|
||||||||
இரண்டாம் திருமுறை-100 |
||||||||
2.100.திருக்கோவலூர் வீரட்டம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - சிவானந்தவல்லியம்மை.
2550 படைகொள்கூற்றம் வந்துமெய்ப்
பாசம்விட்ட போதின்கண்
இடைகொள்வா ரெமக்கிலை
யெழுகபோது நெஞ்சமே
குடைகொள்வேந்தன் மூதாதை
குழகன்கோவ லூர்தனுள்
விடையதேறுங் கொடியினான்
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 1
படைகளைக் கொண்ட கூற்றுவன் வந்து உடலைப் பிரித்து உயிரைக் கொள்வதற்குப் பாசக்கயிற்றை வீசும் நேரத்தில் இடையில் வந்து தடுப்பார் எவரும் எமக்கு இல்லை. நெஞ்சே! எழுக. என்னோடு போதுக. வெண்கொற்றக்குடையைக் கொண்ட மலையமானின் முதிய தாதையாக விளங்கும் குழகனும் விடைக் கொடியினனுமாய்க் கோவலூரில் விளங்கும் சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம்.
2551 கரவலாளர் தம்மனைக்
கடைகடோறுங் கானிமிர்த்
திரவலாழி நெஞ்சமே
யினியதெய்த வேண்டிநீ
குரவமேறி வண்டினங்
குழலொடியாழ்செய் கோவலூர்
விரவிநாறு கொன்றையான்
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 2
நெஞ்சே! கரப்பவர் இல்லங்கள் தோறும் சென்று இரவாதே. இனியதை நீ எய்த வேண்டின், வண்டினங்கள் குரா மரங்களில் ஏறிக் குழலும் யாழும் போல ஒலிசெய்யும் கோவலூரில் மணம் விரவி வீசும் கொன்றைமாலையை அணிந்த சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம்.
2552 உள்ளத்தீரே போதுமின்
னுறுதியாவ தறிதிரேல்
அள்ளற்சேற்றிற் காலிட்டிங்
கவலத்துள் ளழுந்தாதே
கொள்ளப்பாடு கீதத்தான்
குழகன்கோவ லூர்தனுள்
வெள்ளந்தாங்கு சடையினான்
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 3
நல்ல உள்ளம் உடையவர்களே! உயிருக்கு உறுதியானதை நீர் அறிய விரும்புவீராயின் நரகத்தில் அழுந்தித் துயருறாமல், செவி ஏற்கும் பாடல்களைப் பாடுபவனும் குழகனும் கோவலூரில் கங்கை தங்கிய சடையினனாக விளங்குவோனும் ஆகிய பெருமான் உறையும் வீரட்டானத்தை அடைவோம். வருக.
2553 கனைகொளிருமல் சூலைநோய்
கம்பதாளி குன்மமும்
இனையபலவு மூப்பினோ
டெய்திவந்து நலியாமுன்
பனைகளுலவு பைம்பொழிற்
பழனஞ்சூழ்ந்த கோவலூர்
வினையைவென்ற வேடத்தான்
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 4
மூப்புக் காலத்தில் கணைத்தலைக் கொண்ட இருமல், சூலை நோய், நடுக்கம், குன்மம் முதலியன வந்து நலிவு செய்தற்கு முன்னே, பனைகள் மிக்க பசிய பொழில் வயல் ஆகியன சூழ்ந்த கோவலூரில், இருவினைகளும் அற்ற வடிவினனாய் விளங்கும் சிவபிரானது வீரட்டானத்தை அடைவோமாக.
2554 உளங்கொள்போக முய்த்திடா
ருடம்பிழந்த போதின்கண்
துளங்கிநின்று நாடொறுந்
துயரலாழி நெஞ்சமே
வளங்கொள்பெண்ணை வந்துலா
வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விளங்குகோவ ணத்தினான்
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 5
ஆழமான சிந்தனையை உடைய நெஞ்சமே! உடலற்ற காலத்தில் மனத்தால் விரும்பியவற்றை எய்துதல் இயலாது. நாள் தோறும் துளங்கித் துயருறாதே. வளமான பெண்ணையாறு வந்து பாயும் வயல்கள் சூழ்ந்த கோவலூரில், விளங்கிய கோவணத்தினனாய்ச் சிவபிரான் வீற்றிருந்தருளும் வீரட்டானத்தை அடைவோம்.
2555 கேடுமூப்புச் சாக்காடு
கெழுமிவந்து நாடொறும்
ஆடுபோல நரைகளா
யாக்கைபோக்க தன்றியும்
கூடிநின்று பைம்பொழிற்
குழகன்கோவ லூர்தனுள்
வீடுகாட்டு நெறியினான்
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 6
நம் உடல் நரையுடையதாய், ஆடுபோல அலைதலால் கேடு, முதுமை, சாக்காடு ஆகியன நெருங்கி வந்து அழிதலை உடையது. பசுமையான பொழில்கள் செறிந்து நின்று அணி செய்யும் கோவலூரில் விளங்கும் குழகனும், வீடுகாட்டும் நெறியினனும் ஆகிய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம். நெஞ்சே! வருக.
2556 உரையும்பாட்டுந் தளர்வெய்தி
யுடம்புமூத்த போதின்கண்
நரையுந்திரையுங் கண்டௌகி
நகுவர் நமர்க ளாதலால்
வரைகொள்பெண்ணை வந்துலா
வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விரைகொள்சீர்வெண் ணீற்றினான்
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 7
பேச்சும், பாட்டும் தளர்ந்து நம் உடல் மூத்த போதில் நம் உறவினர் நரைதிரை கண்டு இகழ்ந்து சிரிப்பர். ஆதலால், மலையிலிருந்து இழிந்து வரும் பெண்ணையாறு பாய்ந்துலாவும் வயல்கள் சூழ்ந்த கோவலூரில் மணம் கமழும் சிறப்புமிக்க வெண்ணீறணிந்தவனாய் விளங்கும் சிவபிரானின் வீரட்டானத்தைச் சென்றடைவோம்.
2557 ஏதமிக்க மூப்பினோ
டிருமலீளை யென்றிவை
ஊதலாக்கை யோம்புவீ
ருறுதியாவ தறிதிரேல்
போதில்வண்டு பண்செயும்
பூந்தண்கோவலூதனுள்
வேதமோது நெறியினான்
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 8
துன்பம்மிக்க மூப்போடு இருமல் ஈளை ஆகியவற்றுக்கு இடனாய பருத்த உடலைப் பேணித் திரிபவர்களே! உயிர்க்கு உறுதியாவதை அறிவீராயின், மலர்களில் வண்டுகள் பண் பாடும் அழகிய கோவலூரில், வேதங்களை ஓதும் நெறியினன் ஆகிய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம். வருக.
2558 ஆறுபட்ட புன்சடை
அழகனாயி ழைக்கொரு
கூறுபட்ட மேனியான்
குழகன்கோவ லூர்தனுள்
நீறுபட்ட கோலத்தான்
நீலகண்ட னிருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான்
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 9
கங்கை தங்கிய மென்மையான சடைகளை உடைய அழகனும், உமையம்மைக்குத் தன் மேனியில் ஒரு கூற்றை அளித்தவனும் ஆகிய குழகன் விளங்கும் கோவலூரில் நீறணிந்த கோலத்தினனாய், நீலகண்டனாய், திருமால் பிரமர்க்கு வேறான சிந்தையனாய் விளங்கும் சிவபிரானின் வீரட்டானத்தை அடைவோம் வருக.
2559 குறிகொளாழி நெஞ்சமே
கூறைதுவரிட் டார்களும்
அறிவிலாத வமணர்சொல்
லவத்தமாவ தறிதிரேல்
பொறிகொள்வண்டு பண்செயும்
பூந்தண்கோவ லூர்தனுள்
வெறிகொள்கங்கை தாங்கினான்
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 10
ஆழமாகப்பலவற்றை எண்ணும் நெஞ்சமே! துவரூட்டிய ஆடையினர்களாகிய புத்தர்களும் அறிவிலாத சமணர்களும் கூறும் சொற்கள் பயனற்றவை ஆதலை உணர்வாயேயானால், பொறிகளை உடைய வண்டுகள் இசைபாடும் அழகிய கோவலூரில் மணம் கமழும் கங்கையை அணிந்த சடையினனாகிய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம் வருக.
2560 கழியொடுலவு கானல்சூழ்
காழிஞான சம்பந்தன்
பழிகள்தீரச் சொன்னசொற்
பாவநாச மாதலால்
அழிவிலீர்கொண் டேத்துமின்
அந்தண்கோவ லூர்தனுள்
விழிகொள்பூதப் படையினான்
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 11
வீணே அழிதல் இல்லாதவர்களே! உப்பங்கழிகளோடு கூடிய கடற்கரைச் சோலைகள் சூழ்ந்த காழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், பழிகள் நீங்கப்பாடிய இப்பதிகச் செஞ்சொல், பாவங்களை நீக்கும் தன்மையன ஆதலின் இவற்றை ஓதி வழிபடுங்கள். அழகிய தண்ணிய கோவலூரில் பெரிய விழிகளைக் கொண்ட பூதப்படைகளை உடைய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம். வருக.
திருச்சிற்றம்பலம்
2.100.திருக்கோவலூர் வீரட்டம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|