|
||||||||
இரண்டாம் திருமுறை-90 |
||||||||
2.090.திருநெல்வாயில்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அரத்துறைநாதர்.
தேவியார் - ஆனந்தநாயகியம்மை.
இது முத்துச்சிவிகை - முத்துச்சின்ன முதலியவை பெற்றபோதருளிச்செய்தது.
2442 எந்தை யீசனெம் பெருமான்
ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற்
சென்றுகை கூடுவ தன்றால்
கந்த மாமல ருந்திக்
கடும்புன னிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே.
2.090. 1
மணம் பொருந்திய மலர்களை உந்திக்கொண்டு பெருகிவரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் அழகிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருநெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருள், எம் தந்தை, ஈசன், பெரியோன், ஆனேற்றை ஏறிவருவோன் என்று அவன் பெயர்களைப் பலமுறை சொல்லி ஏத்தி மனம் பொருந்தி வழிபடவல்லவர்கட்கு அல்லால், ஏனையோர்க்குக் கைகூடாதது.
2443 ஈர வார்சடை தன்மேல்
இளம்பிறை யணிந்தவெம் பெருமான்
சீருஞ் செல்வமு மேத்தாச்
சிதடர்கள் தொழச்செல்வ தன்றால்
வாரி மாமல ருந்தி
வருபுன னிவாமல்கு கரைமேல்
ஆருஞ் சோலை நெல்வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே.
2.090. 2
சிறந்த மலர்களை வாரிக்கொண்டு உந்திவரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் பொருந்திய சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறையில் விளங்கும் அடிகளின் திருவருள், குளிர்ந்த நீண்ட சடைமேல் இளம்பிறை அணிந்த எம்பெருமானே என்று கூறி அவன் சீரையும் செல்வத்தையும் ஏத்தாத பேதையர்கள் தொழுது பெறுதற்கு இயலாதது.
2444 பிணி கலந்தபுன் சடைமேற்
பிறையணி சிவனெனப் பேணிப்
பணி கலந்துசெய் யாத
பாவிகள் தொழச்செல்வ தன்றால்
மணி கலந்துபொன் னுந்தி
வருபுன னிவாமல்கு கரைமேல்
அணி கலந்தநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே.
2.090. 3
மணிகளையும் பொன்னையும் உந்திக் கொண்டு வரும் நீரை உடைய நிவாநதிக் கரைமேல் அழகுற அமைந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள் பிணிப்போடு அமைந்த மென்மையான சடைமீது பிறையணிந்துள்ள சிவனே எனப் பக்தி செய்து அவன் திருத்தொண்டுகளை அன்போடு செய்யாத பாவிகள் தொழுது பெறுதற்கு இயலாதது.
2445 துன்னவாடை யொன் றுடுத்துத்
தூயவெண் ணீற்றின ராகி
உன்னி நைபவர்க் கல்லால்
ஒன்றுங்கை கூடுவ தன்றால்
பொன்னு மாமணி யுந்திப்
பொருபுன னிவாமல்கு கரைமேல்
அன்ன மாருநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே.
2.090. 4
பொன்னையும் சிறந்த மணிகளையும் உந்திக் கொண்டு வரும் நீரைஉடைய நிவா நதிக்கரைமேல் அன்னங்கள் தங்கி மகிழும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள், தைத்த கோவண ஆடை ஒன்றைக் கட்டிக் கொண்டு தூய வெண்ணீறணிந்து திகழும் அவன் பெருமைகளை எண்ணி நைந்துருகுபவர்கட்கு அல்லால் ஏனையோருக்குக் கைகூடுவதன்று.
2446 > வெருகு ரிஞ்சுவெங் காட்டில்
ஆடிய விமலனென் றுள்கி
உருகி நைபவர்க் கல்லால்
ஒன்றுங்கை கூடுவ தன்றால்
முருகு ரிஞ்சுபூஞ் சோலை
மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந்
தருகு ரிஞ்சுநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே.
2.090. 5
மணம் தவழும் பூஞ்சோலைகளில் பூத்த மணம் மொய்க்கும் மலர்களைச் சுமந்து ஓடிவரும் நிவா நதி அருகில் வந்து பொருந்திச் செல்லும் நெல்வாயில் அரத்துறையில் விளங்கும் அடிகளின் திருவருள், காட்டுப்பூனைகள்வாழும் கொடிய சுடுகாட்டில் ஆடும் விமலனே! என்று அழைத்து அவன் பெருமைகளை எண்ணி மனம் உருகுபவர்கட்கு அல்லால் ஏனையோர்க்கு ஒரு சிறிதும் கைகூடாதது.
2447 உரவு நீர்சடைக் கரந்த
வொருவனென் றுள்குளிர்ந் தேத்திப்
பரவி நைபவர்க் கல்லாற்
பரிந்துகை கூடுவ தன்றால்
குரவ நீடுயர் சோலைக்
குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவ மாருநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே.
2.090. 6
குராமரங்கள் நீண்டுயர்ந்த சோலைகளில் ஓடிவரும் குளிர்ந்த நீரை உடைய நிவா நதிக்கரைமேல் விளங்கும் நீர்ப்பாம்புகள் இளைப்பாறி மகிழ்வதான நெல்வாயில் அரத்துறை அடிகளின் திரு வருள், வலிமை பொருந்திய கங்கை வெள்ளத்தைத் தன் சடைமிசை ஒளித்த ஒப்பற்றவனே என்று மனம் குளிர்ந்து ஏந்தி வணங்கி மனம் உருகுபவர்க்கு அல்லால் ஏனையோரிடத்து அவன் அன்புகாட்டுவதில்லை ஆதலின் கை கூடாதது.
2448 நீல மாமணி மிடற்று
நீறணி சிவனெனப் பேணும்
சீல மாந்தர்கட் கல்லாற்
சென்றுகை கூடுவ தன்றால்
கோல மாமல ருந்திக்
குளிர்புன னிவாமல்கு கரைமேல்
ஆலுஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே.
2.090. 7
அழகிய மலர்களை உந்திக் கொண்டு ஓடிவரும் குளிர்ந்த நீரை உடைய நிவாநதிக் கரைமேல் ஆரவாரிக்கும் சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திரு அருள், நீலமணி போன்ற கண்டத்தினன், நீறணிந்த சிவன், என விரும்பி வழிபடும் சிவஞானியர்க்கு அல்லால் ஏனையோர்க்குக் கைகூடுவது அரிது.
2449 செழுந்தண் மால்வரை யெடுத்த
செருவலி யிராவண னலற
அழுந்த வூன்றிய விரலான்
போற்றியென் பார்க்கல்ல தருளான்
கொழுங்கனிசுமந் துந்திக்
குளிர்புன னிவாமல்கு கரைமேல்
அழுந்துஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே.
2.090. 8
கொழுமையான கனிகளைச் சுமந்து உந்திவரும் குளிர்ந்த நீரைஉடைய நிவாநதிக்கரைமேல் அழுந்திய சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் திருவருளை, செழுமையான குளிர்ந்த பெரிய கயிலைமலையைப் பெயர்த்த போர் வலிமிக்க இராவணன் அலறுமாறு அழுந்த ஊன்றிய விரலை உடையவர் என்று போற்ற வல்லார்க்கு அல்லாமல் ஏனையோர்க்குத் தாரார்.
2450 நுணங்கு நூலயன் மாலும்
இருவரும் நோக்கரி யானை
வணங்கி நைபவர்க் கல்லால்
வந்துகை கூடுவ தன்றால்
மணங்க மழ்ந்துபொன் னுந்தி
வருபுன னிவாமல்கு கரைமேல்
அணங்குஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே.
2.090. 9
மணம் கமழ்ந்து பொன்னுந்தி வரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் அழகு செய்யும் சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள், நுட்பமான நூல்களை அறிந்துணர்ந்த பிரமன் மால் ஆகிய இருவராலும் காணுதற்கு அரிய பொருளாய் இருப்பவனை வணங்கி நைந்து வழிபடுவார்க்கு வாய்க்குமேயன்றி ஏனையோர்க்குக் கைகூடாதது.
2451 சாக்கி யப்படு வாருஞ்
சமண்படு வார்களும் மற்றும்
பாக்கி யப்பட கில்லாப்
பாவிகள் தொழச்செல்வ தன்றால்
பூக்க மழ்ந்துபொன் னுந்திப்
பொருபுன னிவாமல்கு கரைமேல்
ஆர்க்குஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே.
2.090. 10
மலர்களின் மணம் கமழ்ந்து பொன்னுந்திக் கரையை பொருது வரும் நீரை உடைய நிவா நதிக் கரைமேல் ஒலிக்கின்ற சோலைகளால் சூழப்பெற்று விளங்கும் நெல் வாயில் அரத்துறை அடிகள்தம், திருவருள் சாக்கிய மதத்தில் விழுபவர்களும் சமண சமயத்தைச் சார்பவரும் மற்றும் புறப்புறச் சமயங்களைத் தழுவுவார்களும் ஆகிய, சைவ நெறி சாரும் பாக்கியம் இல்லாத பாவிகளால், தொழுது பெறுவதற்கு இயலாதது.
2452 கறையி னார்பொழில் சூழ்ந்த
காழியுண் ஞானசம் பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த
அரத்துறை அடிகள்தம் அருளை
முறைமை யாற்சொன்ன பாடல்
மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்
பறையு மையுற வில்லைப்
பாட்டிவை பத்தும்வல் லார்க்கே.
2.090. 11
கருமை நிறம் அமைந்த பொழில்கள் சூழ்ந்துள்ள சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன், ஒலிக்கின்ற அழகிய புனல் பரவிய நெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருளைப் பெறுதற்குரிய நெறிகளை முறையோடு தெரிவித்துள்ள இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கட்கு ஐயுறவின்றி வினைகள் நீங்கும். இஃது உறுதி.
திருச்சிற்றம்பலம்
2.090.திருநெல்வாயில் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|