|
||||||||
முதல் திருமுறை-118 |
||||||||
1.118.திருப்பருப்பதம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் வடதேசத்திலுள்ளது. ஸ்ரீசைலமென்றும் மல்லிகார்ச்சுன மென்றும் வழங்குகின்றது.
சுவாமிபெயர் - பருப்பதேசுவரர்.
தேவியார் - பருப்பதமங்கையம்மை.
1271 சுடுமணி யுமிழ்நாகஞ்
சூழ்தர வரைக்கசைத்தான்
இடுமணி யெழிலானை
யேறல னெருதேறி
விடமணி மிடறுடையான்
மேவிய நெடுங்கோட்டுப்
படுமணி விடுசுடரார்
பருப்பதம் பரவுதுமே.
1.118.1
மிக்க ஒளியைத் தரும் மாணிக்க மணியை உமிழும் பாம்பை இடையில் பொருந்தக் கட்டியவனும், இரு புறங்களிலும் மணிகள் தொங்கவிடப்பட்ட அழகிய யானையை ஊர்தியாகக் கொண்டு அதன்மிசை ஏறாது ஆனேற்றில் ஏறி வருபவனும், நஞ்சணிந்த மிடறுடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய நீண்ட சிகரங்களை உடையதும் ஆங்காங்கே தோன்றும் மணிகள் உமிழ்கின்ற ஒளியினை உடையதுமான திருப்பருப்பதத்தை நாம் பரவுவோம்.
1272 நோய்புல்கு தோறிரைய
நரைவரு நுகருடம்பில்
நீபுல்கு தோற்றமெல்லா
நினையுள்கு மடநெஞ்சே
வாய்புல்கு தோத்திரத்தால்
வலஞ்செய்து தலைவணங்கிப்
பாய்புலித் தோலுடையான்
பருப்பதம் பரவுதுமே.
1.118.2
அறியமையுள் மூழ்கித் திளைக்கும் நெஞ்சே! நீ போக நுகர்ச்சிக்குரிய இவ்வுடம்பில் இளமை முதல் மாறிவரும் தோற்ற மெல்லாவற்றையும், நோய்கள் தழுவும் தோல் சுருங்கி நரை தோன்றும் நிலையையும் நினைந்து சிந்திப்பாயாக. மூப்பு வருமுன் வாய் நிறைந்த தோத்திரங்களைப் பாடி, வலம் வந்து, தலையால் வணங்கிப் பாயும் புலியின் தோலை உடுத்த பெருமான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தைப் பரவுவோம்; வருக.
1273 துனியுறு துயர்தீரத்
தோன்றியோர் நல்வினையால்
இனியுறு பயனாத
லிரண்டுற மனம்வையேல்
கனியுறு மரமேறிக்
கருமுசுக் கழையுகளும்
பனியுறு கதிர்மதியான்
பருப்பதம் பரவுதுமே.
1.118.3
நெஞ்சே! வருத்தத்தைத் தரும் பிறவித் துயர்தீரத் தோன்றிய நீ, நல் வினைகள் செய்து அப்புண்ணியத்தால் தேவர் உலக இன்பங்களை நுகர்தல், வீடு பேறாகிய விழுமிய பயனை எய்துதல் ஆகிய இரண்டிலும் பற்றுக் கொள்ளாதே. கரிய குரங்குகள் கனி நிறைந்த மரத்தில் ஏறி அதனை விடுத்து மூங்கில் மரங்களில் தாவி உகளும், குளிர்ந்த ஒளியோடு கூடிய பிறைமதியைச் சூடிய சிவபெருமானின் திருப்பருப்பதத்தை வணங்குவோம்; வருக. மனிதமனம் ஒன்றை விட்டு ஒன்று பற்றும் நிலையை இப்பாடலின் வருணனை தெரிவிக்கிறது.
1274 கொங்கணி நறுங்கொன்றைத்
தொங்கலன் குளிர்சடையான்
எங்கணோ யகலநின்றா
னெனவரு ளீசனிடம்
ஐங்கணை வரிசிலையா
னநங்கனை யழகழித்த
பைங்கண்வெள் ளேறுடையான்
பருப்பதம் பரவுதுமே.
1.118.4
தேன் நிறைந்ததாய் மணம் கமழும் கொன்றை மலர்மாலையைச் சூடியவன், குளிர்ந்த சடைமுடியை உடையவன், எங்கள் துன்பங்களைப் போக்க எழுந்தருளியவன் என்று அடியவர் போற்ற அவர்கட்கு அருள்புரியும் ஈசனது இடம், ஐவகை மலர்களையும் வரிந்த கரும்பு வில்லையும் உடைய மன்மதனின் அழகினை அழித்து அவனை எரித்துப் பசிய கண்களை உடைய வெள்ளேற்றை உடையவனாய் அப்பெருமான் எழுந்தருளிய பதி திருப்பருப்பதம். அதனைப் பரவுவோம்.
1275 துறைபல சுனைமூழ்கித்
தூமலர் சுமந்தோடி
மறையொலி வாய்மொழியால்
வானவர் மகிழ்ந்தேத்தச்
சிறையொலி கிளிபயிலுந்
தேனின மொலியோவாப்
பறைபடு விளங்கருவிப்
பருப்பதம் பரவுதுமே.
1.118.5
கிளிகள் சிறகுகளால் எழுப்பும் ஓசையோடு வாயால் எழுப்பும் மெல்லிய அழைப்பொலியும், வண்டுகளின் ஒலியும் நீங்காததாய்ப் பறை போல ஒலிக்கும் அருவிகளை உடையதாய் விளங்குவதும், தேவர்கள் துறைகள் பலவற்றை உடைய சுனைகளில் மூழ்கித் தூய மலர்களைச் சுமந்து விரைந்து வந்து வேத கீதங்களைத் தம் வாய்மொழியாக ஓதி மகிழ்வோடு வழிபடுமாறு சிவபெருமான் விளங்குவதுமாகிய திருப்பருப்பதத்தைப் பரவுவோம்.
1276 சீர்கெழு சிறப்போவாச்
செய்தவ நெறிவேண்டில்
ஏர்கெழு மடநெஞ்சே
யிரண்டுற மனம்வையேல்
கார்கெழு நறுங்கொன்றைக்
கடவுள திடம்வகையால்
பார்கெழு புகழோவாப்
பருப்பதம் பரவுதுமே.
1.118.6
அழகிய மடநெஞ்சே! பெருமை மிக்க சிறப்புக்கள் அகலாததாய் நாம் மேற்கொள்ளத்தக்க தவநெறியை நீ பின்பற்ற விரும்புவாயாயின், வேண்டுமா வேண்டாவா என இரண்டுபட எண்ணாமல் உறுதியாக ஒன்றை நினைந்து நெறியின் பயனாய் விளங்கும், கார்காலத்தே மலரும் மணம் மிக்க கொன்றை மலர்மாலை சூடியவனாய் எழுந்தருளியுள்ள அக்கடவுளது இடமாய் உலகிற் புகழ்மிக்க தலமாய் விளங்கும் திருப்பருப்பதத்தைப் பரவுவோம்.
1277 புடைபுல்கு படர்கமலம்
புகையோடு விரைகமழத்
தொடைபுல்கு நறுமாலை
திருமுடி மிசையேற
விடைபுல்கு கொடியேந்தி
வெந்தவெண் ணீறணிவான்
படைபுல்கு மழுவாளன்
பருப்பதம் பரவுதுமே.
1.118.7
ஓடைகளின் புறத்தே நிறைந்து வளர்ந்த விரிந்த தாமரை மலர்கள் அந்தணர் வேட்கும் யாகப் புகையோடு மணம் கமழுமாறு தொடுக்கப் பெற்ற நறுமாலை திருமுடியின்மேல் விளங்க, விடைக் கொடியைக் கையில் ஏந்தி, மேனியில் திருவெண்ணீறு அணிந்து மழுப்படை ஏந்தியவனாய் விளங்கும் சிவபெருமானது பருப்பதத்தை நாம் பரவுவோம்.
1278 நினைப்பெனு நெடுங்கிணற்றை
நின்றுநின் றயராதே
மனத்தினை வலித்தொழிந்தே
னவலம்வந் தடையாமைக்
கனைத்தெழு திரள்கங்கை
கமழ்சடைக் கரந்தான்றன்
பனைத்திரள் பாயருவிப்
பருப்பதம் பரவுதுமே.
1.118.8
நினைப்பு என்னும் ஆழமான கிணற்றின் அருகில் இடையறாது நின்று சோர்வுபடாமல், மனம் என்னும் கயிற்றைப் பற்றி இழுத்து, எண்ணங்கள் ஈடேறாமல் அயர்வுற்றேன். ஆதலின் இதனைக் கூறுகின்றேன். துன்பங்கள் நம்மை அடையா வண்ணம் காத்துக்கொள்ளுவதற்கு இதுவே வழி. ஆரவாரித்து எழுந்த பரந்துபட்ட வெள்ளமாக வந்த கங்கை நீரைத் தனது மணம் கமழும் சடையிலே தாங்கி மறையச் செய்தவன் ஆகிய சிவபிரானது பனைமரம் போல உருண்டு திரண்டு ஒழுகும் அருவி நீரை உடைய திருப்பருப்பதத்தை நாம் பரவுவோம்.
1279 மருவிய வல்வினைநோ
யவலம்வந் தடையாமல்
திருவுரு வமர்ந்தானுந்
திசைமுக முடையானும்
இருவரு மறியாமை
யெழுந்த தோரெரிநடுவே
பருவரை யுறநிமிர்ந்தான்
பருப்பதம் பரவுதுமே.
1.118.9
பலபிறவிகள் காரணமாக நம்மைத் தொடரும் வலிய வினைகளின் பயனாகிய துன்பங்கள் நம்மை வந்து அடையாமல் இருக்கத் திருமகளைத் தன் மார்பில் கொண்ட திருமால், நான்முகன் ஆகிய இருவரும் அறியமுடியாதவாறு எழுந்த எரியின் நடுவே பெரிய மலையாய் ஓங்கி நின்ற சிவபிரான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தை நாம் வணங்குவோம்.
1280 சடங்கொண்ட சாத்திரத்தார்
சாக்கியர் சமண்குண்டர்
மடங்கொண்ட விரும்பியராய்
மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
குடங்கொண்டு நீர்க்குச்செல்வார்
போதுமின் குஞ்சரத்தின்
படங்கொண்ட போர்வையினான்
பருப்பதம் பரவுதுமே.
1.118.10
அறியாமை வயப்பட்ட சாத்திரங்களை ஓதும் புத்தர்களும், சமணராகிய இழிந்தோரும் குண்டர்களும் கூறும் மடமையை விரும்பியவராய் மயங்கியோர் சிலர், கானல் நீரை முகக்கக் குடத்தை எடுத்துச் செல்வார் போன்றவராவர். அவ்வாறு சென்றவர் செல்லட்டும். யானைத் தோலைப் போர்வையாகப் போர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தை நாம் சென்று பரவுவோம்.
திருச்சிற்றம்பலம்
1.118.திருப்பருப்பதம் |
||||||||
by Swathi on 30 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|