|
||||||||
இரண்டாம் திருமுறை-97 |
||||||||
2.097.சீகாழி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
2518 நம்பொருள் நம்மக்களென்று
நச்சியிச்சை செய்துநீர்
அம்பர மடைந்துசால
அல்லலுய்ப்ப தன்முனம்
உம்பர்நாத னுத்தமன்
ஒளிமிகுந்த செஞ்சடை
நம்பன்மேவு நன்னகர்
நலங்கொள்காழி சேர்மினே.
2.097. 1
நம் பொருள், நம் மக்கள் என்று பற்றுச் செய்து நீர் அழிந்தொழிந்து அல்லல் உறுதற்குமுன்னரே, தேவர் தலைவன், உத்தமன், ஒளிமிக்க செஞ்சடையை உடைய நம்பன் எழுந்தருளிய நன்னகராகிய அழகிய காழிப்பதியை அடைவீர்களாக.
2519 பாவமேவு முள்ளமோடு
பத்தியின்றி நித்தலும்
ஏவமான செய்துசாவ
தன்முனம்மி சைந்துநீர்
தீவமாலை தூபமுஞ்
செறிந்தகைய ராகிநம்
தேவதேவன் மன்னுமூர்
திருந்துகாழி சேர்மினே.
2.097.2
பாவங்களைச் செய்யும் உள்ளத்தோடு இறைவனிடம் பக்தி இன்றி நாள்தோறும் பயனற்றன செய்து இறப்பதன் முன்னம், நீர் சிவபிரானிடம் அன்பு கொண்டு தீபம், மாலை, தூபம் முதலியன ஏந்திய கையராகித் தேவர் தலைவனாகிய அவ் விறைவன் எழுந்தருளிய ஊராகிய அழகிய காழிப்பதியை அடை வீர்களாக.
2520 சோறுகூறை யின்றியே
துவண்டுதூர மாய்நுமக்
கேறுசுற்ற மௌகவே
இடுக்கணுய்ப்ப தன்முனம்
ஆறுமோர் சடையினான்
ஆதியானை செற்றவன்
நாறுதேன் மலர்ப்பொழில்
நலங்கொள்காழி சேர்மினே.
2.097. 3
உணவும், உடையும் இன்றித் துவண்டு, உற்ற சுற்றத்தினர் விலகிச்செல்லத் துன்பம் உறுவதன் முன்னம், கங்கை தங்கிய சடையினனும், நான்முகன் தலையைக், கொய்தவனும் ஆகிய சிவபெருமான் உகக்கும் தேன் மணம் கமழும் மலர்ப்பொழில் சூழ்ந்த அழகிய காழிப் பதியை அடைவீர்களாக.
2521 நச்சிநீர் பிறன்கடை
நடந்துசெல்ல நாளையும்
உச்சிவம் மெனும்முரை
உணர்ந்துகேட்ப தன்முனம்
பிச்சர்நச் சரவரைப்
பெரியசோதி பேணுவார்
இச்சைசெய்யு மெம்பிரான்
எழில்கொள்காழி சேர்மினே.
2.097. 4
பொருளை விரும்பிப் பிறர் மனைவாயிலை நடந்து சென்று அடையக்கண்டும் அச்செல்வர் ‘நாளை நண்பகற்போதில் வருக ‘எனக் கூறும் உரையைக் கேட்டு வருந்துவதன் முன்னம் நம் மேல் ஈடுபாடுடையவரும், விடம் பொருந்திய பாம்பை அரையில் கட்டிய பெரிய ஒளி வடிவினரும் வழிபடுவாரிடம் அன்பு செய்யும் எம்பிரானாரும் ஆகிய சிவபிரானது அழகிய காழிப்பதியை அடைவீர்களாக.
2522 கண்கள்காண் பொழிந்துமேனி
கன்றியொன்ற லாதநோய்
உண்கிலாமை செய்துநும்மை
யுய்த்தழிப்ப தன்முனம்
விண்குலாவு தேவருய்ய
வேலைநஞ் சமுதுசெய்
கண்கள்மூன் றுடையவெம்
கருத்தர்காழி சேர்மினே.
2.097.5
கண்கள் காட்சி தவிர்ந்து உடல் கன்றி ஒன்றல்லாத பல நோய்கள் நும்மைத் தாக்கி அழிப்பதற்கு முன்னமே விண்ணகத்தேவர் உய்யக் கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்ட முக்கண்ணராகிய எம் தலைவர் விளங்கும் காழிப்பதியை அடைவீர்களாக.
2523 அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற்
கவத்தமேபிறந்துநீர்
எல்லையில் பிணக்கினிற்
கிடந்திடா தெழும்மினோ
பல்லில்வெண் டலையினிற்
பலிக்கியங்கு பான்மையான்
கொல்லையேற தேறுவான்
கோலக்காழி சேர்மினே.
2.097.6
துன்பமயமான வாழ்க்கையை நடத்துதற்கு வீணாகப் பிறந்து, நீர் எல்லையில்லாத மாறுபாடுகளில் கிடந்திடாது புறப்படுவீர்களாக. பல்லில்லாத வெண்டலையில் பலியேற்கத் திரிதற்கு முல்லை நிலத்து ஆனேற்றில் ஏறிச் செல்வோனாகிய சிவபிரானது அழகிய காழிப்பதியை அடைவீர்களாக.
2524 பொய்மிகுத்த வாயராய்ப்
பொறாமையோடு சொல்லுநீர்
ஐமிகுத்த கண்டரா
யடுத்திரைப்ப தன்முனம்
மைமிகுத்த மேனிவா
ளரக்கனை நெரித்தவன்
பைமிகுத்த பாம்பரைப்
பரமர்காழி சேர்மினே.
2.097. 8
மிகுதியாகப் பொய் பேசும் வாயினராய்ப் பொறாமையோடு பேசும் நீர், கோழைமிகுந்த கண்டத்தினராய் இரைப்பு அடைதற்கு முன்னரே, கரிய மேனியனாகிய இராவணனை மலையின் கீழ் நெரித்தவனும், படம் பொருந்திய பாம்பினை அரையில் கட்டிய பரமனும் ஆகிய சிவபிரானது காழியை அடைவீர்களாக
2525 காலினோடு கைகளுந்
தளர்ந்துகாம நோய்தனால்
ஏலவார் குழலினா
ரிகழ்ந்துரைப்ப தன்முனம்
மாலினோடு நான்முகன்
மதித்தவர்கள் காண்கிலா
நீலமேவு கண்டனார்
நிகழ்ந்தகாழி சேர்மினே.
2.097.9
கைகால்கள் தளர்ந்து, விரும்பி உடலைப் பற்றிய நோயினால் அன்பொடு போற்றிய அழகிய மனைவியரும் இகழ்ந்து பேசுதற்கு முன்னமே, திருமால் பிரமர்கள் மதித்துக் காண ஒண்ணாத நீலகண்டர் எழுந்தருளிய காழிப்பதியை அடைவீர்களாக.
2526 நிலைவெறுத்த நெஞ்சமோடு
நேசமில் புதல்வர்கள்
முலைவெறுத்த பேர்தொடங்கி
யேமுனிவ தன்முனந்
ப தலைபறித்த கையர்தேரர்
தாந்தரிப் பரியவன்
சிலைபிடித் தெயிலெய்தான்
திருந்துகாழி சேர்மினே.
2.097. 10
பலநாள்கள் நோயிற் கிடத்தலால் தந்தை என்ற முன்நிலையை வெறுத்த அன்பு அற்ற புதல்வர்கள், மனைவி முதலானோர் முனிவு கொள்ளுதற்கு முன்னரே, தலைபறித்து வாழும் சமணர், தேரர் ஆகியோர் நினைதற்கும் அரியவனும், சிலைபிடித்து முப்புரம் எரித்தவனும் ஆகிய சிவபிரானது அழகிய காழியை அடைவீர்களாக.
2527 தக்கனார் தலையரிந்த
சங்கரன் தனதரை
அக்கினோ டரவசைத்த
வந்திவண்ணர் காழியை
ஒக்கஞான சம்பந்தன்
உரைத்தபாடல் வல்லவர்
மிக்கவின்ப மெய்திவீற்
றிருந்துவாழ்தன் மெய்ம்மையே.
2.097. 11
தக்கன் தலையை அரிந்தவனும், சங்கரனும், தனது இடையில் என்புமாலையுடன் பாம்பு அணிந்த அந்தி வண்ணனும் ஆகிய சிவபிரானது காழிப்பதியைப் பொருந்துமாறு ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகப்பாடல்களை வல்லவர்கள் மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் உண்மையாகும்.
திருச்சிற்றம்பலம்
2.097.சீகாழி |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|