|
||||||||
முதல் திருமுறை-106 |
||||||||
1.106.திருஊறல்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. தக்கோலமென வழங்குகின்றது.
சுவாமிபெயர் - உமாபதீசுவரர்.
தேவியார் - உமையம்மை.
1143 மாறி லவுணரரணம் மவைமாயவோர்
வெங்கணையா லன்று
நீறெழ வெய்தவெங்கள்
நிமல னிடம்வினவில்
தேற லிரும்பொழிலுந் திகழ்செங்கயல்
பாய்வயலுஞ் சூழ்ந்த
ஊற லமர்ந்தபிரா
னொலியார்கழ லுள்குதுமே.
1.106.1
தமக்கு ஒப்பாரில்லாத வலிய அவுணர்களின் அரணங்களாக விளங்கிய முப்புரங்களை மறையுமாறு முற்காலத்தில் ஒரு வெங்கணையால் நீறுபடச் செய்தழித்த எங்கள் நிமலன் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள இடம், யாதென வினவில், தேன் நிறைந்த பெரிய பொழில்களும், விளங்கிய செங்கயல்கள் பாயும் வயல்களும், சூழ்ந்துள்ள திருவூறலாகும். அப்பெருமானுடைய ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளை நாம் தியானிப்போம்.
1144 மத்த மதக்கரியை மலையான்மக
ளஞ்சவன்று கையால்
மெத்த வுரித்தவெங்கள்
விமலன் விரும்புமிடம்
தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர்
நீலநாளுந் நயனம்
ஒத்தல ருங்கழனித்
திருவூறலை யுள்குதுமே.
1.106.2
மதம் பொருந்திய பெரிய தலையையுடைய யானையை மலைமகள் அஞ்ச, முற்காலத்தில் தன் கைகளால் மெல்ல உரித்த எங்கள் விமலனாகிய சிவபெருமான் விரும்பும் இடம் யாதெனவினவில், பூங்கொத்துக்கள் விரிந்துள்ள பொழில்கள் சூழ்ந்ததும், வயல்களில் நாள்தோறும் முளைத்து விளங்கிய நீல மலர்கள் மங்கையரின் கண்களையொத்து மலரும் வயல்வளங்களை உடையதுமான திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக.
1145 ஏன மருப்பினொடு மெழிலாமையும்
பூண்டழகார் நன்றும்
கானமர் மான்மறிக்கைக்
கடவுள் கருதுமிடம்
வான மதிதடவும் வளர்சோலைகள்
சூழ்ந்தழகார் நம்மை
ஊன மறுத்தபிரான்
றிருவூறலை யுள்குதுமே.
1.106.3
பன்றிக் கொம்புகளோடு ஆமையோட்டையும் அணிகலனாக அழகுறப் பூண்டு, நல்ல காட்டில் வாழும் மான்கன்றைத் தன் கையில் ஏந்தியுள்ள கடவுளாகிய சிவபெருமான் விரும்புமிடம், வானத்தின் கண் உள்ள மதி தோயுமாறு வளர்ந்துள்ள சோலைகளால் அழகுறச் சூழப்பட்டு நமது பிறவிப் பிணியைப் போக்க வல்லவனாய்ச் சிவபிரான் எழுந்தருளிய திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.
1146 நெய்யணி மூவிலைவே னிறைவெண்மழு
வும்மனலு மன்று
கையணி கொள்கையினான்
கடவுள் ளிடம்வினவில்
மையணி கண்மடவார் பலர்வந்
திறைஞ்சமன்னி நம்மை
உய்யும் வகைபுரிந்தான்
றிருவூறலை யுள்குதுமே.
1.106.4
நெய் பூசப்பெற்ற மூவிலை வேல், ஒளிநிறைந்த வெண்மழு, அனல் ஆகியவற்றைத் தன் கைகளில் அணியும் கோட்பாட்டினை உடைய கடவுள் விரும்பும் இடம் யாதென வினவுவீராயின், மை பூசப் பெற்ற கண்களையுடைய மடவார் பலர் வந்து வழிபட நிலையாகத் தங்கி, நாம் உய்யும் வகையில் எழுந்தருளி அருள்புரியும் திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக.
1147 எண்டிசை யோர்மகிழ வெழின்மாலையும்
போனகமும் பண்டு
சண்டி தொழவளித்தான்
அவன்றாழு மிடம்வினவில்
கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கைகள்
சூழ்ந்து நஞ்சை
உண்டபி ரானமருந்
திருவூறலை யுள்குதுமே.
1.106.5
எட்டுத் திசைகளில் உள்ளாரும் கண்டு மகிழுமாறு தன்னைத் தொழுத சண்டீசர்க்கு அழகிய மாலை, உணவு முதலியவற்றை முற்காலத்தே அளித்தருளியவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில், மேகங்கள் தங்கும் பொழில்களும், குளிர்ந்த பொய்கைகளும் சூழ்ந்து விளங்கும் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.
இப்பதிகத்தின் 6-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.053.6
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.053.7
1148 கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந்
தெய்துதலுங் கலங்கி
மறுக்குறு மாணிக்கருள
மகிழ்ந்தா னிடம்வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளு
மெய்யுந்நெரிய வன்று
ஒறுத்தருள் செய்தபிரான்
றிருவூறலை யுள்குதுமே.
1.106.8
சினம் பொருந்திய மனத்தோடு கூடிய கொடிய காலன் தம் வாழ்நாளைக் கவர வந்து அடைதலைக் கண்டு கலங்கி மயங்கிய மார்க்கண்டேயனுக்கு அருள் புரிந்தவனும், தன்னை மதியாது சினந்து வந்த வாள்வல்ல இராவணனின் தலை, தோள், உடல் ஆகியனவற்றை முற்காலத்தில் நெரித்து அருள் செய்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.
1149 நீரின் மிசைத்துயின்றோ னிறைநான்
முகனுமறியா தன்று
தேரும் வகை நிமிர்ந்தான்
அவன்சேரு மிடம்வினவில்
பாரின் மிசையடியார் பலர்வந்
திறைஞ்சமகிழ்ந் தாகம்
ஊரு மரவசைத்தான்
றிருவூறலை யுள்குதுமே.
1.106.9
கடல்நீரின் மேல் துயில் கொள்வோனாகிய திருமாலும் ஞானத்தினால் நிறைவுபெற்ற நான்முகனும் அறிய முடியாமல் தேடி ஆராயுமாறு நிமிர்ந்து நின்றவனும், மண்ணுலகில் அடியவர் பலரும் வந்து வணங்க மகிழ்ந்து ஊரும் பாம்பினை இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாமும் உள்குவோமாக.
1150 பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர்
மோட்டமணர் குண்டர்
என்னு மிவர்க்கருளா
வீசனிடம் வினவில்
தென்னென வண்டினங்கள் செறியார்பொழில்
குழ்ந்தழகார் தன்னை
உன்ன வினைகெடுப்பான்
றிருவூறலை யுள்குதுமே.
1.106.10
பொன்போன்ற மஞ்சட் காவியுடை அணிந்த புத்தர்கள், புளிப்பேறிய காடியைத் தட்டில் இட்டு உண்பவர்கள் ஆகியஅறியாமையை உடைய சமண் குண்டர்கள் என்னும் இவர்கட்கு அருள் புரியாதவனும், தன்னை நினைவார்களின் வினைகளைக் கெடுப்பவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் வண்டு இனங்கள் தென்னென்ற ஓசையோடு செறிந்த பொழில்கள் சூழ்ந்த அழகிய திருவூறலாகும். அதனை நாமும் நினைவோமாக.
1151 கோட லிரும்புறவிற் கொடிமாடக்
கொச்சையர்மன் மெச்ச
ஓடு புனல்சடைமேற்
கரந்தான் றிருவூறல்
நாட லரும்புகழான் மிகுஞானசம்
பந்தன்சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும்வல்லார்
பரலோகத் திருப்பாரே.
1.106.11
செங்காந்தட் செடிகள் நிறைந்த பெரிய புதர்கள் விளங்குவதும் கொடிகள் கட்டிய மாட வீடுகளைக் கொண்டதுமான கொச்சையம்பதிக்குத் தலைவனும், பெருகிவரும் கங்கையைச் சடைமிசைக் கரந்தவனுமாகிய சிவபிரானது திருவூறலைப் பற்றி நாடற்கரிய புகழால் மிக்க ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் பரலோகத்திருப்பர்.
திருச்சிற்றம்பலம்
1.106.திருஊறல் |
||||||||
by Swathi on 30 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|