|
||||||||
முதல் திருமுறை-135 |
||||||||
1.135.திருப்பராய்த்துறை
பண் - மேகராகக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருப்பராய்த்துறைநாதர்.
தேவியார் - பசும்பொன்மயிலம்மை.
1448 நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை யண்ணலே. 1.135.1
திருப்பராய்த்துறையில், கங்கையை அணிந்த சடையினராய் விளங்கும் இறைவர், திருநீறு அணிந்த திருமேனியை உடையவர். அணிகலன்கள் பல புனைந்த உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட கோலத்தினர். பருந்துகள் தொடரத் தக்கதாய்ப் புலால் நாற்றம் கூடிய பிரமனது தலையோட்டைக் கையில் கொண்டவர்.
1449 கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல வடிகளே. 1.135.2
பசுமையான குளிர்ந்த குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்த திருப்பராய்த்துறையில் விளங்கும் அழிவற்றவராகிய இறைவர், மணங்கமழும் சிறந்த மலர்களும், கொன்றையும் மணக்கும் சடைமுடியின்மேல் பெருக்கெடுத்து வந்த கங்கை நதியை வைத்துள்ளவர்.
1450 வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
தோதநின்ற வொருவனார்
பாதிபெண்ணுரு வாவர்பராய்த்துறை
ஆதியாய வடிகளே. 1.135.3
திருப்பராய்த்துறையில் எல்லா உலகங்களுக்கும் ஆதியாக விளங்குபவராய் எழுந்தருளியுள்ள இறைவர், வேதங்களை அருளிச் செய்தவர். எல்லா வேதங்களையும் முறையாக விரித்துப் பொருள் விளக்கம் அருளிய ஒப்பற்றவர். தம் திருமேனியில் பாதிப் பெண்ணுருவாக விளங்குபவர்.
1451 தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
நூலுந்தாமணி மார்பினர்
பாலுநெய்பயின் றாடுபராய்த்துறை
ஆலநீழ லடிகளே. 1.135.4
திருப்பராய்த்துறையில் ஆலநீழலில் எழுந்தருளிப் பால், நெய் முதலியவற்றை விரும்பி ஆடும் இறைவர், புலித்தோலைத் தம் இடையிலே ஆடையாக உடுத்தவர். ஒளி பொருந்திய பூணூல் அணிந்த மார்பினை உடையவர்.
1452 விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
இரவினின்றெரி யாடுவர்
பரவினாரவர் வேதம்பராய்த்துறை
அரவமார்த்த வடிகளே. 1.135.5
திருப்பராய்த்துறையில் பாம்பை இடையில் கட்டியவராய் விளங்கும் பரமர், திருநீற்றைத் தம் மேனிமேல் விரவப்பூசியவர். நள்ளிரவில் சுடுகாட்டுள் நின்று எரி ஆடுபவர். வேதங்களால் பரவப் பெற்றவர்.
1453 மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
கறைகொள்கண்ட முடையவர்
பறையுஞ்சங்கு மொலிசெய்பராய்த்துறை
அறையநின்ற வடிகளே. 1.135.6
பறை, சங்கு முதலியன முழங்கும் திருவிழாக்கள் நிகழும் திருப்பராய்த்துறையில் எல்லோரும் புகழ்ந்து போற்ற எழுந்தருளிய இறைவர், வேதங்களை ஓதுபவர். மான் கன்றைக் கையின்கண் உடையவர், விடக்கறை கொண்ட கண்டத்தையுடையவர்.
1454 விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர்
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
அடையநின்ற வடிகளே. 1.135.7
திருப்பராய்த்துறையிற் பொருந்தி விளங்கும் இறைவர், விடையேற்றினை ஊர்ந்து வருபவர். வெண்மையான திருநீற்றைப் பூசுபவர். சடையின்மேல் கங்கையைத் தரித்தவர். வெண்மையான மழுவைப் படைக்கருவியாகக் கொண்டவர்.
1455 தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
நெருக்கினார்விர லொன்றினால்
பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
அருக்கன்றன்னை யடிகளே. 1.135.8
திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய இறைவர், வலிமைமிக்க பத்துத் தலைகளை உடைய இராவணனைத் தம் கால்விரல் ஒன்றினால் நெரித்தவர். தக்கன் வேள்வியில் கதிரவனின் பற்களைத் தகர்த்தவர்.
1456 நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
தோற்றமும்மறி யாதவர்
பாற்றினார்வினை யானபராய்த்துறை
ஆற்றன்மிக்க வடிகளே. 1.135.9
திருப்பராய்த்துறையில் ஆற்றல் மிக்கவராய் விளங்கும் அடிகள், மணம் பொருந்திய தாமரை மலரில் விளங்கும் பிரமன், திருமால் ஆகியோரால் அடிமுடி அறியப் பெறாத தோற்றத்தினை உடையவர். தம்மை வழிபடுபவர்களின் வினைகளைப் போக்குபவர்.
1457 திருவிலிச்சில தேரமணாதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும்
பருவிலாலெயி லெய்துபராய்த்துறை
மருவினான்றனை வாழ்த்துமே. 1.135.10
புண்ணியமில்லாத சிலராகிய புத்தர்களும், சமணர்களாகிய, கீழ்மக்களும், கூறும் பொருளற்ற அறவுரைகளைக் கேளாதீர். பெரிய மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை எய்தழித்து உலகைக் காத்துத் திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வாழ்த்துவீர்களாக.
1458 செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
செல்வர்மேற்சிதை யாதன
செல்வன்ஞானசம் பந்தனசெந்தமிழ்
செல்வமாமிவை செப்பவே. 1.135.11
பொருட் செல்வங்களால் நிறைந்து விளங்கும் சிவஞானச் செல்வர்கள் வாழும் திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய, வீடுபேறாகிய செல்வத்தையுடைய, இறைவன்மீது, அருட்செல்வனாக விளங்கும் ஞானசம்பந்தன் அருளிய, அழிவற்ற இச்செந்தமிழ்ப் பாடல்களை ஓதினால், ஓதின அவர்கட்கு எல்லாச் செல்வங்களும் உண்டாகும்.
திருச்சிற்றம்பலம்
|
||||||||
by Swathi on 30 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|