மகள்:
மயிலிறகைப் பாருங் கப்பா, ….மழையைப் போலக் குளிருது, ஒயிலுடனே வளைந்து நெளிந்து ….உண்மை யாகச் சிரிக்குது, உயிரிருக்கும் கண்ணைச் சிமிட்டி ….ஊரைக் கிட்ட அழைக்குது தயவுசெஞ்சு எனக்கு இதனைத் ….தந்தி டுங்க, வாங்கியே!
தந்தை:
எனதுகண்ணே, செல்லக் குட்டி, ….இந்த ஆசை விட்டிடு, உனக்குவேறு பொம்மை நூறு ….உள்ள தம்மா வீட்டிலே, தனதுஇறகை மயிலும் விரும்பித் ….தருவ துண்டா சொல்லிடு, சினத்துடனே பிடுங்கி வருவர், ….சீச்சீ, வெறுத்து ஒதுக்கிடு!
மகள்:
வெண்ணெயுண்டு காடு முழுக்க ….வேணு கானம் மீட்டிய, கண்ணபிரான் தலையில் கூட ….கான மயிலின் சிறகுதான், வண்ணமான அந்தச் சிறகு ….வந்த விதமும் எப்படி? அண்ணலவன் மயிலைப் பிடித்து ….அடித்துப் பிடுங்கக் கூடுமோ?
தந்தை:
அருள்நிறைந்த வேல னுக்கு ….அன்பு மயில் வாகனம், முருகனுக்கு மாமன் இந்த ….முல்லைச் சிரிப்புக் கண்ணனாம், மருகனோடு மயில தற்கும் ….மாயன் மீது நேசமாம், விரும்பியேதன் இறகைப் பறித்து ….வீர னுக்குத் தந்ததாம்!
|