|
||||||||
முதல் திருமுறை-133 |
||||||||
1.133.திருவேகம்பம்
பண் - மேகராகக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர்.
தேவியார் - காமாட்சியம்மை.
1427 வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி
நூலொருபால் பொருந்தக்
கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற்
கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தா ரவர்போற்ற
வணங்கினொ டாடல்புரி
எந்தை மேவிய வேகம்பந்
தொழுதேத்த விடர்கெடுமே.
1.133.1
அனலிடை நன்றாக வெந்த வெண்மையான திருநீற்றைப் பூசியுள்ள மார்பின்கண் விரிந்த பூணூல் ஒருபால் விளங்கித் தோன்ற, மணங்கமழும் கூந்தலினையுடைய உமையம்மையோடும், விளங்கும் பொழில்களால் சூழப்பட்ட கச்சி என்னும் தலத்துள் எல்லையற்ற குணங்களையுடைய அடியவர்கள் போற்ற நடனம் செய்யும் எந்தையாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஏகம்பம் என்னும் திருக்கோயிலைத் தொழுது போற்ற நம் இடர் கெடும்.
1428 வரந்திகழு மவுணர் மாநகர்மூன்
றுடன்மாய்ந் தவியச்
சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச்
சங்கரன் மேயவிடம்
குருந்த மல்லிகை கோங்குமா
தவிநல்ல குராமரவம்
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ்
சேர விடர்கெடுமே.
1.133.2
வரம்பெற்ற அவுணர்களின் பெருநகராக விளங்கிய முப்புரங்களும் ஒருசேர மாய்ந்து கெடுமாறு கணை எய்து எரித்தழித்த, தாழ்ந்து தொங்கும் சடைகளையுடைய சங்கரன் எழுந்தருளிய இடமாகிய, குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, நல்லகுரா, கடம்பமரம் ஆகியனவற்றால் சிறந்து விளங்கும் பசுமையான பொழில் சூழ்ந்த கச்சிமாநகரிலுள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ, நம் இடர்கெடும்.
1429 வண்ணவெண் பொடிப்பூசு மார்பின்
வரியர வம்புனைந்து
பெண்ணமர்ந் தெரியாடல் பேணிய
பிஞ்ஞகன் மேயவிடம்
விண்ணமர் நெடுமாட மோங்கி
விளங்கிய கச்சிதன்னுள்
திண்ணமாம் பொழில்சூழ்ந்த வேகம்பஞ்
சேர விடர்கெடுமே.
1.133.3
வெண்மைநிறம் அமைந்த திருநீறு பூசிய மார்பின்கண் உடலில் வரிகளையுடைய பாம்பை அணிந்து, உமையம்மையை விரும்பியேற்று, சுடுகாட்டில் எரியாடல் புரியும் தலைக்கோலம் உடையவனாகிய சிவபிரான் மேவிய இடமாகிய விண்ணளாவிய நீண்ட மாட வீடுகள் ஓங்கி விளங்குவதும், என்றும் நிலை பெற்ற பொழில்களால் சூழப்பட்டதுமாகிய கச்சிமாநகரில் உள்ளதுமாகிய திருஏகம்பத்தைச் சென்று வணங்க நம் இடர் கெடும்.
1430 தோலுநூ லுந்துதைந்த வரைமார்பிற்
சுடலைவெண் ணீறணிந்து
காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த
கடவுள் கருதுமிடம்
மாலைவெண் மதிதோயு மாமதிற்
கச்சி மாநகருள்
ஏலநாறிய சோலைசூ ழேகம்ப
மேத்த விடர்கெடுமே.
1.133.4
மான்தோலும் பூணூலும் பொருந்திய மலை போன்ற மார்பின்கண் சுடலையில் எடுத்த வெண்மையான திருநீற்றை அணிந்து மார்க்கண்டேயர்க்காகக் காலன் மாயும்படி காலால் அவனை உதைத்தருளிய கடவுளாகிய சிவபிரான் விரும்புமிடமாகிய, மாலைக் காலத்தில் தோன்றும் வெண்மையான மதி தோயுமாறு உயர்ந்த பெரிய மதில்களை உடைய பெரிய காஞ்சிபுர நகரில் மணம் வீசும் சோலைகளால் சூழப்பட்ட ஏகம்பம் என்னும் திருக்கோயிலை ஏத்த, நம் இடர் கெடும்.
1431 தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத்
தூமதி யம்புனைந்து
பாடனான் மறையாகப் பல்கணப்
பேய்க ளவைசூழ
வாடல்வெண் டலையோ டனலேந்தி
மகிழ்ந்துட னாடல்புரி
சேடர்சேர் கலிக்கச்சி யேகம்பஞ்
சேர விடர்கெடுமே.
1.133.5
அழகிய இதழ்களோடு கூடிய கொன்றை மலர்மாலை சூடிய சடையின்மேல் தூய பிறை மதியை அணிந்து நான்மறைகளைப் பாடல்களாகக் கொண்டு பேய்க் கணங்கள் பல சூழப், புலால் வற்றிய வெண்தலையோட்டையும், அனலையும் கையிலேந்தி மகிழ்வோடு உமையம்மையுடன் ஆடல் புரிகின்ற பெரியோனாகிய சிவபிரான் எழுந்தருளிய ஆரவாரமுடைய கச்சியில் விளங்கும் திருஏகம்பத்தை நினைக்க, நம் இடர் கெடும்.
1432 சாகம்பொன் வரையாகத் தானவர்
மும்மதில் சாயவெய்து
ஆகம்பெண் ணொருபாக மாக
வரவொடு நூலணிந்து
மாகந்தோய் மணிமாட மாமதிற்
கச்சி மாநகருள்
ஏகம்பத் துறையீசன் சேவடி
யேத்த விடர்கெடுமே.
1.133.6
மேரு மலையை வில்லாகக் கொண்டு அசுரர்களின் முப்புரங்களை அழியுமாறு கணைதொடுத்துத் தன் திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மார்பில் பாம்பையும், முப்புரி நூலையும் அணிந்து விண்ணளாவிய அழகிய மாடங்களையும், பெரிய மதிலையும் உடைய கச்சிமாநகரில் விளங்கும் திருஏகம்பத்தில் உறையும் ஈசன் திருவடிகளை ஏத்த நம் இடர் கெடும்.
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.053.7
1433 வாணிலா மதிபுல்கு செஞ்சடை
வாளர வம்மணிந்து
நாணிடத் தினில்வாழ்க்கை பேணி
நகுதலையிற் பலிதேர்ந்
தேணிலா வரக்கன்ற னீண்முடி
பத்து மிறுத்தவனூர்
சேணுலாம் பொழிற்கச்சி யேகம்பஞ்
சேர விடர்கெடுமே.
1.133.8
ஒளி விளங்கும் பிறைமதி பொருந்திய செஞ்சடையில் ஒளி பொருந்திய பாம்பினை அணிந்து இடப்பாகத்தே நாணோடு கூடியவளாகிய இல்வாழ்க்கைக்குரிய உமையம்மையை விரும்பியேற்றுச் சிரிக்கும் தலையோட்டில் பலியேற்று, மன உறுதி படைத்தவனாகிய இராவணனின் நீண்ட முடிகள் பத்தையும் நெரித்தவனாகிய சிவபிரானது, வானளாவிய பொழில்களையுடைய கச்சிமா நகரிலுள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ நம் இடர் கெடும்.
1434 பிரமனுந் திருமாலுங் கைதொழப்
பேரழ லாயபெம்மான்
அரவஞ் சேர்சடை யந்தண
னணங்கினொ டமருமிடம்
கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக்
கச்சி மாநகருள்
மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ
வல்வினை மாய்ந்தறுமே.
1.133.9
பிரமனும், திருமாலும் தம் கைகளால் தொழுது வணங்கப் பெரிய அனலுருவாகி நின்ற பெருமானும், பாம்பணிந்த சடையை யுடைய அந்தணனும் ஆகிய சிவபிரான் தன் தேவியோடு அமரும் இடமாகிய, வஞ்சகம் இல்லாத வள்ளன்மை பொருந்திய கையினை உடையவர்கள் வாழ்கின்ற ஆரவாரமுடைய கச்சி மாநகரில் குங்கும மரங்கள் பொருந்திய சோலைகளால் சூழப்பட்டு விளங்கும் திருஏகம்பத்தைத் தொழ நம் வல்வினைகள் மாய்ந்து கெடும்.
1435 குண்டுபட் டமணா யவரொடுங்
கூறைதம் மெய்போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை
யவைகொண்டு விரும்பேன்மின்
விண்டவர் புரமூன்றும் வெங்கணை
யொன்றினா லவியக்
கண்டவன் கலிக்கச்சி யேகம்பங்
காண விடர்கெடுமே.
1.133.10
பருமையான உடலோடு ஆடையின்றித் திரியும் சமணர்களோடு ஆடையைத் தம் உடலில் போர்த்து வலியவராய்த் திரியும் புத்தர்களும் புனைந்து கூறும் உரைகளைப் பொருளுரையாகக் கருதி விரும்பாதீர்கள். பகைவர்களாகிய அவுணர்களின் மூன்று புரங்களையும் கொடிய கணை ஒன்றை எய்து எரித்தழித் தவனாகிய சிவபிரான் எழுந்தருளிய கச்சியின்கண் உள்ள திரு ஏகம்பத்தைச் சென்று காண, நம் இடர் கெடும்.
1436 ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி
யேகம்ப மேயவனைக்
காரினார் மணிமாட மோங்கு
கழுமல நன்னகருள்
பாரினார் தமிழ்ஞான சம்பந்தன்
பரவிய பத்தும்வல்லார்
சீரினார் புகழோங்கி விண்ணவ
ரோடுஞ் சேர்பவரே.
1.133.11
அழகு நிறைந்த பொழில்கள் சூழ்ந்த கச்சியேகம் பத்துள் விளங்கும் இறைவனை மேகங்கள் தவழும் அழகிய மாடங்கள் ஓங்கும் கழுமல நன்னகருள் தோன்றிய தமிழ்வல்ல ஞானசம்பந்தன் பரவிப் போற்றிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர் இவ்வுலகின்கண் சிறந்த புகழால் ஓங்கி விளங்கிப் பின் விண்ணவர்களோடும் சேர்ந்து வாழும் நிலையைப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
1.133.திருவேகம்பம் |
||||||||
by Swathi on 30 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|