|
||||||||
இரண்டாம் திருமுறை-102 |
||||||||
2.102.திருச்சிரபுரம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
சிரபுரமென்பதும் சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
2572 அன்ன மென்னடை யரிவையோ டினிதுறை
யமரர்தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர்
வைத்தவர் வேதந்தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற்
சிரபுரத் தார்சீரார்
பொன்னின் மாமல ரடிதொழு மடியவர்
வினையொடும் பொருந்தாரே.
2.102. 1
அன்னம் போன்ற மெல்லிய நடையினை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் அமரர் தலைவரும், ஒளி விடும் செஞ்சடையில் வெள்ளெருக்கமலர் சூடியவரும். வேதங்களின் முடிபாய் விளங்கும் உபநிடதங்கள் வழியே நன் பொருள்களை அருளியவரும் பெரியமதில்களால் சூழப்பட்ட சிரபுரத்தில் எழுந்தருளியிருப்பவரும் ஆகிய புகழாளர்தம் அழகிய மலர் போன்ற திருவடிகளைத் தொழுது எழும் அடியவர் வினையொடும் பொருந்தார்.
2573 கோல மாகரி யுரித்தவ ராவொடு
மேனக்கொம் பிளவாமை
சாலப் பூண்டுதண் மதியது சூடிய
சங்கர னார்தம்மைப்
போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர்
பொருகடல் விடமுண்ட
நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந்
தொழவினை நில்லாவே.
2.102. 2
அழகிய பெரிய யானையை உரித்தவரும், பாம்பு, பன்றிப்பல், இளஆமையோடு இவற்றைமிகுதியாகப் புனைந்து தண்மதி சூடிய சங்கரனாரும், தம்மைப் போலத் தம் அடியார்க்கும் இன்பம் அளிப்பவரும், பெரிய கடலிடைத் தோன்றிய விடத்தை உண்ட நீலகண்டரும் ஆகிய சிரபுரத்து இறைவனைத் தொழ வினைகள் நாசமாகும்.
2574 மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத்
தவங்கெட மதித்தன்று
கானத் தேதிரி வேடனா யமர்செயக்
கண்டருள் புரிந்தார்பூந்
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ்
சிரபுரத் துறையெங்கள்
கோனைக் கும்பிடு மடியரைக் கொடுவினை
குற்றங்கள் குறுகாவே.
2.102. 3
பெருமைமிக்க தோள்வலிமையோடு வில்திறனில் சிறந்திருந்த அருச்சுனனை அவன்தவம் கெடுமாறு செய்து அவனை மதித்துக் கானகத்தில் ஒரு வேடனாய்ச் சென்று அவனை எதிர்த்து அமர் செய்யும் அவன் ஆற்றலைக் கண்டு அருள்புரிந்தவரும், வண்டுகள் பூந்தேனைத் தேர்ந்து திரியும் மலர்மனம் சூழ்ந்த சிரபுரத்துறை எங்கள் தலைவரும் ஆகிய பெருமானாரைக் கும்பிடும் அடியவரைக் கொடுவினைக்குற்றங்கள் குறுகா.
2575 மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக்
காலனை யுதைசெய்தார்
பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப்
பிணக்கறுத் தருள்செய்வார்
வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச்
சிரபுரத் தமர்கின்ற
ஆணிப் பொன்னினை யடிதொழு மடியவர்க்
கருவினை யடையாவே.
2.102. 4
மார்க்கண்டேயர் உயிரை மதித்துத் தானே கவர வந்த தென்திசைக்கோனாகிய காலனை உதைத்தவரும், தம்மை விரும்பி நினையும் மெய்யடியார் படும் பெருந்துயர்ப்பிணக்கை நீக்கி அருள் புரிபவரும், சடையில் வெண்பிறை அணிந்தவரும் ஆகிய விரிந்த புகழை உடைய சிரபுரத்தில் அமர்கின்ற மாற்றுயர்ந்த ஆணிப்பொன் போன்றவரை அடிதொழும் அடியவர்களை அருவினைகள் அடையா.
2576 பாரு நீரொடு பல்கதி ரிரவியும்
பனிமதி யாகாசம்
ஓரும் வாயுவு மொண்கனல் வேள்வியிற்
றலைவனு மாய்நின்றார்
சேருஞ் சந்தன மகிலொடு வந்திழி
செழும்புனற் கோட்டாறு
வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழு
மடியவர் வருந்தாரே.
2.102. 5
மண், நீர், பல கதிர்களை உடைய இரவி, தண்மதி, ஆகாயம், வாயு, ஒளிபொருந்திய கனல் வேள்வித் தலைவனாகிய உயிர் ஆகிய அட்டமூர்த்தங்களாய் விளங்குபவர் எழுந்தருளிய, ஆற்றுநீர் கொணரும் சந்தனம் அகில் ஆகியவற்றோடு வந்திழியும் செழும்புனலை உடைய கோட்டாறுபாயும் தண்புனல் சூழ்ந்த சிரபுரத்தைத் தொழும் அடியவர்கள் வருந்தார்.
2577 ஊழி யந்தத்தி லொலிகட லோட்டந்திவ்
வுலகங்க ளவைமூட
ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக
வந்தரத் துயர்ந்தார்தாம்
யாழி னேர்மொழி யேழையோ டினிதுறை
யின்பனெம் பெருமானார்
வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ
வல்வினை யடையாவே.
2.102. 6
ஊழி முடிவில் ஒலிக்கும் கடல்அலைகள் ஓடிவந்து உலகங்களை மூடிய காலத்தில் அமரர்கள் ஓடிவந்து “அருட்கடலே! எந்தையே” என்று சரண்புக அதுபோது ஊழி வெள்ளத்தில் தோணிபுரத்தை மிதக்கச் செய்து அமரரைக்காத்தருளிய, யாழ்போலும் மொழியினை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் இன்பனும் எம்பெருமானும் ஆகிய சிவபிரானின் மாநகராகிய சிரபுரம் தொழுதெழ வல்வினைகள் அடையா.
2578 பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெயப்
பிணமிடு சுடுகாட்டில்
வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநட
மாடும்வித் தகனாரொண்
சாய்க டான்மிக வுடையதண் மறையவர்
தகுசிர புரத்தார்தாந்
தாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத்
தொழுமவர் தளராரே.
2.102. 7
பேய்கள் பாடவும், பலபூதங்கள் துதிக்கவும், பிணங்கள் எரிக்கும் சுடுகாட்டில், மூங்கில் போலும் தோளினை உடைய காளி நாண மாநடம் ஆடும் வித்தகனாரும் புகழ்மிகவுடைய மறையவர் வாழும் தக்க சிரபுரத்தில் உறைபவரும், பல்வகை உயிர்கட்கும் அவ்வற்றிற்குரிய தாய்களாக விளங்குபவரும் ஆகிய சிவபிரானைத் தொழுபவர் தளர்ச்சியுறார்.
2579 இலங்கு பூண்வரை மார்புடை யிராவண
னெழில்கொள்வெற் பெடுத்தன்று
கலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி
நெரியவைத் தருள்செய்தார்
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றன்மன்
றதனிடைப் புகுந்தாருங்
குலங்கொண் மாமறை யவர்சிர புரந்தொழு
தெழவினை குறுகாவே.
2.102. 8
விளங்கிய அணிகலன்களைப் பூண்டவனாய் மலைபோலும் மார்பினனாய் விளங்கும் இராவணன் அழகியகயிலை மலையை நிலைகுலையச் செய்து பெயர்த்தபோது அதனைக் கண்டு தம் திருவடிவிரலால் நெரியச் செய்து பின் அவன் தன் பிழைக்கு வருந்திய போது அருள்செய்தவர் ஆகிய சிவபெருமான் வீற்றிருப்பதும் வயல்களில் முளைத்த செங்கழுநீர் மலர் மணத்துடன் தென்றல் மன்றினிடைப்புகுந்து இளைப்பாற்றும் சிறப்புடையதும் உயர்குலத்தில் தோன்றிய மறையவர் வாழ்வதுமான சிரபுரத்தைத் தொழ வினைகள் குறுகா.
2580 வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன்
மாயனென் றிவரன்று
கண்டு கொள்ளவோ ரேனமோ டன்னமாய்க்
கிளறியும் பறந்துந்தாம்
பண்டு கண்டது காணவே நீண்டவெம்
பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ
வினையவை கூடாவே.
2.102. 9
வண்டுகள் மொய்க்கும் தாமரைமலர்மிசை விளங்கும் நான்முகனும் திருமாலும் ஆகிய இருவரும் சிவபிரானைக் கண்டறியும் முயற்சியில் முறையே அன்னமாகவும் பன்றியாகவும் பறந்தும் கிளறியும் தேடியபோது அவர்கள் முன்பு கண்ட அத்துணை அளவே காணுமாறு அழலுருவாய் நீண்ட எம் பசுபதியும், பரமேட்டியும் ஆகிய சிவபிரான் விளங்கும் செல்வவளம் உடைய சிரபுரம் தொழுதுஎழ வினைகள் கூடா.
2581 பறித்த புன்றலைக் குண்டிகைச் சமணரும்
பார்மிசைத் துவர்தோய்ந்த
செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத்
தேவர்கள் பெருமானார்
முறித்து மேதிகள் கரும்புதின் றாவியின்
மூழ்கிட விளவாளை
வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை
விட்டிடு மிகத்தானே.
2.102. 10
மயிர் பறித்த புன்தலையையும் குண்டிகை ஏந்திய கையையும் உடைய சமணரும், உலகில் துவர் தோய்ந்த சீவரம் என்னும் ஆடையை அணிந்த தேரரும், அறியமுடியாத தேவர் தலைவர் எழுந்தருளிய, எருமைகள் கரும்பை முறித்துத்தின்று குளங்களில் மூழ்க அதனைக்கண்டு அங்குள்ள இள வாளைகள் வெறித்துப்பாயும் வயல்கள் சூழ்ந்த சிரபுரம் தொழ மிகுதியான வினைகள் நீங்கும்.
2582 பரசு பாணியைப் பத்தர்க ளத்தனைப்
பையர வோடக்கு
நிரைசெய் பூண்டிரு மார்புடை நிமலனை
நித்திலப் பெருந்தொத்தை
விரைசெய் பூம்பொழிற் சிரபுரத் தண்ணலை
விண்ணவர் பெருமானைப்
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர்
பரமனைப் பணிவாரே.
2.102.11
மழுவேந்திய கையனை, பக்தர்கள் தலைவனை, படப்பாம்பு, என்புமாலை ஆகியன அணிந்த அழகிய மார்புடைய நிமலனை, முத்துக்களின் கொத்தாக விளங்குவோனை, மணம் தரும் மலர்களை உடைய பொழில் சூழ்ந்த சிரபுரத்து அண்ணலை, தேவர் பெருமானைப் பரவிய ஞானசம்பந்தனின் செந்தமிழ்ப்பாடல்கள் பத்தையும் வல்லவர் பரமனைப்பணிபவர் ஆவார்.
திருச்சிற்றம்பலம்
2.102.திருச்சிரபுரம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|