|
||||||||
முதல் திருமுறை-130 |
||||||||
1.130.திருவையாறு
பண் - மேகராகக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர்.
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
1394 புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
யறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக வஞ்சேலென்
றருள்செய்வா னமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட
முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி
முகில்பார்க்குந் திருவையாறே.
1.130.1
ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து, கபம் மேற்பட மனம் சுழன்று வருந்தும் இறுதிக் காலத்து, 'அஞ்சேல் என்றுரைத்து அருள் செய்பவனாகிய சிவபிரான் அமரும் கோயிலை உடையது, நடனக்கலையில் வெற்றியுற்ற பெண்கள் நடனம் ஆட, அவ்வாடலுக்கேற்ற கூத்தொலிகளை எழுப்பும் முழவுகள் அதிர, அவற்றைக் கண்டு அஞ்சிய சிலமந்திகள் வானத்தில் கேட்கும் இடியோசை என்றஞ்சி மனம் சுழன்று மரங்களில் ஏறி மேகங்களைப் பார்க்கும் திருவையாறாகும்.
1395 விடலேறு படநாக மரைக்கசைத்து
வெற்பரையன் பாவையோடும்
அடலேறொன் றதுவேறி யஞ்சொலீர்
பலியென்னு மடிகள்கோயில்
கடலேறித் திரைமோதிக் காவிரியி
னுடன்வந்து கங்குல்வைகித்
திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங்
கீன்றலைக்குந் திருவையாறே.
1.130.2
கொல்லுதலாகிய குற்றம் பொருந்திய படத்தினையுடைய நாகத்தை இடையிற் கட்டி, மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு வலிமை பொருந்திய விடையேற்றின் மேல் ஏறி, அழகிய சொற்களைப் பேசும் மகளிரே! பிச்சையிடுங்கள் என்று கேட்டுச் சென்ற சிவபிரானது கோயிலையுடையது. வளைந்த மூக்கினையுடைய கடற்சங்குகள் கடலினின்றும் அலை வழியாக அதில் பாயும் காவிரியோடு வந்து இரவின்கண் திடலில் ஏறித் தங்கிச் செழுமையான முத்துக்களை ஈன்று சஞ்சரிக்கும் திருவையாறாகும்.
1396 கங்காளர் கயிலாய மலையாளர்
கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர்
விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழினுழைந்து கூர்வாயா
லிறகுலர்த்திக் கூதனீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கான
லிரைதேருந் திருவையாறே.
1.130.3
சிறந்த பிரமன், திருமால் ஆகியோரின் முழு எலும்புக்கூட்டை அணிந்தவரும், கயிலாய மலையில் உறைபவரும், கானப்பேர் என்னும் தலத்தில் எழுந்தருளியவரும், மங்கை பங்கரும் முத்தலைச் சூலப்படை ஏந்தியவரும், விடை ஊர்தியை உடையவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய கோயிலை உடையது, சிவந்த கால்களையுடைய வெண்ணிறக் குருகுகள் தேன் நிறைந்த சோலைகளில் நுழைந்து கூரிய தம் அலகுகளால் தம் இறகுகளைக் கோதிக் குளிர் நீங்கிப் பசுமையான சோலைகளில் தமக்கு வேண்டும் இரைகளைத் தேடும் திருவையாறாகும்.
1397 ஊன்பாயு முடைதலைகொண் டூருரின்
பலிக்குழல்வா ருமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார்
தழலுருவர் தங்குங்கோயில்
மான்பாய வயலருகே மரமேறி
மந்திபாய் மடுக்கள்தோறும்
தேன்பாய மீன்பாயச் செழுங்கமல
மொட்டலருந் திருவையாறே.
1.130.4
புலால் பொருந்தியதாய், முடைநாற்றமுடைத்தாய் உள்ள தலையோட்டைக் கையில் ஏந்தி, ஊர்கள்தோறும் பலியேற்று உழல்பவரும், உமை பாகரும், பாய்ந்து செல்லும் விடையேற்றை உடையவரும், நன்மைகளைச் செய்வதால் சங்கரன் என்ற பெயரை உடையவரும், தழல் உருவினருமாகிய சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது, மான் துள்ளித் திரிய, வயலருகே உள்ள மரங்களில் ஏறி மந்திகள் பாய்வதால் மடுக்களில் தேன் பாய, அதனால் மீன்கள் துள்ளவும் செழுமையான தாமரை மொட்டுக்கள் அலரவும், விளங்குவதாகிய திருவையாறாகும்.
1398 நீரோடு கூவிளமு நிலாமதியும்
வெள்ளெருக்கு நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த
தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும்
பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடு மரங்கேறிச் சேயிழையார்
நடம்பயிலுந் திருவையாறே.
1.130.5
கங்கைநதி, வில்வம், பிறைமதி, வெள்ளெருக்கு, கொன்றை மலர் நிறைந்த மாலை, குளிர்ந்த கரந்தை ஆகியவற்றைச் சடையின்கண் அணிந்த தத்துவனாகிய சிவபிரான் தங்கியுள்ள கோயிலையுடையது, மேகமண்டலம் வரை உயர்ந்து சென்று வானத்தை அளந்து மணம் பரப்பும் பொழில்கள் சூழ்ந்ததும், மணம் வீசும் வீடுகளை உடைய தேரோடும் வீதிகளில் அரங்குகளில் ஏறி அணிகலன்கள் புனைந்த இளம் பெண்கள் நடனம் ஆடுவதுமாகிய திருவையாறாகும்.
1399 வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு
நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த
புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தார மிசையமைத்துக் காரிகையார்
பண்பாடக் கவினார்வீதித்
தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார்
நடமாடுந் திருவையாறே.
1.130.6
அனைத்துலகங்களுக்கும் வேந்தனாய், விண்ணவர்களுக்கும், மண்ணவர்களுக்கும் வழி காட்டும் வள்ளலாய், மணங்கமழும் கொன்றை மாலையைச் சடையின்மிசை அணிந்தவனாய் புண்ணிய வடிவினனாய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது. மகளிர் காந்தாரப் பண்ணமைத்து இசைபாட அழகிய வீதிகளில் அமைந்த அரங்கங்களில் ஏறி அணிகலன்கள் பூண்ட இளம் பெண்கள் தேம், தாம் என்ற ஒலிக் குறிப்போடு நடனம் ஆடும் திருவையாறாகும்.
1400 நின்றுலா நெடுவிசும்பு னெருக்கிவரு
புரமூன்று நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி
மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச
மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு
கண்வளருந் திருவையாறே.
1.130.7
நீண்ட வானவெளியில் நின்று உலவி, தேவர்கள் வாழ்விடங்களை அழித்துவந்த முப்புரங்களையும், நீண்ட கூரிய அம்பு சென்று உலவும்படி கணை தொடுத்த வில்லாளியும், கயிலைமலை ஆளியுமாகிய சிவபிரான் சேர்ந்துறையும் கோயிலையுடையது, சிறுமலைகளில் குயில்கள் கூவவும், செழுமையான தேன் நிறைந்த மலர்களைத் தீண்டி மணம் மிகுந்து வருவதாகிய தென்றல் காற்று அடிவருடவும், அவற்றால் செழுமையான கரும்புகள் கண் வளரும் வளமுடைய திருவையாறாகும்.
1401 அஞ்சாதே கயிலாய மலையெடுத்த
வரக்கர்கோன் றலைகள்பத்தும்
மஞ்சாடு தோணெரிய வடர்த்தவனுக்
கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாய லிளந்தெங்கின் பழம்வீழ
விளமேதி யிரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல
வயல்படியுந் திருவையாறே.
1.130.8
அஞ்சாமல் கயிலை மலையை எடுத்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் தலைகள் பத்தையும் வலிமை பொருந்திய அவன் தோள்களோடு நெரியுமாறு அடர்த்துப் பின் அவனுக்கு அருள் புரிந்த சிவபிரான் எழுந்தருளிய கோயிலை உடையது. இனிய தோற்றத்தையுடைய இளந்தென்னையில் காய்த்த நெற்று விழ, அதனைக் கண்டு அஞ்சிய எருமை இளங்கன்று அஞ்சி ஓடி செந்நெற்கதிர்களைக் காலால் மிதித்துச் செழுமையான தாமரைகள் களையாகப் பூத்த வயல்களில் படியும் திருவையாறாகும்.
1402 மேலோடி விசும்பணவி வியனிலத்தை
மிகவகழ்ந்து மிக்குநாடும்
மாலோடு நான்முகனு மறியாத
வகைநின்றான் மன்னுங்கோயில்
கோலோடக் கோல்வளையார் கூத்தாடக்
குவிமுலையார் முகத்தினின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார்
நடமாடுந் திருவையாறே.
1.130.9
அன்னமாய் மேலே பறந்து சென்று வானத்தைக் கலந்தும், அகன்ற நிலத்தை ஆழமாக அகழ்ந்தும் முயற்சியோடு தேடிய நான்முகன், திருமால் ஆகியோர் அறிய முடியாதவாறு ஓங்கி நின்ற சிவபிரான் உறையும் கோயிலையுடையது. கூத்தர்கள் கையில் வைத்து ஆட்டும் அபிநயக் கோலுடன் திரண்ட வளையல்களை அணிந்த மகளிர் கூத்தாட, திரண்ட தனங்களையுடைய அச்சேயிழையார் முகத்தில் கண்களாகிய சேல் மீன்கள் பிறழவும், வில் போன்ற புருவங்கள் மேலும் கீழும் செல்லவும், நடனமாடும் திருவையாறாகும்.
1403 குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு
சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே
யாளாமின் மேவித்தொண்டீர்
எண்டோளர் முக்கண்ண ரெம்மீச
ரிறைவரினி தமருங்கோயில்
செண்டாடு புனற்பொன்னிச் செழுமணிகள்
வந்தலைக்குந் திருவையாறே.
1.130.10
இழிசெயல்களில் ஈடுபடுவோராய்ச் சிறிய ஆடையினராய்த் திரியும் சமணர்களும், சாக்கியர்களும் கூறும் நன்மை பயவாத சொற்களையும், வஞ்சனை பொருந்திய உரைகளையும், கேளாமல், தொண்டர்களே! நீவிர் சிவபிரானை அடைந்து அவருக்கு ஆட்படுவீர்களாக. எட்டுத் தோள்களையும், முக்குணங்களையும் உடைய எம் ஈசனாகிய இறைவன் இனிதாக எழுந்தருளியிருக்கும் கோயிலையுடையது, பூக்களைச் செண்டுகள் போல் உருட்டி ஆட்டிக் கொண்டு வரும் நீர் நிறைந்த காவிரி செழுமையான மணிகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் திருவையாறு என்னும் தலமாகும்.
1404 அன்னமலி பொழில்புடைசூ ழையாற்றெம்
பெருமானை யந்தண்காழி
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான
சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையா லிவைபத்து மிசையுங்கா
லீசனடி யேத்துவார்கள்
தன்னிசையோ டமருலகிற் றவநெறிசென்
றெய்துவார் தாழாதன்றே.
1.130.11
அன்னப் பறவைகள் நிறைந்த பொழில்கள் புடைசூழ்ந்து விளங்கும் திருவையாற்றுப் பெருமானை, அழகிய தண்மையான சீகாழிப் பதியில் வாழும் சிறப்பு மிக்க, வேதங்கள் பயிலும் நாவினன் ஆகிய புகழ் வளரும் ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பாடல்களாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதி, ஈசனடியை ஏத்துபவர்கள் புகழோடு தவநெறியின் பயனாக விளங்கும் அமரர் உலகத்தைத் தாழாமல் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
|
||||||||
by Swathi on 30 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|