கையும் ஆன அழகிய மலரின் காடும், மணமலர்க் காடும் கூடி மகிச்சியை விளைத்தல் கண்டோம்! அணங்குகள் மலர்கள் என்ற பேதத்தை அங்கே காணோம்!
பொய்கையில் மூழ்கிச் செப்பில் புதுப்புனல் ஏந்திக் காந்த மெய்யினில் ஈர ஆடை விரித்துப்பொன் மணி இழைகள் வெய்யிலை எதிர்க்கப் பெண்கள் இருவர் மூவர்கள் வீதம் கைவீசி மீள லுற்றார் கனிவீசும் சாலை மார்க்கம்! |
3. பூங்கோதை - பொன்முடி
பூங்கோதை வருகின்றாள் புனிதையோடு! பொன்முடியோ எதிர்பாரா விதமாய்முத்து வாங்கப்போ கின்றான்அவ் வழியாய்!வஞ்சி வருவோனைத் தூரத்தில் பார்த்தாள்;அன்னோன் பூங்கோதை யாஎன்று சந்தேகித்தான்! போனவரு ஷம்வரைக்கும் இரண்டுபேரும் வங்காத பண்டமில்லை; உண்ணும்போது மனம்வேறு பட்டதில்லை. என்னஆட்டம்!
அத்தானென் றழைக்காத நேரமுண்டா! அத்தைமக ளைப்பிரிவா னாஅப்பிள்ளை! இத்தனையும் இருகுடும்பம் பகையில்மூழ்கி இருந்ததனை அவன்நினைத்தான்! அவள்நினைத்தாள்! தொத்துகின்ற கிளிக்கெதிரில் அன்னோன்இன்பத் தோளான மணிக்கிளையும் நெருங்கமேலும் அத்தாணி மண்டபத்து மார்பன்அண்டை அழகியபட் டத்தரசி நெருங்கலானாள்!
"என்விழிகள் அவர்விழியைச் சந்திக்குங்கால் என்னவிதம் நடப்ப"தென யோசிப்பாள்பெண்; ஒன்றுமே தோன்றவில்லை; நிமிர்ந்தேஅன்னோன் ஒளிமுகத்தைப் பார்த்திடுவாள்; குனிந்துகொள்வாள்! சின்னவிழி ஒளிபெருகும்! இதழ்சிரிக்கும்! திருத்தமுள்ள ஆடைதனைத் திருத்திக்கொள்வாள்! "இன்னவர்தாம் என்அத்தான்" என்றேஅந்த எழிற்புனிதை யிடம்விரல்சுட் டாதுசொன்னாள்!
பொன்முடியோ முகநிமிர்ந்து வானிலுள்ள புதுமையெலாம் காண்பவன்போல் பூங்கோதைதன் இன்பமுகம் தனைச்சுவைப்பான் கீழ்க்கண்ணாலே, 'இப்படியா' என்றுபெரு மூச்செறிந்தே, "என்பெற்றோர் இவள்பெற்றோர் உறவுநீங்கி இருப்பதனால் இவளென்னை வெறுப்பாளோ?நான் முன்னிருந்த உறவுதனைத் தொடங்கலாமோ முடியாதோ" என்றுபல எண்ணிநைவான்.
எதிர்ப்பட்டார்! அவன்பார்த்தான்; அவளும்பார்த்தாள்; இருமுகமும் வரிவடிவு கலங்கிப்பின்னர் முதல்இருந்த நிலைக்குவர இதழ்சிலிர்க்க, முல்லைதனைக் காட்டிஉடன் மூடிமிக்க அதிகரித்த ஒளிவந்து முகம்அளாவ அடிமூச்சுக் குரலாலே ஒரேநேரத்தில் அதிசயத்தைக் காதலொடு கலந்தபாங்கில் "அத்தான்","பூங் கோதை"என்றார்! நின்றார்அங்கே.
வையம் சிலிர்த்தது.நற் புனிதையேக, மலைபோன்ற நீர்க்குடத்தை ஒதுங்கிச்சென்று `கையலுத்துப் போகு'தென்று மரத்தின்வேர்மேல் கடிதுவைத்தாள்; "அத்தான்நீர் மறந்தீர்என்று மெய்யாக நான்நினைத்தேன்" என்றாள்.அன்னோன் வெடுக்கென்று தான்அனைத்தான். "விடாதீர்"என்றாள்! கையிரண்டும் மெய்யிருக, இதழ்நிலத்தில் கனஉதட்டை ஊன்றினான் விதைத்தான்முத்தம்!
உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும்உள்ள உடலிரண்டின் அணுவனைத்தும் இன்பம்ஏறக் கைச்சரக்கால் காணவொண்ணாப் பெரும்பதத்தில் கடையுகமட் டும்பொருந்திக் கிடப்பதென்று நிச்சயித்த மறுகணத்தில் பிரியநேர்ந்த நிலைநினைத்தார்; "அத்தான்"என் றழுதாள்!அன்னோன், "வைச்சேன்உன் மேலுயிரைச் சுமந்துபோவாய்! வரும்என்றன் தேகம்.இனிப் பிரியா"தென்றான்!
"நீர்மொண்டு செல்லுபவர் நெருங்குகின்றார்; நினைப்பாக நாளைவா" என்றுசொன்னான். காரிகையாள் போகலுற்றாள்; குடத்தைத்தூக்கிக் காலடிஒன் றெடுத்துவைப்பாள்; திரும்பிப்பார்ப்பாள்! ஓரவிழி சிவப்படைய அன்னோன்பெண்ணின் ஒய்யார நடையினிலே சொக்கிநிற்பான்! "தூரம்"எனும் ஒருபாவி இடையில்வந்தான் துடித்ததவர் இருநெஞ்சும்! இதுதான்லோகம்! |
4. அவன் உள்ளம்
அன்று நடுப்பகல் உணவை அருந்தப் பொன்முடி மறந்து போனான்! மாலையில்
கடைமேல் இருந்தான்; கணக்கு வரைதல் இடையில் வந்தோ ரிடம்நலம் பேசுதல்
வணிகர் கொண்டு வந்த முத்தைக் குணம் ஆராய்ந்து கொள்முதல் செய்தல்
பெருலா பத்தொடு பெறத்தகும் முத்து வரின்அதைக் கருத்தோடு வாங்க முயலுதல்
ஆன இவற்றை அடுத்தநாள் செய்வதாய் மோனத் திருந்தோன் முடிவு செய்து
மந்தமாய்க் கிடந்த மாலையை அனுப்பி வந்தான் வீடு! வந்தான் தந்தை!
தெருவின் திண்ணையிற் குந்தி இருவரும் பேசி யிருந்தனர் இரவிலே!
"விற்று முதல்என்ன? விலைக்குவந்த முத்திலே குற்றமில் லையே?நீ கணக்குக் குறித்தாயா?"
என்று வினவினான் தந்தை. இனியமகன், "ஒன்றும்நான் விற்கவில்லை; ஓர்முத்தும் வாங்கவில்லை;
அந்தி வியாபாரம் அதுஎன்ன மோமிகவும் மந்தமாயிற்" றென்றான். மானநாய்க்கன் வருந்திக்
"காலையிலே நீபோய்க் கடையைத்திற! நானவ் வேலனிடம் செல்கின்றேன்" என்று விளம்பினான்.
"நான்போய் வருகின்றேன் அப்பா நடைச்சிரமம் ஏன்தங்கட்" கென்றான் இனிதாகப் பொன்முடியான்.
"இன்றுநீ சென்றதிலே ஏமாற்றப் பட்டாய்;நான் சென்றால் நலமன்றோ" என்றுறைத்தான் சீமான்.
"தயவுசெய்து தாங்கள் தடைசெய்ய வேண்டாம்; வெயிலுக்கு முன்நான்போய் வீடுவருவேன்" என்றான்.
"வேலன்முத் துக்கொடுக்க வேண்டும்; அதுவன்றிச் சோலையப்பன் என்னைவரச் சொல்லி யிருக்கின்றான்;
ஆதலினால் நான்நாளை போவ தவசியம்.நீ ஏதும் தடுக்காதே" என்றுமுடித் தான்தந்தை.
ஒப்பவில்லை! மீறி உரைக்கும் வழக்கமில்லை! அப்பா விடத்தில் அமுதை எதிர்பார்த்தான்!
அச்சமயம் சோறுண்ண அன்னை அழைத்திட்டாள்; நச்சுண்ணச் சென்றான் நலிந்து. |
5. பண்டாரத் தூது
பகலவன் உதிப்ப தன்முன் பண்டாரம் பூக்கொ ணர்ந்தான். புகலுவான் அவனி டத்தில் பொன்முடி: "ஐயா, நீவிர் சகலர்க்கும் வீடு வீடாய்ப் பூக்கட்டித் தருகின் றீர்கள் மகரவீ தியிலே உள்ள மறைநாய்கன் வீடும் உண்டோ?
மறைநாய்கன் பெற்ற பெண்ணாள், மயில்போலும் சாயல் கொண்டாள். நிறைமதி முகத்தாள்; கண்கள் நீலம்போல் பூத்தி ருக்கும்; பிறைபோன்ற நெற்றி வாய்ந்தாள்; பேச்செல்லாம் அமுதாய்ச் சாய்ப்பாள்; அறையுமவ் வணங்கை நீவிர் அறிவீரா? அறிவீ ராயின்
சேதியொன் றுரைப்பேன்; யார்க்கும் தெரியாமல் அதனை அந்தக் கோதைபால் நீவிர் சென்று கூறிட ஒப்பு வீரா? காதைஎன் முகத்தில் சாய்ப்பீர்! கையினில் வராகன் பத்துப் போதுமா?" என்று மெல்லப் பொன்முடி புலம்பிக் கேட்டான்.
"உன்மாமன் மறைநாய் கன்தான் அவன்மகள் ஒருத்தி உண்டு; தென்னம் பாலை பிளந்து சிந்திடும் சிரிப்புக் காரி! இன்னும்கேள் அடையா ளத்தை; இடைவஞ்சிக் கொடிபோல் அச்சம் நன்றாகத் தெரியும்! நானும் பூஅளிப் பதும்உண்" டென்றான்.
"அப்பாவும் மாம னாரும் பூனையும் எலியும் ஆவார்; அப்பெண்ணும் நானும் மெய்யாய் ஆவியும் உடலும் ஆனோம்! செப்பேந்தி அவள் துறைக்குச் செல்லுங்கால் சென்று காண ஒப்பினேன்! கடைக்குப் போக உத்திர விட்டார் தந்தை.
இமைநோக என்னை நோக்கி இருப்பாள்கண் திருப்ப மாட்டாள்; சுமைக்குடம் தூக்கி அந்தச் சுடர்க்கொடி காத்தி ருந்தால் 'நமக்கென்ன என்றி ருத்தல் ஞாயமா?' நீவிர் சென்றே அமைவில்என் அசந்தர்ப் பத்தை அவளிடம் நன்றாய்ச் சொல்லி
சந்திக்க வேறு நேரம் தயவுசெய் துரைக்கக் கேட்டு வந்திட்டால் போதும் என்னைக் கடையிலே வந்து பாரும். சிந்தையில் தெரிவாள்; கையால் தீண்டுங்கால் உருவம் மாறி அந்தரம் மறைவாள்; கூவி அழும்போதும் அதையே செய்வாள்.
வையத்தில் ஆண்டு நூறு வாழநான் எண்ணி னாலும் தையலை இராத்தி ரிக்குள் சந்திக்க வில்லை யானால், மெய்யெங்கே? உயிர்தா னெங்கே? வெடுக்கென்று பிரிந்து போகும். `உய்யவா? ஒழிய வா?'என் றுசாவியே வருவீர்" என்றான்.
பண்டாரம் ஒப்பிச் சென்றான். பொன்முடி பரிவாய்ப் பின்னும் கண்டபூங் கோதை யென்னும் கவிதையே நினைப்பாய், அன்னாள் தண்டைக்கால் நடை நினைத்துத் தான்அது போல் நடந்தும், ஒண்டொடி சிரிப்பை எண்ணி உதடுபூத் தும்கி டப்பான்.
வலியஅங் கணைத்த தெண்ணி மகிழ்வான்! அப்போது கீழ்ப்பால் ஒலிகடல் நீலப் பெட்டி உடைத்தெழுந் தது கதிர்தான்! பலபல என விடிந்த படியினால் வழக்க மாகப் புலம்நோக்கிப் பசுக்கள் போகப் பொன்முடி கடைக்குப் போனான். |
6. நள்ளிருளில் கிள்ளை வீட்டிற்கு!
நீலம் கரைத்த நிறைகுடத்தின் உட்புறம்போல் ஞாலம் கறுப்பாக்கும் நள்ளிருளில் - சோலைஉதிர்
பூவென்ன மக்கள் துயில்கிடக்கும் போதில்இரு சீவன்கள் மட்டும் திறந்தவிழி - ஆவலினால்
மூடா திருந்தனவாம். முன்னறையில் பொன்முடியான் ஆடா தெழுந்தான் அவள்நினைப்பால் - ஓடைக்குள்
காலால் வழிதடவும் கஷ்டம்போல், தன்உணர்வால் ஏலா இருளில் வழிதடவி - மேல்ஏகி
வீட்டுத் தெருக்கதவை மெல்லத் திறந்திருண்ட காட்டில்இரு கண்ணில்லான் போதல்போல் - பேட்டை
அகன்றுபோய் அன்னவளின் வீட்டினது தோட்டம் புகும்வாசல் என்று புகுந்தான் - புகும்தருணம்
வீணையிலோர் தந்தி மெதுவாய் அதிர்ந்ததுபோல் ஆணழகன் என்றெண்ணி "அத்தான்" என்றாள் நங்கை!
ஓங்கார மாய்த்தடவி அன்பின் உயர்பொருளைத் தாங்கா மகிச்சியுடன் தான்பிடித்துப் - பூங்கொடியை
மாரோ டணைத்து மணற்கிழங்காய்க் கன்னத்தில் வேரோடு முத்தம் பறித்தான்!அந் - நேரத்தில்
பின்வந்து சேர்த்துப் பிடித்தான் மறைநாய்கன் பொன்முடியை மங்கை புலன்துடிக்க - அன்பில்லா
ஆட்கள் சிலர்வந்தார். புன்னை அடிமரத்தில் போட்டிறுக்கக் கட்டினார் பொன்முடியை - நீட்டு
மிலாரெடுத்து வீசும் மறைநாய்கன் காலில் நிலாமுகத்தை ஒற்றி நிமிர்ந்து - கலாபமயில்
"அப்பா அடிக்காதீர்" என்றழுதாள். அவ்வமுதம் ஒப்பாளைத் தள்ளி உதைக்கலுற்றான். - அப்போது
வந்துநின்ற தாயான வஞ்சி வடிவென்பாள் சுந்தரியைத் தூக்கிப் புறம்போனாள் - சுந்தரியோ
அன்னையின் கைவிலக்கி ஆணழகிடம் சேர்ந்தே "என்னை அடியுங்கள்" என்றுரைத்துச் - சின்னவிழி
முத்தாரம் பாய்ச்ச உதட்டின் முனைநடுங்க வித்தார லோகம் விலவிலக்க - அத்தானின்
பொன்னுடம்பில் தன்னுடம்பைப் போர்த்த படியிருந்தாள். பின்னுமவன் கோபம் பெரிதாகி - அன்னார்
இருவரையும் இன்னற் படுத்திப் பிரித்தே ஒருவனைக் கட்டவிழ்த் தோட்டித் - திருவனைய
செல்விதனை வீட்டிற் செலுத்தி மறைநாய்கன் இல்லத்துட் சென்றான். இவன்செயலை - வல்லிருளும்
கண்டு சிரித்ததுபோல் காலை அரும்பிற்று. "வண்டு விழிநீர் வடித்தாளே! - அண்டையில்என்
துன்பந் தடுக்கத் துடித்தாளே! ஐயகோ! இன்ப உடலில்அடி யேற்றாளே! - அன்புள்ள
காதலிக் கின்னும்என்ன கஷ்டம் விளைப்பாரோ? மாது புவிவெறுத்து மாய்வாளோ - தீதெல்லாம்
என்னால் விளைந்ததனால் என்னைப் பழிப்பாளோ?" என்றுதன் துன்பத்தை எண்ணாமல் - அன்னாள்
நலமொன்றே பொன்முடியான் நாடி நடந்தான் உலராத காயங்க ளோடு. |
7. பண்டாரத்தைக் கண்டாள் தத்தை
பண்டாரம் இரண்டு நாளாய்ப் பூங்கோதை தன்னைப் பார்க்கத் திண்டாடிப் போனான். அந்தச் செல்வியும் அவ்வா றேயாம்! வண்டான விழியால் அன்னாள் சன்னலின் வழியாய்ப் பார்த்துக் கொண்டிருந் தாள்.பண் டாரம் குறட்டினிற் போதல் பார்த்தாள்.
இருமினாள் திரும்பிப் பார்த்தான். தெருச்சன்னல் உள்ளி ருந்தே ஒருசெந்தா மரை இதழ்தான் தென்றலால் உதறல் போல வருகஎன் றழைத்த கையை மங்கைகை என்ற றிந்தான். "பொருளைநீர் கொள்க இந்தத் திருமுகம் புனிதர்க்" கென்றே
பகர்ந்தனள்; போவீர் போவீர் எனச்சொல்லிப் பறந்தாள். அன்னோன் மிகுந்தசந் தோஷத் தோடு "மெல்லியே என்ன சேதி? புகலுவாய்" என்று கேட்டான். "புகலுவ தொன்று மில்லை அகன்றுபோ வீர்; எனக்கே பாதுகாப் பதிகம்" என்றாள்.
"சரிசரி ஒன்றே ஒன்று தாய்தந்தை மார்உன் மீது பரிவுடன் இருக்கின் றாரா? பகையென்றே நினைக்கின் றாரா? தெரியச்சொல்" என்றான். அன்னாள் "சீக்கிரம் போவீர்" என்றாள். "வரும்படி சொல்ல வாஉன் மச்சானை" என்று கேட்டான்.
"விவரமாய் எழுதி யுள்ளேன் விரைவினிற் போவீர்" என்றாள். "அவரங்கே இல்லா விட்டால் ஆரிடம் கொடுப்ப" தென்றான். "தவறாமல் அவரைத் தேடித் தருவதுன் கடமை" என்றாள். "கவலையே உனக்கு வேண்டாம் நான்உனைக் காப்பேன். மேலும்...
என்றின்னும் தொடர்ந்தான். மங்கை "என்அன்னை வருவாள் ஐயா முன்னர்நீர் போதல் வேண்டும்" என்றுதன் முகம் சுருக்கிப் பின்புறம் திரும்பிப் பார்த்துப் பேதையும் நடுங்க லுற்றாள். "கன்னத்தில் என்ன" என்றான். "காயம்" என்றுரைத்தாள் மங்கை.
"தக்கதோர் மருந்துண்" டென்றான். "சரிசரி போவீர்" என்றாள். அக்கணம் திரும்பி னாள்;பின் விரல்நொடித் தவளைக் கூவிப் "பக்குவ மாய்ந டக்க வேண்டும்நீ" என்றான். பாவை திக்கென்று தீப்பி டித்த முகங்காட்டச் சென்றொ ழிந்தான். |
8. அவள் எழுதிய திருமுகம்
பொன்முடி கடையிற் குந்திப் புறத்தொழில் ஒன்று மின்றித் தன்மனத் துட்பு றத்தில் தகதக எனஒ ளிக்கும் மின்னலின் கொடிநி கர்த்த விசித்திரப் பூங்கோ தைபால் ஒன்றுபட் டிருந்தான் கண்ணில் ஒளியுண்டு; பார்வை யில்லை.
கணக்கர்கள் அங்கோர் பக்கம் கடை வேலை பார்த்திருந்தார். பணம்பெற்ற சந்தோ ஷத்தால் பண்டாரம் விரைந்து வந்தே மணிக்கொடி இடையாள் தந்த திருமுகம் தந்தான். வாங்கித் தணலிலே நின்றி ருப்போர் தண்ணீரில் தாவு தல்போல்
எழுத்தினை விழிகள் தாவ இதயத்தால் வாசிக் கின்றான். "பழத்தோட்டம் அங்கே; தீராப் பசிகாரி இவ்வி டத்தில்! அழத்துக்கம் வரும் படிக்கே புன்னையில் உம்மைக் கட்டிப் புழுதுடி துடிப்ப தைப்போல் துடித்திடப் புடைத்தார் அந்தோ!
புன்னையைப் பார்க்குந் தோறும் புலனெலாம் துடிக்க லானேன்; அன்னையை, வீட்டி லுள்ள ஆட்களை, அழைத்துத் தந்தை என்னையே காவல் காக்க ஏற்பாடு செய்து விட்டார். என்அறை தெருப்பக் கத்தில் இருப்பது; நானோர் கைதி!
அத்தான்!என் ஆவி உங்கள் அடைக்கலம்! நீர்ம றந்தால் செத்தேன்! இ௬துண்மை. இந்தச் செகத்தினில் உம்மை அல்லால் சத்தான பொருளைக் காணேன்! சாத்திரம் கூறு கின்ற பத்தான திசை பரந்த பரம்பொருள் உயர்வென் கின்றார்.
அப்பொருள் உயிர்க் குலத்தின் பேரின்பம் ஆவ தென்று செப்புவார் பெரியார் யாரும் தினந்தோறும் கேட்கின் றோமே. அப்பெரி யோர்க ளெல்லாம் - வெட்கமாய் இருக்கு தத்தான் - கைப்பிடித் தணைக்கும் முத்தம் ஒன்றேனும் காணார் போலும்!
கனவொன்று கண்டேன் இன்று காமாட்சி கோயி லுக்குள் எனதன்னை, தந்தை, நான்இம் மூவரும் எல்லா ரோடும் `தொணதொண' என்று பாடித் துதிசெய்து நிற்கும் போதில் எனதுபின் புறத்தில் நீங்கள் இருந்தீர்கள் என்ன விந்தை!
காய்ச்சிய இரும்பா யிற்றுக் காதலால் எனது தேகம்! பாய்ச்சலாய்ப் பாயும் உம்மேல் தந்தையார் பார்க்கும் பார்வை! கூச்சலும் கிளம்ப, மேன்மேல் கும்பலும் சாய்ந்த தாலே ஓச்சாமல் உம்தோள் என்மேல் உராய்ந்தது; சிலிர்த்துப் போனேன்!
பார்த்தீரா நமது தூதாம் பண்டாரம் முக அமைப்பை; போர்த்துள்ள துணியைக் கொண்டு முக்காடு போட்டு மேலே ஓர்துண்டால் கட்டி மார்பில் சிவலிங்கம் ஊச லாட நேரினில் விடியு முன்னர் நெடுங்கையில் குடலை தொங்க
வருகின்றார்; முகத்தில் தாடி வாய்ப்பினைக் கவனித் தீரா? பரிவுடன் நீரும் அந்தப் பண்டார வேஷம் போடக் கருதுவீ ராஎன் அத்தான்? கண்ணெதிர் உம்மைக் காணும் தருணத்தைக் கோரி என்றன் சன்னலில் இருக்கவா நான்?
அன்னையும் தந்தை யாரும் அறையினில் நம்மைப் பற்றி இன்னமும் கட்சி பேசி இருக்கின்றார்; உம்மை அன்று புன்னையில் கட்டிச் செய்த புண்ணிய காரி யத்தை உன்னத மென்று பேசி உவக்கின்றார் வெட்க மின்றி.
குளிர்புனல் ஓடையே, நான் கொதிக்கின்றேன் இவ்வி டத்தில். வௌியினில் வருவ தில்லை; வீட்டினில் கூட்டுக் குள்ளே கிளியெனப் போட்ட டைத்தார் கெடுநினைப் புடைய பெற்றோர். எளியவள் வணக்கம் ஏற்பீர். இப்படிக் குப்பூங் கோதை." |
9. நுணுக்கமறியாச் சணப்பன்
பொன்முடி படித்த பின்னர் புன்சிரிப் போடு சொல்வான்: "இன்றைக்கே இப்போ தேஓர் பொய்த்தாடி எனக்கு வேண்டும்; அன்னத னோடு மீசை அசல்உமக் குள்ள தைப்போல் முன்னேநீர் கொண்டு வாரும் முடிவுசொல் வேன்பின்" என்றான்.
கணக்கர்கள் அவன் சமீபம் கைகட்டி ஏதோ கேட்க வணக்கமாய் நின்றி ருந்தார்; வணிகர்சேய் கணக்கர்க் கஞ்சிச் சணப்பன்பண் டாரத் தின்பால் சங்கதி பேச வில்லை. நுணுக்கத்தை அறியா ஆண்டி பொன்முடி தன்னை நோக்கி,
"அவள்ஒரு வெள்ளை நூல்போல் ஆய்விட்டாள்" என்று சொன்னான். "அவுஷதம் கொடுக்க வேண்டும் அடக்" கென்றான் செம்மல்! பின்னும் "கவலைதான் அவள்நோய்" என்று பண்டாரம் கட்ட விழ்த்தான். "கவடில்லை உன்தாய்க்" கென்று கவசம்செய் ததனை மூடிக்
"கணக்கரே ஏன்நிற் கின்றீர்? பின்வந்து காண்பீர்" என்றான். கணக்கரும் போக லானார்; கண்டஅப் பண்டா ரந்தான் "அணங்குக்கும் உனக்கும் வந்த தவருக்குந் தானே" என்றான். "குணமிலா ஊர்க் கதைகள் கூறாதீர்" என்று செம்மல்
பண்டாரந் தனைப் பிடித்துப் பரபர என இழுத்துக் கொண்டேபோய்த் தெருவில் விட்டுக் "குறிப்பறி யாமல் நீவிர் குண்டானிற் கவிழ்ந்த நீர்போல் கொட்டாதீர்" என்றான். மீண்டும் பண்டாரம், கணக்கர் தம்மைப் பார்ப்பதாய் உள்ளே செல்ல
பொன்முடி "யாரைப் பார்க்கப் போகின்றீர்?" என்று கேட்டான். "பொன்முடி உனக்கும் அந்தப் பூங்கோதை தனக்கும் மெய்யாய் ஒன்றும்சம் பந்த மில்லை என்றுபோய் உரைக்க எண்ணம்" என்று பண்டாரம் சொன்னான். பொன்முடி இடை மறித்தே
பண்டாரம் அறியத் தக்க பக்குவம் வெகுவாய்க் கூறிக் கண்டிடப் பூங்கோ தைபால் காலையில் போக எண்ணங் கொண்டிருப் பதையுங் கூறிப் பிறரிடம் கூறி விட்டால் உண்டாகும் தீமை கூறி உணர்த்தினான் போனான் ஆண்டி. |
10. விடியுமுன் துடியிடை
`சேவலுக்கும் இன்னுமென்ன தூக்கம்? இந்தத் தெருவார்க்கும் பொழுது விடிந்திட்ட சேதி தேவைஇல்லை போலும்!இதை நான்என் தாய்க்குச் செப்புவதும் சரியில்லை. என்ன கஷ்டம்! பூவுலகப் பெண்டிரெல்லாம் இக்கா லத்தில் புதுத்தினுசாய்ப் போய்விட்டார்! இதெல்லாம் என்ன? ஆவலில்லை இல்லறத்தில்! விடியும் பின்னால்; அதற்குமுன்னே எழுந்திருந்தால் என்ன குற்றம்?
விடியுமுன்னே எழுந்திருத்தல் சட்ட மானால் வீதியில்நான் இந்நேரம், பண்டா ரம்போல் வடிவெடுத்து வரச்சொன்ன கண்ணா ளர்தாம் வருகின்றா ராவென்று பார்ப்பே னன்றோ? துடிதுடித்துப் போகின்றேன்; இரவி லெல்லாம் தூங்காமல் இருக்கின்றேன். இவற்றை யெல்லாம் ஒடிபட்ட சுள்ளிகளா அறியும்?' என்றே உலகத்தை நிந்தித்தாள் பூங்கோ தைதான்.
தலைக்கோழி கூவிற்று. முதலில் அந்தத் தையல்தான் அதைக்கேட்டாள்; எழுந்திருந்தாள். கலைக்காத சாத்துபடிச் சிலையைப் போலே கையோடு செம்பில்நீர் ஏந்தி ஓடி விலக்கினாள் தாழ்தன்னை; வாசல் தன்னை விளக்கினாள் நீர்தெழித்து. வீதி நோக்கக் குலைத்ததொரு நாய்அங்கே! சரிதான் அந்தக் கொக்குவெள்ளை மேல்வேட்டிப் பண்டா ரந்தான்
என்றுமனம் பூரித்தாள். திருவி ழாவே எனைமகிழ்ச்சி செய்யநீ வாவா என்று தன்முகத்தைத் திருப்பாமால் பார்த்தி ருந்தாள் சணப்பனா? குணக்குன்றா? வருவ தென்று தன்உணர்வைத் தான்கேட்டாள்! ஆளன் வந்தான். தகதகெனக் குதித்தாடும் தனது காலைச் சொன்னபடி கேள்என்றாள். பூரிப் பெல்லாம் துடுக்கடங்கச் செய்துவிட்டாள். "அத்தான்" என்றாள்.
"ஆம்"என்றான். நடைவீட்டை அடைந்தார்; அன்னை அப்போது பால்கறக்கத் தொடங்கு கின்றாள். தாமரைபோய்ச் சந்தனத்தில் புதைந்த தைப்போல் தமிழ்ச்சுவடிக் கன்னத்தில் இதழ் உணர்வை நேமமுறச் செலுத்திநறுங் கவிச்சு வைகள் நெடுமூச்சுக் கொண்டமட்டும் உரிஞ்சி நின்று மாமியவள் பால்கறந்து முடிக்க, இங்கு மருமகனும் இச்சென்று முடித்தான் முத்தம்.
பூமுடித்த பொட்டணத்தை வைத்துச் சென்றான். பூங்கோதை குழல்முடித்துப் புகுந்தாள் உள்ளே! "நீமுடித்த வேலையென்ன?" என்றாள் அன்னை. "நெடுங்கயிற்றைத் தலைமுடித்துத் தண்ணீர் மொண்டேன்; ஆமுடித்த முடியவிழ்த்துப் பால்கறந்தீர்; அதைமுடித்தீர் நீர்தௌித்து முடித்தேன். இன்னும் ஈமுடித்த தேன்கூட்டை வடித்தல் போலே எனைவருத்தா தீர்!" என்றாள் அறைக்குள் சென்றாள். |
|