|
||||||||
இரண்டாம் திருமுறை-87 |
||||||||
2.087.திருநறையூர்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சித்தநாதேசர்.
தேவியார் - அழகாம்பிகையம்மை.
2410 நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி
யரியான்மு னாய வொளியான்
நீரியல் காலுமாகி நிறைவானு மாகி
யுறுதீயு மாய நிமலன்
ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த
நல்குண்டு பண்டு சுடலை
நாரியொர் பாகமாக நடமாட வல்ல
நறையூரின் நம்பனவனே.
2.087. 1
ஊர்கள் தோறும் சென்று, பிச்சையேற்று உலகங்கள் போற்ற நல்குவதை உண்டு. முற்காலத்தே சுடலையில் மாதொருபாகனாக நடனமாடவல்ல, நறையூரில் விளங்கும் நம்பனாகிய சிவபெருமான், நுண்ணியன். பேருருவினன். தன்னொரு பாகத்தை அளித்த திருமால்முன் சோதிப்பிழம்பு ஆனவன். நீர், காற்று, முதலான ஐம்பூத வடிவினன்.
2411 இடமயி லன்னசாயன் மடமங்கை தன்கை
யெதிர்நாணி பூண வரையில்
கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து
வமரர்க் களித்த தலைவன்
மடமயில் ஊர்திதாதை யெனநின்றுதொண்டர்
மனநின்ற மைந்தன் மருவும்
நடமயி லாலநீடு குயில்கூவு சோலை
நறையூரின் நம்பனவனே.
2.087. 2
பொருந்திய மயில்கள் நடனம் ஆடி அகவவும், புகழ் நீடிய குயில்கள் கூவவும், விளங்கும் சோலை சூழ்ந்த நறையூரில் விளங்கும் நம்பனாகிய அப்பெருமான், இடப்பாகத்தே மயிலன்ன சாயலுடன் விளங்கும் மலைமங்கையோடு தன் கையில் உள்ள மலைவில்லில் அரவு நாணைப் பூட்டிக் கடிதானகூரிய அம்பினைக் கோத்து, மூவெயில்களைச் செந்று மகிழ்ந்து தேவர்கட்கு வாழ்வளித்த தலைவன். இளைய மயிலூர்தியைக் கொண்ட முருகனின் தந்தை என்று தொண்டர் எதிர்நின்று போற்ற அவர்கள் மனத்திலே எழுந்தருளும் மைந்தன் ஆவான்.
2412 சூடக முன்கைமங்கை யொருபாக மாக
வருள்கார ணங்கள் வருவான்
ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு
படுபிச்ச னென்று பரவத்
தோடக மாயொர்காதும் ஒருகா திலங்கு
குழைதாழ வேழ வுரியன்
நாடக மாகவாடி மடவார்கள் பாடும்
நறையூரின் நம்ப னவனே.
2.087. 3
இளம் பெண்கள் நாட்டியம் ஆடிப்பாடிப் போற்றும் நறையூரில் எழுந்தருளிய நம்பனாகிய அப்பெருமான் வளையல் அணிந்தமுன் கைகளை உடைய மலைமங்கை ஒரு பாகமாக விளங்க அருள்புரிய வருபவன். பெரிய வீடுகளை நோக்கிச் சென்று அவர்கள் இடும் பிச்சையை ஏற்று, மிக்க ஈடுபாடு உடையவன் என்று அடியவர் பரவி ஏத்த, இரு காதுகளிலும் தோடும் குழையும் அணிந்து யானையின் தோலைப் போர்த்துள்ளவன்.
2413 சாயனன் மாதொர்பாகன் விதியாய சோதி
கதியாக நின்ற கடவுள்
ஆயக மென்னுள்வந்த வருளாய செல்வன்
இருளாய கண்ட னவனித்
தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு
மலையின்கண் வந்து தொழுவார்
நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும்
நறையூரின் நம்ப னவனே.
2.087. 4
தாங்கள் விரும்பிய மலையின்கண் இருந்து தவம் முயலும் சித்தர்கள் இறங்கி வந்து வழிபடுகின்ற, சித்தர்கட்கு ஈசுவரன் என்று மறையவரால் போற்றிப் பேணும் நறையூர்ச் சித்தீச்சரத்து இறைவனாகிய அவன், அழகிய மலைமாதினை ஒரு பாகமாகக் கொண்டவன். எல்லோர்க்கும் ஊழை வரையறுக்கும் சோதி. சிவகதியாக நிற்கும் கடவுள். என் மனத்திடை வந்து அருள் புரியும் செல்வன். இருண்ட கண்டத்தினன். தாயெனத் தலையளி செய்யும் தலைவன்.
2414 நெதிபடு மெய்யெமைய னிறைசோலை சுற்றி
நிகழம்ப லத்தின் நடுவே
அதிர்பட ஆடவல்ல வமரர்க் கொருத்தன்
எமர்சுற்ற மாய இறைவன்
மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து
விடையேறி யில்பலி கொள்வான்
நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும்
நறையூரின் நம்ப னவனே.
2.087. 5
வளைமீன்கள் நதி வழியாக நீந்தி வந்து வயல்களிற் பாயும் நறையூரில் எழுந்தருளிய இறைவன், சேமநிதியாகக் கருதப்படும் மெய்ப்பொருள் எமக்குத் தலைவன் நினைறந்த சோலைகள் சூழ்ந்த அம்பலத்தில் அதிர்பட ஆடுபவன் அமரர்க்குத் தலைவன். அடியவர்க்குச் சுற்றமாய் விளங்குபவன். பிறை பொருந்திய சடை தாழ்ந்து தொங்க விடைஏறி வந்து வீடுகள் தோறும் பலி ஏற்பவன்.
2415 கணிகையொர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை
மலர்துன்று செஞ் சடையினான்
பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு
பலவாகி நின்ற பரமன்
அணுகிய வேதவோசை யகலங்க மாறின்
பொருளான ஆதி யருளான்
நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து
நறையூரின் நம்ப னவனே.
2.087.6
அருள் பெறத் தன்னை நண்ணிய தொண்டர்கள் மலர் தூவி ஏத்த நறையூரில் விளங்கும் இறைவன். கங்கை தங்கிய முடி மீது வன்னி, கொன்றைமலர் முதலின பொருந்திய சடையினை உடையவன். வணங்குதற்கு முன்னரே அவர்கள் விரும்பும் வடிவங்கள் பலவாகத் தோன்றி அருள்புரிபவன். தன்னை அணுகிய வேதங்களின் ஓசை, அகன்ற ஆறு அங்கங்களின் பொருளாக விளங்கும் கருணையாளன்.
2416 ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க
மவையார ஆட லரவம்
மிளிர்தரு கையிலங்க வனலேந்தி யாடும்
விகிர்தன் விடங்கொண் மிடறன்
துளிதரு சோலையாலை தொழின்மேவ வேத
மெழிலார வென்றி யருளும்
நளிர்மதி சேருமாட மடவார்க ளாரு
நறையூரின் நம்ப னவனே.
2.087. 7
தேன் துளிக்கும் சோலைகளையும், கரும்பினைப் பிழிந்து வெல்லம் ஆக்கும் தொழிலையும் வேதமுழக்கங்களின் எழுச்சியையும், வெற்றி வழங்கும் செல்வவளம் உடைய வானளாவிய, மடவார்கள் வாழும் மாடவீடுகளையும் உடைய நறையூரில் எழுந்தருளிய இறைவன் ஒளிதரும் தன்திருமேனியிலுள்ள அங்கங்கள் எங்கும் அரவுகள் ஆட, கையில் விளங்கும் அனலை ஏந்தி ஆடும் விகிர்தன். விடம் பொருந்திய கண்டத்தினன்.
2417 அடலெரு தேறுகந்த வதிருங் கழற்கள்
ளெதிருஞ் சிலம்பொ டிசையக்
கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன்
முனிவுற் றிலங்கை யரையன் உடலொடு
தாளனைத்து முடிபத் திறுத்தும்
இசைகேட் டிரங்கி யொருவாள்
நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல
நறையூரின் நம்ப னவனே.
2.087. 8
இலங்கை மன்னனாகிய இராவணனின் உடல் தோள் பத்துத் தலைகள் ஆகியவற்றை நெரித்துப் பின் அவனது இசையைக் கேட்டு இரங்கி அவன் துன்பங்களைத் தவிர்த்து ஒப்பற்ற வாளைத் தந்து கருணை காட்டியவனாய் நம்மை ஆளுதற்பொருட்டு நறையூரில் எழுந்தருளிய இறைவன் வலிய எருதினை உகந்தவன். அதிரும் கழல்களோடு ஒருபாதியில் சிலம்பு ஒலிக்க வருபவன். கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்டு கனிவு பொருந்தக் கண்டத்தில் நிறுத்தியோன்.
2418 குலமலர் மேவினானும் மிகுமாய னாலும்
எதிர்கூடி நேடி நினைவுற்
றிலபல வெய்தொணாமை யெரியா யுயர்ந்த
பெரியா னிலங்கு சடையன்
சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச
வருமைத் திகழ்ந்த பொழிலின்
நலமலர் சிந்தவாச மணநாறு வீதி
நறையூரின் நம்ப னவனே.
2.087. 9
சிலபல தொண்டர்கள் நின்று பெருமைகள் பேசிப் பரவக் கரியமேகங்கள் விளங்கும் பொழிலின் நல்ல மலர்கள் சிந்துதலால் மணம் வீசும் வீதிகளை உடைய நறையூரில் எழுந்தருளிய நம்பனாகிய இறைவன் மலர்களிற் சிறந்த தாமரைமலர் மேல் விளங்கும் பிரமனும் புகழ்மிக்க திருமாலும், எதிர்கூடித் தேடியும் அவர்கள் நினைப்பில் உற்றிலாத பல சிறப்பினனாய் அவர்கள் காணமுடியாத படி, தீயாய் ஓங்கிய பெரியோன், விளங்கும் சடைமுடியை உடையவன்.
2419 துவருறுகின்ற ஆடை யுடல்போர்த் துழன்ற
அவர்தாமும் அல்ல சமணும்
கவருறு சிந்தையாள ருரைநீத் துகந்த
பெருமான் பிறங்கு சடையன்
தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண
முறைமாதர் பாடி மருவும்
நவமணி துன்றுகோயி லொளிபொன்செய் மாட
நறையூரின் நம்ப னவனே.
2.087. 10
தவம் நிறைந்த பத்தர்கள், சித்தர்கள், மறைவல்லோர் விரும்பி வழிபடவும், மாதர்கள் முறையாகப் பாடி அடையவும், நவமணிகள் செறிந்த கோயிலையும் ஒளிதரும் பொன்னால் இயன்ற மாடவீடுகளையும் கொண்டுள்ள நறையூரில் விளங்கும் இறைவன், துவர் ஏற்றிய ஆடையை உடலில் போர்த்துத் திரியும் தேரரும் அவரல்லாத சமணர்களும் ஆகிய மாறுபட்ட மனம் உடையோர் உரைகளைக் கடந்து நிற்கும் பெருமான் ஆவன். அவன் விளங்கும் சடைமுடி உடையோன்.
2420 கான லுலாவி ஓதம் எதிர்மல்கு காழி
மிகுபந்தன் முந்தி யுணர
ஞான முலாவுசிந்தை அடிவைத் துகந்த
நறையூரின் நம் னவனை
ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த
தமிழ்மாலை பத்து நினைவார்
வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று
வழிபாடு செய்யு மிகவே.
2.087. 11
ஓதநீர் கடற்கரைச் சோலைகளைக் கடந்து வந்து நிறையும் காழிப்பதியில் தோன்றிய புகழ் மிகு ஞானசம்பந்தன் இளமையில் உணரும் வண்ணம் ஞானம் உலாவுகின்ற மனத்தில் தன் திருவடிகளைப் பதிய வைத்து உகந்த நறையூரில் விளங்கும் இறைவனை, குற்றமற்றவகையில் இசையால் உரைத்த தமிழ்மாலையாகிய இப்பத்துப் பாடல்களையும் உணர வல்லவர் நிலவுலகம் நின்று வழிபடுமாறு வானம் நிலாவ வல்லவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
2.087.திருநறையூர் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|