|
||||||||
இரண்டாம் திருமுறை-106 |
||||||||
2.106.திருவலஞ்சுழி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சித்தீசநாதர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
2616 என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே
யிருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை
முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும்
வழிபடு மதனாலே.
2.106. 1
முழுமையான மணிகளும், முத்துக்களும் நிறைந்த நிலையான காவிரியாறு சூழ்ந்த திருவலஞ்சுழி இறைவனைப் போற்றியும், அன்பு செய்தும், பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருத்தலால், கடல் சூழ்ந்த இவ்வுலகத்து நாம் செய்த நல்வினைப் பயன்களில், நெஞ்சே! நீ! எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய்?
2617 விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை
விரிகடல் வருநஞ்சம்
உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய
விறைவனை யுலகத்தில்
வண்டு வாழ்குழன் மங்கையொர் பங்கனை
வலஞ்சுழி யிடமாகக்
கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ
டினிதிருந் தமையாலே.
2.106. 2
கடலிடைத்தோன்றிய நஞ்சை உண்டு அமரர்களைக் காத்தருளிய இறைவனை, உமைகேள்வனை, இவ்வுலகில் வலஞ்சுழியை இடமாகக் கொண்டு விளங்கும் இறைவனை வணங்கி அவ்விறைவனின் உண்மைத் தொண்டு புரியும் தொண்டர்களோடு கூடி உறையும் பேறு பெற்றதால் நிச்சயம் நம் வினைகள் விண்டொழிந்தனவாகும்.
2618 திருந்த லார்புரந் தீயெழச் செறுவன
விறலின்கண் அடியாரைப்
பரிந்து காப்பன பத்தியில் வருவன
மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்து மாவன மந்திர மாவன
வலஞ்சுழி யிடமாக
இருந்த நாயக னிமையவ ரேத்திய
விணையடித் தலந்தானே.
2.106. 3
திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு எழுந்தருளியுள்ளவனும், இமையவர் ஏத்தும் பெருமையாளனும் ஆகிய பெருமான் திருவடிகள் பகைவரான அசுரர்களின் முப்புரங்களைத் தீஎழச் செய்து அழித்தன. அடியவர்களை அன்புடன் காப்பன. பக்தி செய்வார்க்குக் காட்சி தருவன. உன்மத்தம் முதலான நோய்களுக்கு மருந்தும் மந்திரமும் ஆவன.
2619 கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர்
அறத்திற முனிவர்க்கன்
றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந்
தினிதருள் பெருமானார்
மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி
யிடமகிழ்ந் தருங்கானத்
தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய
வற்புத மறியோமே.
2.106.4
நீலகண்டரும், செம்மேனியரும் அன்று ஆலின் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் உபதேசித்தவரும் வேதங்களை அருளியவரும் ஆகிய இறைவர் திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு சிலம்பு ஆர்க்க நின்று ஆடும் அற்புதத்தையாம் இன்னதென அறியேம்.
2620 மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலா
மெரியுரு வொருபாகம்
பெண்ண ராணெனத் தெரிவரும் வடிவினர்
பெருங்கடற் பவளம்போல்
வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார்
பரிபவர் மனம்புக்க
எண்ண ராகிலு மெனைப்பல வியம்புவ
ரிணையடி தொழுவாரே.
2.106.5
சிவபிரான் மண், விண் முதலான ஐம்பூதங்களின் வடிவினராயிருப்பவர். பெண்ணும், ஆணும் கலந்த திருவுருவினர். கடற் பவளம்போலும் திருமேனியர். வலஞ்சுழியில் நீங்காது உறைபவர். தம்மை வழிபடும் அடியவர்களின் மனத்தில் புகுந்து எண்ணத்தில் நிறைபவர் அவர்தம் இணையடி தொழபவர் இவ்வாறானபல பெருமைகளை இயம்புவர்.
2621 ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர்
மேனியர் மடமாதர்
இருவ ராதரிப் பார்பல பூதமும்
பேய்களு மடையாளம்
அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித்
தகந்தொறும் பலிக்கென்று
வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே
வரிவளை கவர்ந்தாரே.
2.106.6
அகப்பொருட்டுறை; தலைவி கூற்று. ஒருவராலும் உவமிக்க ஒண்ணாததொரு திருமேனியர். உமை, கங்கை இருவர் பால் அன்பு செய்பவர். பூதங்களும் பேய்களும் பாடி ஆட வெண்டலையைக் கையில் ஏந்தி வீடுகள் தோறும் பலி ஏற்க வருபவர். வலஞ்சுழியில் வாழும் அவரே என் வரிவளைகளைக்கவர்ந்தவர்.
2622 குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங்
குலவிய நெய்த்தானம்
என்றிவ் வூர்களி லோமென்று மியம்புவ
ரிமையவர் பணிகேட்பார்
அன்றி யூர்தமக் குள்ளன வறிகிலோம்
வலஞ்சுழி யரனார்பால்
சென்ற வூர்தனிற் றலைப்பட லாமென்று
சேயிழை தளர்வாமே.
2.106.7
அகப்பொருட்டுறை; தோழி கூற்று. குன்றியூர் குடமூக்கு முதலிய தலங்களைத் தமது ஊர் எனச்சொல் வருபவர். இமையவர் அவர்தம் ஏவலைக் கேட்கின்றனர். மேற்குறித்த ஊர்களைத் தவிர அவர் வாழும் ஊர் யாதென அறிகிலோம். பல ஊர் களுக்கும் உரிய அவரைத் திருவலஞ்சுழி சென்றால் சேரலாம் என்று கூறித் தலைவி தளர்கின்றாள்.
2623 குயிலி னேர்மொழிக் கொடியிடை வெருவுறக்
குலவரைப் பரப்பாய
கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி
தோளிரு பதுமூன்றி
மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன்
வலஞ்சுழி யெம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர்
அல்லவர் காணாரே.
2.106. 8
குயில் மொழியும் கொடியிடையும், மயிலின் சாயலும் உடைய உமை வெருவக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனின் இருபது தோள்களையும் ஊன்றி அடர்த்து அம்மையோடு உடனுறையும் வலஞ்சுழி எம்மானைப் பாடிப் பழக வல்லவர் பரகதி பெறுவர். அல்லவர் காணார்.
2624 அழல தோம்பிய வலர்மிசை யண்ணலு
மரவணைத் துயின்றானும்
கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர்
மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி
வலங்கொடு பாதத்தால்
சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு
துன்பங்கள் களைவாரே.
2.106.9
நான்முகனும், திருமாலும் திருமுடியையும், திருவடிகளையும் காண இயலாதவாறு சோதிப்பிழம்பாய் நின்றவர் சிவபெருமான். மழலைபோல இனிய இசைதரும் வீணையைக் கையில் ஏந்தியவர். அவர் எழுந்தருளிய திருவலஞ்சுழியை அடைவார் தொல்வினைகளும் துன்பங்களும் நீங்கப்பெறுவர்.
2625 அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர்
தவம்புரிந் தவஞ்செய்வார்
நெறிய லாதன கூறுவர் மற்றவை
தேறன்மின் மாறாநீர்
மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி
மருவிய பெருமானைப்
பிறிவி லாதவர் பெறுகதி பேசிடி
லளவறுப் பொண்ணாதே.
2.106. 10
அறிவில்லாத சமணரும் சாக்கியரும் தவம் புரிந்து கொண்டே அவம்பல செய்கின்றனர். அவர் கூறும் நெறியலா உரைகளைக் கேளாதீர். வலஞ்சுழி இறைவனைப் பிரியாத அடியவர் பெறும் கதிகளைப் பேசினால் வரும் பயன்கள் அளத்தற்கு அரியனவாகும்.
2626 மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய
மருந்தினை வயற்காழி
நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய்
நவிற்றிய தமிழ்மாலை
ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக்
கேட்டுகந் தவர்தம்மை
வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும்
வருத்தம்வந் தடையாவே.
2.106.11
மாதொருகூறனை, திருவலஞ்சுழியில் விளங்கும் மருந்து போல்வானை, காழி ஞானசம்பந்தன் பாடி ஏத்திய இத்திருப்பதிகத்தை அன்போடு இசைகூட்டிப் பாடுவார். அதனைக் கேட்பார் ஆகிய அடியவர்களை வினைகள் சாரா. இம்மை, மறுமை எப்போதும் வருத்தம் வந்து அவர்களை அணுகா.
திருச்சிற்றம்பலம்
2.106.திருவலஞ்சுழி |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|