|
||||||||
இரண்டாம் திருமுறை-99 |
||||||||
2.099.திருக்கோடிகா
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோடீசுவரர்.
தேவியார் - வடிவாம்பிகையம்மை.
2539 இன்றுநன்று நாளைநன்
றென்றுநின்ற விச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப்
போகவிட்டுப் போதுமின்
மின்றயங்கு சோதியான்
வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான்
கோடிகாவு சேர்மினே.
2.099. 1
இன்றையநாள் நல்லது. நாளைய நாள் நல்லது என்று இச்சையால் காலங் கடத்திப் பெருமானை வழிபடாது அழிந்தொழியும் வாழ்க்கையைப் போக்கி மெய் வாழ்வினை அடைய வாருங்கள். மின்னல் போன்ற ஒளியினனும், வெண்மதி, கங்கை, கொன்றை ஆகியவற்றை முடியில் சூடியவனுமாகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச் சென்றடைவீர்களாக.
2540 அல்லன்மிக்க வாழ்க்கையை
யாதரித் திராதுநீர்
நல்லதோர் நெறியினை
நாடுதுந் நடம்மினோ
வில்லையன்ன வாணுதல்
வெள்வளையொர் பாகமாங்
கொல்லைவெள்ளை யேற்றினான்
கோடிகாவு சேர்மினே.
2.099. 2
அல்லல் மயமான வாழ்க்கையை விரும்பியிராது நீர் நற்கதியை அடையும் நெறியை நாடுதற்குப் புறப்படுவீர்களாக. வில் போன்ற ஒளி பொருந்திய நுதலை உடையவளும், வெண்மையான வளையல்களை அணிந்தவளுமாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, முல்லை நிலத்து வெள்ளை ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானுடைய திருக்கோடிகாவை அடைவீர்களாக.
2541 துக்கமிக்க வாழ்க்கையின்
சோர்வினைத் துறந்துநீர்
தக்கதோர் நெறியினைச்
சார்தல்செய்யப் போதுமின்
அக்கணிந் தரைமிசை
யாறணிந்த சென்னிமேல்
கொக்கிற கணிந்தவன்
கோடிகாவு சேர்மினே.
2.099. 3
துக்கம்மிகுந்த வாழ்க்கையினால் வரும் இளைப்பை நீக்கி, நீர் தக்கதொரு நெறியை அடைய வாருங்கள். அரைமிசை என்பு மாலையை அணிந்தவனாய், கங்கை சூடிய சடைமுடியில் கொக்கிறகு அணிந்துள்ள சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச் சேருங்கள்.
2542 பண்டுசெய்த வல்வினை
பற்றறக் கெடும்வகை
உண்டுமக் குரைப்பனா
னொல்லை நீ ரெழுமினோ
மண்டுகங்கை செஞ்சடை
வைத்துமாதொர் பாகமாக்
கொண்டுகந்த மார்பினான்
கோடிகாவு சேர்மினே.
2.099. 4
முற்பிறவிகளில் செய்த வலிய வினைகள் முழுவதும் அழிந்தொழிதற்குரிய வழி ஒன்றுண்டு அதனை உங்கட்குக் கூறுகிறேன். விரைந்து நீங்கள் புறப்படுவீர்களாக. செஞ்சடையில் கங்கையைச் சூடி உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டுள்ள மார்பினனாய சிவபிரானது திருக்கோடிகாவை அடைவீர்களாக.
2543 முன்னைநீர்செய் பாவத்தான்
மூர்த்திபாதஞ் சிந்தியா
தின்னநீரி டும்பையின்
மூழ்கிறீ ரெழும்மினோ
பொன்னைவென்ற கொன்றையான்
பூதம்பாட வாடலான்
கொன்னவிலும் வேலினான்
கோடிகாவு சேர்மினே.
2.099. 5
முற்பிறவியில் நீர், செய்த பாவத்தால் சிவமூர்த்தியின் திருவடிகளை நினையாது இன்னமும் நீங்கள் துன்பங்களில் மூழ்கித் துயருறுகின்றீர்களே, புறப்படுவீர்களாக. பொன்னையும் வென்ற அழகிய கொன்றைசூடியவனாய்ப் பூதங்கள் பாட ஆடும் இயல்பினனும், கொல்லும் தன்மை வாய்ந்த வேலிகனை உடையவனும் ஆகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகாவை அடைவீர்களாக.
2544 ஏவமிக்க சிந்தையோ
டின்பமெய்த லாமெனப்
பாவமெத் தனையுநீர்
செய்தொரு பயனிலைக்
காவன்மிக்க மாநகர்
காய்ந்துவெங் கனல்படக்
கோவமிக்க நெற்றியான்
கோடிகாவு சேர்மினே.
2.099. 6
பெருமையற்ற உலகவாழ்க்கையை இன்பம் உடையது என்று நினைத்திருந்து நீர் மாண்பு அற்ற மூப்பினால் வருந்துதற்கு முன்னரே வருவீர்களாக. வெண்மையான என்பு மாலையை அணிகலனாகப் பூண்டு, பொன் போலத் திகழும் சடைமுடியில் வளைந்த வெண்பிறையைச் சூடிய சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக.
2545 ஏணழிந்த வாழ்க்கையை
யின்பமென் றிருந்துநீர்
மாணழிந்த மூப்பினால்
வருந்தன்முன்னம் வம்மினோ
பூணல்வெள் ளெலும்பினான்
பொன்றிகழ் சடைமுடிக்
கோணல்வெண் பிறையினான்
கோடிகாவு சேர்மினே.
2.099. 7
பெருமையற்ற உலக வாழ்க்கையை இன்பம் உடையது என்று நினைத்திருந்து நீர் மாண்பு அற்ற மூப்பினால் வருந்துதற்கு முன்னரே வருவீர்களாக. வெண்மையான என்புமாலையை அணிகலனாகப் பூண்டு, பொன்போலத் திகழும் சடைமுடியில் வளைந்த வெண்பிறையைச் சூடிய சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக.
2546 மற்றிவாழ்க்கை மெய்யெனும்
மனத்தினைத் தவிர்ந்துநீர்
பற்றிவாழ்மின் சேவடி
பணிந்துவந் தெழுமினோ
வெற்றிகொள் தசமுகன்
விறல்கெட விருந்ததோர்
குற்றமில் வரையினான்
கோடிகாவு சேர்மினே.
2.099. 8
இவ்வாழ்க்கையை மெய்யென்று கருதும் எண்ணத்தை விடுத்துச் சிவபிரான் திருவடிகளைப் பணிந்து பற்றி வாழ்வீர்களாக. வெற்றியையே பெற்று வந்த இராவணனின் வலிமையை அழித்த குற்றமற்ற கயிலை மலைக்கு உரியவனாகிய அச்சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக.
2547 மங்குநோ யுறும்பிணி
மாயும்வண்ணஞ் சொல்லுவன்
செங்கண்மால் திசைமுகன்
சென்றளந்துங் காண்கிலா
வெங்கண்மால் விடையுடை
வேதியன் விரும்புமூர்
கொங்குலாம் வளம்பொழிற்
கோடிகாவு சேர்மினே.
2.099. 9
வாழ்வை மங்கச் செய்யும் நோய்க்குக் காரணமான வினைகள் அழிதற்குரிய உபாயம் ஒன்றைச் சொல்லுவேன் கேளுங்கள். செங்கண் மாலும் நான்முகனும் சென்று அளந்தும் காணுதற்கியலாத பெருமையனும், வெவ்விய கண்களைக் கொண்ட பெரிய விடையூர்தியை உடைய வேதியனுமாகிய சிவபிரான் விரும்பும் தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த திருக்கோடிகாவை அடைவீர்களாக.
2548 தட்டொடு தழைமயிற்
பீலிகொள் சமணரும்
பட்டுடை விரிதுகிலி
னார்கள்சொற் பயனிலை
விட்டபுன் சடையினான்
மேதகும் முழவொடும்
கொட்டமைந்த வாடலான்
கோடிகாவு சேர்மினே.
2.099. 10
தட்டோடு, தழைத்த மயிற் பீலியை ஏந்தித்திரியும் சமணர்களும், பட்டால் ஆகிய விரிந்த ஆடையைப் போர்த்த புத்தர்களும் சொல்வன பயனற்ற சொற்களாகும். தொங்க விட்ட சடையினனாய் மேதகு முழவு கொட்ட ஆடுபவனாய் விளங்கும் சிவபிரானின் கோடிகாவை அடைவீர்களாக.
2549 கொந்தணி குளிர்பொழிற்
கோடிகாவு மேவிய
செந்தழ லுருவனைச்
சீர்மிகு திறலுடை
அந்தணர் புகலியு
ளாயகேள்வி ஞானசம்
பந்தன தமிழ்வல்லார்
பாவமான பாறுமே.
2.099.11
பூங்கொத்துக்களை உடைய குளிர்ந்த பொழில் சூழ்ந்த திருக்கோடிகாவில் எழுந்தருளிய செந்தழல் உருவனை, சிறப்புமிக்க திறனுடைய அந்தணர்கள் வாழும் புகலியுள் தோன்றிய வேதங்களில் வல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தமிழை வல்லவர்களின் பாவங்கள் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
2.099.திருக்கோடிகா |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|