|
||||||||
ஏழாம் தந்திரம் |
||||||||
1. ஆறு ஆதாரம்
1704
நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோவிமேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும்
காலங்கண் டான்அடி காணலும் ஆமே. 1
1705
ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
மேதாதி நாதாந்த மீதாம் பாராசக்தி
போதா லயத்துஅ விகாரந்தனிற்போத
மேதாதி ஆதார மீதான உண்மையே. 2
1706
மேல்என்றும் கீழ்என்று இரண்டற் காணுங்கால்
தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும்
பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரம்
கார்ஒன்று கற்பகம் ஆகிநின்றானே. 3
1707
ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் காலந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம் புத்தி
சாதா ரணங்கெட்டான் தான்சக மார்க்கமே. 4
1708
மேதாதி யாலே விடாதுஓம் எனத்தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாதுஆர மாசுவே தானெழச் சாதித்தால்
ஆதாரஞ் செய்போக மாவது காயமே. 5
1709
ஆறந்த மும்கூடி யாரும் உடம்பினில்
கூறிய ஆதார மற்றும் குறிக்கொண்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத்து ஓரெழுத்து ஆமே. 6
1710
ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல்
போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே. 7
1711
ஆயு மலரின் அணிமலர் மேலது
ஆய இதழும் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
மேய அறிவாய் விளைந்தது தானே. 8
2. அண்டலிங்கம் (உலக சிவம்)
1712
இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம் தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே. 1
1713
உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவாய்
உலகில் எடுத்தது சத்தி குணமாய்
உலகில் எடுத்த சதாசிவன் தானே. 2
1714
போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம்
ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம்
ஆகம அத்துவா ஆறும் சிவமே. 3
1715
ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் ஈசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்று
ஆர்த்தினர் அண்டங் கடந்து அப் புறநின்று
காத்தனன் என்னும் கருத்தறி யாரே. 4
1716
ஒண்சுட ரோன் அயன் மால்பிர சாபதி
ஒண்சுட ரான இரவியோடு இந்திரன்
கண்சுட ராகிக் கலந்தெங்கும் தேவர்கள்
தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே. 5
1717
தாபரத் துள்நின்று அருளவல் லான்சிவன்
மாபரத் துண்மை வழிபடு வாரில்லை
மாபரத் துண்மை வழிபடு வாளர்க்கும்
பூவகத்து உள்நின்ற பொற்கொடி யாகுமே. 6
1718
தூவிய விமானமும் தூலமது ஆகுமால்
ஆய சதாசிவம் ஆகுநற் சூக்குமம்
ஆய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே. 7
1719
முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும்அக்கொம்பு சிலைநீறு கோமளம்
அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம்
உய்த்த்தின் சாதனம் பூமண லிங்கமே. 8
1720
துன்றும் தயிர்நெய் பால்துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனல்இர தம்சலம்
வன்திறல் செங்கல் வடிவுடை வில்வம்பொன்
தென்தியங்கு ஒன்றை தெளிசிவ லிங்கமே. 9
1721
மறையவர் அர்ச்சனை வண்படி கந்தான்
இறையவர் அர்ச்சனை யேயபொன் னாகும்
குறைவிலா வசியர்க்குக் கோமள மாகும்
துறையடைச் சூத்திரர் தொல்வாண லிங்கமே. 10
1722
அது வுணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி
எதுஉண ராவகை நின்றனன் ஈசன்
புதுஉணர் வான புவனங்கள் எட்டும்
இது உணர்ந்து என்னுடல் கோயில்கொண்டானே. 11
1723
அகலிட மாய்அறி யாமல் அடங்கும்
உகலிட மாய்நின்ற ஊனதன் உள்ளே
பகலிட மாம்முனம் பாவ வினாசன்
புகலிட மாய்நின்ற புண்ணியன் தானே. 12
1724
போது புனைசூழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும்
ஆதியுற நின்றது அப்பரி சாமே. 13
1725
தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
திரைபொரு நீரது மஞ்சன சாலை
வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை
கரையற்ற நந்திக் கலையும்திக்காமே. 14
3. பிண்டலிங்கம் (உடற் சிவம்)
1726
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே. 1
1727
உலந்திலர் பின்னும் உளரென நிற்பர்
நிலந்திரு நீர்தெளி யூனவை செய்யப்
புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக
வலந்தரு தேவரை வந்திசெய் யீரே. 2
1728
கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்
தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புக
வாயில்கொண் டு ஈசனும் ஆளவந் தானே. 3
1729
கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை
வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள
பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில்கொண் டான் எங்கள் மாநந்தி தானே. 4
4. சதாசிவ லிங்கம் (உலக முதற் சிவம்)
1730
கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கையிரண்டு எட்டுப் பரந்தெழும்
தேடு முகம்ஐந்து செங்கையின் மூவைந்து
நாடும் சதாசிவம் நல்லொளி முத்தே. 1
1731
வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
சாதா ரணமாம் சதாசிவந் தானே. 2
1732
ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிரெழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின்
ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே. 3
1733
அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு
அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே. 4
1734
சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துள
சமயத்து எழுந்த இராசி ஈராறுள
சமயத்து எழுந்த சரீரம்ஆ றெட்டுள
சமயத்து எழுந்த சதாசிவந் தானே. 5
1735
நடுவு கிழக்குத் தெற்குஉத் தரமேற்கு
நடுவு படிகநற் குங்குமவன்னம்
அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால்
அடியேற்கு அருளிய முகம்இவை அஞ்சே. 6
1736
அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள
அஞ்சினொ டுஅஞ்சு கரதலம் தானுள
அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென்
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே. 7
1737
சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
சத்தி சிவமிக்க தாபர சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவதத்துவ முப்பத் தாறே. 8
1738
தத்துவ மாவது அருவம் சராசரம்
தத்துவ மாவது உருவம் சுகோதயம்
தத்துவம் எல்லாம் சகலமு மாய்நிற்கும்
தத்துவம் ஆகும் சதாசிவம் தானே. 9
1739
கூறுமின் ஊறு சதாசிவன் எம்இறை
வேறோர் உரைசெய்து மிகைப்பொரு ளாய்நிற்கும்
ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடு
மாறுசெய் வான் என் மனம்புகுந் தானே. 10
1740
இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்
அருளார்ந்த சிந்தையெம் ஆதிப் பிரானைத்
தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந் தேனே. 11
1741
சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் காற்றிடில்
உத்தமம் வாமம் உரையத்து இருந்திடும்
தத்துவம் பூருவம் தற்புரு டன்சிரம்
அத்தரு கோரம் மருடத்துஈ சானனே. 12
1742
நாணுநல் ஈசானன் நடுவுச்சி தானாகும்
தாணுவின் தன்முகம் தற்புருட மாகும்
காணும் அகோரம் இருதயம் குய்யமாம்
மாணுற வாமம்ஆம் சத்திநற் பாதமே. 13
1743
நெஞ்சு சிரம்சிகை நீள்கவ சம்கண்ணாம்
வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம்
செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும்
செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே. 14
1744
எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்
விண்ணிற் பரைசிரம் மிக்க சிகையாதி
வண்ணங் கவசம் வனப்புடை இச்சையாம்
பண்ணுங் கிரியை பரநேந் திரத்திலே. 15
1745
சத்திநாற் கோணம் சலமுற்று நின்றிடும்
சத்திஅறு கோண சயனத்தை உற்றிடும்
சத்தி வட்டம் சலமுற்று இருந்திடும்
சத்தி உருவாம் சதாசிவன் தானே. 16
1746
மான் நந்தி எத்தனை காலம் அழைக்கினும்
தான் நந்தி அஞ்கின் தனிச்சுடை ராய்நிற்கும்
கால் நந்தி உந்தி கடந்து கமலத்தில்
மேல் நந்தி ஒன்பதின் மேவிநின் றானே. 17
1747
ஒன்றிய வாறும் உடலின் உடன்கிடந்து
என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது
தென்தலைக்கு ஏறத் திருந்து சிவனடி
நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே. 18
1748
உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்
கொணர்ந்தேன் குவலயம் கோயிலென் நெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே. 19
1749
ஆங்கவை Yமூன்றினும் ஆரழல் வீசிடத்
தாங்கிடும் ஈரேழு தான்நடு வானதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆமென
ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே. 20
1750
தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாய்
தன்மேனி தானாகும் தற்பரம் தானே. 21
1751
ஆரும் அறியார் அகாரம் அவனென்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
மாறி எழுந்திடும் ஓசையதாமே. 22
1752
இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே. 23
5. ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவம் )
1753
அகார முதலா அனைத்துமாய் நிற்கும்
உகார முதலா உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம் தாமே. 1
1754
ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும்
மேதாதி நாதமும் மீதே விரிந்தன
ஆதார விந்து ஆதிபீட நாமே
போதாஇ லிங்கப் புணர்ச்சிய தாமே. 2
1755
சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்
சத்தி சிவமாகும் தாபரம் தானே. 3
1756
தானேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
வானேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம்
பூரேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்
தானேர் எழுகின்ற அகாரமது ஆமே. 4
1757
விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்
விந்துவ தேபீட நாதம் இலிங்கமாம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
வந்து கருஐந்தம் செய்யும் அவைஐந்தே. 5
1758
சத்திநற் பீடம் தகுநல்ல ஆன்மா
சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும்
சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம்
சத்திநல் ஆன்மாச் சதாசிவம் தானே. 6
1759
மனம்புகுந்து என்னுயிர் மன்னிய வாழ்க்கை
மனம்புகுந்து இன்பம் பொழிகின்ற போது
நலம்புகுந்து என்னொடு நாதனை நாடும்
இனம்புகுந்து ஆதியும் மேற்கொண்டவாறே. 7
1760
பராபரன் எந்தை பனிமதி சூடி
தராபரன் தன்னடி யார்மனக் கோயில்
சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும்
அராபரன் மன்னி மனத்துஉறைந் தானே. 8
1761
பிரான்அல்ல நாம்எனில் பேதை உலகம்
குரால்என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன்
அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே. 9
1762
அன்று நின் றான்கிடந் தான்அவன் என்று
சென்றுநின்று எண்டிசை ஏத்துவர் தேவர்கள்
என்றுநின்று ஏத்துவன் எம்பெரு மான்தன்னை
ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந் தானே. 10
6. ஞான லிங்கம் (உணர்வுச் சிவம் )
1763
உருவும் அருவும் உருவோடு அருவும்
மருவு பரசிவன் மன்பல் உயிர்க்கும்
குருவு மெனநிற்கும் கொள்கையன் ஆகும்
தருவென நல்கும் சதாசிவன் தானே. 1
1764
நாலான கீழது உருவம் நடுநிற்க
மேலான நான்கும் அருவம் மிகுநாப்பண்
நாலான ஒன்றும் அருவுரு நண்ணலால்
பாலாம் இவையாம் பரசிவன் தானே. 2
1765
தேவர் பிரானைத் திசைமுக நாதனை
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
ஏவர் பிரான்என்று இறைஞ்சுவர் அவ்வழி
யாவர் பிரானடி அண்ணலும் ஆமே. 3
1766
வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற
ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்டகை யானொடும் கன்னி உணரினும்
மூண்டகை மாறினும் ஒன்றது வாமே. 4
1767
ஆதி பரந்தெய்வம் அண்டத்து நல்தெய்வம்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
நீதியுள் மாதெய்வம் நின்மலர் எம்இறை
பாதியுள் மன்னும் பராசத்தி யாமே. 5
1768
சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே
சுத்த சிவபதம் தோயாத தூவொளி
அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம்
ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே. 6
1769
கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும்
எழுந்திடம் காணில் இருக்கலும் ஆகும்
பரந்திடம் காணில் பார்ப்பதி மேலே
திரண்டெழக் கண்டவன் சிந்தையு ளானே. 7
1770
எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறைசொல்லின் ஞானமாம்
சந்தித்து இருந்த இடம்பெருங் கண்ணியை
உந்தியின் மேல்வைத்து உகந்து இருந்தானே. 8
1771
சத்தி சிவன்விளை யாட்டாம் உயிராகி
ஒத்த இருமாயா கூட்டத்து இடையூட்டிச்
சுத்தம தாகும் துரியம் பிறிவித்துச்
சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே. 9
1772
சத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவமுமாம் சிவன்சத் தியுமாகும்
சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை
சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே. 10
7. சிவலிங்கம் ( சிவகுரு )
1773
குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலம்செயு மாறுஅறி யேனே. 1
1774
வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே. 2
1775
ஒன்றெனக் கண்டோ ம் ஈசன் ஒருவனை
நன்றென்று அடியிணை நான்அவனைத்தொழ
வென்றுஐம் புலமும் மிகக்கிடந்து இன்புற
அன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே. 3
1776
மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்
பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே. 4
1777
மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று
ஆவி எழும்அள வன்றே உடலுற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கிற் பரகதி தானே. 5
8. சம்பிரதாயம் ( பண்டை முறை )
1778
உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கி
கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே. 1
1779
உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான
வியவார் பரமும்பின் மேவும் பிராணன்
செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே
உயலார் குருபரன் உய்யக் கொண்டானே. 2
1780
பச்சிம திக்கலே வைத்தஆ சாரியன்
நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள்
உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திற வாதே. 3
1781
பிட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவோனை
ஒட்டடித்து உள்ளமர் மாசெலாம் வாங்கித்
தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்
வட்டமது ஒத்தது வாணிபம் வாய்த்ததே. 4
1782
தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற விந்து பிணக்கறுத்து எல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்டேனே. 5
1783
கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு
நாடி அடிவைத்து அருள்ஞான சத்தியால்
பாடல் உடலினில் பற்றற நீக்கியே
கூடிய தானவ னாம்குளிக் கொண்டே. 6
1784
கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ளக்
கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக்
கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் எனஒன்றும் கூறகி லானே. 7
1785
குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தைப் பற்றியநேர்மை
பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே. 8
1786
உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம்
உணர்வுடை யார்கண் உணர்ந்துகண் டாரே. 9
1787
காயப் பரப்பில் அலைந்து துரியத்துச்
சால விரிந்து குவிந்து சகலத்தில்
ஆயஅவ் ஆறாறு அடைந்து திரிந்தோர்க்குத்
தூய அருள்தந்த நந்திக்கு என் சொல்வதே. 10
1788
நானென நீயென வேறில்லை நண்ணுதல்
ஊனென ஊனுயிர் என்ன உடனின்று
வானென வானவர் நின்று மனிதர்கள்
தேனென இன்பம் திளைக்கின்ற வாறே. 11
1789
அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவனிவன் ஆமே. 12
1790
நானிது தானென நின்றவன் நாடோ றும்
ஊனிது தானுயிர் போலுணர் வானுளன்
வானிரு மாமுகில் போற்பொழி வானுளன்
நானிது அம்பர நாதனும் ஆமே. 13
1791
பெருந்தன்மை தானென யானென வேறாய்
இருந்ததும் இல்லைஅது ஈசன் அறியும்
பொருந்தும் உடல்உயிர் போல்உமை மெய்யே
திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே. 14
9. திருவருள் வைப்பு
1792
இருபத மாவது இரவும் பகலும்
உருவது ஆவது உயிரும் உடலும்
அருளது ஆவது அறமும் தவமும்
பொருவது உள்நின்ற போகமது ஆமே. 1
1793
காண்டற்கு அரியன் கருத்திலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்
ஈண்டிக் கிடந்தங்கு இருளறும் ஆமே. 2
1794
குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்புறு சிந்தையைக் சிக்கென நாடில்
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே. 3
1795
தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்தறி வான் எங்கள் பிஞ்ஞகன் எம்இறை
ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாமெனச்
சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே. 4
1796
தானே அறியும் வினைகள் அழிந்தபின்
நானே அறிகிலன் நந்தி அறியுங்கொல்
ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின்
தேனே யனையன் நம் தேவர் பிரானே. 5
1797
நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை
வான்அறிந் தார் அறி யாது மயங்கினர்
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தான்அறி யான்பின்னை யார்அறி வாரே? 6
1798
அருள்எங்கு மான அளவை அறியார்
அருளை நுகர்அமு தானதும் தேரார்
அருள்ஐங் கருமத்து அதிசூக்கம் உன்னார்
அருள்எங்கும் கண்ணானது ஆர்அறி வாரே. 7
1799
அறிவில் அணுக அறிவது நல்கிப்
பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட்டு
அறிவது ஆக்கி அடியருள் நல்கும்
செறிவொடு நின்றார் சிவம்ஆயி னாரே. 8
1800
அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு
அருளில் அழிந்துஇளைப் பாறி மறைந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி
அருளால் என்நந்தி அகம்புகுந் தானே. 9
1801
அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி
அருளால் அடிபுணைந்து ஆர்வமும் தந்திட்டு
அருளானஆனந்தந்து ஆரமுது ஊட்டி
அருளால் என்நந்தி அதும்புகுந் தானே. 10
1802
பாசத்தில் இட்டது அருள்அந்தப் பாசத்தின்
நேசத்தை விட்டது அருள்அந்தநேசத்தில்
கூசற்ற முத்தி அருள்அந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே. 11
1803
பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள் தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப்பராபரன்
உறவாகி வந்துஎன் உளம்புகுந் தானே. 12
1804
அகம்புகுந் தான்அடி யேற்குஅரு ளாலே
அகம்புகுந் தும்தெரி யான்அருள் இல்லோர்க்கு
அகம்புகுந்து ஆனந்த மாக்கிச் சிவமாய்
அகம்புகுந் தான்நந்தி ஆனந்தி யாமே. 13
1805
ஆயும் அறிவோடு அறியாத மாமாயை
ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும்
ஆய பலஇந் திரியம் அவற்றுடன்
ஆய அருள்ஐந்து மாம் அருட் செய்கையே. 14
1806
அருளே சகலமும் ஆய பவுதிகம்
அருளே சராசர மாய அமலமே
இருளே வெளியே யெனும்எங்கும் ஈசன்
அருளே சகளத்தின் அன்றிஇன் றாமே. 15
1807
சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து
தவமான ஐம்முகன் ஈசன் அரனும்
பவமுறும் மாலும் பதுமத்தோன் ஈறா
நவம்அவை யாகி நடிப்பவன் தானே. 16
1808
அருட்கண்இ லாதார்க்கு அரும்பொருள் தோன்றா
அருட்கண்உ ளோர்க்குஎதிர் தோன்றும் அரனே
இருட்கண்ணி னோர்க்குஅங்கு இரவியும் தோன்றாத்
தெருட்கண்ணி னோர்க்குஎங்கும் சீரொளி யாமே. 17
1809
தானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைத்திடும்
தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்
தானே வியாபித் தலைவனும் ஆமே. 18
1810
தலையான நான்கும் தனதுஅரு வாகும்
அலையா அருவுரு வாகும் சதாசிவம்
நிலையான கீழ்நான்கு நீடுரு வாகும்
துலையா இறைமுற்று மாய் அல்லது ஒன்றே. 19
1811
ஒன்றது வாலே உலப்பிலி தானாகி
நின்றது தான்போல் உயிர்க்குயி ராய்நிலை
துன்றி அவைஅல்ல வாகும் துணையென்ன
நின்றது தான்விளை யாட்டென்னுள் நேயமே. 20
1812
நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு
ஆயக் குடிலைகள் நாதம் அடைந்திட்டுப்
போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு
வீயத் தகாவிந்து வாக விளையுமே. 21
1813
விளையும் பரவிந்து தானே வியாபி
விளையும் தனிமாயை மிக்கமா மாயை
கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்
அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே. 22
10. அருள் ஒளி
1814
அருளில் தலைநின்று அறிந்துஅழுந் தாதார்
அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்
அருளின் பெருமை அறியார் செறியார்
அருளில் பிறந்திட்டு அறிந்துஅறி வாரே. 1
1815
வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
ஆரா அமுதளித்து ஆனந்தி பேர்நந்தி
பேரா யிரமுடைப் பெம்மான்பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுகென் றானே. 2
1816
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன்பெரும் தன்மையைக்
கூடிய வாறே குறியாக் குறிதந்தென்
ஊடுநின் றான்அவன் தன்னருள் உற்றே. 3
1817
உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும்
பற்றிய மாயாப் படலம் எனப் பண்ணி
அத்தனை நீயென்று அடிவைத்தேன் பேர்நந்தி
கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே. 4
1818
விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினை முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே. 5
1819
ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
ஒளியு ளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும்
ஒளியுருள் கண்டகண் போலவே றாயுள
ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே. 6
1820
புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி
நிறமே புகுந்தென்னை நின்மலன் ஆக்கி
அறமே புகுந்தெனக்கு ஆரமுது ஈந்த
திறம்ஏதென்று எண்ணித் திகைத்திருந் தேனே. 7
1821
அருளது என்ற அகலிடம் ஒன்றும்
பொருளது என்ற புகலிடம் ஒன்றும்
மருளது நீங்க மனம்புகுந் தானைத்
தெருளுறும் பின்னைச் சிவகதி தாமே. 8
1822
கூறுமின் நீர்முன் பிறந்திங்கு இறந்தமை
வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும்
பாறணி யும்உடல் வீழலிட்டு ஆருயிர்
தேறுஅணிவோம்இது செப்பவல் லீரே. 9
11. சிவபூசை
1823
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே. 1
1824
வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாம்இலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே. 2
1825
பான்மொழி பாகன் பராபரன் தானாகும்
ஆன சதாசிவன் தன்னைஆ வாகித்து
மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு
சீன்முகம் செய்யச் சிவனவன் ஆகுமே. 3
1826
நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனைகழல் ஈசனைக் காண அரிதாம்
கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. 4
1827
மஞ்சன மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சமு தாம்உப சாரம்எட்டு எட்டோ டும்
அஞ்சலி யோடும் கலந்துஅர்ச்சித் தார்களே. 5
1828
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே. 6
1829
அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள்
ஒத்தமெய்ஞ் ஞானத்து உயர்ந்தார் பதத்தைச்
சுத்தம தாக விளக்கித் தெளிக்கவே
முத்தியாம் என்று நம்மூலன் மொழிந்ததே. 7
1830
மறப்புற்று இவ்வழி மன்னிநின் றாலும்
சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி
மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே. 8
1831
ஆரா தனையும் அமரர் குழாங்களும்
தீராக் கடலும் நிலத்துஉம தாய்நிற்கும்
பேரா யிரமும் பிரான்திரு நாமமும்
ஆரா வழியெங்கள் ஆதிப் பிரானே. 9
1832
ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணம்தொழத்
தான்அந்த மில்லாத் தலைவன் அருளது
தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்ததோர்
பார்ஐங் குணமும் படைத்துநின் றானே. 10
1833
உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி
மழைக்கொண்ட மாமுகில் மேற்சென்று வானோர்
தழைக்கொண்ட பாசம் தயங்கிநின்று ஏத்தப்
பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே. 11
1834
வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார்
அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே. 12
1835
கழிப்படுந் தண்கடற் கௌவை யுடைத்து
வழிப்படு வார்மலர் மொட்டுஅறி யார்கள்
பழிப்படு வார்பல ரும்பழி வீழ
வெளிப்படு வோர்உச்சி மேவிநின் றானே. 13
1836
பயனறிவு ஒன்றுண்டு பன்மலர் தூவிப்
பயனறி வார்க்குஅரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர
வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே. 14
1837
ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்று
ஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன்
மூர்த்தியை மூவா முதலுறு வாய்நின்ற
தீர்த்தனை யாரும் துதித்துஉண ராரே. 15
1838
தேவர்க ளோடுஇசை வந்துமண் ணோடுறும்
பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை
மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே. 16
1839
உழைக்கவல் லோர்நடு நீர்மலர் ஏந்திப்
பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி
இழைக்கொண்ட பாதத்து இனமலர் தூவி
மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே. 17
1840
வென்று விரைந்து விரைப்பணி என்றனர்
நின்று பொருந்த இறைபணி நேர்படத்
துன்று சலமலர் தூவித் தொழுதிடில்
கொண்டிடும் நித்தலும் கூறியஅன்றே. 18
1841
சாத்தியும் வைத்தும் சயம்புஎன்று ஏத்தியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலக்கிட்டு அகத்துஇழுக்கு அற்றக்கான்
மாத்திக்கே செல்லும் வழியது வாமே. 19
1842
ஆவிக் கமலத்தில் அப்புறத்து இன்புற
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்
தாவிக்கு மந்திரம் தாமறி யாரே. 20
1843
காண்ஆகத் துள்ளேஅழுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்தறி வாரில்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம்புகுந் தானே. 21
1844
பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும் என் நெஞ்சுஇடங் கொள்ள
வருந்தன்மை யாளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே. 22
1845
சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் ஆனமந் திரசுத்தி
சமையநிர் வாணம் கலாசுத்தி யாகும்
அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே. 23
1846
ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லது
ஊழில் உயிரை உணரவும் தான்ஒட்டா
ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்
ஊழி கடந்தும் ஓர்உச்சியு ளானே. 24
12. குருபூசை
1847
ஆகின்ற நந்தி அடித்தா மரைபற்றிப்
போகின்றுபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல்
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே. 1
1848
கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது
தேனமர் புங்குழல் சேரஒண் ணாதே. 2
1849
மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை
ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயலறல் தானே. 3
1850
உச்சியும் காலையும் மாலையும் ஈசனை
நச்சுமின் நச்சி நமவென்று நாமத்தை
விச்சிமின் விச்சு விரிசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே. 4
1851
புண்ணிய மண்டலம் பூசைநா றாகுமாம்
பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம்
எண்ணிலிக்கு ஐயம் இடில்கோடி யாகுமால்
பண்ணிடில் ஞானிஊண் பார்க்கில் விசேடமே. 5
1852
இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை
வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்
இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே. 6
1853
இந்துவும் பானுவும் என்றெழு கின்றதோர்
விந்துவும் நாதமும் ஆகிமீ தானத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே. 7
1854
மனபவ னங்களை மூலத்தான் மாற்றி
அனித உடல்பூத மாக்கி அகற்றிப்
புனிதன் அருள்தனில் புக்கிருந்து இன்பத்
தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே. 8
1855
பகலும் இரவும் பயில்கின்ற பூசை
இயல்புடை ஈசர்க்கு இணைமல ராகப்
பகலும் இரவும் பயிலாத பூசை
சகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே. 9
1856
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்குஅற ஆனந்தத் தேறல் பருகி
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டுஇடத் தேனே. 10
13. மகேசுவர பூசை
1857
படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே. 1
1858
தண்டுஅறு சிந்தை தபோதனார் தாம்மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டதுஎன்று
எண்திசை நந்தி எடுத்துரைத் தானே. 2
1859
மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
ஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானது
மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே. 3
1860
அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில்என்
பகரு ஞானி பகல்ஊண் பலத்துக்கு
நிகரில்லை என்பது நிச்சயம் தானே. 4
1861
ஆறிடும் வேள்வி அருமறை நூலவர்
கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில்
நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலை
பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே. 5
1862
ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று
நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று
வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே. 6
1863
சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை
நான்நொந்து நொந்து வருமளவுஞ் சொல்லப்
பேர்நந்தி என்னும் பிதற்குஒழி யேனே. 7
1864
அழிதகவு இல்லா அரன்அடி யாரைத்
தொழுகை ஞாலத்துத் தூfங்கிருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே. 8
1865
பகவற்குஏதா கிலும் பண்பில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழி
அகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தா ரே 9
1866
வித்தக மாகிய வேடத்தர் உண்டஊன்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே. 10
1867
தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும்
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்
போழ்வினை தீர்க்கும் அப் பொன்னுலகு ஆமே. 11
14. அடியார் பெருமை
1868
திகைக்குரி யானொரு தேவனை நாடும்
வகைக்குரி யானொரு வாது இருக்கில்
பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே. 1
1869
அவ்வுல கத்தே பிறந்துஅவ் உடலோணடும்
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுல கத்தே அரனடி கூடுவர்
அவ்வுல கத்தே அருள்பெறு வாரே. 2
1870
கொண்ட குறியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்தினுள்
உண்டெனில் நாம்இனி உய்ந்தொழிந் தோமே. 3
1871
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும்
கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே. 4
1872
பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள்
உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிரும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. 5
1873
இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிசெல்வர் வானுலகு ஆள்வர்
புயங்களும் எண்டிசை போதுபா தாள
மயங்காப் பகிரண்ட மாமுடி தானே. 6
1874
அகம்படி கின்றநம் ஐயனை ஒரும்
அகம்படி கண்டவர் அல்லலில் சேரார்
அகம்படி உட்புக்கு அறிகின்ற நெஞ்சம்
அகம்படி கண்டுஆம் அழிக்கலும் எட்டே. 7
1875
கழிவும் முதலும் காதல் துணையும்
அழிவும் தாய்நின்ற ஆதிப் பிரானைப்
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியும்என் ஆவி உழவுகொண் டானே 8
1876
என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும்
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேர்எழுத் தாமே. 9
1877
துணிந்தார் அகம்படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பால்பட்டு ஒழுகும்
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே. 10
1878
தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்
புலைமிசை நீங்கிய பொன்னுலகு ஆளும்
பலமிசை செய்யும் படர்சடை யோனே. 11
1879
அறியாப் பருவத்து அரன்அடி யாரைக்
குறியால் அறிந்தின்பம் கொண்டது அடிமை
குறியார் சடைமுடி கட்டி நடப்பார்
மறியார் புனல்மூழ்க மாதவம் ஆமே. 12
1880
அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பால் பெருமை இலயமது ஆமே. 13
1881
முன்னிருந் தார்முழுது எண்கணத் தேவர்கள்
எண்ணிறந்து அன்பால் வருவர் இருநிலத்து
எண்இரு நாலு திசைஅந் தரம் ஒக்கப்
பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே. 14
1882
சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம்
அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும்
நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்
பவயோகம் இன்றிப் பரலோகம் ஆமே. 15
1883
மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன்
மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன்
மேலுணர் வார்மிகு ஞாலத்து அமரர்கள்
மேலுணுர் வார்சிவன் மெய்யடி யார்களே. 16
15. போசன விதி
1884
எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு
கட்ட அடிசில் அழுதென்று எதிர்கொள்வர்
ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்
விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே. 1
1885
அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர்
உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப்
பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து
இச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே. 2
16. பிட்சா விதி
1886
விச்சுக் கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டு
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
அச்சம்கெட்டு அச்செயல் அறுத்துண்ண மாட்டாதார்
இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே. 1
1887
பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில்
பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப்
பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே. 2
1888
பரந்துலகு ஏழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும்
நிரந்தக மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே. 3
1889
வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்
தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொரஇருந் தான்புக லேபுக லாக
வரஇருந் தால்அறி யான்என்ப தாமே. 4
1890
அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்
தங்கார் சிவனடி யார்சரீரத்திடைப்
பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்
தங்கார் சிவனைத் தலைப்படு வாரே. 5
1891
மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்
கையதும் நீண்டார் கடைத்தலைக் கேசெல்வர்
ஐயம் புகாமல் இருந்த தவசியார்
வையகம் எல்லாம் வரஇருந்தாரே. 6
17. முத்திரை பேதம்
நாலேழு மாறவே நண்ணிய முத்திரை
பாலான மோன மொழியில் பதிவித்து
மேலான நந்தி திருவடி மீதுய்யக்
கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே. 1
1893
துரியங்கள் மூன்று சொருகுஇட னாகி
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
மருவிய சாம்பவி கேசரி உண்மை
பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே. 2
1894
சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம்
ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரை
ஓம்பயில் ஒங்கிய உண்மைய கேசரி
நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே. 3
1895
தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்
ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால்
ஏனைச் சிவமாம் சொரூபம் மறைந்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே. 4
1896
வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே
ஆக்கும் அச் சுத்த்ததை யார்அறி வார்களே. 5
1897
யோகத்தின் முத்திரை ஓர்அட்ட சித்தியாம்
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்
ஆகத் தகும்வேத கேசரி சாம்பவி
யோகத்துக் கேசரி யோகமுத் திரையே. 6
1898
யோகிஎண் சித்தி அருளொலி வாதனை
போகி தன் புத்தி புருடார்த்த நன்னெறி
ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை
ஏகமும் கண்டொன்றில் எய்திநின் றானே. 7
1899
துவாதச மார்க்கமென் கோடச மார்க்கமாம்
அவாஅறும் ஈர்ஐ வகைஅங்கம் ஆறும்
தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை
நவாஅக மோடுஉன்னல் நற்சுத்த சைவமே. 8
1900
மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை
ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை
தேனிக்கும் முத்திரை சித்தாந்த முத்திரை
கானிக்கும் முத்திரை கண்ட சமயமே. 9
1901
தூநெறி கண்ட சுவடு நடுவுஎழும்
பூநெறி கண்டுஅது பொன்னக மாய்நிற்கும்
மேல்நெறி கண்டது வெண்மதி மேதினி
நீல்நெறி கண்டுள நின்மலன் ஆமே. 10
18. பூரணக் குகை நெறிச் சமாதி
1902
வளர்பிறை யில்தேவர் தம்பாலின் முன்னி
உளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கித்
தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்
உளதுறும் யோகி உடல்விட்டால் தானே. 1
1903
தான்இவை ஒக்கும் சமாதிaக கூடாது
போன வியோகி புகலிடம் போந்துபின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வார் அருளின் சார் வாகியே. 2
1904
தான்இவ் வகையே புவியோர் நெறிதங்கி
ஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்து
தானதில் அந்தச் சிவயோகி ஆகுமுன்
ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே. 3
1905
சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்
தவலோகம் சேர்ந்துபின் தான்வந்து கூடிச்
சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பர்
புவலோகம் போற்றும்நற் புண்ணியத்தோரே. 4
1906
ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால்
தானற மோனச் சமாதியுள் தங்கியே
தானவன் ஆகும் பரகாயம் சாராதே
ஊனமில் முத்தராய் மீளார் உணர்வுற்றே. 5
1907
செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில்
செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே. 6
1908
உன்னக் கருவிட்டு உரவோன் அரன்அருள்
பன்னப் பரமே அருட்குலம் பாலிப்பன்
என்னப் புதல்வர்க்கும் வேண்டி யிடுஞானி
தன்இச்சைக்கு ஈசன் உருச்செய்யும் தானே. 7
1909
எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்
தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம்
அங்காங்கு எனநின்று சகமுண்ட வான்தோய்தல்
இங்கே இறந்துஎங்கு மாய்நிற்கும் ஈசனே. 8
19. சமாதிக் கிரியை
1910
அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்
நொந்து நாய்நரி நுகரின் நுண்செரு
வந்துநாய் நரிக்கு உணவாகும் வையகமே. 1
1911
எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில்
அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே. 2
1912
புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல்மண்டியே. 3
1913
அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே. 4
1914
நவமிகு சாணாலே நல்லாழம் செய்து
குவைமிகு சூழஐஞ் சாணாகக் கோட்டித்
தவமிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே. 5
1915
தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை
நன்மலர்ச் சோலை நகரின்நற் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலம் தான்குகைக்கு எய்தும் இடங்களே. 6
1916
நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப்
பொற்பமா ஓசமும் மூன்றுக்கு மூன்றுஅணி
நிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே. 7
1917
பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்துஅதன் மேல்ஆ சனம்இட்டு
முஞ்சிப் படுத்துவெண் ணீறு இட்ட தன்மேலே
பொன்செய் நற்சுண்ணம் பொதியலும் ஆமே. 8
1918
நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சாரக்
கள்ளவிழ தாமம் களபம்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே. 9
1919
ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்
மீதினில் இட்டுஆ சனத்தினின் மேல் வைத்துப்
போதறு கண்ணமும் நறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடு வீரே. 10
1920
விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம் இள நீரும்
குருத்தலம் வைத்துஓர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே. 11
1921
மீது சொரிந்திடும் வெண்ணீறும் கண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உதகத்தான் மஞ்சனம் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன்று அணிநிலம் செய்யுமே. 12
1922
ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினில் ஒன்றைத் தாபித்து
மேதரு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
காதலில் சோடசம் காண்உப சாரமே. 13
20. விந்துற்பனம்
1923
உதயத்தில் விந்துவில் ஓங்குகுண் டலியும்
உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியில் பிரமாதி கள்மிகு சத்தி
கதியில் கரணம் கலைவை கரியே. 1
1924
செய்திடும் விந்துபே தத்திறன் ஐ ஐந்தும்
செய்திடும் நாதபேதத்திற னால் ஆறும்
செய்திடும் மற்றவை ஈர்இரண்டில்திறம்
செய்திடும் ஆறுஆறு சேர்தத் துவங்களே. 2
1925
வந்திடு பேத மெலாம்பர விந்துமேல்
தந்திடு மாமாயை வாகேசி தற்பரை
உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி
விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே. 3
1926
விளங்கு நிவர்த்தாதி மேலக ராதி
வளங்கொள் உகாரம் மகாரத் துள்விந்து
களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி
உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே. 4
1927
அந்தமும் ஆதியும் ஆகிப் பராபரன்
வந்த வியாபி எனலாய அந்நெறி
கந்தம தாகிய காரண காரியம்
தந்துஐங் கருமமும் தான்செய்யும் வீயமே. 5
1928
வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக்
காயஐம் பூதமும் காரிய மாயையில்
ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே. 6
1929
புறம்அகம் எங்கும் புகுந்துஒளிர் விந்து
நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை
உறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள்
திறனொடு வீடுஅளிக் கும்செயல் கொண்டே. 7
1930
கொண்டஇவ் விந்து பரமம்போல் கோதற
நின்ற படம்கட மாய்நிலை நிற்றலின்
கண்டக லாதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மாமாயை ஆகுமே. 8
1931
அதுவித்தி லேநின்று அங்கு அண்ணிக்கும் நந்தி
இதுவித்தி லேஉள வாற்றை உணரார்
மதுவித்தி லேமலர் அன்னம தாகிப்
பொதுவித்திலே நின்ற புண்ணியன் தானே. 9
1932
வித்தினில் அன்றி முளையில்லை அம்முளை
வித்தினில் அன்றி வெளிப்படு மாறில்லை
வித்தும் முளையும் உடனன்றி வேறில்லை
அத்தன்மை யாரும் அரன்நெறி காணுமே. 10
1933
அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம்
பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத்
திருந்தும் உடன்மன மாம் கூறு சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதமது ஆகுமே. 11
1934
இரதம் முதலான ஏழ்தாது மூன்றில்
உரிய தினத்தில் ஒருபுல் பனிபோல்
அரிய துளிவிந்து வாகும்ஏழ் மூன்றின்
மருவிய விந்து வளரும்கா யத்திலே. 12
1935
காயத்தி லேமூன்று நாளில் கலந்திட்டுக்
காயத்துள் தன்மனம் ஆகும் கலாவிந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே. 13
1936
அழிகின்ற விந்து அளவை அறியார்
கழிகின்ற தன்னையுட் காக்கலும் தேரார்
அழிகின்ற காயத்து அழிந்துஅயர் உற்றோர்
அழிகின்ற தன்மை அறிந்தொழி யாரே. 14
21. விந்து ஜயம் - போக சரவோட்டம்
1937
பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே. 1
1938
தானே அருளால் சிவயோகம் தங்காது
தானேஅக் காமாதி தங்குவோ னும் உட்கும்
தானே அதிகாரம் தங்கில் சடங்கெடும்
ஊனே அவற்றுள் உயிர்ஒம்பா மாயுமே. 2
1939
மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில்
ஓயா இருபக்கத்து உள்வளர் பக்கத்துள்
ஏயாஎண் நாள்இன்ப மேல்பனி மூன்றிரண்டு
ஆயா அபரத்துள் ஆதிநாள் ஆறாமே. 3
1940
ஆறுஐந்து பன்னொன்றும் அன்றிச் சகமார்க்கம்
வேறுஅன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம்தோடு
ஏறும் இருபத் தொருநாள் இடைத்தோங்கும்
ஆறின் மிகுந்தோங்கும் அக்காலம் செய்யவே. 4
1941
செய்யும் அளவில் திருநான் முகூர்த்தமே
எய்யும் கலைகாலம் இந்து பருதிகால்
நையுமிடத்து ஓடி நன்கா நூல்நெறி
செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே. 5
1942
விடுங்காண் முனைந்துஇந் திரியங்க ளைப் போல்
நடுங்காது இருப்பானும் ஐஐந்தும் நண்ணப்
படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்
கடுங்காற் கரணம் கருத்துறக் கொண்டே. 6
1943
கொண்ட குணனே நலமேநற் கோமளம்
பண்டை உருவே பகர்வாய் பவளமே
மிண்டு தனமே மிடைய விடும் போதில்
கண்ட கரணம் உட் செல்லக்கண் டேவிடே. 7
1944
விட்டபின் கர்ப்பஉற் பத்தி விதியிலே
தொட்டுறுங் காலங்கள் தோன்றக் கருதிய
கட்டிய வாழ்நாள் சாம்நாள் குணம் கீழ்மைசீர்ப்
பட்ட நெறியிதுஎன்று எண்ணியும் பார்க்கவே. 8
1945
பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்று
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற்று இருதிங்கள் சேராது அகலினும்
மூப்புற்றே பின்னாளில் ஆம்எல்லாம் உள்ளவே. 9
1946
வித்திடு வோர்க்கு அன்றி மேலோர் விளைவில்லை
வித்திடு வோர்க்கு அன்றி மிக்கோர் அறிவில்லை
வித்தினில் வித்தை விதற உணர்வரேல்
மத்தில் இருந்ததோர் மாங்கனி யாமே. 10
1947
கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
கருத்துளன் ஈசன் கருஉயிரோடும்
கருத்தது வித்தாய்க் காரண காரியம்
கருத்தறு மாறுஇவை கற்பனை தானே. 11
1948
ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும்
அழியாப் பிராணன் அதிபலஞ் சத்தி
ஒழியாத புத்தி தபஞ்செப மோனம்
அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே. 12
1949
வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்
துற்ற சுழியனல் சொருகிக் சுடருற்று
முற்று மதியத்து அமுதை முறைமுறை
செற்றுண் பவரே சிவயோகி யாரே. 13
1950
யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்
மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே. 14
1951
அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
கண்ணும் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்து
உண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே. 15
1952
அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்
பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரியச்
செறிவாய் இருந்து சேரவே வாயுமே. 16
1953
மாதரை மாய வரும் கூற்றம் என்றுன்னக்
காதலது ஆகிய காமம் கழிந்திடும்
சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும்
சோதியின் உள்ளே துரிசறும் காலமே. 17
1954
காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன்
காலம் கடந்தழிந் தான்விந்து செற்றவன்
காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை
காலின்கண் வந்த கலப்பறி யாரே. 18
1955
கலக்கு நாள் முன்னாள் தன்னிடைக் காதல்
நலத்தக வேண்டில் அந் நாரி யுதரக்
கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை
விலக்கு வனசெய்து மேலணை வீரே. 19
1956
மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும்
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால்
மாலா னதுமான மாளும் அவ்விந்துவே. 20
1957
விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்
அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாசமும் நாதத்தால் பேதமும்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே. 21
1958
விந்துஎன் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கிய னாலே நயந்தெரிந்து
அந்தமில் பானுஅதிகண்ட மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே. 22
1959
அமுதச் சசிவிந்து வாம்விந்து மாள
அமுதப் புனலோடி அங்கியின் மான
அமுதச் சிவயோகம் ஆதலால் சித்தி
அமுதப் பலாவனம் ஆங்குறும் யோகிக்கே. 23
1960
யோகம் அவ் விந்து ஒழியா வகையுணர்ந்து
ஆகம்இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்
போகம் சிவபோகம் போகிநற் போகமா
மோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே. 24
1961
மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து
காதலி னால்விடார் யோகம் கலந்தவர்
மாதர் உயிராசை கைக்கொண்ட வாடுவர்
காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே. 25
1962
சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்
ஏற்றிய மூலத் தழலை எழமூட்டி
நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடு
ஆற்றி அமுதம்அருந்தவித் தாமே. 26
1963
விந்துவும் நாதமும் மேலக் கனல்மூல
வந்த அனல் மயிர்க் கால்தோறும் மன்னிடச்
சிந்தனை மாறச் சிவம்அக மாகவே
விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே. 27
1964
வித்துக்குற் றுண்பான் விளைவுஅறி யாதவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்துச் சுட்டு உண்பான்
வித்துகுற் றுண்பானில் வேறலன் ஈற்றவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித்தான் அன்றே. 28
1965
அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு
மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு
மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட
வன்னத் திருவிந்து மாயும் கா யத்திலே. 29
1966
அன்னம் பிராணன்என் றார்க்கும் இருவிந்து
தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்
சொன்ன மாம்உருத் தோன்றும்எண் சித்தியாம்
அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே. 30
1967
நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்றும் மகாரம் ஒருமூன்றோடு ஒன்றவை
சென்று பராசக்தி விந்து சயந்தன்னை
ஒன்ற உரைக்க உபதேசம் தானே. 31
1968
தானே உபதேசம் தானல்லாது ஒன்றில்லை
வானே உயர்விந்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே. 32
1969
விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்
அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே. 33
1970
வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறும் அந் நீள்வரை ஒட்டிப்
பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை
அறுக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை
அறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே. 34
1971
விந்துவும் நாதமும் மேவியுடன் கூடிப்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
சுந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்
அங்குஉதி மந்திரம் ஆகுதி யாகுமே. 35
1972
மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன
இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே. 36
1973
சத்தமும் சத்த மனமும் மனக்கருத்து
ஒத்துஅறி கின்ற இடமும் அறிகிலர்
மெய்த்து அறிகின்ற இடம்அறி வாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே. 37
1974
உரம்அடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவிய தன்முலை மேவிய கீழ்அங்கி
கருமலை மீமிசை கைக்கீழிற் காலாம்
விரவிய சுந்தரம் மேல்வெளி யாமே. 38
22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்
1975
செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி
தஞ்சுட ராக வணங்கும் தவமே. 1
1976
பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம்
புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன்
இகலற ஏழுல கும்உற வோங்கும்
பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே. 2
1977
ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும்
சோதியின் உள்ளே சுடரொளி யாய்நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே. 3
1978
தானே உலகுக்குத் தத்துவனாய் நிற்கும்
தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும்
தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும்
தானே உலகுக்குத் தண்சுட ராகுமே. 4
1979
வவையமுக் கோணம் வட்டம் அறுகோணம்
துலையிரு வட்டம் துய்ய விதம்எட்டில்
அலையுற்ற வட்டத்தில் ஈர்எட்டு இதழாம்
மலைவுற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே. 5
1980
ஆதித்தன் உள்ளி லானமுக் கோணத்தில்
சோதித்து இலங்கும்நற் சூரியன் நாலாம்
கேத முறுங்கேணி சூரியன் எட்டில்
சோதிதன் நீட்டில் சோடசம் தானே. 6
1981
ஆதித்த னோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது
சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற
வேதப் பொருளை விளங்குகி லீரே. 7
1982
பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி
யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே. 8
1983
மண்ணை இடந்துஅதின் கீழொடும்
விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்
கண்ணை இடந்து களிதந்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே. 9
1984
பாரை இடந்து பகலோன் வரும்வழி
யாரும் அறியார் அருங்கடை நூலவர்
தீரன் இருந்த திருமலை சூழ்என்பர்
ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே. 10
23. பிண்டாதித்தன்
1985
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கன் குழல்வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே. 1
1986
ஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர்
பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம் ஆதித்த
னோடே அடங்குகின் றாரே. 2
1987
உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து
சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை
சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு
உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே. 3
24. மன ஆதித்தன்
1988
எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும்
எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப
விரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவி
ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே. 1
1989
சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே. 2
1990
ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி
ஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர்
ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்ற
ஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே. 3
1991
ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி
ஓர் அண்டத் தார்க்கும் உணரா உணர்வது
பேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்று
ஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே. 4
1992
ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும்
ஒன்பதும் ஈசன் இயல்அறி வார்இல்லை
முன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார்
இன்பம் இலார்இருள் சூழநின் றாரே. 5
25. ஞானாதித்தன்
1993
விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்து
அந்த அபரம் பரநாத மாகியே
வந்தன தம்மில் பரங்கலை யாதிவைத்து
உந்தும் அருணோ தயமென்ன உள்ளத்தே. 1
1994
உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்
தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால்
வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்கு
உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே. 2
1995
தேவர் பிரான்திசை பத்துஉத யஞ்செய்யும்
மூவர் பிரான்என முன்னொரு காலத்து
நால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும்
மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே. 3
1996
பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை
மையிருள் நீக்கும் மதிஅங்கி ஞாயிறு
செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்
கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே. 4
1997
தனிச்சுடர் ஏற்றித் தயங்கிருள் நீங்க
அனித்திடும் மேலை அருங்கனி ஊறல்
கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன்
நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே. 5
1998
நேரறி வாக நிரம்பிய பேரொளி
போரறி யாது புவனங்கள் போய்வரும்
தேரறி யாத திசையொளி யாயிடும்
ஆரறி வாரிது நாயக மாமே. 6
1999
மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்
கண்டிதத் துள்ளே கதிரொளி ஆயிடும்
சென்றிடத்து எட்டுத் திசையெங்கும் போய்வரும்
நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே. 7
2000
நாபிக்கண் நாசிநயன நடுவினும்
தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியைத்
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரு மாக உணர்ந்திருந் தாரே. 8
26. சிவாதித்தன்
2001
அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்
சென்றிடு ஞானச் சிவப்பர காசத்தால்
ஒன்றும் இருசட ராம்அரு ணோதயம்
துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே. 1
2002
கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே. 2
2003
தானே விரிசுடர் மூன்றும்ஒன்றாய் நிற்கும்
தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்
தானே உடலுயிர் வேறன்றி நின்றுளன்
தானே வெளியொளி தானிருட் டாமே. 3
2004
தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும்
வையம் புனல்அனல் மாருதம் வானகம்
சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்
ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே. 4
27. பசு இலக்கணம்
2005
உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்
பன்னு மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே. 1
2006
அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில்
துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம்
தன்னிலை அன்னம் தனியொன்றது என்றக்கால்
பின்ன மடஅன்னம் பேறணு காதே. 2
28. புருடன்
2007
வைகரி யாதியும் மாயா மலாதியும்
பொய்கரி யான புருடாதி பேதமும்
மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச்
செய்கரி ஈசன் அனாதியே செய்ததே. 1
2008
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே. 2
2009
படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்
சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்ய
இடர்கொண்ட பாச இருளற ஒட்டி
நடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே. 3
2010
அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே. 4
29. சீவன்
2011
மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே. 1
2012
ஏனோர் பெருமையின் ஆயினும் எம்மிறை
ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே. 2
2013
உண்டு தெளிவன் உரைக்க வியோகமே
கொண்டு பயிலும் குணமில்லை யாயினும்
பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக்
கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே. 3
2014
மாயா உபாதி வசத்ததாகும் சேதனத்து
ஆய குருஅரு ளாலே அதில்தூண்ட
ஓயும் உபாதியோடு ஒன்றின் ஒன் றாது உயிர்
ஆய துரியம் புகுந்தறி வாகவே. 4
30. பசு
2015
கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போலும்
மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே. 1
2016
கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென்
எல்லைக் கடப்பித்து இறைவன் அடிகூட்டி
வல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லது
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பறி யாதே. 2
31. போதன் (அறிஞன்)
2017
சீவன் எனச்சிவன் என்னவே றில்லை
சீவ னார்சிவ னாரை அறிகிலர்
சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே. 1
2018
குணவிளக் காகிய கூத்தப் பிரானும்
மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்
பணவிளக் காகிய பல்தலை நாகம்
கணவிளக் காகிய கண்காணி யாகுமே. 2
2019
அறிவாய் அறியாமை நீங்கி யவனே
பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன்
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன்
செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே. 3
2020
ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி
ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்
ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின் றானே. 4
2021
சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார்
அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார்
தவமான செய்து தலைப்பறி கின்றார்
நவமான தத்துவம் நாடாகி லாரே. 5
2022
நாடோ றும் ஈசன் நடத்தும் தொழில்உள்ளார்
நாடோ றும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
நாடோ றும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்
நாடோ றும் நாடார்கள் நாள்வினை யாளரே. 6
32. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை
2023
ஆக மதத்தன ஐந்து களிறுள
ஆக மதத்தறி யோடுஅணை கின்றில
பாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்றிஅறி யோமே. 1
2024
கருத்தின்நன் னூல்கற்று கால்கொத்திப் பாகன்
திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா
எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே
வருத்தினும் அம்மா வழிநட வாதே. 2
2025
புலம் ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும்
நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து
குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலம்வந்து போம்வழி ஒன்பது தானே. 3
2026
அஞ்சுள சிங்கம் அடவியல் வாழ்வன
அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுஅக மேபுகும்
அஞ்சின் உகிரும் எயிரும் அறுத்திட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே. 4
2027
ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்
ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்த சினத்தொட நின்றிடில்
ஐவர்க்கு சிறைஇறுத்து ஆற்றகி லோமே. 5
2028
சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும்
சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள
வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்லநின் றோடும் குதிரைஒத் தேனே. 6
2029
எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறை
எண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும்
எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல்
எண்ணிலி இல்லதோடு இன்பமது ஆமே. 7
2030
விதியின் பெருவலி வேலைசூழ் வையம்
துதியின் பெருவலி தொல்வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே. 8
33. ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை
2031
குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்து
இட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே. 1
2032
கிடக்கும் உடலின் கிளர்இந் திரியம்
அடக்க லுறும் அவன்தானே அமரன்
விடக்கிண்டு இன்புற மேவுறு சிந்தை
நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே. 2
2033
அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே. 3
2034
முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவென்றும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே. 4
2035
ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே. 5
2036
பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்
விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம்
பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம்
அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே. 6
2037
இளைக்கின்ற வாறுஅறிந்து இன்னுயிர் வைத்த
கிளைக்குஒன்றும் ஈசனைக் கேடில் புகழோன்
தளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கத்
துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே. 7
2038
பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி
சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டு
வாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில்
வேய்ந்துகொள் மேலை விதியது தானே. 8
2039
நடக்கின்ற நந்தியை நாடோ றும் உன்னில்
படர்க்கின்ற சிந்தையப் பைய ஒடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே. 9
2040
சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழவதில் தாங்கலும் ஆமே. 10
2041
போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்
போற்றிசெய் மீட்டே புலன்ஐந்தும் புத்தியால்
நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை
ஊற்றுக உள்ளத்து ஒருங்கலும் ஆமே. 11
2042
தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்
வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே. 12
2043
கைவிட லாவது ஒன்று இல்லை கருத்தினுள்
எய்தி அவனை இசையினால் ஏத்துமின்
ஐவருடைய அவாவினில் தோன்றிய
பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே. 13
34. அசற்குரு நெறி
2044
உணர்வுஒன்று இலாமூடன் உண்மைஒ ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே. 1
2045
மந்திர தந்திர மாயோக ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்
சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டு
அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே. 2
2046
ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்
கோமான் அலன்அசத் தாகும் குரவனே. 3
2047
கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால்
தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும்
நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றே
முற்பால நந்தி மொழிந்துவைத் தானே. 4
2048
குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்
குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே. 5
35. சற்குரு நெறி
2049
தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே. 1
2050
தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்
தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்
தவிரவைத் தான் பிற வித்துயர் தானே. 2
2051
கறுத்த இரும்பே கனகமது ஆனால்
மறித்துஇரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியல் வந்தணு கானே. 3
2052
பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலமற நீக்குவோர்
ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப்
பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே. 4
2053
நேயத்தே நிற்கும் நிமலன் மலமற்ற
நேயத்தை நல்கவல் லோன்நித்தன் சுத்தனே
ஆயத்த வர்தத் துவம் உணர்ந் தாங்குஅற்ற
நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே. 5
2054
பரிசன வேதி பரிசித்தது எல்லாம்
வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே. 6
2055
தானே எனநின்ற சற்குரு சந்நிதி
தானே எனநின்ற தன்மை வெளிப்படில்
தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெற
ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே. 7
2056
வரும்வழி போம்வழி மாயா வழியைக்
கருவழி கண்டவர் காணா வழியைக்
பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழியே சென்று கூடலும் ஆமே. 8
2057
குருஎன் பவனே வேதாக மங்கூறும்
பரஇன்ப னாகிச் சிவயோகம் பாவித்து
ஒருசிந்தை யின்றி உயிர்பாசம் நீக்கி
வருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே. 9
2058
சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச்
சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச்
சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்
அத்தன் அருட்குரு வாம்அவன் கூறிலே. 10
2059
ஊற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினை
பற்றறு நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம் மூன் றால்வாட்டித்
தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே. 11
2060
எல்லாம் இறைவன் இறைவி யுடன்இன்பம்
வலலார் புலனும் வருங்கால் உயிர்தோன்றிச்
சொல்லா மலம்ஐந்து அடங்கிட்டு ஓங்கியே
செலலாச் சிவகதி சேர்தல்விளை யாட்டே. 12
2061
ஈனப் பிறவியில் இட்டது மீட்டுட்டித்
தானத்துள் இட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்தன் செய்கையே. 13
2062
அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்
சித்தொடு அசித்துஅறத் தெளிவித்த சீவனைச்
சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச்
சத்துடன் ஐங்கரு மத்திடும் தன்மையே. 14
2063
ஈசத்து வங்கடந்து இல்லையென்று அப்புறம்
பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை
நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை
தேசத்தை எல்லாம் தெளியவைத் தானே. 15
2064
மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்
ஆணிப்பொன் நின்றங்கு அமுதம் விளைந்தது
பேணிக்கொண்டு உண்டார் பிறப்பற்று இருந்த
ஊனுக்கு இருந்தார் உணராத மாக்களே. 16
2065
அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க
இசைத்திடு பாசப்பற்று ஈங்குஅறு மாறே
அசைத்துஇரு மாயை அனுத்தானும் ஆங்கே
இசைத்தானும் ஒன்றறி விப்போன் இறையே. 17
2066
ஏறு நெறியே மலத்தை எரித்தலால்
ஈறில் உரையால் இருளை அறுத்தலான்
மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுக
கூறு பரனே குருவாம் இயம்பிலே. 18
36. கூடா ஒழுக்கம்
2067
கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களஒழிந் தாரே. 1
2068
செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர் தொழச் செய்வான்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே. 2
2069
பத்துவிற் றுண்டு பகலைக் கழிவிடும்
மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது
வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே. 3
2070
வடக்கு வடக்கென்பர் வைத்ததுஒன்று இல்லை
நடக்க உறுவரே ஞானமி ல்லாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே. 4
2071
காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே. 5
2072
கண்காணி யாகவே கையகத் தேயெழும்
கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்
கண்காணி யாகிய காதலன் தானே. 6
2073
கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை
மன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறை
தன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறை
என்னிது ஈசன் இயல்புஅறி யாரே. 7
2074
காணாத கண்ணில் படலமே கண்ணொளி
காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி
காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே. 8
2075
பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்தொன்று மாபோல் விழியும் தன் கண்ணொளி
அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்
சித்தம் தெளிந்தோன் செயல் ஒழிந்தேனே. 9
2076
பிரான்பல மாகப் பெயர்ந்தன எட்டும்
பராமயம் என்றெண்ணிப் பள்ளி யுணரார்
சுராமயம் முன்னிய சூழ்வினை யாளர்
நிராமய மாக நினைப் பொழிந் தாரே. 10
2077
ஒன்றுஇரண் டாகிநின்று ஒன்றிஒன் றாயினோர்க்கு
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஒன்றுஇரண்டு என்றே உரைதரு வோர்க்கெலாம்
ஒன்றுஇரண் டாய் நிற்கும் ஒன்றோடுஒன் றானதே. 11
2078
உயிரது நின்றால் உணர்வுஎங்கு நிற்கும்
அயர்அறி வில்லையால் ஆருடல் வீழும்
உயிரும் உணலும் ஒருங்கிக் கிடக்கும்
பயிரும் கிடந்துள்ளப் பாங்கு அறி யாரே. 12
2079
உயிரது வேறாய் உணர்வுஎங்கும் ஆகும்
உயிரை அறியில் உணர்வுஅறி வாகும்
உயிர்அன்று உடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே. 13
2080
உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்
நிலவாணி ஐந்தினுள் தேருற நிற்கும்
சிலவாணி யாகிய தேவர் பிரானைத்
தலைவாணி செய்வது தன்னை அறிவதே. 14
2081
தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர்
ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்
தேன்அந்த மாய்நின்று சிற்றின்பம் நீஒழி
கோன்அந்தம் இல்லாக் குணத்தரு ளாமே. 15
2082
உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்
கல்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை
நல்முதல் ஏறிய நாமம் அறநின்றால்
தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே. 16
2083
இந்தியம் அந்தக் கரணம் இவைஉயிர்
வந்தன சூக்க உடலன்று மானது
தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும்
முந்துளம் மன்னும் ஆறாறு முடிவிலே. 17
37. கேடு கண்டு இரங்கல்
2084
வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி தீயின் முனிகின்ற வாறே. 1
2085
போது சடக்கெனப் போகின் றதுகண்டும்
வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது
நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து
ஆதியை அன்பில் அறியகில் லார்களே. 2
2086
கடன்கொண்டு நெற்குத்துக் கையரை
உடம்பினை ஓம்பி உயிராத் திரிவார்
தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி
இடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே. 3
2087
விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்ன
பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்
உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே. 4
2088
நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும்
என்றுஎம் ஈசன் அடியவர்க் கேநல்கும்
அன்றி உலகம் அதுஇது தேவுஎன்று
குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே. 5
2089
இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து
இன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்து
துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று
துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே. 6
2090
பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரானடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. 7
2091
ஆர்வ மனமும் அளவில் இளமையும்
ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்துத்
தீர வருவதோர் காமத் தொழில்நின்று
மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே. 8
2092
இப்பரி சேஇள ஞாயிறு போலுரு
அப்பரிசு அங்கியின் உள்ளுறை அம்மானை
இப்பரி சேகம லத்துறை ஈசனை
மெய்ப்பரி சேவினை வாதுஇருந் தோமே. 9
2093
கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லார்அவன் செய்த பரிசறிந்து
ஆடவல் லார்அவர் பேறெது வாமே. 10
2094
நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர்
நம்செம் பிரான்என்று நாதனை நாடொறும்
துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில்
அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே. 11
2095
மிருக மனிதர் மிக்கோர் பறவை
ஒருவர்செய்து அன்புவைத்து உன்னாதது இல்லை
பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர்
திருமருவு மாதவம் சேர்ந்துஉணர்ந் தோரே. 12
2096
நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச்
சோதியி லாரும் தொடர்ந்துஅறி வாரில்லை
ஆதி பயனென்று அமரர் பிரான்என்ற
நாதியே வைத்தது நாடுகின் றேனே. 13
2097
இருந்தேன் மலர்அளைந்து இன்புற வண்டு
பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வருந்தேன் நுகராது வாய்புகு தேனை
அருந்தேனை யாரும் அறியகி லாரே. 14
2098
கருத்தறி யாது கழிந்தன காலம்
அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்
ஒருத்தன்உள் ளான் உல கத்துயிர்க்கு எல்லாம்
வருத்திநில் லாது வழுக்கின் றாரே. 15
2099
குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தென நாள்களும் வீழ்ந்து கழிந்த
விதிர்திருந்து என்செய்தீர் ஆறுதிர் ஆகில்
கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே. 16
2100
கரைஅருகு ஆறாக் கழனி வளைந்த
திரைஅரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்
வரைஅருகு ஊறிய மாதவ நோக்கின்
நரைஉரு வாச்செல்லும் நாள்கில வாமே. 17
2101
வரவுஅறி வானை மயங்கிருள் ஞாலத்து
இரவுஅறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை
அரவுஅறி வார்முன் ஒருதெய்வம் என்று
விரவுஅறி யாமலே மேல்வைத்த வாறே. 18
38. இதோபதேசம்
2102
மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி
இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே. 1
2103
செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை
நல்ல அரநெறி நாடுமின் நீரே. 2
2014
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே. 3
2105
போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை
நாற்றிசைக் கும்நடு வாய்கின்ற நம்பனைக்
காற்றிசைக் கும் கமழ்ஆக்கையைக் கைக்கொண்டு
கூற்றுதைத் தான்தன்மைக் கூறிநின்று உய்ம்மினே. 4
2106
இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்
எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்று
அக்காலம் உன்ன அருள்பெற லாமே. 5
2107
போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போதும் அரன்அறிவான்உளன்
சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே. 6
2108
பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன்றும் இலாமையும் பேருல காமே. 7
2109
கூடியும் நின்றும் தொழுதுஎம் இறைவனைப்
பாடியுளே நின்று பாதம் பணிமின்கள்
ஆடியு ளேநின்று அறிவுசெய் வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசுவது ஆமே. 8
2110
விடுகின்ற சிவனார் மேல்எழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
இடுகின்றான் உம்மை இமையவ ரோடே. 9
2111
ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று
நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சுடை அண்ணல் திருவடி
வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே. 10
2112
இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை
அன்புறு விர்தவம் செய்யும்மெய்ஞ் ஞானத்து
பண்புறு வீர்பிற வித்தொழி லேநின்று
துன்புறு பாசத்து உழைத்துஒழிந் தீரே. 11
2113
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே. 12
2114
சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன்
பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும்
கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல்காட்டிடும்
சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே. 13
2115
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதி அதுவிரும் பாரே. 14
2116
நியமத்த னாகிய நின்மலன் வைத்த
உகம்எத் தனையென்று ஒருவரும் தேறார்
பவமத்தி லேவந்து பாய்கின்றது அல்லால்
சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே. 15
2117
இங்கித்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்
துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை
விஞ்சத்து உறையும் விகிர்தா எனநின்னை
நஞ்சுஅற் றவர்க்குஅன்றி நாடஒண் ணாதே. 16
2118
பஞ்சமும் ஆம்புவி சற்குறுபால்முன்னி
வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்தம்மை
அஞ்சுவன் நாதன் அருநர கத்துஇடும்
செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே. 17
2119
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே. 18
2120
நரரும் சுரரும் பசுபாசம்நண்ணிக்
கருமங்க ளாலே கழிதலில் கண்டு
குருஎன் பவன்ஞானி கோதிலன் ஆனால்
பரம்என்றல் அன்றிப் பகர்ஒன்றும் இன்றே. 19
2121
ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
மேற்கொண்டவர்வினை போயற நாடொறும்
நீர்க்கின்ற செஞ்சுடை நீளன் உருவத்தின்
மேற்கொண்ட வாறுஅல்லை வீவித்து ளானே. 20
1. ஆறு ஆதாரம்
1704 நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும் கோவிமேல் நின்ற குறிகள் பதினாறும் மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும் காலங்கண் டான்அடி காணலும் ஆமே. 1
1705 ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின் மேதாதி நாதாந்த மீதாம் பாராசக்தி போதா லயத்துஅ விகாரந்தனிற்போத மேதாதி ஆதார மீதான உண்மையே. 2
1706 மேல்என்றும் கீழ்என்று இரண்டற் காணுங்கால் தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும் பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரம் கார்ஒன்று கற்பகம் ஆகிநின்றானே. 3
1707 ஆதார சோதனை யால்நாடி சுத்திகள் மேதாதி ஈரெண் காலந்தத்து விண்ணொளி போதா லயத்துப் புலன்கர ணம் புத்தி சாதா ரணங்கெட்டான் தான்சக மார்க்கமே. 4
1708 மேதாதி யாலே விடாதுஓம் எனத்தூண்டி ஆதார சோதனை அத்துவ சோதனை தாதுஆர மாசுவே தானெழச் சாதித்தால் ஆதாரஞ் செய்போக மாவது காயமே. 5
1709 ஆறந்த மும்கூடி யாரும் உடம்பினில் கூறிய ஆதார மற்றும் குறிக்கொண்மின் ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே ஊறிய ஆதாரத்து ஓரெழுத்து ஆமே. 6
1710 ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல் போகும் உடம்பும் பொருந்திய வாறுதான் ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம் ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே. 7
1711 ஆயு மலரின் அணிமலர் மேலது ஆய இதழும் பதினாறும் அங்குள தூய அறிவு சிவானந்த மாகிப்போய் மேய அறிவாய் விளைந்தது தானே. 8
2. அண்டலிங்கம் (உலக சிவம்)
1712 இலிங்கம தாவது யாரும் அறியார் இலிங்கம தாவது எண்டிசை எல்லாம் இலிங்கம் தாவது எண்ணெண் கலையும் இலிங்கம தாக எடுத்தது உலகே. 1
1713 உலகில் எடுத்தது சத்தி முதலா உலகில் எடுத்தது சத்தி வடிவாய் உலகில் எடுத்தது சத்தி குணமாய் உலகில் எடுத்த சதாசிவன் தானே. 2
1714 போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும் ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம் ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம் ஆகம அத்துவா ஆறும் சிவமே. 3
1715 ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் ஈசனை வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்று ஆர்த்தினர் அண்டங் கடந்து அப் புறநின்று காத்தனன் என்னும் கருத்தறி யாரே. 4
1716 ஒண்சுட ரோன் அயன் மால்பிர சாபதி ஒண்சுட ரான இரவியோடு இந்திரன் கண்சுட ராகிக் கலந்தெங்கும் தேவர்கள் தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே. 5
1717 தாபரத் துள்நின்று அருளவல் லான்சிவன் மாபரத் துண்மை வழிபடு வாரில்லை மாபரத் துண்மை வழிபடு வாளர்க்கும் பூவகத்து உள்நின்ற பொற்கொடி யாகுமே. 6
1718 தூவிய விமானமும் தூலமது ஆகுமால் ஆய சதாசிவம் ஆகுநற் சூக்குமம் ஆய பலிபீடம் பத்திர லிங்கமாம் ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே. 7
1719 முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும் கொத்தும்அக்கொம்பு சிலைநீறு கோமளம் அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம் உய்த்த்தின் சாதனம் பூமண லிங்கமே. 8
1720 துன்றும் தயிர்நெய் பால்துய்ய மெழுகுடன் கன்றிய செம்பு கனல்இர தம்சலம் வன்திறல் செங்கல் வடிவுடை வில்வம்பொன் தென்தியங்கு ஒன்றை தெளிசிவ லிங்கமே. 9
1721 மறையவர் அர்ச்சனை வண்படி கந்தான் இறையவர் அர்ச்சனை யேயபொன் னாகும் குறைவிலா வசியர்க்குக் கோமள மாகும் துறையடைச் சூத்திரர் தொல்வாண லிங்கமே. 10
1722 அது வுணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி எதுஉண ராவகை நின்றனன் ஈசன் புதுஉணர் வான புவனங்கள் எட்டும் இது உணர்ந்து என்னுடல் கோயில்கொண்டானே. 11
1723 அகலிட மாய்அறி யாமல் அடங்கும் உகலிட மாய்நின்ற ஊனதன் உள்ளே பகலிட மாம்முனம் பாவ வினாசன் புகலிட மாய்நின்ற புண்ணியன் தானே. 12
1724 போது புனைசூழல் பூமிய தாவது மாது புனைமுடி வானக மாவது நீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும் ஆதியுற நின்றது அப்பரி சாமே. 13
1725 தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம் திரைபொரு நீரது மஞ்சன சாலை வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை கரையற்ற நந்திக் கலையும்திக்காமே. 14
3. பிண்டலிங்கம் (உடற் சிவம்)
1726 மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம் மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம் மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே. 1
1727 உலந்திலர் பின்னும் உளரென நிற்பர் நிலந்திரு நீர்தெளி யூனவை செய்யப் புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக வலந்தரு தேவரை வந்திசெய் யீரே. 2
1728 கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும் வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர் தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புக வாயில்கொண் டு ஈசனும் ஆளவந் தானே. 3
1729 கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு வாயில்கொண் டான் எங்கள் மாநந்தி தானே. 4
4. சதாசிவ லிங்கம் (உலக முதற் சிவம்)
1730 கூடிய பாதம் இரண்டும் படிமிசை பாடிய கையிரண்டு எட்டுப் பரந்தெழும் தேடு முகம்ஐந்து செங்கையின் மூவைந்து நாடும் சதாசிவம் நல்லொளி முத்தே. 1
1731 வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன் மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும் ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும் சாதா ரணமாம் சதாசிவந் தானே. 2
1732 ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை ஆகின்ற சத்தியின் உள்ளே கதிரெழ ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின் ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே. 3
1733 அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம் அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம் அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே. 4
1734 சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துள சமயத்து எழுந்த இராசி ஈராறுள சமயத்து எழுந்த சரீரம்ஆ றெட்டுள சமயத்து எழுந்த சதாசிவந் தானே. 5
1735 நடுவு கிழக்குத் தெற்குஉத் தரமேற்கு நடுவு படிகநற் குங்குமவன்னம் அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால் அடியேற்கு அருளிய முகம்இவை அஞ்சே. 6
1736 அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள அஞ்சினொ டுஅஞ்சு கரதலம் தானுள அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென் நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே. 7
1737 சத்தி தராதலம் அண்டம் சதாசிவம் சத்தி சிவமிக்க தாபர சங்கமம் சத்தி உருவம் அருவம் சதாசிவம் சத்தி சிவதத்துவ முப்பத் தாறே. 8
1738 தத்துவ மாவது அருவம் சராசரம் தத்துவ மாவது உருவம் சுகோதயம் தத்துவம் எல்லாம் சகலமு மாய்நிற்கும் தத்துவம் ஆகும் சதாசிவம் தானே. 9
1739 கூறுமின் ஊறு சதாசிவன் எம்இறை வேறோர் உரைசெய்து மிகைப்பொரு ளாய்நிற்கும் ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடு மாறுசெய் வான் என் மனம்புகுந் தானே. 10
1740 இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும் சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும் அருளார்ந்த சிந்தையெம் ஆதிப் பிரானைத் தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந் தேனே. 11
1741 சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் காற்றிடில் உத்தமம் வாமம் உரையத்து இருந்திடும் தத்துவம் பூருவம் தற்புரு டன்சிரம் அத்தரு கோரம் மருடத்துஈ சானனே. 12
1742 நாணுநல் ஈசானன் நடுவுச்சி தானாகும் தாணுவின் தன்முகம் தற்புருட மாகும் காணும் அகோரம் இருதயம் குய்யமாம் மாணுற வாமம்ஆம் சத்திநற் பாதமே. 13
1743 நெஞ்சு சிரம்சிகை நீள்கவ சம்கண்ணாம் வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம் செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும் செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே. 14
1744 எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம் விண்ணிற் பரைசிரம் மிக்க சிகையாதி வண்ணங் கவசம் வனப்புடை இச்சையாம் பண்ணுங் கிரியை பரநேந் திரத்திலே. 15
1745 சத்திநாற் கோணம் சலமுற்று நின்றிடும் சத்திஅறு கோண சயனத்தை உற்றிடும் சத்தி வட்டம் சலமுற்று இருந்திடும் சத்தி உருவாம் சதாசிவன் தானே. 16
1746 மான் நந்தி எத்தனை காலம் அழைக்கினும் தான் நந்தி அஞ்கின் தனிச்சுடை ராய்நிற்கும் கால் நந்தி உந்தி கடந்து கமலத்தில் மேல் நந்தி ஒன்பதின் மேவிநின் றானே. 17
1747 ஒன்றிய வாறும் உடலின் உடன்கிடந்து என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது தென்தலைக்கு ஏறத் திருந்து சிவனடி நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே. 18
1748 உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக் கொணர்ந்தேன் குவலயம் கோயிலென் நெஞ்சம் புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே. 19
1749 ஆங்கவை Yமூன்றினும் ஆரழல் வீசிடத் தாங்கிடும் ஈரேழு தான்நடு வானதில் ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆமென ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே. 20
1750 தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும் தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும் தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாய் தன்மேனி தானாகும் தற்பரம் தானே. 21
1751 ஆரும் அறியார் அகாரம் அவனென்று பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி தாரம் இரண்டும் தரணி முழுதுமாய் மாறி எழுந்திடும் ஓசையதாமே. 22
1752 இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம் இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம் இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம் இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே. 23
5. ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவம் )
1753 அகார முதலா அனைத்துமாய் நிற்கும் உகார முதலா உயிர்ப்பெய்து நிற்கும் அகார உகாரம் இரண்டும் அறியில் அகார உகாரம் இலிங்கம் தாமே. 1
1754 ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும் மேதாதி நாதமும் மீதே விரிந்தன ஆதார விந்து ஆதிபீட நாமே போதாஇ லிங்கப் புணர்ச்சிய தாமே. 2
1755 சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம் சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம் சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம் சத்தி சிவமாகும் தாபரம் தானே. 3
1756 தானேர் எழுகின்ற சோதியைக் காணலாம் வானேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம் பூரேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன் தானேர் எழுகின்ற அகாரமது ஆமே. 4
1757 விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம் விந்துவ தேபீட நாதம் இலிங்கமாம் அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய் வந்து கருஐந்தம் செய்யும் அவைஐந்தே. 5
1758 சத்திநற் பீடம் தகுநல்ல ஆன்மா சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும் சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம் சத்திநல் ஆன்மாச் சதாசிவம் தானே. 6
1759 மனம்புகுந்து என்னுயிர் மன்னிய வாழ்க்கை மனம்புகுந்து இன்பம் பொழிகின்ற போது நலம்புகுந்து என்னொடு நாதனை நாடும் இனம்புகுந்து ஆதியும் மேற்கொண்டவாறே. 7
1760 பராபரன் எந்தை பனிமதி சூடி தராபரன் தன்னடி யார்மனக் கோயில் சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும் அராபரன் மன்னி மனத்துஉறைந் தானே. 8
1761 பிரான்அல்ல நாம்எனில் பேதை உலகம் குரால்என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன் அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும் பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே. 9
1762 அன்று நின் றான்கிடந் தான்அவன் என்று சென்றுநின்று எண்டிசை ஏத்துவர் தேவர்கள் என்றுநின்று ஏத்துவன் எம்பெரு மான்தன்னை ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந் தானே. 10
6. ஞான லிங்கம் (உணர்வுச் சிவம் )
1763 உருவும் அருவும் உருவோடு அருவும் மருவு பரசிவன் மன்பல் உயிர்க்கும் குருவு மெனநிற்கும் கொள்கையன் ஆகும் தருவென நல்கும் சதாசிவன் தானே. 1
1764 நாலான கீழது உருவம் நடுநிற்க மேலான நான்கும் அருவம் மிகுநாப்பண் நாலான ஒன்றும் அருவுரு நண்ணலால் பாலாம் இவையாம் பரசிவன் தானே. 2
1765 தேவர் பிரானைத் திசைமுக நாதனை நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை ஏவர் பிரான்என்று இறைஞ்சுவர் அவ்வழி யாவர் பிரானடி அண்ணலும் ஆமே. 3
1766 வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற காண்டகை யானொடும் கன்னி உணரினும் மூண்டகை மாறினும் ஒன்றது வாமே. 4
1767 ஆதி பரந்தெய்வம் அண்டத்து நல்தெய்வம் சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம் நீதியுள் மாதெய்வம் நின்மலர் எம்இறை பாதியுள் மன்னும் பராசத்தி யாமே. 5
1768 சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே சுத்த சிவபதம் தோயாத தூவொளி அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம் ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே. 6
1769 கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும் எழுந்திடம் காணில் இருக்கலும் ஆகும் பரந்திடம் காணில் பார்ப்பதி மேலே திரண்டெழக் கண்டவன் சிந்தையு ளானே. 7
1770 எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும் முந்த உரைத்து முறைசொல்லின் ஞானமாம் சந்தித்து இருந்த இடம்பெருங் கண்ணியை உந்தியின் மேல்வைத்து உகந்து இருந்தானே. 8
1771 சத்தி சிவன்விளை யாட்டாம் உயிராகி ஒத்த இருமாயா கூட்டத்து இடையூட்டிச் சுத்தம தாகும் துரியம் பிறிவித்துச் சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே. 9
1772 சத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி சத்தி சிவமுமாம் சிவன்சத் தியுமாகும் சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே. 10
7. சிவலிங்கம் ( சிவகுரு )
1773 குரைக்கின்ற வாரிக் குவலய நீரும் பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும் நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை வரைத்து வலம்செயு மாறுஅறி யேனே. 1
1774 வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப் புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே. 2
1775 ஒன்றெனக் கண்டோ ம் ஈசன் ஒருவனை நன்றென்று அடியிணை நான்அவனைத்தொழ வென்றுஐம் புலமும் மிகக்கிடந்து இன்புற அன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே. 3
1776 மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன் பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம் நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப் பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே. 4
1777 மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று ஆவி எழும்அள வன்றே உடலுற மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும் பாவித்து அடக்கிற் பரகதி தானே. 5
8. சம்பிரதாயம் ( பண்டை முறை )
1778 உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கி கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே. 1
1779 உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான வியவார் பரமும்பின் மேவும் பிராணன் செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே உயலார் குருபரன் உய்யக் கொண்டானே. 2
1780 பச்சிம திக்கலே வைத்தஆ சாரியன் நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள் உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலது வைச்ச பதமிது வாய்திற வாதே. 3
1781 பிட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவோனை ஒட்டடித்து உள்ளமர் மாசெலாம் வாங்கித் தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும் வட்டமது ஒத்தது வாணிபம் வாய்த்ததே. 4
1782 தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன் இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் பிரிக்கின்ற விந்து பிணக்கறுத்து எல்லாம் கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்டேனே. 5
1783 கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு நாடி அடிவைத்து அருள்ஞான சத்தியால் பாடல் உடலினில் பற்றற நீக்கியே கூடிய தானவ னாம்குளிக் கொண்டே. 6
1784 கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ளக் கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக் கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால் கொண்டான் எனஒன்றும் கூறகி லானே. 7
1785 குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன் பறிக்கின்ற காயத்தைப் பற்றியநேர்மை பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே. 8
1786 உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும் உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம் உணர்வுடை யார்கண் உணர்ந்துகண் டாரே. 9
1787 காயப் பரப்பில் அலைந்து துரியத்துச் சால விரிந்து குவிந்து சகலத்தில் ஆயஅவ் ஆறாறு அடைந்து திரிந்தோர்க்குத் தூய அருள்தந்த நந்திக்கு என் சொல்வதே. 10
1788 நானென நீயென வேறில்லை நண்ணுதல் ஊனென ஊனுயிர் என்ன உடனின்று வானென வானவர் நின்று மனிதர்கள் தேனென இன்பம் திளைக்கின்ற வாறே. 11
1789 அவனும் அவனும் அவனை அறியார் அவனை அறியில் அறிவானும் இல்லை அவனும் அவனும் அவனை அறியில் அவனும் அவனும் அவனிவன் ஆமே. 12
1790 நானிது தானென நின்றவன் நாடோ றும் ஊனிது தானுயிர் போலுணர் வானுளன் வானிரு மாமுகில் போற்பொழி வானுளன் நானிது அம்பர நாதனும் ஆமே. 13
1791 பெருந்தன்மை தானென யானென வேறாய் இருந்ததும் இல்லைஅது ஈசன் அறியும் பொருந்தும் உடல்உயிர் போல்உமை மெய்யே திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே. 14
9. திருவருள் வைப்பு
1792 இருபத மாவது இரவும் பகலும் உருவது ஆவது உயிரும் உடலும் அருளது ஆவது அறமும் தவமும் பொருவது உள்நின்ற போகமது ஆமே. 1
1793 காண்டற்கு அரியன் கருத்திலன் நந்தியும் தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும் வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம் ஈண்டிக் கிடந்தங்கு இருளறும் ஆமே. 2
1794 குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும் வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும் செறிப்புறு சிந்தையைக் சிக்கென நாடில் அறிப்புறு காட்சி அமரரும் ஆமே. 3
1795 தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள் பேர்ந்தறி வான் எங்கள் பிஞ்ஞகன் எம்இறை ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாமெனச் சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே. 4
1796 தானே அறியும் வினைகள் அழிந்தபின் நானே அறிகிலன் நந்தி அறியுங்கொல் ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின் தேனே யனையன் நம் தேவர் பிரானே. 5
1797 நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை வான்அறிந் தார் அறி யாது மயங்கினர் ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் தான்அறி யான்பின்னை யார்அறி வாரே? 6
1798 அருள்எங்கு மான அளவை அறியார் அருளை நுகர்அமு தானதும் தேரார் அருள்ஐங் கருமத்து அதிசூக்கம் உன்னார் அருள்எங்கும் கண்ணானது ஆர்அறி வாரே. 7
1799 அறிவில் அணுக அறிவது நல்கிப் பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட்டு அறிவது ஆக்கி அடியருள் நல்கும் செறிவொடு நின்றார் சிவம்ஆயி னாரே. 8
1800 அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு அருளில் அழிந்துஇளைப் பாறி மறைந்திட்டு அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி அருளால் என்நந்தி அகம்புகுந் தானே. 9
1801 அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி அருளால் அடிபுணைந்து ஆர்வமும் தந்திட்டு அருளானஆனந்தந்து ஆரமுது ஊட்டி அருளால் என்நந்தி அதும்புகுந் தானே. 10
1802 பாசத்தில் இட்டது அருள்அந்தப் பாசத்தின் நேசத்தை விட்டது அருள்அந்தநேசத்தில் கூசற்ற முத்தி அருள்அந்தக் கூட்டத்தின் நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே. 11
1803 பிறவா நெறிதந்த பேரரு ளாளன் மறவா அருள் தந்த மாதவன் நந்தி அறவாழி அந்தணன் ஆதிப்பராபரன் உறவாகி வந்துஎன் உளம்புகுந் தானே. 12
1804 அகம்புகுந் தான்அடி யேற்குஅரு ளாலே அகம்புகுந் தும்தெரி யான்அருள் இல்லோர்க்கு அகம்புகுந்து ஆனந்த மாக்கிச் சிவமாய் அகம்புகுந் தான்நந்தி ஆனந்தி யாமே. 13
1805 ஆயும் அறிவோடு அறியாத மாமாயை ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும் ஆய பலஇந் திரியம் அவற்றுடன் ஆய அருள்ஐந்து மாம் அருட் செய்கையே. 14
1806 அருளே சகலமும் ஆய பவுதிகம் அருளே சராசர மாய அமலமே இருளே வெளியே யெனும்எங்கும் ஈசன் அருளே சகளத்தின் அன்றிஇன் றாமே. 15
1807 சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து தவமான ஐம்முகன் ஈசன் அரனும் பவமுறும் மாலும் பதுமத்தோன் ஈறா நவம்அவை யாகி நடிப்பவன் தானே. 16
1808 அருட்கண்இ லாதார்க்கு அரும்பொருள் தோன்றா அருட்கண்உ ளோர்க்குஎதிர் தோன்றும் அரனே இருட்கண்ணி னோர்க்குஅங்கு இரவியும் தோன்றாத் தெருட்கண்ணி னோர்க்குஎங்கும் சீரொளி யாமே. 17
1809 தானே படைத்திடும் தானே அளித்திடும் தானே துடைத்திடும் தானே மறைத்திடும் தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும் தானே வியாபித் தலைவனும் ஆமே. 18
1810 தலையான நான்கும் தனதுஅரு வாகும் அலையா அருவுரு வாகும் சதாசிவம் நிலையான கீழ்நான்கு நீடுரு வாகும் துலையா இறைமுற்று மாய் அல்லது ஒன்றே. 19
1811 ஒன்றது வாலே உலப்பிலி தானாகி நின்றது தான்போல் உயிர்க்குயி ராய்நிலை துன்றி அவைஅல்ல வாகும் துணையென்ன நின்றது தான்விளை யாட்டென்னுள் நேயமே. 20
1812 நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு ஆயக் குடிலைகள் நாதம் அடைந்திட்டுப் போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு வீயத் தகாவிந்து வாக விளையுமே. 21
1813 விளையும் பரவிந்து தானே வியாபி விளையும் தனிமாயை மிக்கமா மாயை கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம் அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே. 22
10. அருள் ஒளி
1814 அருளில் தலைநின்று அறிந்துஅழுந் தாதார் அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார் அருளின் பெருமை அறியார் செறியார் அருளில் பிறந்திட்டு அறிந்துஅறி வாரே. 1
1815 வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி ஆரா அமுதளித்து ஆனந்தி பேர்நந்தி பேரா யிரமுடைப் பெம்மான்பேர் ஒன்றினில் ஆரா அருட்கடல் ஆடுகென் றானே. 2
1816 ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் கண்டேன் சிவன்பெரும் தன்மையைக் கூடிய வாறே குறியாக் குறிதந்தென் ஊடுநின் றான்அவன் தன்னருள் உற்றே. 3
1817 உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும் பற்றிய மாயாப் படலம் எனப் பண்ணி அத்தனை நீயென்று அடிவைத்தேன் பேர்நந்தி கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே. 4
1818 விளக்கினை யேற்றி வெளியை அறிமின் விளக்கினை முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே. 5
1819 ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா ஒளியு ளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும் ஒளியுருள் கண்டகண் போலவே றாயுள ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே. 6
1820 புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி நிறமே புகுந்தென்னை நின்மலன் ஆக்கி அறமே புகுந்தெனக்கு ஆரமுது ஈந்த திறம்ஏதென்று எண்ணித் திகைத்திருந் தேனே. 7
1821 அருளது என்ற அகலிடம் ஒன்றும் பொருளது என்ற புகலிடம் ஒன்றும் மருளது நீங்க மனம்புகுந் தானைத் தெருளுறும் பின்னைச் சிவகதி தாமே. 8
1822 கூறுமின் நீர்முன் பிறந்திங்கு இறந்தமை வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும் பாறணி யும்உடல் வீழலிட்டு ஆருயிர் தேறுஅணிவோம்இது செப்பவல் லீரே. 9
11. சிவபூசை
1823 உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே. 1
1824 வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக் காட்டவும் நாம்இலம் காலையும் மாலையும் ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும் பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே. 2
1825 பான்மொழி பாகன் பராபரன் தானாகும் ஆன சதாசிவன் தன்னைஆ வாகித்து மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு சீன்முகம் செய்யச் சிவனவன் ஆகுமே. 3
1826 நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால் கனைகழல் ஈசனைக் காண அரிதாம் கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார் புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. 4
1827 மஞ்சன மாலை நிலாவிய வானவர் நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் அஞ்சமு தாம்உப சாரம்எட்டு எட்டோ டும் அஞ்சலி யோடும் கலந்துஅர்ச்சித் தார்களே. 5
1828 புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும் எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை நண்ணறி யாமல் நழுவுகின் றாரே. 6
1829 அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள் ஒத்தமெய்ஞ் ஞானத்து உயர்ந்தார் பதத்தைச் சுத்தம தாக விளக்கித் தெளிக்கவே முத்தியாம் என்று நம்மூலன் மொழிந்ததே. 7
1830 மறப்புற்று இவ்வழி மன்னிநின் றாலும் சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம் அறப்பெற வேண்டும் அமரர் பிரானே. 8
1831 ஆரா தனையும் அமரர் குழாங்களும் தீராக் கடலும் நிலத்துஉம தாய்நிற்கும் பேரா யிரமும் பிரான்திரு நாமமும் ஆரா வழியெங்கள் ஆதிப் பிரானே. 9
1832 ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணம்தொழத் தான்அந்த மில்லாத் தலைவன் அருளது தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்ததோர் பார்ஐங் குணமும் படைத்துநின் றானே. 10
1833 உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி மழைக்கொண்ட மாமுகில் மேற்சென்று வானோர் தழைக்கொண்ட பாசம் தயங்கிநின்று ஏத்தப் பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே. 11
1834 வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு கள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார் அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே. 12
1835 கழிப்படுந் தண்கடற் கௌவை யுடைத்து வழிப்படு வார்மலர் மொட்டுஅறி யார்கள் பழிப்படு வார்பல ரும்பழி வீழ வெளிப்படு வோர்உச்சி மேவிநின் றானே. 13
1836 பயனறிவு ஒன்றுண்டு பன்மலர் தூவிப் பயனறி வார்க்குஅரன் தானே பயிலும் நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே. 14
1837 ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்று ஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன் மூர்த்தியை மூவா முதலுறு வாய்நின்ற தீர்த்தனை யாரும் துதித்துஉண ராரே. 15
1838 தேவர்க ளோடுஇசை வந்துமண் ணோடுறும் பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள் நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே. 16
1839 உழைக்கவல் லோர்நடு நீர்மலர் ஏந்திப் பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி இழைக்கொண்ட பாதத்து இனமலர் தூவி மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே. 17
1840 வென்று விரைந்து விரைப்பணி என்றனர் நின்று பொருந்த இறைபணி நேர்படத் துன்று சலமலர் தூவித் தொழுதிடில் கொண்டிடும் நித்தலும் கூறியஅன்றே. 18
1841 சாத்தியும் வைத்தும் சயம்புஎன்று ஏத்தியும் ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார் ஆத்தி மலக்கிட்டு அகத்துஇழுக்கு அற்றக்கான் மாத்திக்கே செல்லும் வழியது வாமே. 19
1842 ஆவிக் கமலத்தில் அப்புறத்து இன்புற மேவித் திரியும் விரிசடை நந்தியைக் கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத் தாவிக்கு மந்திரம் தாமறி யாரே. 20
1843 காண்ஆகத் துள்ளேஅழுந்திய மாணிக்கம் காணும் அளவும் கருத்தறி வாரில்லை பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு மாணிக்க மாலை மனம்புகுந் தானே. 21
1844 பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி இருந்தன்மை யாலும் என் நெஞ்சுஇடங் கொள்ள வருந்தன்மை யாளனை வானவர் தேவர் தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே. 22
1845 சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும் அமையும் விசேடமும் ஆனமந் திரசுத்தி சமையநிர் வாணம் கலாசுத்தி யாகும் அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே. 23
1846 ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லது ஊழில் உயிரை உணரவும் தான்ஒட்டா ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர் ஊழி கடந்தும் ஓர்உச்சியு ளானே. 24
12. குருபூசை
1847 ஆகின்ற நந்தி அடித்தா மரைபற்றிப் போகின்றுபதேசம் பூசிக்கும் பூசையும் ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல் போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே. 1
1848 கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானுற மாமலர் இட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது தேனமர் புங்குழல் சேரஒண் ணாதே. 2
1849 மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன் ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம் சேவடி சேரல் செயலறல் தானே. 3
1850 உச்சியும் காலையும் மாலையும் ஈசனை நச்சுமின் நச்சி நமவென்று நாமத்தை விச்சிமின் விச்சு விரிசுடர் மூன்றினும் நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே. 4
1851 புண்ணிய மண்டலம் பூசைநா றாகுமாம் பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம் எண்ணிலிக்கு ஐயம் இடில்கோடி யாகுமால் பண்ணிடில் ஞானிஊண் பார்க்கில் விசேடமே. 5
1852 இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம் இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடை வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே. 6
1853 இந்துவும் பானுவும் என்றெழு கின்றதோர் விந்துவும் நாதமும் ஆகிமீ தானத்தே சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே. 7
1854 மனபவ னங்களை மூலத்தான் மாற்றி அனித உடல்பூத மாக்கி அகற்றிப் புனிதன் அருள்தனில் புக்கிருந்து இன்பத் தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே. 8
1855 பகலும் இரவும் பயில்கின்ற பூசை இயல்புடை ஈசர்க்கு இணைமல ராகப் பகலும் இரவும் பயிலாத பூசை சகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே. 9
1856 இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்குஅற ஆனந்தத் தேறல் பருகி இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து இராப்பகல் மாயை இரண்டுஇடத் தேனே. 10
13. மகேசுவர பூசை
1857 படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே. 1
1858 தண்டுஅறு சிந்தை தபோதனார் தாம்மகிழ்ந்து உண்டது மூன்று புவனமும் உண்டது கொண்டது மூன்று புவனமும் கொண்டதுஎன்று எண்திசை நந்தி எடுத்துரைத் தானே. 2
1859 மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை ஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானது மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும் தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே. 3
1860 அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என் சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில்என் பகரு ஞானி பகல்ஊண் பலத்துக்கு நிகரில்லை என்பது நிச்சயம் தானே. 4
1861 ஆறிடும் வேள்வி அருமறை நூலவர் கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில் நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலை பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே. 5
1862 ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள் ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே. 6
1863 சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை நான்நொந்து நொந்து வருமளவுஞ் சொல்லப் பேர்நந்தி என்னும் பிதற்குஒழி யேனே. 7
1864 அழிதகவு இல்லா அரன்அடி யாரைத் தொழுகை ஞாலத்துத் தூfங்கிருள் நீங்கும் பழுது படாவண்ணம் பண்பனை நாடித் தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே. 8
1865 பகவற்குஏதா கிலும் பண்பில ராகிப் புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும் முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழி அகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தா ரே 9
1866 வித்தக மாகிய வேடத்தர் உண்டஊன் அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம் சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின் முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே. 10
1867 தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம் ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும் ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும் போழ்வினை தீர்க்கும் அப் பொன்னுலகு ஆமே. 11
14. அடியார் பெருமை
1868 திகைக்குரி யானொரு தேவனை நாடும் வகைக்குரி யானொரு வாது இருக்கில் பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும் அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே. 1
1869 அவ்வுல கத்தே பிறந்துஅவ் உடலோணடும் அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர் அவ்வுல கத்தே அரனடி கூடுவர் அவ்வுல கத்தே அருள்பெறு வாரே. 2
1870 கொண்ட குறியும் குலவரை உச்சியும் அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும் எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்தினுள் உண்டெனில் நாம்இனி உய்ந்தொழிந் தோமே. 3
1871 அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும் கொண்ட சராசரம் முற்றும் குணங்களும் பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும் கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே. 4
1872 பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள் உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக் கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிரும் அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. 5
1873 இயங்கும் உலகினில் ஈசன் அடியார் மயங்கா வழிசெல்வர் வானுலகு ஆள்வர் புயங்களும் எண்டிசை போதுபா தாள மயங்காப் பகிரண்ட மாமுடி தானே. 6
1874 அகம்படி கின்றநம் ஐயனை ஒரும் அகம்படி கண்டவர் அல்லலில் சேரார் அகம்படி உட்புக்கு அறிகின்ற நெஞ்சம் அகம்படி கண்டுஆம் அழிக்கலும் எட்டே. 7
1875 கழிவும் முதலும் காதல் துணையும் அழிவும் தாய்நின்ற ஆதிப் பிரானைப் பழியும் புகழும் படுபொருள் முற்றும் ஒழியும்என் ஆவி உழவுகொண் டானே 8
1876 என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும் அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம் ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான் நின்றான் முகில்வண்ணன் நேர்எழுத் தாமே. 9
1877 துணிந்தார் அகம்படி துன்னி உறையும் பணிந்தார் அகம்படி பால்பட்டு ஒழுகும் அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக் கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே. 10
1878 தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப் புலைமிசை நீங்கிய பொன்னுலகு ஆளும் பலமிசை செய்யும் படர்சடை யோனே. 11
1879 அறியாப் பருவத்து அரன்அடி யாரைக் குறியால் அறிந்தின்பம் கொண்டது அடிமை குறியார் சடைமுடி கட்டி நடப்பார் மறியார் புனல்மூழ்க மாதவம் ஆமே. 12
1880 அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள் சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன் அவன்பால் அணுகியே நாடும் அடியார் இவன்பால் பெருமை இலயமது ஆமே. 13
1881 முன்னிருந் தார்முழுது எண்கணத் தேவர்கள் எண்ணிறந்து அன்பால் வருவர் இருநிலத்து எண்இரு நாலு திசைஅந் தரம் ஒக்கப் பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே. 14
1882 சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம் அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும் நவயோகம் கைகூடும் நல்லியல் காணும் பவயோகம் இன்றிப் பரலோகம் ஆமே. 15
1883 மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன் மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன் மேலுணர் வார்மிகு ஞாலத்து அமரர்கள் மேலுணுர் வார்சிவன் மெய்யடி யார்களே. 16
15. போசன விதி
1884 எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு கட்ட அடிசில் அழுதென்று எதிர்கொள்வர் ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம் விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே. 1
1885 அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர் உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப் பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து இச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே. 2
16. பிட்சா விதி
1886 விச்சுக் கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டு உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது அச்சம்கெட்டு அச்செயல் அறுத்துண்ண மாட்டாதார் இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே. 1
1887 பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில் பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப் பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப் பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே. 2
1888 பரந்துலகு ஏழும் படைத்த பிரானை இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும் நிரந்தக மாக நினையும் அடியார் இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே. 3
1889 வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன் தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம் பொரஇருந் தான்புக லேபுக லாக வரஇருந் தால்அறி யான்என்ப தாமே. 4
1890 அங்கார் பசியும் அவாவும் வெகுளியும் தங்கார் சிவனடி யார்சரீரத்திடைப் பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும் தங்கார் சிவனைத் தலைப்படு வாரே. 5
1891 மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும் கையதும் நீண்டார் கடைத்தலைக் கேசெல்வர் ஐயம் புகாமல் இருந்த தவசியார் வையகம் எல்லாம் வரஇருந்தாரே. 6
17. முத்திரை பேதம்
நாலேழு மாறவே நண்ணிய முத்திரை பாலான மோன மொழியில் பதிவித்து மேலான நந்தி திருவடி மீதுய்யக் கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே. 1
1893 துரியங்கள் மூன்று சொருகுஇட னாகி அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி மருவிய சாம்பவி கேசரி உண்மை பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே. 2
1894 சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம் ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரை ஓம்பயில் ஒங்கிய உண்மைய கேசரி நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே. 3
1895 தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும் ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால் ஏனைச் சிவமாம் சொரூபம் மறைந்திட்ட மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே. 4
1896 வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம் வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம் வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே ஆக்கும் அச் சுத்த்ததை யார்அறி வார்களே. 5
1897 யோகத்தின் முத்திரை ஓர்அட்ட சித்தியாம் ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால் ஆகத் தகும்வேத கேசரி சாம்பவி யோகத்துக் கேசரி யோகமுத் திரையே. 6
1898 யோகிஎண் சித்தி அருளொலி வாதனை போகி தன் புத்தி புருடார்த்த நன்னெறி ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை ஏகமும் கண்டொன்றில் எய்திநின் றானே. 7
1899 துவாதச மார்க்கமென் கோடச மார்க்கமாம் அவாஅறும் ஈர்ஐ வகைஅங்கம் ஆறும் தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை நவாஅக மோடுஉன்னல் நற்சுத்த சைவமே. 8
1900 மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை தேனிக்கும் முத்திரை சித்தாந்த முத்திரை கானிக்கும் முத்திரை கண்ட சமயமே. 9
1901 தூநெறி கண்ட சுவடு நடுவுஎழும் பூநெறி கண்டுஅது பொன்னக மாய்நிற்கும் மேல்நெறி கண்டது வெண்மதி மேதினி நீல்நெறி கண்டுள நின்மலன் ஆமே. 10
18. பூரணக் குகை நெறிச் சமாதி
1902 வளர்பிறை யில்தேவர் தம்பாலின் முன்னி உளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கித் தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள் உளதுறும் யோகி உடல்விட்டால் தானே. 1
1903 தான்இவை ஒக்கும் சமாதிaக கூடாது போன வியோகி புகலிடம் போந்துபின் ஆனவை தீர நிரந்தர மாயோகம் ஆனவை சேர்வார் அருளின் சார் வாகியே. 2
1904 தான்இவ் வகையே புவியோர் நெறிதங்கி ஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்து தானதில் அந்தச் சிவயோகி ஆகுமுன் ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே. 3
1905 சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால் தவலோகம் சேர்ந்துபின் தான்வந்து கூடிச் சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பர் புவலோகம் போற்றும்நற் புண்ணியத்தோரே. 4
1906 ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால் தானற மோனச் சமாதியுள் தங்கியே தானவன் ஆகும் பரகாயம் சாராதே ஊனமில் முத்தராய் மீளார் உணர்வுற்றே. 5
1907 செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில் செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில் செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம் செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே. 6
1908 உன்னக் கருவிட்டு உரவோன் அரன்அருள் பன்னப் பரமே அருட்குலம் பாலிப்பன் என்னப் புதல்வர்க்கும் வேண்டி யிடுஞானி தன்இச்சைக்கு ஈசன் உருச்செய்யும் தானே. 7
1909 எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத் தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம் அங்காங்கு எனநின்று சகமுண்ட வான்தோய்தல் இங்கே இறந்துஎங்கு மாய்நிற்கும் ஈசனே. 8
19. சமாதிக் கிரியை
1910 அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில் வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில் நொந்து நாய்நரி நுகரின் நுண்செரு வந்துநாய் நரிக்கு உணவாகும் வையகமே. 1
1911 எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில் அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும் மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம் எண்ணரு மன்னர் இழப்பார் அரசே. 2
1912 புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும் மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம் மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல்மண்டியே. 3
1913 அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால் அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில் சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும் அந்தமில் இன்ப அருள்பெறு வாரே. 4
1914 நவமிகு சாணாலே நல்லாழம் செய்து குவைமிகு சூழஐஞ் சாணாகக் கோட்டித் தவமிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப் பவமறு நற்குகை பத்மா சனமே. 5
1915 தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை நன்மலர்ச் சோலை நகரின்நற் பூமி உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல் இந்நிலம் தான்குகைக்கு எய்தும் இடங்களே. 6
1916 நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய் நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப் பொற்பமா ஓசமும் மூன்றுக்கு மூன்றுஅணி நிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே. 7
1917 பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து விஞ்சப் படுத்துஅதன் மேல்ஆ சனம்இட்டு முஞ்சிப் படுத்துவெண் ணீறு இட்ட தன்மேலே பொன்செய் நற்சுண்ணம் பொதியலும் ஆமே. 8
1918 நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சாரக் கள்ளவிழ தாமம் களபம்கத் தூரியும் தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே. 9
1919 ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம் மீதினில் இட்டுஆ சனத்தினின் மேல் வைத்துப் போதறு கண்ணமும் நறும் பொலிவித்து மீதில் இருத்தி விரித்திடு வீரே. 10
1920 விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து பொரித்த கறிபோ னகம் இள நீரும் குருத்தலம் வைத்துஓர் குழைமுகம் பார்வை தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே. 11
1921 மீது சொரிந்திடும் வெண்ணீறும் கண்ணமும் போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும் பாத உதகத்தான் மஞ்சனம் செய்துபார் மீதுமூன் றுக்குமூன்று அணிநிலம் செய்யுமே. 12
1922 ஆதன மீதில் அரசு சிவலிங்கம் போதும் இரண்டினில் ஒன்றைத் தாபித்து மேதரு சந்நிதி மேவுத் தரம்பூர்வம் காதலில் சோடசம் காண்உப சாரமே. 13
20. விந்துற்பனம்
1923 உதயத்தில் விந்துவில் ஓங்குகுண் டலியும் உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான் விதியில் பிரமாதி கள்மிகு சத்தி கதியில் கரணம் கலைவை கரியே. 1
1924 செய்திடும் விந்துபே தத்திறன் ஐ ஐந்தும் செய்திடும் நாதபேதத்திற னால் ஆறும் செய்திடும் மற்றவை ஈர்இரண்டில்திறம் செய்திடும் ஆறுஆறு சேர்தத் துவங்களே. 2
1925 வந்திடு பேத மெலாம்பர விந்துமேல் தந்திடு மாமாயை வாகேசி தற்பரை உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே. 3
1926 விளங்கு நிவர்த்தாதி மேலக ராதி வளங்கொள் உகாரம் மகாரத் துள்விந்து களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே. 4
1927 அந்தமும் ஆதியும் ஆகிப் பராபரன் வந்த வியாபி எனலாய அந்நெறி கந்தம தாகிய காரண காரியம் தந்துஐங் கருமமும் தான்செய்யும் வீயமே. 5
1928 வீயம தாகிய விந்துவின் சத்தியால் ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக் காயஐம் பூதமும் காரிய மாயையில் ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே. 6
1929 புறம்அகம் எங்கும் புகுந்துஒளிர் விந்து நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை உறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள் திறனொடு வீடுஅளிக் கும்செயல் கொண்டே. 7
1930 கொண்டஇவ் விந்து பரமம்போல் கோதற நின்ற படம்கட மாய்நிலை நிற்றலின் கண்டக லாதியின் காரண காரியத்து அண்டம் அனைத்துமாய் மாமாயை ஆகுமே. 8
1931 அதுவித்தி லேநின்று அங்கு அண்ணிக்கும் நந்தி இதுவித்தி லேஉள வாற்றை உணரார் மதுவித்தி லேமலர் அன்னம தாகிப் பொதுவித்திலே நின்ற புண்ணியன் தானே. 9
1932 வித்தினில் அன்றி முளையில்லை அம்முளை வித்தினில் அன்றி வெளிப்படு மாறில்லை வித்தும் முளையும் உடனன்றி வேறில்லை அத்தன்மை யாரும் அரன்நெறி காணுமே. 10
1933 அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம் பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத் திருந்தும் உடன்மன மாம் கூறு சேர்ந்திட்டு இருந்தன முன்னாள் இரதமது ஆகுமே. 11
1934 இரதம் முதலான ஏழ்தாது மூன்றில் உரிய தினத்தில் ஒருபுல் பனிபோல் அரிய துளிவிந்து வாகும்ஏழ் மூன்றின் மருவிய விந்து வளரும்கா யத்திலே. 12
1935 காயத்தி லேமூன்று நாளில் கலந்திட்டுக் காயத்துள் தன்மனம் ஆகும் கலாவிந்து நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின் மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே. 13
1936 அழிகின்ற விந்து அளவை அறியார் கழிகின்ற தன்னையுட் காக்கலும் தேரார்
அழிகின்ற காயத்து அழிந்துஅயர் உற்றோர் அழிகின்ற தன்மை அறிந்தொழி யாரே. 14
21. விந்து ஜயம் - போக சரவோட்டம்
1937 பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய் ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப் பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே. 1
1938 தானே அருளால் சிவயோகம் தங்காது தானேஅக் காமாதி தங்குவோ னும் உட்கும் தானே அதிகாரம் தங்கில் சடங்கெடும் ஊனே அவற்றுள் உயிர்ஒம்பா மாயுமே. 2
1939 மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில் ஓயா இருபக்கத்து உள்வளர் பக்கத்துள் ஏயாஎண் நாள்இன்ப மேல்பனி மூன்றிரண்டு ஆயா அபரத்துள் ஆதிநாள் ஆறாமே. 3
1940 ஆறுஐந்து பன்னொன்றும் அன்றிச் சகமார்க்கம் வேறுஅன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம்தோடு ஏறும் இருபத் தொருநாள் இடைத்தோங்கும் ஆறின் மிகுந்தோங்கும் அக்காலம் செய்யவே. 4
1941 செய்யும் அளவில் திருநான் முகூர்த்தமே எய்யும் கலைகாலம் இந்து பருதிகால் நையுமிடத்து ஓடி நன்கா நூல்நெறி செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே. 5
1942 விடுங்காண் முனைந்துஇந் திரியங்க ளைப் போல் நடுங்காது இருப்பானும் ஐஐந்தும் நண்ணப் படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக் கடுங்காற் கரணம் கருத்துறக் கொண்டே. 6
1943 கொண்ட குணனே நலமேநற் கோமளம் பண்டை உருவே பகர்வாய் பவளமே மிண்டு தனமே மிடைய விடும் போதில் கண்ட கரணம் உட் செல்லக்கண் டேவிடே. 7
1944 விட்டபின் கர்ப்பஉற் பத்தி விதியிலே தொட்டுறுங் காலங்கள் தோன்றக் கருதிய கட்டிய வாழ்நாள் சாம்நாள் குணம் கீழ்மைசீர்ப் பட்ட நெறியிதுஎன்று எண்ணியும் பார்க்கவே. 8
1945 பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்று வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே சேர்த்துற்று இருதிங்கள் சேராது அகலினும் மூப்புற்றே பின்னாளில் ஆம்எல்லாம் உள்ளவே. 9
1946 வித்திடு வோர்க்கு அன்றி மேலோர் விளைவில்லை வித்திடு வோர்க்கு அன்றி மிக்கோர் அறிவில்லை வித்தினில் வித்தை விதற உணர்வரேல் மத்தில் இருந்ததோர் மாங்கனி யாமே. 10
1947 கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும் கருத்துளன் ஈசன் கருஉயிரோடும் கருத்தது வித்தாய்க் காரண காரியம் கருத்தறு மாறுஇவை கற்பனை தானே. 11
1948 ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும் அழியாப் பிராணன் அதிபலஞ் சத்தி ஒழியாத புத்தி தபஞ்செப மோனம் அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே. 12
1949 வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித் துற்ற சுழியனல் சொருகிக் சுடருற்று முற்று மதியத்து அமுதை முறைமுறை செற்றுண் பவரே சிவயோகி யாரே. 13
1950 யோகியும் ஞானியும் உத்தம சித்தனும் யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும் மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும் ஆகிய விந்து அழியாத அண்ணலே. 14
1951 அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும் மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும் கண்ணும் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்து உண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே. 15
1952 அறியாது அழிகின்ற ஆதலால் நாளும் பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள் அறிவாய் நனவில் அதீதம் புரியச் செறிவாய் இருந்து சேரவே வாயுமே. 16
1953 மாதரை மாய வரும் கூற்றம் என்றுன்னக் காதலது ஆகிய காமம் கழிந்திடும் சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும் சோதியின் உள்ளே துரிசறும் காலமே. 17
1954 காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன் காலம் கடந்தழிந் தான்விந்து செற்றவன் காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை காலின்கண் வந்த கலப்பறி யாரே. 18
1955 கலக்கு நாள் முன்னாள் தன்னிடைக் காதல் நலத்தக வேண்டில் அந் நாரி யுதரக் கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை விலக்கு வனசெய்து மேலணை வீரே. 19
1956 மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும் கோலால் நடத்திக் குறிவழி யேசென்று பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால் மாலா னதுமான மாளும் அவ்விந்துவே. 20
1957 விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும் அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும் நந்திய நாசமும் நாதத்தால் பேதமும் தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே. 21
1958 விந்துஎன் வீசத்தை மேவிய மூலத்து நந்திய அங்கிய னாலே நயந்தெரிந்து அந்தமில் பானுஅதிகண்ட மேலேற்றிச் சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே. 22
1959 அமுதச் சசிவிந்து வாம்விந்து மாள அமுதப் புனலோடி அங்கியின் மான அமுதச் சிவயோகம் ஆதலால் சித்தி அமுதப் பலாவனம் ஆங்குறும் யோகிக்கே. 23
1960 யோகம் அவ் விந்து ஒழியா வகையுணர்ந்து ஆகம்இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப் போகம் சிவபோகம் போகிநற் போகமா மோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே. 24
1961 மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து காதலி னால்விடார் யோகம் கலந்தவர் மாதர் உயிராசை கைக்கொண்ட வாடுவர் காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே. 25
1962 சாற்றிய விந்து சயமாகும் சத்தியால் ஏற்றிய மூலத் தழலை எழமூட்டி நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடு ஆற்றி அமுதம்அருந்தவித் தாமே. 26
1963 விந்துவும் நாதமும் மேலக் கனல்மூல வந்த அனல் மயிர்க் கால்தோறும் மன்னிடச் சிந்தனை மாறச் சிவம்அக மாகவே விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே. 27
1964 வித்துக்குற் றுண்பான் விளைவுஅறி யாதவன் வித்துக்குற் றுண்ணாமல் வித்துச் சுட்டு உண்பான் வித்துகுற் றுண்பானில் வேறலன் ஈற்றவன் வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித்தான் அன்றே. 28
1965 அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட வன்னத் திருவிந்து மாயும் கா யத்திலே. 29
1966 அன்னம் பிராணன்என் றார்க்கும் இருவிந்து தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச் சொன்ன மாம்உருத் தோன்றும்எண் சித்தியாம் அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே. 30
1967 நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய் ஒன்றும் மகாரம் ஒருமூன்றோடு ஒன்றவை சென்று பராசக்தி விந்து சயந்தன்னை ஒன்ற உரைக்க உபதேசம் தானே. 31
1968 தானே உபதேசம் தானல்லாது ஒன்றில்லை வானே உயர்விந்து வந்த பதினான்கு மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும் தானே சிவகதி தன்மையும் ஆமே. 32
1969 விந்துவும் நாதமும் விளைய விளைந்தது வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம் அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும் விந்து அடங்க விளையும் சிவோகமே. 33
1970 வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி நிறுக்கின்ற வாறும் அந் நீள்வரை ஒட்டிப் பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை அறுக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை அறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே. 34
1971 விந்துவும் நாதமும் மேவியுடன் கூடிப் சந்திர னோடே தலைப்படு மாயிடில் சுந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும் அங்குஉதி மந்திரம் ஆகுதி யாகுமே. 35
1972 மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம் கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே. 36
1973 சத்தமும் சத்த மனமும் மனக்கருத்து ஒத்துஅறி கின்ற இடமும் அறிகிலர் மெய்த்து அறிகின்ற இடம்அறி வாளர்க்கு அத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே. 37
1974 உரம்அடி மேதினி உந்தியில் அப்பாம் விரவிய தன்முலை மேவிய கீழ்அங்கி கருமலை மீமிசை கைக்கீழிற் காலாம் விரவிய சுந்தரம் மேல்வெளி யாமே. 38
22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்
1975 செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள் மஞ்சுடை மேரு வலம்வரு காரணம் எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி தஞ்சுட ராக வணங்கும் தவமே. 1
1976 பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம் புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன் இகலற ஏழுல கும்உற வோங்கும் பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே. 2
1977 ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும் சோதியின் உள்ளே சுடரொளி யாய்நிற்கும் வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும் ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே. 3
1978 தானே உலகுக்குத் தத்துவனாய் நிற்கும் தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும் தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும் தானே உலகுக்குத் தண்சுட ராகுமே. 4
1979 வவையமுக் கோணம் வட்டம் அறுகோணம் துலையிரு வட்டம் துய்ய விதம்எட்டில் அலையுற்ற வட்டத்தில் ஈர்எட்டு இதழாம் மலைவுற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே. 5
1980 ஆதித்தன் உள்ளி லானமுக் கோணத்தில் சோதித்து இலங்கும்நற் சூரியன் நாலாம் கேத முறுங்கேணி சூரியன் எட்டில் சோதிதன் நீட்டில் சோடசம் தானே. 6
1981 ஆதித்த னோடே அவனி இருண்டது பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற வேதப் பொருளை விளங்குகி லீரே. 7
1982 பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள் நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன் ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே. 8
1983 மண்ணை இடந்துஅதின் கீழொடும் விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும் கண்ணை இடந்து களிதந்த ஆனந்தம் எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே. 9
1984 பாரை இடந்து பகலோன் வரும்வழி யாரும் அறியார் அருங்கடை நூலவர் தீரன் இருந்த திருமலை சூழ்என்பர் ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே. 10
23. பிண்டாதித்தன்
1985 நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன் கொன்று மலங்கன் குழல்வழி ஓடிட வென்று விளங்கும் விரிசுடர் காணுமே. 1
1986 ஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டு சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர் பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம் ஆதித்த னோடே அடங்குகின் றாரே. 2
1987 உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே. 3
24. மன ஆதித்தன்
1988 எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும் எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப விரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவி ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே. 1
1989 சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை அந்த இரண்டும் உபய நிலத்தில் சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே. 2
1990 ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி ஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர் ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்ற ஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே. 3
1991 ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி ஓர் அண்டத் தார்க்கும் உணரா உணர்வது பேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்று ஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே. 4
1992 ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும் ஒன்பதும் ஈசன் இயல்அறி வார்இல்லை முன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார் இன்பம் இலார்இருள் சூழநின் றாரே. 5
25. ஞானாதித்தன்
1993 விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்து அந்த அபரம் பரநாத மாகியே வந்தன தம்மில் பரங்கலை யாதிவைத்து உந்தும் அருணோ தயமென்ன உள்ளத்தே. 1
1994 உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான் தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால் வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்கு உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே. 2
1995 தேவர் பிரான்திசை பத்துஉத யஞ்செய்யும் மூவர் பிரான்என முன்னொரு காலத்து நால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும் மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே. 3
1996 பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை மையிருள் நீக்கும் மதிஅங்கி ஞாயிறு செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன் கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே. 4
1997 தனிச்சுடர் ஏற்றித் தயங்கிருள் நீங்க அனித்திடும் மேலை அருங்கனி ஊறல் கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன் நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே. 5
1998 நேரறி வாக நிரம்பிய பேரொளி போரறி யாது புவனங்கள் போய்வரும் தேரறி யாத திசையொளி யாயிடும் ஆரறி வாரிது நாயக மாமே. 6
1999 மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன் கண்டிதத் துள்ளே கதிரொளி ஆயிடும் சென்றிடத்து எட்டுத் திசையெங்கும் போய்வரும் நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே. 7
2000 நாபிக்கண் நாசிநயன நடுவினும் தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியைத் தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும் மூவரு மாக உணர்ந்திருந் தாரே. 8
26. சிவாதித்தன்
2001 அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும் சென்றிடு ஞானச் சிவப்பர காசத்தால் ஒன்றும் இருசட ராம்அரு ணோதயம் துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே. 1
2002 கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில் அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து அடங்கிட நின்றதும் அப்பரி சாமே. 2
2003 தானே விரிசுடர் மூன்றும்ஒன்றாய் நிற்கும் தானே அயன்மால் எனநின்று தாபிக்கும் தானே உடலுயிர் வேறன்றி நின்றுளன் தானே வெளியொளி தானிருட் டாமே. 3
2004 தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும் வையம் புனல்அனல் மாருதம் வானகம் சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர் ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே. 4
27. பசு இலக்கணம்
2005 உன்னும் அளவில் உணரும் ஒருவனைப் பன்னு மறைகள் பயிலும் பரமனை என்னுள் இருக்கும் இளையா விளக்கினை அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே. 1
2006 அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில் துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம் தன்னிலை அன்னம் தனியொன்றது என்றக்கால் பின்ன மடஅன்னம் பேறணு காதே. 2
28. புருடன்
2007 வைகரி யாதியும் மாயா மலாதியும் பொய்கரி யான புருடாதி பேதமும் மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச் செய்கரி ஈசன் அனாதியே செய்ததே. 1
2008 அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே. 2
2009 படர்கொண்ட ஆலதின் வித்தது போலச் சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்ய இடர்கொண்ட பாச இருளற ஒட்டி நடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே. 3
2010 அணுவுள் அவனும் அவனுள் அணுவும் கணுஅற நின்ற கலப்பது உணரார் இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித் தணிவற நின்றான் சராசரம் தானே. 4
29. சீவன்
2011 மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே. 1
2012 ஏனோர் பெருமையின் ஆயினும் எம்மிறை ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தின் அளவே. 2
2013 உண்டு தெளிவன் உரைக்க வியோகமே கொண்டு பயிலும் குணமில்லை யாயினும் பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக் கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே. 3
2014 மாயா உபாதி வசத்ததாகும் சேதனத்து ஆய குருஅரு ளாலே அதில்தூண்ட ஓயும் உபாதியோடு ஒன்றின் ஒன் றாது உயிர் ஆய துரியம் புகுந்தறி வாகவே. 4
30. பசு
2015 கற்ற பசுக்கள் கதறித் திரியினும் கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போலும் மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே. 1
2016 கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென் எல்லைக் கடப்பித்து இறைவன் அடிகூட்டி வல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லது கொல்லை செய் நெஞ்சம் குறிப்பறி யாதே. 2
31. போதன் (அறிஞன்)
2017 சீவன் எனச்சிவன் என்னவே றில்லை சீவ னார்சிவ னாரை அறிகிலர் சீவ னார்சிவ னாரை அறிந்தபின் சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே. 1
2018 குணவிளக் காகிய கூத்தப் பிரானும் மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம் பணவிளக் காகிய பல்தலை நாகம் கணவிளக் காகிய கண்காணி யாகுமே. 2
2019 அறிவாய் அறியாமை நீங்கி யவனே பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன் அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன் செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே. 3
2020 ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின் ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின் றானே. 4
2021 சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார் அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார் தவமான செய்து தலைப்பறி கின்றார் நவமான தத்துவம் நாடாகி லாரே. 5
2022 நாடோ றும் ஈசன் நடத்தும் தொழில்உள்ளார் நாடோ றும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார் நாடோ றும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால் நாடோ றும் நாடார்கள் நாள்வினை யாளரே. 6
32. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை
2023 ஆக மதத்தன ஐந்து களிறுள ஆக மதத்தறி யோடுஅணை கின்றில பாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின் யோகு திருந்துதல் ஒன்றிஅறி யோமே. 1
2024 கருத்தின்நன் னூல்கற்று கால்கொத்திப் பாகன் திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே வருத்தினும் அம்மா வழிநட வாதே. 2
2025 புலம் ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும் நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன் உலம்வந்து போம்வழி ஒன்பது தானே. 3
2026 அஞ்சுள சிங்கம் அடவியல் வாழ்வன அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுஅக மேபுகும் அஞ்சின் உகிரும் எயிரும் அறுத்திட்டால் எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே. 4
2027 ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள் ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர் ஐவரும் ஐந்த சினத்தொட நின்றிடில் ஐவர்க்கு சிறைஇறுத்து ஆற்றகி லோமே. 5
2028 சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும் சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும் கொல்லநின் றோடும் குதிரைஒத் தேனே. 6
2029 எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறை எண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும் எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல் எண்ணிலி இல்லதோடு இன்பமது ஆமே. 7
2030 விதியின் பெருவலி வேலைசூழ் வையம் துதியின் பெருவலி தொல்வான் உலகம் மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை நிதியின் பெருவலி நீர்வலி தானே. 8
33. ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை
2031 குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம் வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன பட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்து இட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே. 1
2032 கிடக்கும் உடலின் கிளர்இந் திரியம் அடக்க லுறும் அவன்தானே அமரன் விடக்கிண்டு இன்புற மேவுறு சிந்தை நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே. 2
2033 அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே. 3
2034 முழக்கி எழுவன மும்மத வேழம் அடக்க அறிவென்றும் கோட்டையை வைத்தேன் பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக் கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே. 4
2035 ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே. 5
2036 பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென் விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம் பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம் அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே. 6
2037 இளைக்கின்ற வாறுஅறிந்து இன்னுயிர் வைத்த கிளைக்குஒன்றும் ஈசனைக் கேடில் புகழோன் தளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கத் துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே. 7
2038 பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டு வாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில் வேய்ந்துகொள் மேலை விதியது தானே. 8
2039 நடக்கின்ற நந்தியை நாடோ றும் உன்னில் படர்க்கின்ற சிந்தையப் பைய ஒடுக்கிக் குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில் வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே. 9
2040 சென்றன நாழிகை நாள்கள் சிலபல நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்து வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள் குன்று விழவதில் தாங்கலும் ஆமே. 10
2041 போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப் போற்றிசெய் மீட்டே புலன்ஐந்தும் புத்தியால் நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை ஊற்றுக உள்ளத்து ஒருங்கலும் ஆமே. 11
2042 தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார் சிரிக்கின்ற வாறு சிலபல பேசில் வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே. 12
2043 கைவிட லாவது ஒன்று இல்லை கருத்தினுள் எய்தி அவனை இசையினால் ஏத்துமின் ஐவருடைய அவாவினில் தோன்றிய பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே. 13
34. அசற்குரு நெறி
2044 உணர்வுஒன்று இலாமூடன் உண்மைஒ ராதோன் கணுவின்றி வேதா கமநெறி காணான் பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன் அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே. 1
2045 மந்திர தந்திர மாயோக ஞானமும் பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர் சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டு அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே. 2
2046 ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன் காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன் கோமான் அலன்அசத் தாகும் குரவனே. 3
2047 கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால் தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும் நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றே முற்பால நந்தி மொழிந்துவைத் தானே. 4
2048 குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர் முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின் குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே. 5
35. சற்குரு நெறி
2049 தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன் தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன் தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே. 1
2050 தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள் தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம் தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம் தவிரவைத் தான் பிற வித்துயர் தானே. 2
2051 கறுத்த இரும்பே கனகமது ஆனால் மறித்துஇரும் பாகா வகையது போலக் குறித்தஅப் போதே குருவருள் பெற்றான் மறித்துப் பிறவியல் வந்தணு கானே. 3
2052 பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும் நேசத்து நாடி மலமற நீக்குவோர் ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப் பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே. 4
2053 நேயத்தே நிற்கும் நிமலன் மலமற்ற நேயத்தை நல்கவல் லோன்நித்தன் சுத்தனே ஆயத்த வர்தத் துவம் உணர்ந் தாங்குஅற்ற நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே. 5
2054 பரிசன வேதி பரிசித்தது எல்லாம் வரிசை தரும்பொன் வகையாகு மாபோல் குருபரி சித்த குவலயம் எல்லாம் திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே. 6
2055 தானே எனநின்ற சற்குரு சந்நிதி தானே எனநின்ற தன்மை வெளிப்படில் தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெற ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே. 7
2056 வரும்வழி போம்வழி மாயா வழியைக் கருவழி கண்டவர் காணா வழியைக் பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக் குருவழியே சென்று கூடலும் ஆமே. 8
2057 குருஎன் பவனே வேதாக மங்கூறும் பரஇன்ப னாகிச் சிவயோகம் பாவித்து ஒருசிந்தை யின்றி உயிர்பாசம் நீக்கி வருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே. 9
2058 சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச் சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச் சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல் அத்தன் அருட்குரு வாம்அவன் கூறிலே. 10
2059 ஊற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினை பற்றறு நாதன் அடியில் பணிதலால் சுற்றிய பேதம் துரியம் மூன் றால்வாட்டித் தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே. 11
2060 எல்லாம் இறைவன் இறைவி யுடன்இன்பம் வலலார் புலனும் வருங்கால் உயிர்தோன்றிச் சொல்லா மலம்ஐந்து அடங்கிட்டு ஓங்கியே செலலாச் சிவகதி சேர்தல்விளை யாட்டே. 12
2061 ஈனப் பிறவியில் இட்டது மீட்டுட்டித் தானத்துள் இட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும் ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று மோனத்துள் வைத்தலும் முத்தன்தன் செய்கையே. 13
2062 அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம் சித்தொடு அசித்துஅறத் தெளிவித்த சீவனைச் சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச் சத்துடன் ஐங்கரு மத்திடும் தன்மையே. 14
2063 ஈசத்து வங்கடந்து இல்லையென்று அப்புறம் பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை தேசத்தை எல்லாம் தெளியவைத் தானே. 15
2064 மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம் ஆணிப்பொன் நின்றங்கு அமுதம் விளைந்தது பேணிக்கொண்டு உண்டார் பிறப்பற்று இருந்த ஊனுக்கு இருந்தார் உணராத மாக்களே. 16
2065 அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க இசைத்திடு பாசப்பற்று ஈங்குஅறு மாறே அசைத்துஇரு மாயை அனுத்தானும் ஆங்கே இசைத்தானும் ஒன்றறி விப்போன் இறையே. 17
2066 ஏறு நெறியே மலத்தை எரித்தலால் ஈறில் உரையால் இருளை அறுத்தலான் மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுக கூறு பரனே குருவாம் இயம்பிலே. 18
36. கூடா ஒழுக்கம்
2067 கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார் கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால் கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக் கண்காணி கண்டார் களஒழிந் தாரே. 1
2068 செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர் தொழச் செய்வான் மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே. 2
2069 பத்துவிற் றுண்டு பகலைக் கழிவிடும் மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும் பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே. 3
2070 வடக்கு வடக்கென்பர் வைத்ததுஒன்று இல்லை நடக்க உறுவரே ஞானமி ல்லாதார் வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம் அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே. 4
2071 காயக் குழப்பனைக் காயநன் னாடனைக் காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத் தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவர்கள் காயத்துள் நின்ற கருத்தறி யாரே. 5
2072 கண்காணி யாகவே கையகத் தேயெழும் கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும் கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும் கண்காணி யாகிய காதலன் தானே. 6
2073 கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை மன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறை தன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறை என்னிது ஈசன் இயல்புஅறி யாரே. 7
2074 காணாத கண்ணில் படலமே கண்ணொளி காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக் காணாது கண்டார் களவொழிந் தாரே. 8
2075 பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி உய்த்தொன்று மாபோல் விழியும் தன் கண்ணொளி அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச் சித்தம் தெளிந்தோன் செயல் ஒழிந்தேனே. 9
2076 பிரான்பல மாகப் பெயர்ந்தன எட்டும் பராமயம் என்றெண்ணிப் பள்ளி யுணரார் சுராமயம் முன்னிய சூழ்வினை யாளர் நிராமய மாக நினைப் பொழிந் தாரே. 10
2077 ஒன்றுஇரண் டாகிநின்று ஒன்றிஒன் றாயினோர்க்கு ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா ஒன்றுஇரண்டு என்றே உரைதரு வோர்க்கெலாம் ஒன்றுஇரண் டாய் நிற்கும் ஒன்றோடுஒன் றானதே. 11
2078 உயிரது நின்றால் உணர்வுஎங்கு நிற்கும் அயர்அறி வில்லையால் ஆருடல் வீழும் உயிரும் உணலும் ஒருங்கிக் கிடக்கும் பயிரும் கிடந்துள்ளப் பாங்கு அறி யாரே. 12
2079 உயிரது வேறாய் உணர்வுஎங்கும் ஆகும் உயிரை அறியில் உணர்வுஅறி வாகும் உயிர்அன்று உடலை விழுங்கும் உணர்வை அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே. 13
2080 உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன் நிலவாணி ஐந்தினுள் தேருற நிற்கும் சிலவாணி யாகிய தேவர் பிரானைத் தலைவாணி செய்வது தன்னை அறிவதே. 14
2081 தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர் ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர் தேன்அந்த மாய்நின்று சிற்றின்பம் நீஒழி கோன்அந்தம் இல்லாக் குணத்தரு ளாமே. 15
2082 உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும் கல்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை நல்முதல் ஏறிய நாமம் அறநின்றால் தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே. 16
2083 இந்தியம் அந்தக் கரணம் இவைஉயிர் வந்தன சூக்க உடலன்று மானது தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும் முந்துளம் மன்னும் ஆறாறு முடிவிலே. 17
37. கேடு கண்டு இரங்கல்
2084 வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார் அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள் உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார் முற்றொளி தீயின் முனிகின்ற வாறே. 1
2085 போது சடக்கெனப் போகின் றதுகண்டும் வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து ஆதியை அன்பில் அறியகில் லார்களே. 2
2086 கடன்கொண்டு நெற்குத்துக் கையரை உடம்பினை ஓம்பி உயிராத் திரிவார் தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி இடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே. 3
2087 விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து புரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்ன பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர் உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே. 4
2088 நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும் என்றுஎம் ஈசன் அடியவர்க் கேநல்கும் அன்றி உலகம் அதுஇது தேவுஎன்று குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே. 5
2089 இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து இன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்து துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே. 6
2090 பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும் பெறுதற்கு அரிய பிரானடி பேணார் பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம் பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. 7
2091 ஆர்வ மனமும் அளவில் இளமையும் ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்துத் தீர வருவதோர் காமத் தொழில்நின்று மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே. 8
2092 இப்பரி சேஇள ஞாயிறு போலுரு அப்பரிசு அங்கியின் உள்ளுறை அம்மானை இப்பரி சேகம லத்துறை ஈசனை மெய்ப்பரி சேவினை வாதுஇருந் தோமே. 9
2093 கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள் பாடகில் லார்அவன் செய்த பரிசறிந்து ஆடவல் லார்அவர் பேறெது வாமே. 10
2094 நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர் நம்செம் பிரான்என்று நாதனை நாடொறும் துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில் அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே. 11
2095 மிருக மனிதர் மிக்கோர் பறவை ஒருவர்செய்து அன்புவைத்து உன்னாதது இல்லை பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர் திருமருவு மாதவம் சேர்ந்துஉணர்ந் தோரே. 12
2096 நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச் சோதியி லாரும் தொடர்ந்துஅறி வாரில்லை ஆதி பயனென்று அமரர் பிரான்என்ற நாதியே வைத்தது நாடுகின் றேனே. 13
2097 இருந்தேன் மலர்அளைந்து இன்புற வண்டு பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார் வருந்தேன் நுகராது வாய்புகு தேனை அருந்தேனை யாரும் அறியகி லாரே. 14
2098 கருத்தறி யாது கழிந்தன காலம் அருத்தியுள் ளான்அம ராபதி நாதன் ஒருத்தன்உள் ளான் உல கத்துயிர்க்கு எல்லாம் வருத்திநில் லாது வழுக்கின் றாரே. 15
2099 குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய் விதித்தென நாள்களும் வீழ்ந்து கழிந்த விதிர்திருந்து என்செய்தீர் ஆறுதிர் ஆகில் கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே. 16
2100 கரைஅருகு ஆறாக் கழனி வளைந்த திரைஅரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும் வரைஅருகு ஊறிய மாதவ நோக்கின் நரைஉரு வாச்செல்லும் நாள்கில வாமே. 17
2101 வரவுஅறி வானை மயங்கிருள் ஞாலத்து இரவுஅறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை அரவுஅறி வார்முன் ஒருதெய்வம் என்று விரவுஅறி யாமலே மேல்வைத்த வாறே. 18
38. இதோபதேசம்
2102 மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும் பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான் சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே. 1
2103 செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையை வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை நல்ல அரநெறி நாடுமின் நீரே. 2
2014 ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே. 3
2105 போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை நாற்றிசைக் கும்நடு வாய்கின்ற நம்பனைக் காற்றிசைக் கும் கமழ்ஆக்கையைக் கைக்கொண்டு கூற்றுதைத் தான்தன்மைக் கூறிநின்று உய்ம்மினே. 4
2106 இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில் புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின் எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்று அக்காலம் உன்ன அருள்பெற லாமே. 5
2107 போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள் ஆகின்ற போதும் அரன்அறிவான்உளன் சாகின்ற போதும் தலைவனை நாடுமின் ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே. 6
2108 பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின் இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும் சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப் பிறப்பொன்றும் இலாமையும் பேருல காமே. 7
2109 கூடியும் நின்றும் தொழுதுஎம் இறைவனைப் பாடியுளே நின்று பாதம் பணிமின்கள் ஆடியு ளேநின்று அறிவுசெய் வார்கட்கு நீடிய ஈற்றுப் பசுவது ஆமே. 8
2110 விடுகின்ற சிவனார் மேல்எழும் போது நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம் கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன் இடுகின்றான் உம்மை இமையவ ரோடே. 9
2111 ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள் ஆறணி செஞ்சுடை அண்ணல் திருவடி வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே. 10
2112 இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை அன்புறு விர்தவம் செய்யும்மெய்ஞ் ஞானத்து பண்புறு வீர்பிற வித்தொழி லேநின்று துன்புறு பாசத்து உழைத்துஒழிந் தீரே. 11
2113 மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே. 12
2114 சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன் பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும் கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல்காட்டிடும் சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே. 13
2115 முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன் அத்தகு சோதி அதுவிரும் பாரே. 14
2116 நியமத்த னாகிய நின்மலன் வைத்த உகம்எத் தனையென்று ஒருவரும் தேறார் பவமத்தி லேவந்து பாய்கின்றது அல்லால் சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே. 15
2117 இங்கித்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும் துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை விஞ்சத்து உறையும் விகிர்தா எனநின்னை நஞ்சுஅற் றவர்க்குஅன்றி நாடஒண் ணாதே. 16
2118 பஞ்சமும் ஆம்புவி சற்குறுபால்முன்னி வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்தம்மை அஞ்சுவன் நாதன் அருநர கத்துஇடும் செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே. 17
2119 சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர் அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும் குருவை வழிபடின் கூடலும் ஆமே. 18
2120 நரரும் சுரரும் பசுபாசம்நண்ணிக் கருமங்க ளாலே கழிதலில் கண்டு குருஎன் பவன்ஞானி கோதிலன் ஆனால் பரம்என்றல் அன்றிப் பகர்ஒன்றும் இன்றே. 19
2121 ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற மேற்கொண்டவர்வினை போயற நாடொறும் நீர்க்கின்ற செஞ்சுடை நீளன் உருவத்தின் மேற்கொண்ட வாறுஅல்லை வீவித்து ளானே. 20
|
||||||||
by Swathi on 24 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|