|
||||||||
இரண்டாம் திருமுறை-78 |
||||||||
2.078.திருவிளநகர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - துறைகாட்டும்வள்ளநாதர்.
தேவியார் - தோழியம்மை.
2313 ஒளிரிளம்பிறை சென்னிமேல்
உடையர்கோவண வாடையர்
குளிரிளம்மழை தவழ்பொழிற்
கோலநீர்மல்கு காவிரி
நளிரிளம்புனல் வார்துறை
நங்கைகங்கையை நண்ணினார்
மிளிரிளம்பொறி யரவினார்
மேயதுவிள நகரதே.
2.078. 1
விளங்குகின்ற இளம்பிறை சென்னிமேல் உடையவர். கோவண ஆடை உடுத்தவர். கங்கை நங்கையை விரும்பியவர். ஒளியும் புள்ளிகளும் பொருந்திய இளநாகம் அணிந்தவர். அவ்விறைவர் விரும்பி உறையும் தலம், தண்ணிய மழை பொழியத்தக்க மேகங்கள் தவழும் பொழில்களைக் கொண்டதும், அழகிய நீர் நிறைந்ததும் குளிர்ந்த புதிய புனலைக் கொண்டு நீண்ட துறையுடன் விளங்குவதுமான விளநகராகும்.
2314 அக்கரவ்வணி கலனென
அதனொடார்த்ததொ ராமைபூண்
டுக்கவர்சுடு நீறணிந்
தொளிமல்குபுனற் காவிரிப்
புக்கவர்துயர் கெடுகெனப்
பூசுவெண்பொடி மேவிய
மிக்கவர்வழி பாடுசெய்
விளநகரவர் மேயதே.
2.078. 2
எலும்பையும் பாம்பையும் அணிந்து, அவ்வணிகலனோடு ஆமை ஓட்டையும் பூண்டு இறந்தவரை எரித்த சுடுகாட்டு நீற்றை அணிந்து விளங்கும் பெருமான் மேவிய தலம் ஒளி நிறைந்த நீரை உடைய காவிரியில் மூழ்கிய அடியவர் துயர் கெடுமாறு நீறு பூசியவராய் வழிபாடு செய்கின்ற விளநகராகும்.
2315 வாளிசேரடங் கார்மதி
தொலையநூறிய வம்பின்வேய்த்
தோளிபாகம் அமர்ந்தவர்
உயர்ந்ததொல்கட னஞ்சுடன்
காளமல்கிய கண்டத்தர்
கதிர்விரிசுடர் முடியினர்
மீளியேறுகந் தேறினார்
மேயதுவிள நகரதே.
2.078. 3
அம்பினைச் சேர்ப்பித்துப் பகைவரின் முப்புரங்களை அழியுமாறு செய்தவரும், புதிய மூங்கில் போலும் தோள்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்றவரும், உயர்ந்த பழமையான கடலின்கண் தோன்றிய நஞ்சினை உண்டதோடு அதன் கரிய நிறம் மல்கிய கண்டத்தை உடையவரும், ஒளிவிரிந்த தழல்போலும் சடையினரும், வலிய விடையேற்றை உகந்து ஏறி வருபவரும் ஆன சிவபிரான் மேவியது விளநகர்.
2316 கால்விளங்கெரி கழலினார்
கையிலங்கிய வேலினார்
நூல்விளங்கிய மார்பினார்
நோயிலார்பிறப் பும்மிலார்
மால்விளங்கொளி மல்கிய
மாசிலாமணி மிடறினார்
மேல்விளங்குவெண் பிறையினார்
மேயதுவிள நகரதே.
2.078. 4
காலில் விளங்கும் கழலணிந்தவர். கையில் விளங்கும் சூலத்தை உடையவர். பூணநூல் விளங்கும் மார்பினர். துன்புறும் நோயும் பிறத்தலும் இல்லாதவர். கருமை விளங்கும் ஒளி நிரம்பிய குற்ற மற்ற நீல மணி போலும் கண்டத்தினர். வானவெளியில் விளங்கும் வெள்ளிய பிறையைச் சூடியவர். அவ்விறைவர் மேயது விளநகர்.
2317 பன்னினார்மறை பாடினார்
பாயசீர்ப்பழங் காவிரித்
துன்னுதண்டுறை முன்னினார்
தூநெறிபெறு வாரெனச்
சென்னிதிங்களைப் பொங்கராக்
கங்கையோடுடன் சேர்த்தினார்
மின்னுபொன்புரி நூலினார்
மேயதுவிள நகரதே.
2.078. 5
வேதங்களை அருளியவர். அவ்வேதங்களைப் பாடுபவர். முடியில் திங்கள், சினம்மிக்க பாம்பு, கங்கை ஆகியவற்றைச் சூடியவர். மின்னுகின்ற பொன்போலும் முப்புரிநூலை அணிந்தவர். அவ்விறைவர் அன்பர்கள் வணங்கித் தூநெறி பெறும் பொருட்டு எழுந்தருளியிருக்குமிடம் பரவிய புகழையுடைய காவிரியின் துறைகளை உடைய கரையில் அமைந்த விளநகராகும்.
2318 தேவரும்மம ரர்களுந்
திசைகண்மேலுள தெய்வமும்
யாவரும்மறி யாததோ
ரமைதியாற்றழ லுருவினார்
மூவரும்மவ ரென்னவும்
முதல்வரும்மிவ ரென்னவும்
மேவரும்பொரு ளாயினார்
மேயதுவிள நகரதே.
2.078. 6
தேவரும், அமரரும், திசைக்காவல் தெய்வங்களும் முதலான யாவராலும் அறிதற்கரிய இயல்பினர். தழல் போலும் உருவினர். திருமால், பிரமன், உருத்திரன் ஆகிய மூவரும் இவரே என்று கூறுமாறும் அவர்களின் தலைவராய் விளங்குவார் இவரே என்னுமாறும் பொருந்த அரிய பொருளாய் விளங்குபவர். அவ்விறைவர் மேவிய இடம் விளநகராகும்.
2319 சொற்றருமறை பாடினார்
சுடர்விடுஞ்சடை முடியினார்
கற்றருவடங் கையினார்
காவிரித்துறை காட்டினார்
மற்றருதிர டோளினார்
மாசில்வெண்பொடிப் பூசினார்
விற்றருமணி மிடறினார்
மேயதுவிள நகரதே.
2.078. 7
எழுதி உணர்த்தாது சொல்லப்பட்டே வரும் வேதங்களை அருளியவர். ஒளிவிடும் சடைமுடியை உடையவர். செபமணி மாலையைக் கையில் கொண்டவர். மற்போர் செய்தற்கு ஏற்ற திரண்ட தோள்களை உடையவர். குற்றமற்ற வெண்மையான திருநீற்றுப்பொடி பூசியவர். ஒளி தரும் நீலமணி போலும் மிடறுடையவர். அவ்விறைவர் மேவியது காவிரித்துறையில் அமைந்த விளநகராகும்.
2320 படர்தருஞ்சடை முடியினார்
பைங்கழலடி பரவுவார்
அடர்தரும்பிணி கெடுகென
அருளுவார்அர வரையினார்
விடர்தரும்மணி மிடறினார்
மின்னுபொன்புரி நூலினார்
மிடறரும்படை மழுவினார்
மேயதுவிள நகரதே.
2.078. 8
பரவிய சடைமுடியை உடையவர். தம் கழல் அடிகளைப்பரவும் அடியவர்களை வருத்தும் பிணிகள் கெடுவனவாக என அருள் செய்பவர். பாம்பினை இடையில் கட்டியவர். மலைப் பிளவில் இருந்து கிட்டும் நீலமணி போலும் மிடற்றை உடையவர். மின்னுகின்ற பொன் போன்ற முப்புரி நூலை அணிந்தவர். வலிய படைக்கலனாக மழுவை ஏந்தியவர். அவ்விறைவர் மேவியது விளநகராகும்.
2321 கையிலங்கிய வேலினார்
தோலினார்கரி காலினார்
பையிலங்கர வல்குலாள்
பாகமாகிய பரமனார்
மையிலங்கொளி மல்கிய
மாசிலாமணி மிடறினார்
மெய்யிலங்குவெண் ணீற்றினார்
மேயதுவிள நகரதே.
2.078. 9
கையில் விளங்கும் சூலத்தை உடையவர். தோலாடை உடுத்தவரமுற்றழிப்புக் காலத்தில் தாம் ஒருவரே அழியாது நிற்பவர். பாம்பின் படம் போலும் அல்குலை உடைய உமையம்மையை இடப்பாகமாக உடைய பரமர்கரிய ஒளி நிறைந்த குற்றமற்ற நீலமணி போன்ற மிடற்றினை உடையவர். திருமேனியில் விளங்கும் திருவெண்ணீற்றை அணிந்தவர். அவ்விறைவர் மேவியிருப்பது விளநகர் ஆகும்.
2322 உள்ளதன்றனைக் காண்பன்கீ
ழென்றமாமணி வண்ணனும்
உள்ளதன்றனைக் காண்பன்மே
லென்றமாமலர் அண்ணலும்
உள்ளதன்றனைக் கண்டிலார்
ஒளியார் தருஞ்சடை முடியின்மேல்
உள்ளதன்றனைக் கண்டிலா
வொளியார் விளநகர் மேயதே.
2.078. 10
கீழ் உள்ள திருவடியை யான் காண்பேன் என்று சென்ற கரிய மணிவண்ணனாகிய திருமாலும், மேல் உள்ள திருமுடியை யான் காண்பேன் என்று சென்ற தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் உள்பொருளாய் விளங்கும் சிவபிரானைக் கண்டிலர். ஒளி பொருந்திய சடைமுடியின் மேல் விளங்கும் பிறை முதலியவற்றை யாரும் காண இயலாத சோதிப் பிழம்பாய்த் தோன்றும் அப்பெருமானார் தம்மை அன்பர்கள் கண்டு வழிபட விளநகரில் எழுந்தருளியுள்ளார்.
2323 மென்சிறைவண் டியாழ்முரல்
விளநகர்த்துறை மேவிய
நன்பிறைநுத லண்ணலைச்
சண்பைஞானசம் பந்தன்சீர்
இன்புறுதமி ழாற்சொன்ன
ஏத்துவார்வினை நீங்கிப்போய்த்
துன்புறுதுய ரம்மிலர்
தூநெறிபெறு வார்களே.
2.078. 11
மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகள் யாழ் போல முரலும் விளநகரில் காவிரித்துறையில் எழுந்தருளிய பிறைசூடிய பெருமானை, சண்பைப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் சிறப்பும் இனிமையும் பொருந்திய தமிழால் புனைந்த இப்பாடல்களைக் கூறி ஏத்துகின்றவர் வினைகள் நீங்கித் துன்பமும் துயரமும் அடைதல் இலர். தூய வீட்டு நெறியைப் பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
2.078.திருவிளநகர் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|