|
||||||||
இரண்டாம் திருமுறை-104 |
||||||||
2.104.திருக்கடிக்குளம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கற்பகேசுவரர்.
தேவியார் - சவுந்தரநாயகியம்மை.
2594 பொடிகொண் மேனிவெண் ணூலினர் தோலினர்
புலியுரி யதளாடை
கொடிகொ ளேற்றினர் மணிகிணி னெனவரு
குரைகழல் சிலம்பார்க்கக்
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்
துறையுங்கற் பகத்தைத்தம்
முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை
முன்வினை மூடாவே.
2.104. 1
திருநீறணிந்த மேனியராய், வெண்ணூல் அணிந்தவராய், புலித்தோலுடுத்தவராய், யானைத்தோலைப் போர்த்தியவராய், விடைக்கொடி உடையவராய், கட்டப்பட்ட மணிகள் கிணின் என ஒலிக்கக், கால்களில் சுழல் சிலம்பு ஆகிய ஒலிக்க மணம் கமழும் அழகிய பொழில் சூழ்ந்தன கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தைத் தம் முடிசாய்த்து அடிகளில் வீழ்ந்து வணங்கும் அடியவரைப் பழவினைகள் தொடரா.
2595 விண்க ளார்தொழும் விளக்கினைத் துளக்கிலா
விகிர்தனை விழவாரும்
மண்க ளார்துதித் தன்பரா யின்புறும்
வள்ளலை மருவித்தம்
கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத்
துறைதரு கற்பகத்தைப்
பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர்
பழியிலர் புகழாமே.
2.104.2
தேவர்கள் தொழும் திருவிளக்கை, தளர்ச்சியுறாத விகிர்தனை, விழாக்கள் பலவும் நிகழ்த்தும் மண்ணுலகில் உள்ளார் துதித்து அன்புடையவர்களாய் மகிழும் வள்ளலை, சென்றடைந்து தம் கண்களாரக் கண்டு மகிழும் நம் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை, பண்களோடு பாடல்களைப் பாடிப் போற்றுவார் கேடிலர். பழியிலர். அவரைப் புகழ்வந்தடையும்.
2596 >பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது
புலியத ளழனாகம்
தங்க மங்கையைப் பாகதுடையவர்
தழல்புரை திருமேனிக்
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்
துறைதரு கற்பகத்தை
எங்கு மேத்திநின் றின்புறு மடியரை
யிடும்பைவந் தடையாவே.
2.104. 3
சினந்துவந்த நல்ல யானையின் தோலைப் போர்த்து, புலித்தோலை உடுத்து, கொடிய பாம்பு திருமேனியில் விளையாட, உமை நங்கையைப் பாகமாகக் கொண்டு, தழல் போன்ற சிவந்த திருமேனியராய்க் கங்கை சேர்ந்த சடையினராய் விளங்கும் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை எவ்விடத்தும் ஏத்தி நின்று இன்புறும் அடியாரைத் துன்பம் வந்து அடையமாட்டா.
2597 நீர்கொ ணீள்சடை முடியனை நித்திலத்
தொத்தினை நிகரில்லாப்
பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தைப்
பசும்பொனை விசும்பாரும்
கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்
துறையுங்கற் பகந்தன்னைச்
சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை
தேய்வது திணமாமே.
2.104. 4
கங்கைதங்கிய நீண்ட சடைமுடியினனை, முத்துக்களின் கொத்தாய் விளங்குவோனை, உலகில் பல இடங்களிலும் உள்ள மக்கள் வந்து தொழும் பவளத்தை, பசும் பொன்னை, வானளாவிய மேகங்கள் தங்கியவாய் விளங்கும் அழகிய பொழில்கள் சூழ்ந்த கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தின் சிறப்புமிக்க அருட்செல்வங்களை ஏத்த வல்லவர்களின் வினைகள் தேய்வது திண்ணம்.
2598 சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு
துன்னிய தழனாகம்
அரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல
கொண்டடி யவர்போற்றக்
கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத்
துறைதரு கற்பகத்தை
விரும்பு வேட்கையொ டுளமகிழ்ந் துரைப்பவர்
விதியுடையவர்தாமே.
2.104. 5
வண்டுகள் மொய்க்கும் மலர்களை அணிந்த சடையினனும், கொடிய பாம்பினை மதியோடு பகை நீக்கிப் பொருத்திவைத்த முடியினனும், அரும்புகளையும் மகரந்தம் விரிந்து அலர்ந்த மலர்களையும் கொண்டு அடியவர் போற்ற, கரும்புகளும் உயர்ந்து வளர்ந்த கொடிகளும் பின்னி வளர்ந்த கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தை அன்போடு விரும்பி உளம்மகிழ்ந்து போற்றுபவர் நல்லூழ் உடையவர் ஆவர்.
2599 மாதி லங்கிய பாகத்தன் மதியமொ
டலைபுன லழனாகம்
போதி லங்கிய கொன்றையு மத்தமும்
புரிசடைக் கழகாகக்
காதி லங்கிய குழையினன் கடிக்குளத்
துறைதரு கற்பகத்தின்
பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை
பற்றறக் கெடுமன்றே.
2.104.6
உமைமாது விளங்கும் பாகத்தினனும், திங்கள், கங்கை, சினம் மிக்க பாம்பு, கொன்றைமலர், ஊமத்தை மலர் ஆகியனவற்றை வளைந்த சடையின் மேல், அழகுறச் சூடியவனும் காதிலங்கு குழையினனும், ஆகிய கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தின் பாதங்களைக் கைகளால் தொழுது ஏத்த வல்லார் வினைகள் அடியோடு கெடும்.
2600 குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள்
குழாம்பல குளிர்பொய்கை
புலவு புள்ளின மன்னங்க ளாலிடும்
பூவைசே ருங்கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்
துறையுங்கற் பகத்தைச்சீர்
நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை
நிற்ககில் லாதானே.
2.104. 7
விளங்கும் அழகினை உடையனவான கொடிகள் கட்டப்பட்ட உயரிய மாடவீடுகளையும் மகளிர் குழாம் நீராடும் குளிர்ந்த பொய்கைகளையும் உடையதும் புலாலுண்ணும் நாரை முதலிய பறவைகளும் அன்னங்களும் விளையாடும் சிறப்பினதுமான கடிக்குளத்தில் மலர்கள் பொருந்திய கூந்தலினளாகிய உமையம்மையோடு கூடிக் கண்ணிமிலைந்து விளங்கும் கற்பகத்தைப் புகழ்ந்து போற்றி ஏத்துவார்மேல் வினைநில்லா.
2601 மடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேன்
மதியிலா மையிலோடி
எடுத்த லும்முடி தோள்கர நெரிந்திற
விறையவன் விரலூன்றக்
கடுத்து வாயொடு கையெடுத் தலறிடக்
கடிக்குளந் தனின்மேவிக்
கொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார்
குணமுடை யவர்தாமே.
2.104. 8
பகைவரைக் கொல்லும் வாட்படையை உடைய இராவணன் அறிவின்றிக் கயிலைமலையைப் பெயர்த்த அளவில் அவனுடைய முடி தோள் கை ஆகியன நெரிந்து அழியுமாறு சிவபிரான் கால் விரலை ஊன்றிய அளவில், அவன் தன் குற்றத்திற்கு வருந்தி கை கூப்பி அலற, பேரருள் கொடுத்த ஆனந்தக் கூத்தனைக் கடிக்குளத்தை அடைந்து ஏத்துபவர் நல்ல குணமுடையவர் ஆவர்.
2602 நீரினார் கடற் றுயின்றவ னயனொடு
நிகழடி முடிகாணார்
பாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர்
பவளத்தின் படியாகிக்
காரினார் பொழில் சூழ்தரு கடிக்குளத்
துறையுங்கற் பகத்தின்றன்
சீரினார்கழ லேத்தவல் லார்களைத்
தீவினை யடையாவே.
2.104. 9
நீர் நிறைந்த கடலிடைத் துயிலும் திருமாலும், பிரமனும் அடிமுடி காணாராய் எய்த்தகாலத்து, மண்ணுலகில் அடித்தளம், விசும்பின் எல்லைவரை எழுந்து பவளம் போன்றநிறம் உடையவராய்த் தோன்றி, மேகம்தவழும் பொழில் சூழ்ந்த கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தின் சிறப்புமிக்க திருவடிகளை ஏத்த வல்லார்களைத் தீவினை அடையா.
2603 குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங்
குறியினி னெறிநில்லா
மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக்
கொள்ளன்மின் விடமுண்ட
கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத்
துறைதரு மெம்மீசர்
தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள்
தூநெறி யௌதாமே.
2.104. 10
குண்டர்களாகிய சாக்கியர் சமணர்கள் ஆகியோர் தாம் கூறும் குறிகளின் நெறிநில்லாமிண்டர்கள். அவர்தம் பொய்யுரைகளைக் கேட்டு அவற்றை மெய்யெனக் கருதாதீர். விடம் உண்டகண்டரும் திரிபுண்டரம் அணிந்த நன்மேனியரும் ஆகிய கடிக்குளத்தில் உறையும் எம் ஈசர்தம் தொண்டர் தொண்டரைத் தொழுது அடிபணிமின் தூய சிவநெறி எளிதாம்.
2604 >தனமலி புகழ் தயங்குபூந் தராயவர்
மன்னன்நற் சம்பந்தன்
மனமலி புகழ் வண்டமிழ் மாலைகள்
மாலதாய் மகிழ்வோடும்
கனமலி கட லோதம் வந்துலவிய
கடிக்குளத் தமர்வானை
இனம லிந்திசை பாடவல் லார்கள்போ
யிறைவனோ டுறைவாரே.
2.104. 11
செல்வவளம் மிக்க புகழ் விளங்கும் பூந்தராய் மக்களின் மன்னனாகத்திகழும் ஞானசம்பந்தன் மனநிறைவோடு புகழ்ந்துரைத்த வண்டமிழ் மாலைகள் மீது அன்பு கொண்டு, மகிழ்வோடு, கடல்ஓதம் வந்துலவும் கடிக்குளத்து அமரும் இறைவனை அடியவர்களோடு கூடி அவற்றை இசையோடு பாடவல்லார்கள் போய் இறைவனோடு உறைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
2.104.திருக்கடிக்குளம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|