|
||||||||
இரண்டாம் திருமுறை-77 |
||||||||
2.077.திருஅறையணிநல்லூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அறையணிநாதேசுவரர்.
தேவியார் - அருள்நாயகியம்மை.
2302 பீடினாற்பெரி யோர்களும்
பேதைமைகெடத் தீதிலா
வீடினாலுயர்ந் தார்களும்
வீடிலாரிள வெண்மதி
சூடினார்மறை பாடினார்
சுடலைநீறணிந் தாரழல்
ஆடினாரறை யணிநல்லூர்
அங்கையாற்றொழு வார்களே.
2.077. 1
அழிவற்றவரும், இளவெண்பிறையைச் சூடியவரும், வேதங்களை அருளியவரும், சுடலைப்பொடி பூசியவரும், அழலின் கண் நின்று ஆடுபவரும் ஆகிய அறையணிநல்லூர் இறைவரைத் தம் அம் கையால் தொழுபவர் பீடினால் பெரியோர் ஆவர். பாசங்கள் கெடப் பற்றற்றவராய் உயர்ந்தவர்கள் ஆவர்.
2303 இலையினார்சூல மேறுகந்
தேறியேயிமை யோர்தொழ
நிலையினாலொரு காலுறச்
சிலையினான்மதி லெய்தவன்
அலையினார் புனல்சூடிய
அண்ணலாரறை யணிநல்லூர்
தலையினாற்றொழு தோங்குவார்
நீங்குவார்தடு மாற்றமே.
2.077. 2
இலைவடிவமான முத்தலைச் சூலத்தை ஏந்தி, ஆன் ஏற்றில் விரும்பி ஏறி வருபவன். இமையவர் வேண்ட நிலைத்த ஒரு திருவடியால் வில்லை ஊன்றித் திரிபுரங்களை எய்தவன். அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசைச் சூடிய தலைவன். அப்பெருமான் எழுந்தருளிய அறையணிநல்லூர் சென்று அவனைத் தலையினால் தொழும் பெருமை மிக்கவர் தடுமாற்றம் நீங்குவர்.
2304 என்பினார்கனல் சூலத்தார்
இலங்குமாமதி யுச்சியான்
பின்பினாற்பிறங் குஞ்சடைப்
பிஞ்ஞகன்பிறப் பிலியென்று
முன்பினார்மூவர் தாந்தொழு
முக்கண்மூர்த்திதன் றாள்களுக்
கன்பினாரறை யணிநல்லூர்
அங்கையாற்றொழு வார்களே.
2.077.3
என்பு மாலை அணிந்தவர். கனலும் சூலத்தை ஏந்தியவர். விளங்கும் சிறந்த பிறைமதியை உச்சியில் சூடியவர். பின்னே தாழ்ந்து தொங்கும் சடையினர். தலைக்கோலம் உடையவர். பிறப்பற்றவர் என்று அறையணிநல்லூர் இறைவரைக் கைகூப்பித் தொழுபவரே வலிமைமிக்க மும்மூர்த்திகளும் தொழுது வணங்கும் முக்கண்மூர்த்தன் திருவடிகளில் அன்புடையவர் ஆவர்.
2305 விரவுநீறுபொன் மார்பினில்
விளங்கப்பூசிய வேதியன்
உரவுநஞ்சமு தாகவுண்
டுறுதிபேணுவ தன்றியும்
அரவுநீள்சடைக் கண்ணியார்
அண்ணலாரறை யணிநல்லூர்
பரவுவார்பழி நீங்கிடப்
பறையுந்தாஞ்செய்த பாவமே.
2.077. 4
அழகிய மார்பில் திருநீற்றை விரவப்பூசிய வேதியனும், வலிய நஞ்சினை அமுதாக உண்டு உலகிற்கு அழியாமை தந்தவனும், பாம்பை நீண்ட சடைக்கு முடிக்கண்ணியாகக் கொண்டவனும் ஆகிய அண்ணல் உறையும் அறையணிநல்லூரைப் பரவுவார் பழி பாவங்கள் நீங்கப் பெறுவர்.
2306 தீயினார்திகழ் மேனியாய்
தேவர்தாந்தொழு தேவன்நீ
ஆயினாய்கொன்றை யாயன
லங்கையாயறை யணிநல்லூர்
மேயினார்தம தொல்வினை
வீட்டினாய்வெய்ய காலனைப்
பாயினாயதிர் கழலினாய்
பரமனேயடி பணிவனே.
2.077. 5
தீப்போல விளங்கும் செம்மேனியனே! தேவர்களால் தொழப்பெறும் தேவனாக நீயே ஆனவனே! கொன்றை மலர் அணிந்தவனே! அனலைக்கையில் ஏந்தியவனே! அறையணிநல்லூரை அடைந்து வழிபடுபவரின் பழவினைகளைத் தீர்ப்பவனே! கொடிய காலனைக் காய்ந்தவனே! ஒலிக்கும் கழலணிந்தவனே! பரமனே உன் திருவடிகளைப் பணிகின்றேன்.
2307 விரையினார்கொன்றை சூடியும்
வேகநாகமும் வீக்கிய
அரையினாரறை யணிநல்லூர்
அண்ணலாரழ காயதோர்
நரையினார்விடை யூர்தியார்
நக்கனார்நறும் போதுசேர்
உரையினாலுயர்ந் தார்களு
முரையினாலுயர்ந் தார்களே.
2.077. 6
மணம் கமழும் கொன்றை மாலையைச் சூடியவர். சினம் மிக்க பாம்பினை அரையில் கட்டியவர். அறையணிநல்லூரில் விளங்கும் தலைமையாளர். அழகிய வெண்ணிறமான விடையை ஊர்தியாக உடையவர். திகம்பரர். அப்பெருமானை மலர்தூவி உரையினால் போற்றுபவர் புகழாளர் ஆவர்.
2308 வீரமாகிய வேதியர்
வேகமாகளி யானையின்
ஈரமாகிய வுரிவைபோர்த்
தரிவைமேற்சென்ற வெம்மிறை
ஆரமாகிய பாம்பினார்
அண்ணலாரறை யணிநல்லூர்
வாரமாய்நினைப் பார்கள்தம்
வல்வினையவை மாயுமே.
2.077. 7
ஞானமே வடிவான வேதியர். சினந்து வந்த பெரிய களிற்று யானையின் ஈரம் உடைய தோலைப் போர்த்து உமையம்மையார் பாற் சென்றவர். பாம்பினை ஆரமாகக் கொண்டவர். அறையணி நல்லூரில் விளங்கும் தலைமையாளர். அவரை அன்போடு நினைப்பவர்களின் வலிய வினைகள் மாயும்.
2309 தக்கனார்பெரு வேள்வியைத்
தகர்த்துகந்தவன் றாழ்சடை
முக்கணான்மறை பாடிய
முறைமையான்முனி வர்தொழ
அக்கினோடெழி லாமைபூண்
அண்ணலாரறை யணிநல்லூர்
நக்கனாரவர் சார்வலால்
நல்குசார்விலோம் நாங்களே.
2.077. 8
தக்கனது பெருவேள்வியைத் தகர்த்துகந்தவர். தாழ்ந்து தொங்கும் சடைகளையும் மூன்று கண்களையும் உடையவர். முனிவர்கள் தொழ வேதங்களை முறையோடு அருளியவர். என்பு மாலைகளையும் அழகிய ஆமை ஓட்டினையும் அணிந்த தலைமையாளர். அறையணிநல்லூரில் விளங்கும் திகம்பரர். நாங்கள் அவரது சார்பன்றி நலம் செய்யும் வேறு சார்பிலோம்.
2310 வெய்யநோயிலர் தீதிலர்
வெறியராய்ப்பிறர் பின்செலார்
செய்வதேயலங் காரமா
மிவையிவைதேறி யின்புறில்
ஐயமேற்றுணுந் தொழிலரா
மண்ணலாரறை யணிநல்லூர்ச்
சைவனாரவர் சார்வலால்
யாதுஞ்சார்விலோம் நாங்களே.
2.077. 9
வெம்மையான நோய்கள் எவையும் இல்லாதவர். வெறிபிடித்தவர் போலப் பிறர் பின் செல்லாதவர். அவர் செய்வதே அலங்காரம் ஆகும். இவற்றை முறையே தௌந்து இன்புறவேண்டின் ஐயமேற்றுண்ணும் தொழிலரும் தலைமையாளரும் ஆகிய அறையணி நல்லூர்ச் சைவராகிய சிவபெருமானே நமக்குச் சார்வு ஆவார்: வேறு எதனையும் நாம் சாரோம் என்று எண்ணுக.
2311 வாக்கியஞ்சொல்லி யாரொடும்
வகையலாவகை செய்யன்மின்
சாக்கியஞ்சம ணென்றிவை
சாரேலும்மர ணம்பொடி
ஆக்கியம்மழு வாட்படை
யண்ணலாரறை யணிநல்லூர்ப்
பாக்கியங்குறை யுடையீரேற்
பறையுமாஞ்செய்த பாவமே.
2.077. 10
நீண்ட தொடர்களைப் பேசி யாரோடும் வகையல்லாதவற்றைச் செய்யாதீர். சாக்கியர் சமணர் நெறிகளைச் சாராதீர். திரிபுரங்களைப் பொடியாகச் செய்த மழுவாட்படை அண்ணலார் உறைகின்ற அறையணிநல்லூரை அடைந்து பாக்கியமாகிய தேவையை நிறைவு செய்துகொள்ள விரும்புவீராயின் அதனை அடைதலே அன்றிப் பாவங்களும் கழியப்பெறுவீர்.
2312 கழியுலாங்கடற் கானல்சூழ்
கழுமலம்அமர் தொல்பதிப்
பழியிலாமறை ஞானசம்
பந்தனல்லதோர் பண்பினார்
மொழியினாலறை யணிநல்லூர்
முக்கண்மூர்த்திதன் றாள்தொழக்
கெழுவினாரவர் தம்மொடுங்
கேடில்வாழ்பதி பெறுவரே.
2.077. 11
உப்பங்கழிகள் உலாவும் கடற்சோலைகள் சூழ்ந்த தொல்பதியாகிய கழுமலத்தில் தோன்றிய குற்றமற்ற மறை வல்ல ஞானசம்பந்தன் அருளிய பதிகத்தை ஓதும் நற்பண்பினராய் அறையணி நல்லூரை அடைந்து முக்கண் மூர்த்தியாகிய சிவபிரான் திருவடிகளைத் தொழுது போற்றப் பொருந்தியவர்கள் குற்றமற்றவர் வாழும் சிவலோகத்தை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
2.077.திருஅறையணிநல்லூர் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|