|
||||||||
இரண்டாம் திருமுறை-98 |
||||||||
2.098.திருத்துருத்தி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதேசுவரர்.
தேவியார் - முகிழாம்பிகையம்மை.
2528 வரைத்தலைப் பசும்பொனோ
டருங்கலன்க ளுந்திவந்
திரைத்தலைச் சுமந்துகொண்
டெறிந்திலங்கு காவிரிக்
கரைத்தலைத் துருத்திபுக்
கிருப்பதே கருத்தினாய்
உரைத்தலைப் பொலிந்துனக்
குணர்த்துமாறு வல்லமே.
2.098. 1
மலைகளிலிருந்து பொன்னையும், அரிய அணிகளையும் உந்தி ஆரவாரம் செய்து அலை வீசி வரும் காவிரிக் கரையிலுள்ள திருத்துருத்தியில் எழுந்தருளும் விருப்புடைய இறைவனே! சொன்னவாற றிதலில் உனக்கு யாம் உணர்த்தும் வன்மை உடையோமோ?
2529 அடுத்தடுத்த கத்தியோடு
வன்னிகொன்றை கூவிளம்
தொடுத்துடன் சடைப்பெய்தாய்
துருத்தியாயோர் காலனைக்
கடுத்தடிப் புறத்தினா
னிறத்துதைத்த காரணம்
எடுத்தெடுத் துரைக்குமாறு
வல்லமாகில் நல்லமே.
2.098. 2
சடையில் அகத்திப்பூ, வன்னி, வில்வம் கொன்றை மலர் என்பவற்றை அடுத்தடுத்துத் தொடுத்தணிந்தவனே! திருத்துருத்தியில் எழுந்தருளியவனே! நீ காலனைச் சினந்து திருவடியால் அவன் மார்பில் உதைத்தழித்த காரணத்தைப் பலகாலும் எடுத்து எடுத்து உரைத்தலில் வல்லமை உடையோமாயின் நாங்கள் நன்மை உறுவோம்.
2530 கங்குல்கொண்ட திங்களோடு
கங்கைதங்கு செஞ்சடைச்
சங்கிலங்கு வெண்குழை
சரிந்திலங்கு காதினாய்
பொங்கிலங்கு பூணநூ
லுருத்திரா துருத்திபுக்
கெங்குநின் னிடங்களா
அடங்கிவாழ்வ தென்கொலோ.
2.098. 3
கங்குலில் ஒளி வீசுதலைக் கொண்ட திங்களோடு கங்கையும் தங்கிய செஞ்சடையையும், சங்கால் இயன்று விளங்கும் வெண்குழை தொங்கும் காதினையும், பொங்கி விளங்கும் பூணநூலையும் உடைய உருத்திரமூர்த்தியே! எல்லா இடங்களும் உன் இடங்களாக இருக்க, திருத்துருத்தி என்ற இத்தலத்தில் புக்கு அடங்கி வாழ்தற்குக் காரணம் யாதோ?
2531 கருத்தினாலொர் காணியில்
விருத்தியில்லை தொண்டர்தம்
அருத்தியாற்றம் மல்லல்சொல்லி
யையமேற்ப தன்றியும்
ஒருத்திபால் பொருத்திவைத்
துடம்புவிட்டு யோகியாய்
இருத்திநீ துருத்திபுக்
கிதென்னமாய மென்பதே.
2.098.4
கருதுமிடத்து ஒரு காணி நிலத்தில் பயிரிட்டு வரும் வருவாயும் உனக்கு இல்லை. தொண்டர்கள்மேல் உள்ள ஆசையால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்கின்ற தன்றி, ஒரு பெண்ணைத் தன் உடம்பின் ஒரு பாகத்தே கொண்டிருந்தும் உடம்பின்மேல் உளதாம் பற்றை விடுத்து யோகியாய் இருந்து திருத்துருத்தியில் புகுந்து எழுந்தருளி யிருத்தற்குரிய மாயம் யாதோ?
2532 துறக்குமா சொலப்படாய்
துருத்தியாய் திருந்தடி
மறக்குமா றிலாதவென்னை
மையல்செய்திம் மண்ணின்மேல்
பிறக்குமாறு காட்டினாய்
பிணிப்படு முடம்புவிட்
டிறக்குமாறு காட்டினாய்க்
கிழுக்குகின்ற தென்னையே.
2.098. 5
திருத்துருத்தியில் எழுந்தருளிய இறைவனே! பகலில் யோகியாய்த் திருத்துருத்தியிலும், இரவில் மணவாளக் கோலத்தோடு வேள்விக் குடியிலும் எழுந்தருளியுள்ள நீ, துறக்கும் உபாயத்தைக் கூறினீர் இல்லை. அழகிய திருவடியின்பத்தில் திளைத்து அதனை மறவாதிருந்த என்னை மயக்குறுத்திடும் மண்ணுலகில் பிறக்குமாறும், நோய்க்கு இடமான இவ்வுடம்பை விடுத்து இறக்குமாறும் செய்தருளினாய். யான் உனக்குச் செய்த இழுக்கு யாதோ? சொல்வாயாக.
2533 வெயிற்கெதிர்ந் திடங்கொடா
தகங்குளிர்ந்த பைம்பொழில்
துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள்
மல்குதண் துருத்தியாய்
மயிற்கெதிர்ந் தணங்குசாயன்
மாதொர்பாக மாகமூ
வெயிற்கெதிர்ந் தொரம்பினால்
எரித்தவில்லி யல்லையே.
2.098. 6
வெயிலை எதிர்த்து அதற்கு இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம் பொழிலில் துயிலாதனவாய்ப் பறவை இனங்கள் நிறைந்து வாழும் தண்மையான திருத்துருத்தியில் எழுந்தருளிய இறைவனே! மயிலொடு மாறுபட்டு அழகால் அதனை வருந்தச் செய்யும் அழகினை உடைய உமைபாகராக மூவெயில்களை எதிர்த்து அவற்றை ஓரம்பினால் எரித்த சிறந்த வில்லாளி யல்லையோ நீ!
2534 கணிச்சியம் படைச்செல்வா
கழிந்தவர்க் கொழிந்தசீர்
துணிச்சிரக் கிரந்தையாய்
கரந்தையாய் துருத்தியாய்
அணிப்படுந் தனிப்பிறைப்
பனிக்கதிர்க் கவாவுநல்
மணிப்படும்பை நாகநீ
மகிழ்ந்தவண்ண லல்லையே.
2.098. 7
மழுப்படையினை உடைய செல்வரே! பல்லூழிக் காலங்களில் அழிந்தொழிந்த சிறப்பினராகிய திருமால் பிரமர்களுடைய தலையோடுகளைக் கட்டிய முடிச்சுடையவரே! கரந்தை சூடியவரே, திருத்துருத்தியில் உறைபவரே! அழகியதும் ஒப்பற்றதுமான இளம்பிறையின் குளிர்ந்த நிலவொளியை அவாவும், நல்ல மணியை உடைய படப்பாம்பை ஒருங்கே அணிந்த தலைமையாளர் அல்லிரோ நீர்.
2535 சுடப்பொடிந் துடம்பிழந்
தநங்கனாய மன்மதன்
இடர்ப்படக் கடந்திடந்
துருத்தியாக வெண்ணினாய்
கடற்படை யுடையவக்
கடலிலங்கை மன்னனை
அடற்பட வடுக்கலில்
லடர்த்தவண்ண லல்லையே.
2.098. 8
நெற்றிவிழி சுடுதலால் பொடியாய் உடம்பு அழிந்த மன்மதன் இடர்ப்பட, அவனை வென்று தமக்கு இடமாகத் திருத்துருத்தியைக் கொண்டவரே! கடற்படையை உடைய இலங்கை மன்னன் இராவணன் துன்புறுமாறு மலையின் கீழ் அகப்படுத்தி அடர்த்த தலைமையாளர் அல்லிரோநீர்.
2536 களங்குளிர்ந் திலங்குபோது
காதலானு மாலுமாய்
வளங்கிளம்பொ னங்கழல்
வணங்கிவந்து காண்கிலார்
துளங்கிளம்பி றைச்செனித்
துருத்தியாய் திருந்தடி
உளங்குளிர்ந்த போதெலா
முகந்துகந் துரைப்பனே.
2.098.9
தேன் உடையதாய்க் குளிர்ந்து இலங்கும் தாமரைப் போதில் எழுந்தருளிய பிரமனும் திருமாலும் வந்து வணங்கி அழகிய திருவடிகளைக் காணாதவராயினர். ஒளி துளங்கும் இளம்பிறையைச் சூடிய சென்னியினராய திருத்துருத்தி இறைவரே! உம் திருவடிப் பெருமைகளை உளம் குளிர்ந்த போதெல்லாம் உவந்து உரைத்து மகிழ்கிறேன்.
2537 புத்தர்தத் துவமிலாச்
சமணுரைத்த பொய்தனை
உத்தம மெனக்கொளா
துகந்தெழுந்து வண்டினம்
துத்தநின்று பண்செயுஞ்
சூழ்பொழில் துருத்தியெம்
பித்தர்பித்த னைத்தொழப்
பிறப்பறுத்தல் பெற்றியே.
2.098. 10
புத்தர்களும் தத்துவங்கள் அற்ற நெறியாகிய சமணமதத்தினரும் உரைத்த பொய்களை உண்மை எனக் கொள்ளாது, வண்டினங்கள் மகிழ்வோடு எழுந்து, துத்தம் என்னும் சுருதியில் பாடும் பைம்பொழில் சூழ்ந்த திருத்துருத்தியில் விளங்கும் பக்தர்களிடம் அன்பு செய்யும் பரமனைத் தொழப் பிறப்பறுத்தல் பயனாய் விளையும்.
2538 கற்றுமுற்றி னார்தொழுங்
கழுமலத் தருந்தமிழ்
சுற்றுமுற்று மாயினா
னவன்பகர்ந்த சொற்களால்
பெற்றமொன் றுயர்த்தவன்
பெருந்துருத்தி பேணவே
குற்றமுற்று மின்மையிற்
குணங்கள்வந்து கூடுமே.
2.098. 11
கல்விகற்று நிறைவு பெற்றவர்களால் தொழப் பெறும் கழுமலத்துள் தோன்றிய, அருந்தமிழை முற்றிலுமாக அறிந்துணர்ந்த ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களால் விடைக்கொடியை ஏந்திய சிவபிரானது திருத்துருத்தியை விரும்பி வழிபடுவோர் குற்றமற்றவர் ஆவர். அவரிடம் நற்குணங்கள் வந்து பொருந்தும்.
திருச்சிற்றம்பலம்
2.098.திருத்துருத்தி |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|