|
||||||||
பூகோளம் புரிந்தவர் |
||||||||
ஒரு பெரிய நதியில் ஒரு படகு சென்று கொண்டிருந்தது . அதில் ஒரு விஞ்ஞானி , ஒரு பண்டிதர் , ஒரு வரலாற்றுப்பேராசிரியர் ஆகியோர் பயணம் செய்து கொண்டிருந்தனர் . விஞ்ஞானி படகோட்டியைப் பார்த்து “ உனக்கு வானிலை சாஸ்திரம் தெரியுமா ?” என்று கேட்டார் . படகோட்டி தெரியாது என்றார் . அடடா உன் வாழ்க்கையில் 25 சதவீதம் வீணாப்போச்சு என்றார் விஞ்ஞானி . பண்டிதர் படகோட்டியிடம் “ உனக்கு இலக்கணம் தெரியுமா ” என்று கேட்டார் . “ தெரியாது ” என்றான் படகோட்டி . “ அடடா உன் வாழ்க்கையில் 50 சதவீதம் வீண் ” என்றார் பண்டிதர் . வரலாற்றாசிரியர் , உனக்கு பழங்கால நாகரிகம் பற்றித் தெரியுமான்னு கேட்டார் . அதுக்கும் தெரியாதுன்னான் படகோட்டி . அடடா உன் வாழ்க்கையிலே 75 சதவீதம் வீணாப்போச்சே என்றார் வரலாற்றாசிரியர் . அந்த நேரம் படகிலே ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே வர ஆரம்பித்தது . படகோட்டி மற்ற மூவரையும் பார்த்து “ உங்களுக்கு நீந்தத் தெரியுமா ? படகு மூழ்கப்போவுதே “ ன்னான் . மூவரும் தெரியாதுன்னு அலறினார்கள் . உங்க வாழ்க்கை 100 சதவீதம் வீண் என்ற படகோட்டி நீந்தித் தப்பித்தான் . பள்ளிப்பாடங்களை விட அனுபவமே சிறந்தது . “ எற்றிற் குரியர் கயவர் ஒன்றுற்றக்கால் என்று இன்றைய அரசியல் நிலையை அன்றே கூறியவர் வள்ளுவர் பெருமான் . அதாவது கயவர்கள் தனக்கு இலாபம் வருகிறது என்றால் நாட்டைக் கூட விற்றுவிடுவார்கள் என்று அரசியல் என்ற அதிகாரத்தில் கூறினார் வள்ளுவர் . ஆனால் பெருந்தலைவரோ நாட்டு விடுதலையைப் போற்றி நாட்டின் நலத்தையும் வளத்தையும் பெருக்குவதே தனது உயிர் மூச்சாகக் கொண்டவர் . தொழில் வளம்பெருகினால் மக்கள் வளம் பெறுவர் என்ற தொலைநோக்குப் பார்வை கொண்டவர் தலைவர் . கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகு அழுத்த மின் சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் அரசின் சார்பின் நிர்மானித்துத் தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன் வந்தது . இதைத் தமிழகத்தில் தொடங்கத் தலைமையாட்சியரிடம் ஒப்புதல் வாங்கினார் பெருந்தலைவர் . செக் நாட்டு தொழில் விற்பன்னர்களும் , நடுவண் அமைச்சின் துறை அதிகாரிகளும் தமிழகம் வந்தனர் . அவர்களுடன் தமிழக அரசுத் துறை அதிகாரிகளும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடத்தைத் தேடி வலம் வந்தனர் . பரந்த வெளி , தூய நீர் , தேவையான மின் சக்தி , போக்குவரத்துக்கான தொடர் வண்டி வசதி இத்தனையுங் கூடிய ஓர் இடத்தைத் தமிழக அதிகாரிகளால் காட்ட முடியவில்லை . அலைந்து சோர்ந்த செக் நாட்டு விற்பன்னர்கள்தமிழகத்தில் இடம் இல்லை என முடிவெடுத்துக் கிளம்பத் தயாரானார்கள் . இதைக் கேள்விப்பட்ட தலைவர் காமராசர் அவர்களையும் , உடன் சென்ற நம் அதிகாரிகளையும் அழைத்து விசாரித்தார் . அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டு அவர்கள் கேட்கும் வசதிகள் ஒரு சேர அமைந்த இடம் கிடைக்கவில்லை என்றனர் . ஆனால் தமிழகத்தின் மூலை முடுக்குகள் எல்லாம்தனது சுற்றுப் பயணத்தின்போது அறிந்திருந்த காமராசர் , ஒரு கணம் சித்தித்துவிட்டு “ திருச்சிக்குக் கிழக்கே காவிரி ஆற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே அந்த இடத்தைக் காட்டினீர்களா ?” என்று தமிழக அதிகாரிகளைக் கேட்டார் . அவர்கள் இல்லை என்றனர் . “ ஏன் ? அவங்க கேட்கிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே . போய் முதல்லே அந்த இடத்தைக் காட்டிட்டு வாங்க ” என்றார் . என்ன ஆச்சரியம் . அந்த இடத்தைப் பார்வையிட்டு செக் நாட்டு வல்லுநர்களுக்கு அந்த இடம் எல்லா வகையிலும் பொருத்தமானதாகத் தோன்றியது . அங்கு உருவாகி இன்று உலக நாடுகளுக்குத் தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் “ பெல் ” என்றழைக்கப்படும் பாரத ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் என்ற பெருமை வாய்ந்த நிறுவனமே அது . எதிர்க்கட்சிக்காரர்கள் காமராசர் உயர்நிலைப் படிப்பைக் கூட முடிக்காதவர் இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும் ? என்று கிண்டல் செய்வதுண்டு . அப்போது பெருந்தலைவர் அடக்கமாக “ பூகோளம் என்பது நதிகள் , மலைகள் , பயிர் வகைகள் , மக்கள் வாழ்க்கை என்பதைப் பற்றிக் கூறும் கல்வி என்றால் அதை நான் நன்கு அறிவேன் . ஆனால் புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது அது எனக்குத் தேவையுமில்லை ” என்றே கூறுவார் . |
||||||||
by Swathi on 03 Sep 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|