|
||||||||
முதல் திருமுறை-105 |
||||||||
1.105.திருஆரூர்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர்.
தேவியார் - அல்லியங்கோதையம்மை.
1133 பாடல னான்மறையன் படிபட்ட
கோலத்தன் றிங்கள்
சூடலன் மூவிலைய
சூலம் வலனேந்திக்
கூடலர் மூவெயிலும்மெரியுண்ணக்
கூரெரிகொண் டெல்லி
ஆடல னாதிரையன்
ஆரூ ரமர்ந்தானே.
1.105.1
திருவாரூரின்கண் எழுந்தருளிய இறைவன் பாடப்படும் நான்கு வேதங்களை அருளியவன். ஒப்பற்ற தோற்றத்தை உடையவன். திங்களை முடியிற் சூடியவன். இலை வடிவமான முத்தலைச் சூலத்தை வலக் கரத்தே ஏந்தித் தன் பகைவராக இருந்த அசுரர்களின் முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவன். மிக்க எரியைக் கையில் ஏந்தி நள்ளிரவில் நடம் புரிபவன். திருவாதிரை நாளை உகந்தவன்.
1134 சோலையில் வண்டினங்கள் சுரும்போ
டிசைமுரலச் சூழ்ந்த
ஆலையின் வெம்புகைபோய்
முகில்தோயும் ஆரூரில்
பாலொடு நெய்தயிரும் பயின்றாடும்
பரமேட்டி பாதம்
காலையு மாலையும்போய்ப்
பணிதல் கருமமே.
1.105.2
சோலைகளில் வண்டுகளும், சுரும்புகளும் இசை முரலவும், சூழ்ந்துள்ள கரும்பாலைகளில் தோன்றும் விரும்பத்தக்க புகை மேல் நோக்கிச் சென்று வானத்திலுள்ள முகில்களில் தோய்வதுமான திருவாரூரில் பால், நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி ஆடும் மேலான இறைவன் திருவடிகளைக் காலை மாலை ஆகிய இரு போதுகளிலும் சென்று பணிவது நாம் செய்யத்தக்க கருமமாகும்.
1135 உள்ளமோ ரிச்சையினா லுகந்தேத்தித்
தொழுமின்றொண்டீர் மெய்யே
கள்ள மொழிந்திடுமின்
கரவா திருபொழுதும்
வெள்ளமோர் வார்சடைமேற்கரந்திட்ட
வெள்ளேற் றான்மேய
அள்ள லகன்கழனி
ஆரூர் அடைவோமே.
1.105.3
தொண்டர்களே! நீவிர் உள்ளத்தால் ஆராய்ந்தறிந்த விருப்போடு மகிழ்ந்து போற்றித் தொழுவீர்களாக. மறைக்காமல் உண்மையாகவே உம் நெஞ்சத்திலுள்ள கள்ளங்களை ஒழிப்பீர்களாக! காலை மாலை இருபோதுகளிலும் கங்கை வெள்ளத்தை ஒப்பற்ற நீண்ட தன் சடைமேல் மறையும்படி செய்தவனும், வெண்மையான ஆனேற்றை உடையவனுமான சிவபிரான் எழுந்தருளிய சேற்று வளம் மிக்க அகன்ற வயல்களால் சூழப்பெற்ற திருவாரூரை வழிபடுதற் பொருட்டு நாம் செல்வோம்.
1136 வெந்துறு வெண்மழுவாட் படையான்
மணிமிடற்றா னரையின்
ஐந்தலை யாடரவ
மசைத்தா னணியாரூர்ப்
பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன்
னடிபரவப் பாவம்
நைந்தறும் வந்தணையும்
நாடொறும் நல்லனவே.
1.105.4
அடியவர்களின் வினைகளை வெந்தறுமாறு செய்யும் வெண்மையான மழுவாளைக் கையில் ஏந்தியவனும், நீலமணி போன்ற கண்டத்தை உடையவனும், இடையில் ஐந்து தலையுடையதாய் ஆடும் பாம்பினைக் கட்டியவனும், அழகிய திருவாரூரில் பசுந்தளிர்களோடு கட்டிய கொன்றை மாலையை அணிந்தவனுமாகிய பரமனுடைய அடிகளைப் பரவ நம் பாவங்கள் நைந்து இல்லையாகும். நாள்தோறும் நமக்கு நல்லனவே வந்தணையும்.
1137 வீடு பிறப்பௌதா மதனை
வினவுதிரேல் வெய்ய
காடிட மாகநின்று
கனலேந்திக் கைவீசி
ஆடு மவிர்சடையா னவன்மேய
வாரூரைச் சென்று
பாடுதல் கைதொழுதல்
பணிதல் கருமமே.
1.105.5
வீடு பேற்றை அடைதல் நமக்கு எளிதாகும். அதற்குரிய வழிகளை நீர் கேட்பீராயின் கூறுகிறேன். கொடிய சுடுகாட்டைத் தனக்குரிய இடமாகக் கொண்டு கனலை ஏந்திக் கைகளை வீசிக்கொண்டு ஆடுகின்ற விளங்கிய சடைமுடியை உடையவனாகிய சிவபிரான் எழுந்தருளிய திருவாரூரை அடைந்து பாடுதல், கைகளால் தொழுதல், பணிதல் ஆகியனவற்றைச் செய்தலே அதற்குரிய வழிகளாகும்.
1138 கங்கையோர் வார்சடைமேற் கரந்தான்
கிளிமழலைக் கேடில்
மங்கையோர் கூறுடையான்
மறையான் மழுவேந்தும்
அங்கையி னானடியே பரவி
யவன்மேய வாரூர்
தங்கையி னாற்றொழுவார்
தடுமாற் றறுப்பாரே.
1.105.6
கங்கையை ஒப்பற்ற தனது நீண்ட சடை முடி மேல் கரந்தவனும், கிளி போன்ற மழலை மொழி பேசும் கேடில்லாத உமை மங்கையை ஒரு பாகமாக உடையவனும், மழுவாயுதத்தை அழகியகையில் ஏந்தியவனும் ஆகிய இறைவன் திருவடிகளையே பரவி அவன் எழுந்தருளிய திருவாரூரைத் தம் கைகளால் தொழுபவர் தடுமாற்றங்கள் தவிர்வர்.
1139 நீறணி மேனியனாய் நிரம்பா
மதிசூடி நீண்ட
ஆறணி வார்சடையான்
ஆரூர் இனிதமர்ந்தான்
சேறணி மாமலர்மேற் பிரமன்
சிரமரிந்த செங்கண்
ஏறணி வெல்கொடியா
னவனெம் பெருமானே.
1.105.7
திருநீறு அணிந்த திருமேனியனாய்த் திருமுடியில் இளம்பிறையைச் சூடி, கங்கை விளங்கும் அழகிய நீண்ட சடைமுடியை உடையவனாய், திருவாரூரின் கண் மகிழ்வோடு எழுந்தருளி விளங்குபவனும், சேற்றின்கண் அழகியதாய்த் தோன்றி மலர்ந்த தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனது சிரங்களில் ஒன்றைக் கொய்த, சிவந்த கண்களை உடைய விடையேற்றை வெற்றிக் கொடியாகக் கொண்டவனுமாகிய சிவபெருமானே எம் தலைவனாவான்.
இப்பதிகத்தின் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.053.8
1140 வல்லியந் தோலுடையான் வளர்திங்கட்
கண்ணியினான் வாய்த்த
நல்லிய னான்முகத்தோன்
றலையின் னறவேற்றான்
அல்லியங் கோதைதன்னை யாகத்
தமர்ந்தருளி யாரூர்ப்
புல்லிய புண்ணியனைத்
தொழுவாரும் புண்ணியரே.
1.105.9
வலிய புலியினது தோலை உடுத்தவனும், வளர்தற்குரிய பிறைமதியைக் கண்ணியாகச் சூடியவனும், நல்லியல்புகள் வாய்ந்த பிரமனது தலையில் பலியேற்று உண்பவனும், அல்லியங்கோதை என்ற பெயருடைய அம்மையைத் தனது திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய திருவாரூரில் விளங்கும் புண்ணியனைத் தொழுபவர்களும் புண்ணியராவர்.
1141 செந்துவ ராடையினா ருடைவிட்டு
நின்றுழல்வார் சொன்ன
இந்திர ஞாலமொழிந்
தின்புற வேண்டுதிரேல்
அந்தர மூவெயிலும் அரணம்
மெரியூட்டி யாரூர்த்
தந்திர மாவுடையா
னவனெந் தலைமையனே.
1.105.10
செந்துவர் ஊட்டப்பட்ட ஆடையை உடுத்தவரும், ஆடையின்றித் திகம்பரராய்த் திரிபவரும் ஆகிய புத்த சமணர்கள் கூறிய மாயப் பேச்சுக்களைக் கேளாது விடுத்து, இன்புற்று வாழ விரும்புவீராயின் வானத்தில் திரியும் மூவெயில்களாகிய கோட்டைகளை எரியூட்டி அழித்தவனும் திருவாரூரைத் தனக்கு நிலையான இடமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானே எம் தலைவன் என்று வழிபடுவீர்களாக.
1142 நல்ல புனற்புகலித் தமிழ்ஞான
சம்பந்தன் நல்ல
அல்லி மலர்க்கழனி
ஆரூர் அமர்ந்தானை
வல்லதோ ரிச்சையினால் வழிபாடிவை
பத்தும் வாய்க்கச்
சொல்லுதல் கேட்டல்வல்லார்
துன்பந் துடைப்பாரே.
1.105.11
தூயதான நீர்வளத்தை உடைய புகலியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் அக இதழ்களையுடைய நல்ல தாமரை முதலிய மலர்கள் பூத்த கழனிகளால் சூழப்பட்ட திருவாரூரில் எழுந்தருளிய இறைவனைத் தனக்கியன்ற வல்லமையால் அன்போடு பாடிய வழிபாட்டுப் பாடல்களாகிய இப்பதிகத்தைப் பொருந்தச் சொல்லுதல் கேட்டல் வல்லவர்கள் துன்பம் துடைப்பவர்களாவர்.
திருச்சிற்றம்பலம்
1.105.திருஆரூர் |
||||||||
by Swathi on 30 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|