|
||||||||
முதல் திருமுறை-108 |
||||||||
1.108.திருப்பாதாளீச்சரம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
1163 மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி
மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான்
புனல்சூடிப் பொற்பமரும்
அன்ன மனநடையா ளொருபாகத்
தமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினா
னுறைகோயில் பாதாளே.
1.108.1
மின்னல் போன்ற செஞ்சடைமேல் விளங்கும் மதி, ஊமத்தமலர் பொன் போன்ற நல்ல கொன்றை ஆகியவற்றோடு கங்கையையும் சூடி, அழகு விளங்கும் அன்னம் போன்ற நடையினளாகிய உமையம்மை ஒரு பாகமாக விளங்க, நாள்தோறும் வேத கீதங்களைப் பாடியவனாய்ச் சிவபெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
1164 நீடலர் கொன்றையொடு நிரம்பா
மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதினல்ல குழையான்
சுடுநீற்றான்
ஆடர வம்பெருக வனலேந்திக்
கைவீசி வேதம்
பாடலி னாலினியா
னுறைகோயில் பாதாளே.
1.108.2
கொத்தாக நீண்டு அலர்கின்ற கொன்றையோடு கலைநிறையாத இளம் பிறையை முடியில் சூடி, ஒரு காதில் வெள்ளைத் தோட்டுடன் மறு காதில் நல்ல குழையையுடையவனாய் விளங்குவோனும், சுட்ட திருநீற்றை மெய்யில் பூசியவனும், ஆடும் பாம்பு அணிகலனாகப் பெருகித் தோன்ற அனல் ஏந்திக் கைவீசி வேதப் பாடல்களைப் பாடுதலில் இனியனாய் விளங்குவோனும் ஆகிய சிவபெருமான் உறையும் கோயில் திருப்பாதாளீச்சரமாகும்.
1165 நாகமும் வான்மதியுந் நலமல்கு
செஞ்சடையான் சாமம்
போகநல் வில்வரையாற்
புரமூன்றெரித்துகந்தான்
தோகைநன் மாமயில்போல்
வளர்சாயற் றூமொழியைக் கூடப்
பாகமும் வைத்துகந்தா
னுறைகோயில் பாதாளே.
1.108.3
பாம்பு, வானில் விளங்கும் மதி ஆகியனவற்றைச் சூடிய அழகுமிக்க செஞ்சடையை உடையவனும், உரிய காலம் கழிய நல்ல மேருவில்லால் முப்புரங்களை எரித்துகந்தவனும், தோகையை உடைய நல்ல ஆண்மயில் போன்று வளர்கின்ற கட்புலனாய மென்மையை உடைய தூய மொழி பேசும் உமையம்மையைத் தன்னோடு உடனாக இடப்பாகமாகக் கொண்டு மகிழ்ந்தவனும் ஆகிய சிவபிரான் மகிழ்ந்துறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
1166 அங்கமு நான்மறையும் அருள்செய்
தழகார்ந்த வஞ்சொல்
மங்கையோர் கூறுடையான்
மறையோ னுறைகோயில்
செங்கய னின்றுகளுஞ் செறுவிற்
றிகழ்கின்ற சோதிப்
பங்கய நின்றலரும்
வயல்சூழ்ந்த பாதாளே.
1.108.4
பேய்கள் பலவும் உடன் சூழ, சுடுகாட்டை அரங்காக எண்ணி நின்று, தீ, மான்கன்று மழு ஆகியவற்றைக் கைகளில் விளங்குவித்து, தேய்ந்த பிறையும் பாம்பும் விளங்கிய கொன்றை மலரும் உடைய தன் சடைமேல் பாய்ந்து வரும் கங்கையையும் உடையவனாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
1167 கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச்
சடைதன்மே னன்று
விண்ணியன் மாமதியும்
முடன்வைத் தவன்விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்கா
டரங்காக வாடும்
பண்ணியல் பாடலினா
னுறைகோயில் பாதாளே.
1.108.5
கண் பொருந்திய நெற்றியை உடையவனும், சடைமுடி மீது மணம் கமழும் கொன்றை மலரோடு, அழகு பொருந்த வானின்கண் உலாவும் சிறந்த பிறைமதியையும் உடனாக வைத்தவனும், தன்னால் விரும்பப் பெற்ற உமை மங்கை பொருந்திய திருமேனியனும், சுடுகாட்டை அரங்காகக் கொண்டு பண்ணொடு கூடிய பாடல்களுடன் ஆடுபவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
1168 கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச்
சடைதன்மே னன்று
விண்ணியன் மாமதியும்
முடன்வைத் தவன்விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்கா
டரங்காக வாடும்
பண்ணியல் பாடலினா
னுறைகோயில் பாதாளே.
1.108.6
கண் பொருந்திய நெற்றியை உடையவனும், சடைமுடி மீது மணம் கமழும் கொன்றை மலரோடு, அழகு பொருந்த வானின்கண் உலாவும் சிறந்த பிறைமதியையும் உடனாக வைத்தவனும், தன்னால் விரும்பப் பெற்ற உமை மங்கை பொருந்திய திருமேனியனும், சுடுகாட்டை அரங்காகக் கொண்டு பண்ணொடு கூடிய பாடல்களுடன் ஆடுபவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
1169 விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள
நாகம்வன் னிதிகழ்
வண்டலர் கொன்றைநகு
மதிபுல்கு வார்சடையான்
விண்டவர் தம்புரமூன் றெரிசெய்துரை
வேதநான் கும்மவை
பண்டிசை பாடலினா
னுறைகோயில் பாதாளே.
1.108.7
தளையவிழ்ந்து மலர்ந்த ஊமத்த மலரோடு, புரண்டு கொண்டிருக்கும் இளநாகம், வன்னிஇலை, வண்டுகளால் மலர்த்தப் பெறும் கொன்றை, பிறைமதி ஆகியன பொருந்திய நீண்ட சடை உடையவனும், பகைவரான அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தவனும், நான்கு வேதங்களையும் உரைத்தலோடு அவற்றைப் பண்டைய இசை மரபோடு பாடி மகிழ்பவனுமான சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
1170 மல்கிய நுண்ணிடையா ளுமைநங்கை
மறுகவன்று கையால்
தொல்லை மலையெடுத்த
வரக்கன்றலை தோணெரித்தான்
கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள்
சடைக் கணிந்தோன்
பல்லிசை பாடலினா
னுறைகோயில் பாதாளே.
1.108.8
செறிந்த நுண்மையான இடையினை உடைய உமையம்மை அஞ்ச அன்று கையால் பழமையான கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் தலைகளையும் தோள்களையும் நெரித்தவனும், முல்லை நிலத் தெய்வமான திருமாலாகிய விடையை உகந்தவனும், குளிர்ந்த திங்களைச் சடையின்கண் அணிந்தவனும் பல்வகையான இசைப் பாடல்களைப் பாடுபவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
1171 தாமரை மேலயனும் மரியுந்தம
தாள்வினையாற் றேடிக்
காமனை வீடுவித்தான்
கழல்காண்பில ராயகன்றார்
பூமரு வுங்குழலா ளுமைநங்கை
பொருந்தியிட்ட நல்ல
பாமரு வுங்குணத்தா
னுறைகோயில் பாதாளே.
1.108.9
மன்மதனை எரித்த சிவபிரான் திருவடிகளைத் தாமரை மலரின்மேல் எழுந்தருளிய அயனும், திருமாலும் தமது முயற்சியால் தேடிக்காண இயலாது நீங்கினர். மலர்கள் சூடிய கூந்தலை உடைய உமைநங்கை ஒரு பாகமாகப் பொருந்தியவனும் வேதப் பாடல்களைப் பாடும் நல்ல குணத்தினனும் ஆகிய அப்பெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும். அங்குச் சென்றால் அவன் கழலடி காணலாம் என்பது குறிப்பெச்சம்.
1172 காலையி லுண்பவருஞ் சமண்கையருங்
கட்டுரை விட்டன்
றால விடநுகர்ந்தா னவன்
றன்னடி யேபரவி
மாலையில் வண்டினங்கண் மதுவுண்
டிசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டுகந்தா
னுறைகோயில் பாதாளே.
1.108.10
காலையில் சோறுண்ணும் புத்தரும், சமண சமயக் கீழ் மக்களும் கூறும் மெய்போன்ற பொய்யுரைகளை விடுத்து, ஆலகால விடமுண்டு அமரர்களைக் காத்தவனும் மாலைக் காலத்தில்வண்டினங்கள் மதுவுண்டு இசை முரல ஏற்புடையதான பாலைப் பண்ணையாழில் பாடக் கேட்டு மகிழ்பவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
1173 பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த
பாதாளைச் சேரப்
பொன்னியன் மாடமல்கு
புகலிந்நகர் மன்னன்
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான
சம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும்வல்லா
ரெழில்வானத் திருப்பாரே.
1.108.11
பலவகையான மலர்களும் பூத்துள்ள பொழில் புடை சூழ்ந்த பாதாளீச்சரத்தைச் சென்று தரிசிக்குமாறு, பொன்னால் இயன்ற மாட வீடுகள் நிறைந்த புகலி நகர் மன்னனும், தன்புகழ் உலகெங்கும் பரவி விளங்குமாறு உயர்ந்தவனுமாகிய தமிழ் ஞானசம்பந்தன் பாடிய இன்னிசை பொருந்திய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் அழகிய வானுலகின்கண் இருப்பர்.
திருச்சிற்றம்பலம்
1.108.திருப்பாதாளீச்சரம் |
||||||||
by Swathi on 30 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|