|
||||||||
இரண்டாம் திருமுறை-105 |
||||||||
2.105.திருக்கீழ்வேளூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அட்சயலிங்கநாதர்.
தேவியார் - வனமுலைநாயகியம்மை.
2605 மின்னு லாவிய சடையினர் விடையினர்
மிளிர்தரு மரவோடும்
பன்னு லாவிய மறையொலி நாவினர்
கறையணி கண்டத்தர்
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர்
புகழ்மிகு கீழ்வேளூர்
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை
யோடிட வீடாமே.
2.105. 1
ன்னலைப்போல ஒளிவிடும் சடையினரும், விடைஊர்தியரும், அரவாபரணரும் இசையமைப்புடைய வேதங்களை ஓதிய நாவினரும், நீலகண்டரும் பொன்போன்ற கொன்றைத் தாரினரும் ஆகிய புகழ்மிக்க கீழ்வேளூர் இறைவரை நினைக்கும் நெஞ்சினர்க்கு வினைகள் நீங்க வீடு கிட்டும்.
2606 நீரு விய சடையிடை யரவொடு
மதிசிர நிரைமாலை
வாரு லாவிய வனமுலை யவளொடு
மணிசிலம் பவையார்க்க
ஏரு லாவிய விறைவன துறைவிட
மெழில்திகழ் கீழ்வேளூர்
சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர்
பிணியொடு வினைபோமே.
2.105. 2
கங்கை சூடிய சடையின்கண், அரவு, மதி, தலைமாலை ஆகியவற்றை அணிந்து, கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையோடு கூடி அழகிய சிலம்புகள் ஆர்க்க விளங்கும் இறைவனது உறைவிடம் கீழ்வேளூராகும். இத்தலத்தைச் சிந்திப்பவர்கட்குப் பிணிகளும் வினைகளும் போகும்.
2607 வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு
வெள்ளெருக் கலர்மத்தம்
பண்ணி லாவிய பாடலோ டாடலர்
பயில்வுறு கீழ்வேளூர்ப்
பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக்
கோயிலெம் பெருமானை
உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையா
ருலகினி லுள்ளாரே.
2.105. 3
வெள்ளிய நிலவைத்தரும் பிறையை அணிந்த விரிசடையில் அரவு, வெள்ளெருக்க மலர் ஊமத்தை ஆகியவற்றை அணிந்து, இசைப்பாடல்களைப் பாடியும் ஆடியும் மகிழ்வுறும் மக்கள் நிறைந்த கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் விளங்கும் பெண்ணொருபாகனை உள்கும் பயிற்சி உடையார் உலகில் நிலைபெற்றிருப்பர்.
2608 சேடு லாவிய கங்கையைச் சடையிடைத்
தொங்கவைத் தழகாக
நாடு லாவிய பலிகொளு நாதனார்
நலமிகு கீழ்வேளூர்ப்
பீடு லாவிய பெருமையர் பெருந்திருக்
கோயிலுட் பிரியாது
நீடு லாவிய நிமலனைப் பணிபவர்
நிலைமிகப் பெறுவாரே.
2.105. 4
பெருமைமிக்க கங்கையை முடியில் சூடி, மிக அழகாக நாடு முழுதும் சென்று பலியேற்கும் நாதரும் நன்மைகள் நிறைந்த கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலுள் வலிமைமிக்க பெருமையோடு திகழ்பவருமாகிய சிவபிரானை இடைவிடாது வழிபடுவோர் நிலையான பேரின்ப வாழ்வு பெறுவர்.
2609 துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை
வடமணி சிரமாலை
மன்று லாவிய மாதவ ரினிதியன்
மணமிகு கீழ்வேளூர்
நின்று நீடிய பெருந்திருக் கோயிலின்
நிமலனை நினைவோடும்
சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை
தேய்வது திணமாமே.
2.105.5
நெருக்கமாக நீண்டு வளர்ந்த சடையில் திங்கள், பிரம கபாலம், கயிறு, மணிகள், தலைமாலை முதலியவற்றை அணிந்து, மன்றத்தில் மாதவத்தோர் உலாவும் சிறப்புமிக்க கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலுள் விளங்கும் நிமலனை நினைவோடு சென்று ஏத்த வல்லவரின் வினைகள் தேய்வது திண்ணம்.
2610 கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக்
கூத்தனை மகிழ்ந்துள்கித்
தொத்து லாவிய நூலணி மார்பினர்
தொழுதெழு கீழ்வேளூர்ப்
பித்து லாவிய பத்தர்கள் பேணிய
பெருந்திருக் கோயின்மன்னு
முத்து லாவிய வித்தினை யேத்துமின்
முடுகிய விடர்போமே.
2.105. 6
பூங்கொத்துக்கள் அணிந்துள்ள சடைமுடியனும், கூத்தனும், நூலணிந்த அந்தணர் பக்தர்கள் ஆகியோர் நினைந்துருகி வழிபடும் கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் விளங்குபவனும், முத்துப் போல்பவனும் எல்லாவற்றுக்கும் வித்தாகத் திகழ்பவனும் ஆகிய பெருமானை ஏத்துமின். வலிந்துவரும் இடர்போகும்.
2611 பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும்
வன்னியுந் துன்னாரும்
கறைநி லாவிய கண்டரெண் டோளினர்
காதல்செய் கீழ்வேளூர்
மறைநி லாவிய வந்தணர்மலிதரு
பெருந்திருக் கோயின்மன்னு
நிறைநி லாவிய வீசனை நேசத்தால்
நினைபவர் வினைபோமே.
2.105.7
பிறையணிந்த சடைமுடியில் கங்கை, வன்னி ஆகியவற்றை அணிந்தவனும், கறைக் கண்டனும், எண்தோளினனும் ஆகிய இறைவன் விரும்புவதும் மறைவல்ல அந்தணர் நிறைந்ததும் ஆகிய கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் குறைவிலா நிறைவினனாய் விளங்கும் ஈசனை அன்போடு நினைபவர் வினைகள் போகும்.
2612 மலைநி லாவிய மைந்தன்அம் மலையினை
யெடுத்தலு மரக்கன்றன்
தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான்
உறைதரு கீழ்வேளூர்க்
கலைநி லாவிய நாவினர்கா தல்செய்
பெருந்திருக் கோயிலுள்
நிலைநி லாவிய வீசனை நேசத்தா
னினையவல் வினைபோமே.
2.105. 8
திருக்கயிலாய மலையில் விளங்கும் பெருவீரனும், அம்மலையை எடுத்த இராவணன் தலை நெரிந்து அலறக் கால் விரலை ஊன்றியவனும் ஆகிய சிவபெருமான் உறைவதும், கலைகள் அனைத்தையும் ஓதிய நாவினர் அன்பு செய்வதும் ஆகிய கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் நிலைபெற்று விளங்கும் ஈசனை நினைய வல்வினைபோகும்.
2613 மஞ்சு லாவிய கடற்கிடந் தவனொடு
மலரவன் காண்பொண்ணாப்
பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி
பாகனைப் பரிவொடும்
செஞ்சொலார்பலர் பரவிய தொல்புகழ்
மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின்
நடலைகள் நணுகாவே.
2.105.9
மேகங்கள் உலாவும் கடலில் துயில்கொள்ளும் திருமாலும், தாமரைமலரில் உறையும் நான்முகனும் காண இயலாதவனும், பஞ்சு போன்ற மென்மையான அடிகளை உடைய பார்வதி பாகனும், செஞ்சொற் புலவோர் பரவும் புகழ்மிக்க கீழ் வேளூரில் விளங்கும் நஞ்சணிந்த கண்டனும் ஆகிய பெருமானைச் சென்றடையுங்கள். துன்பங்கள் நம்மை அடையா.
2614 சீறு லாவிய தலையினர் நிலையிலா
வமணர்கள் சீவரார்
வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின்
சுரும்பமர் கீழ்வேளூர்
ஏறு லாவிய கொடியனை யேதமில்
பெருந்திருக் கோயின்மன்னு
பேறு லாவிய பெருமையன் றிருவடி
பேணுமின் தவமாமே.
2.105. 10
மழித்த தலையினரும், நிலையற்ற சொல் செயல் உடையவரும் துவரூட்டிய ஆடையரும் ஆகிய சமண புத்தர்களின் பெருமையற்ற சொற்களை விரும்பாதீர்; வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த கீழ்வேளூர்ப் பெருங்கோயிலில் விடைக்கொடியனாய் விளங்குபவனும் அந்தமில்லாத ஆனந்தத்தை அருளும் பெரியவனுமாகிய சிவபெருமான் திருவடிகளை வழிபடுங்கள். அதுவே சிறந்த தவமாகும்.
2615 குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை
யழகமர் கீழ்வேளூர்த்
திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக்
கோயிலெம் பெருமானை
இருண்ட மேதியி னினமிகு வயன்மல்கு
புகலிமன் சம்பந்தன்
தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி
பெறுவது திடமாமே.
2.105. 11
கடைசுருண்ட சடையினனும், இளைஞனும் அழகிய கீழ்வேளூர்ப் பெருங்கோயிலில் விளங்குபவனும் ஆகிய பெருமான் மீது கரிய எருமைகள் மிக்கதும், வயல்கள் நிறைந்ததுமாகிய புகலியின்மன்னன் ஞானசம்பந்தன் அருளிய தௌந்த பாடல்களை ஓதுவர் சிவகதி பெறுதல் உறுதி.
திருச்சிற்றம்பலம்
2.105.திருக்கீழ்வேளூர் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|