வீரத்தாய் - பகுதி 2
காட்சி 7
(அயல்நாட்டு வேந்தர்கள் வந்தார்கள்; சேனாதிபதி அவர்களை வரவேற்றுத் தனது மகுடாபிஷேகத்தை ஆதரிக்க வேண்டுகிறான்,)
விருத்தம்
சேனாதிபதி ;
மணிபுரியின் வேந்தனார் மதுவை யுண்டு மனங்கெட்டுப் போய்விட்டார் விஜய ராணி தணியாத காமத்தால் வெளியே சென்றாள். தனியிருந்த இளங்கோமான் சுதர்மன் என்பான், அணியாத அணியில்லை! அமுதே உண்பான்; அருமையுடன் வளர்த்துவந்தும் கல்வி யில்லை. பிணிபோல அன்னவன்பால் தீயொ ழுக்கம் பெருகினதால் நாட்டினரும் அமைச்சர் யாரும் என்னைமுடி சூடுகென்றார். உங்கட் கெல்லாம் ஏடெழுதி னேன்நீரும் விஜயம் செய்தீர்; சென்னியினால் வணங்குகின்றேன். மகுடம் பூணச் செய்தென்னை அதரிக்க வேண்டுகின்றேன் மன்னாதி மன்னர்களே, என்விண் ணப்பம்! மணிமுடியை நான் புனைந்தால் உம்மை மீறேன்; எந்நாளும் செய்நன்றி மறவேன் கண்டீர்! என்னாட்சி நல்லாட்சியா¢ய் இருக்கும்!
வெள்ளிநாட்டு வேந்தன் ;
[கோபத்தோடு கூறுகிறான்.] காங்கேய சேனாதி பதியே நீர்ஓர் கதைசொல்லி முடித்துவிட்டீர்; யாமும் கேட்டோம் தாங்காத வருத்தத்தால் விஜய ராணி தனியாக எமக்கெல்லாம் எழுதி யுள்ள தீங்கற்ற சேதியினைச் சொல்வோம், கேளும்! திருமுடியை நீர்கவர, அரச ருக்குப் பாங்கனைப்போல் உடனிருந்தே மதுப்ப ழக்கம் பண்ணிவைத்தீர்! அதிகாரம் அபக ரித்தீர். மானத்தைக் காப்பதற்கே ராணி யாரும் மறைவாக வசிக்கின்றார்! அறிந்து கொள்ளும்! கானகம்நேர் நகர்ப்புறத்தில் ராஜ புத்ரன் கல்வியின்றி உணவின்றி ஒழுக்க மின்றி ஊனுருதி ஒழியட்டும் எனவி டுத்தீர். உம்எண்ணம் இருந்தபடி என்னே! என்னே1! ஆனாலும் அப்பிள்ளை சுதர்மன் என்போன் ஆயகலை வல்லவனாய் விளங்குகிறான்.
வெள்ளிநாட்டு மன்னன்
(இடை மறுத்து உரைக்கின்றான்.) சுதர்மனைநாம் கண்ணாலே பார்க்க வேண்டும், சொந்தநாட் டார்எண்ணம் அறிய வேண்டும் இதம்அகிதம் தெரியாமல் உம்மை நாங்கள் எள்ளளவும் ஆதரிக்க மாட்டோம் கண்டீர்!
கொன்றைநாட்டுக் கோமான் :
(கோபத்தோடு கூறுகிறான்) சதிபுரிந்த துண்மையெனில் நன்ப ரேநீர் சகிக்கமுடி யாததுயர் அடைய நேரும்.
குன்றநாட்டுக் கொற்றவன் ;
(இடியென இயம்புவான்) அதிவிரைவில் நீர்நிரப ராதி என்ப தத்தனையும் எண்பிக்க வேண்டும் சொன்னோம்!
சேனாதிபதி ;
குறள்
(பயந்து ஈனசுரத்தோடு) அவ்விதமே யாகட்டும் ஐயன்மீர்! போசனத்தைச் செவ்வையுற நீர்முடிப்பீர் சென்று.
|
காட்சி 8
(சேனாதிபதி மந்திரியிடம் தனது ஆசாபங்கத் தைத்தெரிவித்து வருந்துவான்,)
சேனாதிபதி ;
வரைமட்டும் ஓங்கி வளர்ந்தஎன் ஆசை தரைமட்டம் ஆயினதா? அந்தோ! தனிமையிலே ராணி விஜயா நடத்திவைத்த சூழ்ச்சியினைக் காண இதயம் கலக்கம் அடைந்திடுதே! வேந்தன் மகனுக்கு வித்தையெல்லாம் வந்தனவாம்; ஆந்தை அலறும் அடவிசூழ் சிற்றூரில் போதித்த தார்? இதனை போயறிவோம் வாவாவா!! வாதிக்கு தென்றன் மனம்.
அறுசீர் விருத்தம்
மந்திரி ;
பொக்கிஷந் திறந்தஅந்தப் புலனுறு பெரியார் எங்கே? அக்கிழ வர்பால்இந்த அசந்தர்ப்பம் சொல்லிக் காட்டி இக்கணம் மகுடம்பூண ஏற்றதோர் சூழ்ச்சி கேட்போம்; தக்கநல் லறிஞரின்றித் தரணியும் நடவா தன்றோ! (கிழவர் காணப்படாî தறிந்து மந்திரி வருந்துè¤ø£ன்.) திருவிலார் இவர்என் றெண்ணித் தீங்கிணை எண்ணிஅந்தப் பெரியாரும் நம்மைவிட்டுப் பிரிந்தùர் போலும்! நண்பா! அரிவையர் கூட்டமெல்லாம் அறிவிலாக்கூட்டம் என்பாய், புரிவரோ விஜயராணி புரிந்தஇச் செயல்கள் மற்றோர்!
குறள்
சேனாதிபதி ;
இன்னலெô£ம் நேர்க! இனியஞ்சப் போவதில்லை மன்னன்மக னைப்பார்ப்போம் வா!
|
காட்சி 9
(கிழவர் சுதர்மனுக்கு வாள்போர் கற்பிக்கிறார். இதனை ஒரு புறமிருந்து சேனாதிபதியும் மந்திரியும் கவனிக்கிறார்கள்.)
அகவல்
சேனாதிபதி ;
தாழ்திறந்த அக்கிழவன் ராச தனயனுக்குப் பாழ்திறந்து நெஞ்சத்தில் பல்கலையும் சேர்க்கின்றான். வஞ்சக் கிழவனிவன் என்னருமை வாழ்க்கையிலே நஞ்சைக் கலப்பதற்கு நம்மையன்று நண்ணினான். வாளேந்திப் போர்செய்யும் மார்க்கத்தைக் காட்டுகின்றான். தோளின் துரிதத்தைக் கண்டாயோ என்நண்பா!
(சேனாதிபதி கோபத்தோடு சுதர்மனை அணுகிக் கூறுவான் )
ஏடா சுதர்மா! இவன்யார் நரைக்கிழவன்? கேடகமும் கத்தியும் ஏன்? கெட்டொழியத் தக்கவனே!
சுதர்மன் ;
என்நாட்டை நான்ஆள ஏற்ற கலையுதவும் தென்னாட்டுத் தீரர்; செழுந்தமிழர்; ஆசிரியர்!
சேனாதிபதி ;
உன்நாட்டை நீஆள ஒண்ணுமோ சொல்லடா!
சுதர்மன் ;
என்நாட்டை நான்ஆள்வேன்! எள்ளவும் ஐயமில்லை!
(சேனாதிபதி உடனே தன் வாளையுருவிச் சுதர்மன் மேல் ஓங்கியபடி கூறுவான்.)
உன்நாடு சாக்காடே! ஓடி மறைவாய்! பார்! மின்னுகின்ற வாள்இதுதான்! வீச்சும் இதுவே!
(கிழவர் கணத்தில், சேனாதிபதி ஓங்கிய வாளைத் தமது வாளினால் துண்டித்துக் கூறுவார்;)
உருவியவாள் எங்கே? உனதுஉடல்மேல் என்வாள் வருகுதுபார், மானங்கொள்! இன்றேல் புறங்காட்டு!
(என வாளை லாவகத்தோடு ஓங்கவே, சேனாதிபதி தன்னைக் காத்துக்கொள்ள முடியாமலும் சாகத்துணியாம லும் புறங்காட்டி ஓடுகிறான். கிழவரும் சுதர்மனும் சபை யை நோக்கி ஓடும் சேனாதிபதியைத் துரத்திக்கொண்டு ஓடி வருகிறார்கள்.)
|
காட்சி 10
(கூடியுள்ள அயல்நாட்டு வேந்தர்களிடம் சேனாதிபதி ஓடிவந்து சேர்ந்தான். அவனைத் தொடர்ந்து கிழவரும் சுதர்மனும் உருவிய கத்தியுடன் வந்து சேர்கிறார்கள்.)
வெள்ளிநாட்டு வேந்தன் :
ஆடுகின்ற நெஞ்சும், அழுங்கண்ணு மாகநீ ஓடிவரக் காரணமென் உற்ற சபைநடுவில்? சேனா பதியே, தெரிவிப்பாய் நன்றாக!
(சேனாதிபதி ஒருபுறம் உட்கார்தல்.)
மானைத் துரத்திவந்த வாளரிபோல் வந்து குறித்தெடுத்துப் பார்க்கின்றீர்; நீவிர்யார் கூறும்?
(என்று பெரியவரை நோக்கிக் கூறிப் பின் அயல் நின்ற சுதர்மனை நோக்கிக் கூறுவான் )
பறித்தெடுத்த தாமரைப்பூம் பார்வையிலே வீரம் பெருக்கெடுக்க நிற்கின்றாய் பிள்ளையே, நீயார்?
கிழவர் :
இருக்கின்ற வேந்தர்களே, என்வார்த்தை கேட்டிடுவீர்! மன்னர் குடிக்கும் வழக்கத்தைச் செய்துவைத்தும், என்னை வசப்படுத்த ஏற்பாடு செய்வித்தும், செல்வனையும் தன்னிடத்தே சேர்த்துப் பழிவாங்கக் கல்வி¢ தராமல் கடுங்காட்டில் சேர்ப்பித்தும் பட்டாபி ஷேகமனப் பால்குடித்தான் காங்கேயன்! தொட்டவாள் துண்டித்தேன் தோள்திருப்பி இங்குவந்தான்
(தான் கட்டியிருந்த பொய்த்தாடி முதலியவை களைக் களைகிறாள். கிழவராய் நடித்த விஜயராணி.)
தாடியும்பொய் என்றன் தலைப்பாகை யும்பொய்யே! கூடியுள்ள அங்கியும்பொய்! கொண்ட முதுமையும்பொய்! 'நான்விஜய ராணி - நகைக்கப் புவியினிலே ஊனெடுத்த காங்கேயன் ஒன்றும் உணர்கிலான். கோழியும்தன் குஞ்சுதனைக் கொல்லவரும் வான்பருந்தைச் சூழ்ந்தெதிர்க்க அஞ்சாத தொல்புவியில் ஆடவரைப் பெற்றெடுத்த தாய்க்குலத்தைப், பெண்குலத்தைத் துஷ்டருக்குப் புற்றெடுத்த நச்சரவைப் புல்லெனவே எண்ணிவிட்டான்!'
வெள்ளி நாட்டரசன் :
(ஆச்சரியத்தோடு கூறுவான்,)
நீரன்றோ அன்னையார்! நீரன்றோ வீரியார்! ஆர்எதிர்ப்பார் அன்னையார் அன்பு வெறிதன்னை!
வள்ளிநாட்டு மகிபன் :
ஆவி சுமந்துபெற்ற அன்பர்உயிர் காப்பதற்குக் கோவித்த தாயினெதிர் கொல்படைதான் என்செய்யும்?
கொன்றைநாட்டுக் கோமான் :
அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும் என்னும் படிஅமைந்தீர்! இப்படியே பெண்ணுலகம் ஆகுநாள், எந்நாளோ? அந்நாளே துன்பமெலாம் போகுநாள், இன்பப் புதியநாள் என்றுரைப்பேன்! அன்னையெனும் தத்துவத்தை அம்புவிக்குக் காட்டவந்த மின்னே, விளக்கே, விரிநிலவே வாழ்த்துகின்றேன்!
குன்றநாட்டுக் கொற்றவன்:
உங்கள் விருப்பம் உரைப்பீர்கள் இவ்விளைய சிங்கத்திற் கின்றே திருமகுடம் சூட்டிடலாம்! தீங்கு புரிந்த, சிறுசெயல்கள் மேற்கொண்ட காங்கேய னுக்கும் கடுந்தண் டனையிடலாம்!
ராணி:
கண்மணியே! உன்றன் கருத்தென்ன நீயேசொல்!
சுதர்மன்:
எண்ணம் உரைக்கின்றேன்! என் உதவி வேந்தர்களே, இந்த மணிபுரிதான் இங்குள்ள மக்களுக்குச் சொந்த உடைமை! சுதந்தரர்கள் எல்லாரும்! ஆதலினால் இந்த அழகு மணிபுரியை ஓதும் குடியரசுக் குட்படுத்த வேண்டுகின்றேன்! அக்கிரமம் சூழ்ச்சி அதிகாரப் பேராசை கொக்கரிக்கக் கண்ட குடிகள் இதயந கானப் புலிபோல் கடும்பகைவர் மேற்பாயும்! ஆதலினால் காங்கேயன் அக்ரமமும் நன்றென் பேன்; தீதொன்றும் செய்யாதீர் சேனாபதிதனக்கே!
மன்னர்கள்:
அவ்வாறே ஆகட்டும் அப்பனே ஒப்பில்லாய்! செவ்வனே அன்புத் திருநாடு வாழியவே! சேய்த்தன்மை காட்டவந்த செம்மால்! செழியன்புத் தாய்த்தன்மை தந்த தமிழரசி வாழியவே!
சுதர்மன்:
எல்லார்க்கும் தேசம் எல்லார்க்கும் உடைமைஎலாம் எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே! எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக! எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக! வல்லார்க்கும் மற்றுள்ள செல்வர்க்கும் நாட்டுடைமை வாய்க்கரிசி என்னும் மனப்பான்மை போயொழிக; வில்லார்க்கும் நல்ல நுதல்மாதர் எல்லார்க்கும் விடுதலையாம் என்றே மணிமுரசம் ஆர்ப்பீரே!
|
வீரத்தாய் முற்றும்.
|