|
||||||||
இரண்டாம் திருமுறை-91 |
||||||||
2.091.திருமறைக்காடு
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர்.
தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.
2453 பொங்கு வெண்மணற் கானற்
பொருகடற் றிரைதவழ் முத்தம்
கங்கு லாரிருள் போழுங்
கலிமறைக் காடமர்ந் தார்தாம்
திங்கள் சூடின ரேனுந்
திரிபுர மெரித்தன ரேனும்
எங்கு மெங்கள் பிரானார்
புகழல திகழ்பழி யிலரே.
2.091. 1
பொங்கியது போன்ற வெண்மையான மணற்பரப்பில் அமைந்துள்ள சோலையில் கரையைப் பொரும் கடல் அலைகளில் தவழ்ந்து வரும் முத்துக்கள் கங்குலில் செறிந்த இருளைப் போழ்ந்து ஒளிதரும், ஒலிமிகுந்த திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர் திங்கள் சூடினரேனும் திரிபுரத்தை எரித்தனரேனும் எவ்விடத்தும் எங்கள் பிரானார்க்குப் புகழ் ஆகுமேயொழிய, இகழும் பழி உளவாதல் இல்லை.
2454 கூனி ளம்பிறை சூடிக்
கொடுவரித் தோலுடை யாடை
ஆனி லங்கிள ரைந்தும்
ஆடுவர் பூண்பது மரவம்
கான லங்கழி யோதங்
கரையொடு கதிர்மணி ததும்பத்
தேன லங்கமழ் சோலைத்
திருமறைக் காடமர்ந் தாரே.
2.091. 2
கடற்கரைச் சோலைகளில் உப்பங்கழிகளின் வெள்ளம் கரையோடு மோதுதலால் ஒளிதரும் மணிகள் சுடர்விட, தேனின் மணம் கமழும் சோலைகள் சூழ்ந்துள்ள திருமறைக்காட்டில் எழுந்தருளியுள்ள ஈசர் வளைந்த பிறைமதியைச் சூடி வளைந்த கோடுகளைக் கொண்ட புலித்தோலை ஆடையாக உடுத்து ஆனைந்து ஆடி மகிழ்பவர். அவர் அணிகலனாகப் பூண்டுள்ளது பாம்பாகும்.
2455 நுண்ணி தாய்வெளி தாகி
நூல்கிடந் திலங்குபொன் மார்பில்
பண்ணி யாழென முரலும்
பணிமொழி யுமையொரு பாகன்
தண்ணி தாயவெள் ளருவி
சலசல நுரைமணி ததும்பக்
கண்ணி தானுமொர் பிறையார்
கலிமறைக் காடமர்ந் தாரே.
2.091. 3
ஆரவாரம் மிக்க திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர், நுண்மையான வெள்ளிய நூல் விளங்கும் அழகிய மார் பினை உடையவர். இசைதரும் யாழ் போல அடக்கமான இனிய மொழிபேசும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர். தண்மையான வெள்ளிய அருவி சலசல என்னும் ஒலியோடு பாய்வதால் பெருகிய கங்கை நுரைத்து மணிகள் ததும்புமாறு சடையிற் கொண்டதோடு இளம் பிறையாகிய முடிமாலையையும் சூடியிருப்பவர் ஆவார்.
2456 ஏழை வெண்குரு கயலே
யிளம்பெடை தனதெனக் கருதித்
தாழை வெண்மடற் புல்குந்
தண்மறைக் காடமர்ந் தார்தாம்
மாழை யங்கய லொண்கண்
மலைமகள் கணவன தடியின்
நீழ லேசர ணாக
நினைபவர் வினைநலி விலரே.
2.091. 4
அறியாமையை உடைய வெண் குருகு அயலே விளங்கும் தாழை வெண்மடலைத்தன் துணைப் பேடை எனக் கருதிப் புல்கும் தண்ணிய திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர் இளமையையும், கயல் போன்ற கண்களையும் உடைய மலைமகளின் கணவராவார். அவர் திருவடி நீழலையே சரணாக நினைபவர் வினைகளால் வரும் துன்பங்கள் இலராவர்.
2457 அரவம் வீக்கிய அரையும்
அதிர்கழல் தழுவிய அடியும்
பரவ நாஞ்செய்த பாவம்
பறைதர வருளுவர் பதிதான்
மரவ நீடுயர் சோலை
மழலைவண் டியாழ்செயு மறைக்காட்
டிரவு மெல்லியும் பகலும்
ஏத்துதல் குணமென லாமே.
2.091. 5
பாம்பைக் கச்சாகக் கட்டிய இடையையும், ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளையும், நாம் பரவினால் நாம் செய்த பாவங்கள் நீங்க அருள் புரியும் சிவபெருமான் எழுந்தருளிய பதி, குங்கும மரங்கள் நீண்டுயர்ந்த சோலைகளில் வண்டுகள் யாழ் போல இசைதரும் திருமறைக்காடாகும். அங்குள்ள பெருமானை இரவும் பகலும் ஏத்துதலே குணமாகும்.
2458 பல்லி லோடுகை யேந்திப்
பாடியு மாடியும் பலிதேர்
அல்லல் வாழ்க்கைய ரேனும்
அழகிய தறிவரெம் மடிகள்
புல்ல மேறுவர் பூதம்
புடைசெல வுழிதர்வர்க் கிடமாம்
மல்கு வெண்டிரை ஓத
மாமறைக் காடது தானே.
2.091. 6
பல்லில்லாத தலையோட்டைக் கையில் ஏந்திப் பாடியும் ஆடியும் பலிதேரும் அல்லல் பொருந்திய வாழ்க்கையை உடையவர் ஆயினும் அவருக்கு அது அழகியதேயாகும். அதனையும் அவரே அறிவார். எருதேறிவருவார். பூதங்கள் அருகேபுடைசூழ்ந்து வரத்திரிவார். அத்தகைய பெருமானாருக்கு இடமாக விளங்குவது நிறைந்த வெண்மையான திரைகளை உடைய ஓத நீர் சூழ்ந்த திருமறைக்காடாகும்.
2459 > நாகந் தான்கயி றாக
நளிர்வரை யதற்குமத் தாகப்
பாகந் தேவரொ டசுரர்
படுகட லளறெழக் கடைய
வேக நஞ்செழ வாங்கே
வெருவொடு மிரிந்தெங்கு மோட
ஆகந் தன்னில்வைத் தமிர்தம்
ஆக்குவித் தான்மறைக் காடே.
2.091. 7
வாசுகி என்னும் பாம்பு கயிறாகவும் செறிவான மந்தரமலை மத்தாகவும் கொண்டு, தலைவால் பாகங்களாகப் பகுத்துக் கொண்டு தேவாசுரர் ஆழமான கடலை அளறு எழுமாறு கடைந்த போது கொடிய நஞ்சு வெளிப்பட, அதனைக் கண்டு அவர்கள் அஞ்சி ஓடியபோது அந்நஞ்சை உண்டு தன் திருமேனிமிடற்றில் நிறுத்தி அமிர்தமாகக் கொண்டவன் எழுந்தருளிய தலம் திருமறைக்காடாகும்.
2460 தக்கன் வேள்வியைத் தகர்த்தோன்
தனதொரு பெருமையை யோரான்
மிக்கு மேற்சென்று மலையை
யெடுத்தலு மலைமகள் நடுங்க
நக்குத் தன்றிரு விரலால்
ஊன்றலும் நடுநடுத் தரக்கன்
பக்க வாயும்விட் டலறப்
பரிந்தவன் பதிமறைக் காடே.
2.091. 8
தக்கன் வேள்வியைத் தகர்த்தோனாகிய சிவபிரானது ஒப்பற்ற பெருமையை உணராத அரக்கனாகிய இராவணன் செருக்குடன் சென்று கயிலை மலையைப் பெயர்த்த அளவில் மலைமகள் அஞ்ச, பெருமான் அவனது அறியாமைக்குச் சிரித்துத்தன் கால் விரலை ஊன்றிய அளவில் நடுநடுங்கி அனைத்து வாய்களாலும் அவன் அலறி அழ அதனைக் கண்டு பரிந்து அருள் செய்தவனாகிய சிவபிரானது பதி மறைக்காடாகும்.
2461 விண்ட மாமல ரோனும்
விளங்கொளி யரவணை யானும்
பண்டுங் காண்பரி தாய
பரிசின னவனுறை பதிதான்
கண்ட லங்கழி யோதங்
கரையொடு கதிர்மணி ததும்ப
வண்ட லங்கமழ் சோலை
மாமறைக் காடது தானே.
2.091.9
விரிந்த தாமரை மலரில் மேவிய பிரமனும், விளங்கும் ஒளியுடைய பாம்பணையில் துயிலும் திருமாலும், முற்காலத்தும் காணுதற்கு அரியனாய தன்மையனாகிய சிவபிரான் உறையும் பதி, தாழைமரங்கள் அடுத்துள்ள கழிகளில் பெருகிய ஓதநீர் ஒளிதரும் மணிகளோடு ததும்ப வண்டல் மண்ணில் மணம் கமழ்ந்து வளரும் சோலைகள் சூழ்ந்த சிறந்த திருமறைக்காடாகும்.
2462 பெரிய வாகிய குடையும்
பீலியும் அவைவெயிற் கரவாக்
கரிய மண்டைகை யேந்திக்
கல்லென வுழிதருங் கழுக்கள்
அரிய வாகவுண் டோது
மவர்திற மொழிந்துநம் மடிகள்
பெரிய சீர்மறைக் காடே
பேணுமின் மனமுடை யீரே.
2.091. 10
பெரிய குடையும் மயிற்பீலியும் வெயிலை மறைக்க, கரிதான மண்டை என்னும் உண்கலன் ஏந்திக் கல் என்ற ஆரவாரத்துடன் பலி ஏற்கும் கழுக்களாகிய சமண புத்தர்கள் உண்டாம் இல்லையாம் என ஓதித்திரிய அச்சமயத்தவரின் நீங்கி, நல்ல மனம் உடையவர்களே! நம் தலைவராக விளங்கும் பெருமைமிக்க திருமறைக்காட்டு இறைவனை வழிபடுவீர்களாக.
2463 மையு லாம்பொழில் சூழ்ந்த
மாமறைக் காடமர்ந் தாரைக்
கையி னாற்றொழு தெழுவான்
காழியுண் ஞானசம் பந்தன்
செய்த செந்தமிழ் பத்துஞ்
சிந்தையுட் சேர்க்கவல் லார்போய்ப்
பொய்யில் வானவ ரோடும்
புகவலர் கொளவலர் புகழே.
2.091. 11
மேகங்கள் உலாவும் பொழில் சூழ்ந்த சிறந்த திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவரைக் கைகளால் தொழுது எழுவோனாகிய காழிப்பதிவாழ் ஞானசம்பந்தன் செய்த இச்செந்தமிழ் பத்தையும் சிந்தையில் பதித்துப் போற்றவல்லவர் பொய்மையற்ற வானவர் உலகில் அவரோடும் புகவல்லவர் ஆவர். புகழே கொள்ள வல்லவராய் விளங்குபவர்.
திருச்சிற்றம்பலம்
2.091.திருமறைக்காடு |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|