|
||||||||
முதல் திருமுறை-121 |
||||||||
1.121.திருவிடைமருதூர் - திருவிராகம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர்.
தேவியார் - நலமுலைநாயகியம்மை.
1304 நடைமரு திரிபுர
மெரியுண நகைசெய்த
படைமரு தழலெழ
மழுவல பகவன்
புடைமரு திளமுகில்
வளமமர் பொதுளிய
இடைமரு தடையநம்
மிடர்கெட லௌதே.
1.121.1
இயங்குதலைப் பொருந்திய திரிபுரங்களை எரியுண்ணுமாறு சிரித்தருளித் தனது படைக்கலத்தால் தீ எழும்படி செய்தருளிய வெற்றி மழுவேந்திய பகவனாகிய சிவபிரான் எழுந்தருளியதும் அருகில் வளர்ந்துள்ள மருத மரங்களில் இளமேகங்கள் தவழ்ந்து மழை வளத்தை நிரம்பத் தருவதுமான திருஇடைமருதூரை அடைந்தால் நம் இடர்கெடல் எளிதாகும்.
1305 மழைநுழை மதியமொ
டழிதலை மடமஞ்ஞை
கழைநுழை புனல்பெய்த
கமழ்சடை முடியன்
குழைநுழை திகழ்செவி
யழகொடு மிளிர்வதொர்
இழைநுழை புரியண
லிடமிடை மருதே.
1.121.2
மேகங்களிடையே நுழைந்து செல்லும் பிறை மதியோடு தசை வற்றிய தலையோடு ஆகியவற்றையும், மடமயில்கள் மூங்கிலிடையே நுழைந்து செல்லும் மலையில் தோன்றிய தேவ கங்கை நதியையும்; கமழுமாறு சடைமுடியில் சூடியவனும், குழை நுழைந்து விளங்கும் செவியழகோடு இழையாகத் திரண்ட முப்புரிநூலை விரும்பி அணிபவனுமாகிய அண்ணல் எழுந்தருளிய இடம் திரு விடைமருதூராகும்.
1306 அருமைய னௌமைய
னழல்விட மிடறினன்
கருமையி னொளிபெறு
கமழ்சடை முடியன்
பெருமையன் சிறுமையன்
பிணைபெணொ டொருமையின்
இருமையு முடையண
லிடமிடை மருதே.
1.121.3
அன்பில்லாதவர்க்கு அரியவனும், அன்புடை அடியவர்க்கு எளியவனும், அழலும் தன்மையுடைய விடத்தை உண்டு நிறுத்திய கண்டத்தினனும், பெரியனவற்றுக்கெல்லாம் பெரியவனும், சிறியன யாவற்றினும் சிறியவனும், தன்னோடு பிணைந்துள்ள உமையம்மையோடு ஓருருவில் இருவடிவாய்த் தோன்றுபவனுமாகிய சிவபிரானுக்குரிய இடம் திருவிடைமருதூர் ஆகும்.
1307 பொரிபடு முதுகுற
முளிகளி புடைபுல்கு
நரிவளர் சுடலையு
ணடமென நவில்வோன்
வரிவளர் குளிர்மதி
யொளிபெற மிளிர்வதொர்
எரிவளர் சடையண
லிடமிடை மருதே.
1.121.4
நன்கு காய்ந்து பொரிந்த முதுகினை உடைய நரிகள் களிப்போடு அருகில் மிகுந்து தோன்ற, சுடலைக் காட்டில் நடம் நவில்பவனும், கோடாகத் தோன்றிப் பின்வளரும் குளிர்ந்த பிறைமதியை ஒளிபெற அணிந்த எரிபோன்று வளரும் சடைமுடியை உடையவனும் ஆகிய தலைமையாளனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.
1308 வருநல மயிலன
மடநடை மலைமகள்
பெருநல முலையிணை
பிணைசெய்த பெருமான்
செருநல மதிலெய்த
சிவனுறை செழுநகர்
இருநல புகழ்மல்கு
மிடமிடை மருதே.
1.121.5
அழகோடு அசைந்து வரும் மயில் போன்ற மடநடையினளாகிய மலையரையன் மகளும், பெரு நல முலையாள் என்ற திருப்பெயருடையவளுமாகிய அம்மையின் இருதன பாரங்களைக் கூடியவனும், போர் செய்தற்குரிய தகுதியோடு விளங்கிய அவுணர்களின் மும்மதில்களை எய்தழித்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடமாகிய செழுமையான நகர் விரிந்த புகழால் நிறைந்த திருஇடைமருதூர் ஆகும்.
1309 கலையுடை விரிதுகில்
கமழ்குழ லகில்புகை
மலையுடை மடமகள்
தனையிட முடையோன்
விலையுடை யணிகல
னிலனென மழுவினோ
டிலையுடை படையவ
னிடமிடை மருதே.
1.121.6
மேகலை சூழ்ந்த விரிந்த ஆடையுடன் அகிற் புகையின் மணம் கமழும் கூந்தலை உடைய மலையரையனின் மடமகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாக உடையவனும் விலை மதிப்புடைய அணிகலன்கள் எவையும் இல்லாதவன் என்னுமாறு என்பு முதலியன பூண்டு மழு இலைவடிவான சூலம் இவற்றைப் படைக்கலனாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.
1310 வளமென வளர்வன
வரிமுரல் பறவைகள்
இளமண லணைகரை
யிசைசெயு மிடைமரு
துளமென நினைபவ
ரொலிகழ லிணையடி
குளமண லுறமூழ்கி
வழிபடல் குணமே.
1.121.7
இது வளமான இடமாகும் என வளர்வனவாகிய வரிப் பாடல்களைப் பாடும் வண்டுகள் இளமணல் அணைந்த கரையில் தங்கி முரலும் இடைமருதை மனமார நினைபவர் அந்நகரை அடைந்து ஆங்குள்ள தீர்த்தத்தில் நன்கு மூழ்கி ஒலிக்கின்ற கழலணிந்த மருத வாணனை வழிபடுதலைப் பண்பாகக் கொள்க.
1311 மறையவ னுலகவன்
மதியவன் மதிபுல்கு
துறையவ னெனவல
வடியவர் துயரிலர்
கறையவன் மிடறது
கனல்செய்த கமழ்சடை
இறையவ னுறைதரு
மிடமிடை மருதே.
1.121.8
வேதங்களை அருளியவனும் அனைத்துலகங்களாய் விளங்குபவனும், திங்களாகத் திகழ்பவனும், அறிவொடுபட்ட கலைத் துறைகளாக விளங்குபவனும் சிவபிரானேயாவன் என்று போற்ற வல்ல அடியவர் துயரிலராவர். மிடற்றிற் கறையுடையவனும் கனல்போல் விளங்கும் சடையினனும் எல்லோர்க்கும் தலைவனும் ஆய அப்பெருமான் உறையும் இடம் இடைமருதாகும்.
1312 மருதிடை நடவிய
மணிவணர் பிரமரும்
இருதுடை யகலமொ
டிகலின ரினதெனக்
கருதிட லரியதொ
ருருவொடு பெரியதொர்
எருதுடை யடிகள்தம்
இடமிடை மருதே.
1.121.9
மருதமரங்களின் இடையே கட்டிய உரலோடு தவழ்ந்த நீலமணிபோன்ற நிறத்தை உடைய திருமாலும், பிரமனும் மிக்க பெருமையுடையவர் யார் எனத் தம்முள் மாறுபட்டவராய் நிற்க அவர்கள் இன்னதெனக் கருதற்கரிய பெரிய ஒளி உருவோடு தோன்றிய பெரிய விடையூர்தியனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.
1313 துவருறு விரிதுகி
லுடையரு மமணரும்
அவருறு சிறுசொலை
நயவன்மி னிடுமணல்
கவருறு புனலிடை
மருதுகை தொழுதெழும்
அவருறு வினைகெட
லணுகுதல் குணமே.
1.121.10
துவர் ஏற்றிய விரிந்த ஆடையினை உடுத்தும் போர்த்தும் திரியும் புத்தரும் சமணரும் கூறும் சிறு சொல்லை விரும்பாதீர். காவிரி பல கிளைகளாகப் பிரிந்து செல்லும் வாய்க்கால்களை உடைய இடைமருதைக் கைகளால் தொழுபவர்க்கு வினைகள் கெடுதலும் நல்ல குணங்கள் உண்டாதலும் கூடும்.
1314 தடமலி புகலியர்
தமிழ்கெழு விரகினன்
இடமலி பொழிலிடை
மருதினை யிசைசெய்த
படமலி தமிழிவை
பரவவல் லவர்வினை
கெடமலி புகழொடு
கிளரொளி யினரே.
1.121.11
நீர்நிலைகள் பலவற்றை உடைய புகலிப் பதியில் தோன்றியவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதீசனை இசையால் பரவிய சொல்லோவியமாகிய இத்திருப்பதிகத் தமிழைப் பாடிப் பரவ வல்லவர்தம் வினைகள் கெட்டொழிய அவர்கள் புகழோடும் விளங்கும் ஒளியோடும் திகழ்பவராவர்.
திருச்சிற்றம்பலம்
|
||||||||
by Swathi on 30 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|