|
||||||||
முதல் திருமுறை-131 |
||||||||
1.131.திருமுதுகுன்றம்
பண் - மேகராகக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.
சுவாமிபெயர் - பழமலைநாதர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
1405 மெய்த்தாறு சுவையுமே ழிசையுமெண்
குணங்களும் விரும்புநால்வே
தத்தாலு மறிவொண்ணா நடைதௌயப்
பளிங்கேபோ லரிவைபாகம்
ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன்
கருதுமூ ருலவுதெண்ணீர்
முத்தாறு வெதிருதிர நித்திலம்வா
ரிக்கொழிக்கு முதுகுன்றமே.
1.131.1
மெய்யினால் அறியத்தக்கதாகிய ஆறு சுவைகள் ஏழிசைகள், எண் குணங்கள், எல்லோராலும் விரும்பப் பெறும் நான்கு வேதங்கள் ஆகியவற்றால் அறிய ஒண்ணாதவனும், அன்போடு நடத்தலால் தௌயப் பெறுபவனும், பளிங்கு போன்றவனும், உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும், ஆறு சமயங்களாலும் மாறுபாடின்றி ஏற்றுக் கொள்ளப் பெறும் ஒரே தலைவனும் ஆகிய சிவபிரான் விரும்பும் ஊர், தௌந்த நீர் நிறைந்த மணிமுத்தாறு மலையின்கண் உள்ள மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்களை வாரிக் கொணர்ந்து கரையிற் கொழிக்கும் திருமுதுகுன்றமாகும்.
1406 வேரிமிகு குழலியொடு வேடுவனாய்
வெங்கானில் விசயன்மேவு
போரின்மிகு பொறையளந்து பாசுபதம்
புரிந்தளித்த புராணர்கோயில்
காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல
மலருதிர்த்துக் கயமுயங்கி
மூரிவளங் கிளர்தென்றல் திருமுன்றிற்
புகுந்துலவு முதுகுன்றமே.
1.131.2
தேன் மணம் மிகும் கூந்தலையுடைய உமையம்மையோடு வேட்டுவ உருவந்தாங்கி அருச்சுனன் தவம் புரியும் கொடிய கானகத்திற்குச் சென்று அவனோடு போர் உடற்றி அவன் பொறுமையை அளந்து அவனுக்குப் பாசுபதக் கணையை விரும்பி அளித்த பழையோனாகிய சிவபிரான் உறையும் கோயில், மழையால் செழித்த மணமுடைய சோலைகளில் கனிகளையும் பல மலர்களையும் உதிர்த்து, நீர் நிலைகளைப் பொருந்தி வலிய வளமுடைய தென்றல் காற்று அழகிய வீடுகள் தோறும் புகுந்து உலவும் திருமுதுகுன்றமாகும்.
1407 தக்கனது பெருவேள்விச் சந்திரனிந்
திரனெச்ச னருக்கனங்கி
மிக்கவிதா தாவினொடும் விதிவழியே
தண்டித்த விமலர்கோயில்
கொக்கினிய கொழும்வருக்கை கதலிகமு
குயர்தெங்கின் குலைகொள்சோலை
முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா
நீள்வயல்சூழ் முதுகுன்றமே.
1.131.3
தக்கன் செய்த பெருவேள்வியில் சந்திரன், இந்திரன், எச்சன், சூரியன், அனலோன், பிரமன், முதலியவர்களை வீரபத்திரனைக் கொண்டு தண்டித்த விமலனாகிய சிவபெருமான் உறையும் கோயில், இனிய மாங்கனிகள், வளமான பலாக்கனிகள், வாழைக் கனிகள் ஆகிய முக்கனிகளின் சாறு ஒழுகிச் சேறு உலராத நீண்ட வயல்களும் குலைகளையுடைய கமுகு, தென்னை ஆகிய மரங்கள் நிறைந்த சோலைகளும் சூழ்ந்த திருமுதுகுன்றமாகும்.
1408 வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய
விறலழிந்து விண்ணுளோர்கள்
செம்மலரோ னிந்திரன்மால் சென்றிரப்பத்
தேவர்களே தேரதாக
மைம்மருவு மேருவிலு மாசுணநா
ணரியெரிகால் வாளியாக
மும்மதிலு நொடியளவிற் பொடிசெய்த
முதல்வனிட முதுகுன்றமே.
1.131.4
கொடுமை மிகுந்து முப்புரங்களில் வாழும் அவுணர்கள் தீங்கு செய்ய அதனால் தங்கள் வலிமை அழிந்து தேவர்களும், பிரமனும், இந்திரனும், திருமாலும் சென்று தங்களைக் காத்தருளுமாறு வேண்ட, தேவர்களைத் தேராகவும், மேகங்கள் தவழும் உயர்ச்சியையுடைய மேருமலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், திருமால், அனலோன், வாயுவாகிய முத்தேவர்களையும் அம்பாகவும் கொண்டு அவுணர்களின் மும்மதில்களையும் ஒரு நொடிப் பொழுதில் பொடி செய்த தலைவனாகிய சிவபிரானது இடம், திருமுதுகுன்றமாகும்.
1409 இழைமேவு கலையல்கு லேந்திழையா
ளொருபாலா யொருபாலௌகா
துழைமேவு முரியுடுத்த வொருவனிருப்
பிடமென்ப ரும்பரோங்கு
கழைமேவு மடமந்தி மழைகண்டு
மகவினொடும் புகவொண்கல்லின்
முழைமேவு மால்யானை யிரைதேரும்
வளர்சாரன் முதுகுன்றமே.
1.131.5
மேகலை என்னும் அணிகலன் பொருந்திய அல்குலையும், அழகிய முத்துவடம் முதலியன அணிந்த மேனியையும் உடையவளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு தனக்குரியதான ஒரு பாகத்தே மான்தோலை இகழாது உடுத்த ஒப்பற்றவனாகிய சிவபிரானது இருப்பிடம், ஊரின் நடுவே உயர்ந்த மூங்கில்மேல் ஏறி அமர்ந்த மடமந்தி, மழை வருதலைக் கண்டு அஞ்சித் தன் குட்டியோடும் ஒலி சிறந்த மலைக்குகைகளில் ஒடுங்குவதும், பெரிய யானைகள் இரை தேர்ந்து திரிவதும் நிகழும் நீண்ட சாரலையுடைய திருமுதுகுன்றமாகும்.
1410 நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த
நாதனிடம் நன்முத்தாறு
வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு
கரையருகு மறியமோதித்
தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு
நீர்குவளை சாயப்பாய்ந்து
முகையார்செந் தாமரைகண் முகமலர
வயல்தழுவு முதுகுன்றமே.
1.131.6
சிரித்தலைப் பொருந்திய வெண்மையான தலைமாலையை முடியில் அணிந்துள்ள நாதனாகிய சிவபிரானது இடம், நல்ல மணிமுத்தாறு வகை வகையான மலைபடு பொருள்களைக் கொண்டு நெல், கழுநீர், குவளை ஆகியன சாயுமாறு பாய்ந்து வந்து, தாமரை மொட்டுக்கள் முகம் மலரும்படி வயலைச் சென்றடையும் திருமுதுகுன்றமாகும்.
1411 அறங்கிளரு நால்வேத மாலின்கீ
ழிருந்தருளி யமரர்வேண்ட
நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தி
னொன்றறுத்த நிமலர்கோயில்
திறங்கொண்மணித் தரளங்கள் வரத்திரண்டங்
கெழிற்குறவர் சிறுமிமார்கள்
முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி
முத்துலைப்பெய் முதுகுன்றமே.
1.131.7
அறநெறி விளங்கித் தோன்றும் நான்கு வேதங்களை ஆலின்கீழ் இருந்து சனகாதியர்க்கு அருளி, தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, செந்நிறம் விளங்கும் தாமரையில் எழுந்தருளிய பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்த நிமலனாகிய சிவபிரானது கோயில், முற்றிய மாணிக்கங்கள். முத்துக்கள் ஆகியன ஆற்றில் வருதலைக் கண்டு அழகிய குறவர் குடிப் பெண்கள் திரண்டு சென்று அவற்றை முறங்களால் வாரி மணிகளை விலக்கிப் புடைத்து முத்துக்களை அரிசியாக உலையில் பெய்து சிற்றில் இழைத்து விளையாடி மகிழும் திருமுதுகுன்றமாகும்.
1412 கதிரொளிய நெடுமுடிபத் துடையகட
லிலங்கையர்கோன் கண்ணும்வாயும்
பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை
மலையைநிலை பெயர்த்தஞான்று
மதிலளகைக் கிறைமுரல மலரடியொன்
றூன்றிமறை பாடவாங்கே
முதிரொளிய சுடர்நெடுவாண் முன்னீந்தான்
வாய்ந்தபதி முதுகுன்றமே.
1.131.8
கதிரவன் போன்ற ஒளியுடைய நீண்ட மகுடங்களைச் சூடிய பத்துத் தலைகளையுடைய இராவணன் கண்களும், வாயும், ஒளிபரவும் தீ வெளிப்படச் சினங்கொண்டு பெரிய கயிலாய மலையை நிலைபெயர்த்த காலத்து, மதில்கள் சூழ்ந்த அளகாபுரிக்கு இறைவனாகிய குபேரன் மகிழுமாறு, மலர்போன்ற தன் திருவடி ஒன்றை ஊன்றி அவ் இராவணனைத் தண்டித்துப் பின் அவன் மறைபாடித் துதித்த அளவில் அவனுக்கு மிக்க ஒளியுள்ள நீண்ட வாளை முற்படத் தந்த சிவபிரான் எழுந்தருளிய பதி திருமுதுகுன்றமாகும்.
1413 பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும்
பூந்துழாய் புனைந்தமாலும்
ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந்
துறநாடி யுண்மைகாணாத்
தேவாருந் திருவுருவன் சேருமலை
செழுநிலத்தை மூடவந்த
மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ
மேலுயர்ந்த முதுகுன்றமே.
1.131.9
தாமரை மலராகிய அழகிய தவிசின்மிசை விளங்கும் பிரமனும், அழகிய துளசிமாலை அணிந்த திருமாலும், அன்னமாகவும், பன்றியாகவும் உருமாறி வானில் பறந்தும், நிலத்தை அகழ்ந்தும் இடைவிடாது தேடியும் உண்மை காண இயலாத தெய்வ ஒளி பொருந்திய திருவுருவை உடையவனாகிய சிவபிரான் எழுந்தருளிய மலை, ஊழிக் காலத்து உலகத்தை மூடுமாறு முழங்கி வந்த கடல்நீர் கீழ்ப்படத் தான் மேல் உயர்ந்து தோன்றும் திருமுதுகுன்றமாகும்.
1414 மேனியிற்சீ வரத்தாரும் விரிதருதட்
டுடையாரும் விரவலாகா
ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாது
முள்ளுணர்ந்தங் குய்மின்றொண்டீர்
ஞானிகளா யுள்ளார்க ணான்மறையை
முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து
தவம்புரியு முதுகுன்றமே.
1.131.10
உடம்பில் துவராடை புனைந்த புத்த மதத்தினரும், விரிந்த ஓலைத் தடுக்கை உடையாகப் பூண்ட சமணர்களும், நட்புச் செய்து கோடற்கு ஏலாதவராய்த் தங்கள் உடலை வளர்த்தலையே குறிக்கோளாக உடைய ஊனிகளாவர். அவர்கள் சொற்களைக் கேளாது ஞானிகளாக உள்ளவர்களும், நான்மறைகளை உணர்ந்தவர்களும், ஐம்புலன்களை வென்ற மௌனிகளும், முனிவர்களாகிய செல்வர்களும், தனித்திருந்து தவம் புரியும் திருமுதுகுன்றை உள்ளத்தால் உணர்ந்து, தொண்டர்களே! உய்வீர்களாக.
1415 முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யு
முதுகுன்றத் திறையைமூவாப்
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய
கழுமலமே பதியாக்கொண்டு
தழங்கெரிமூன் றோம்புதொழிற் றமிழ்ஞான
சம்பந்தன் சமைத்தபாடல்
வழங்குமிசை கூடும்வகை பாடுமவர்
நீடுலக மாள்வர்தாமே.
1.131.11
ஆரவாரத்தோடு நிறைந்துவரும் மணிமுத்தாறு வலஞ்செய்து இறைஞ்சும் திருமுதுகுன்றத்து இறைவனை, முதுமையுறாததாய்ப் பழமையாகவே பன்னிரு பெயர்களைக் கொண்டுள்ள கழுமலப் பதியில் முத்தீ வேட்கும் தொழிலையுடைய தமிழ் ஞானசம்பந்தன் இயற்றிய இப்பதிகப் பாடல்களைப் பொருந்தும் இசையோடு இயன்ற அளவில் பாடி வழிபடுபவர் உலகத்தை நெடுங்காலம் ஆள்வர்.
திருச்சிற்றம்பலம்
|
||||||||
by Swathi on 30 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|