|
||||||||
இரண்டாம் திருமுறை-111 |
||||||||
2.111.திருவாய்மூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வாய்மூரீசுவரர்.
தேவியார் - பாலினுநன்மொழியம்மை.
2670 தளிரிள வளரென வுமைபாடத்
தாளம் மிடவோர் கழல்வீசிக்
கிளரிள மணியர வரையார்த்
தாடும் வேடக் கிறிமையார்
விளரிள முலையவர்க் கருணல்கி
வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்
வளரிள மதியமொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
2.111. 1
தளிர்களோடு கூடிய இளங்கொம்புபோல, உமையம்மை அருகிருந்து பாடவும், தாளம் இடவும் ஒப்பற்ற தழலை உடைய கையை வீசி, விளங்கும் மாணிக்க மணியை உடைய பாம்பை இடையிலே கட்டி ஆடும் பொய்வேடத்தை உடையவர். தம்மை விரும்பும் பருத்த தனபாரங்களை உடைய மகளிர்க்கு அருள் நல்கித் திருநீறுபூசி, முடிமேல் பிறையணிந்து காட்சி தருபவர். வாய்மூரடிகளாகிய அவர் வருவார் காணீர்.
2671 வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி
விரிதரு கோவண வுடைமேலோர்
பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப்
பலபல கடைதொறும் பலிதேர்வார்
சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச்
செஞ்சுடர் வண்ணர்தம் அடிபரவ
வந்தனை பலசெய இவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
2.111. 2
தழல் போன்ற திருமேனியராய், திருநீறுபூசி, விரித்தணிந்த கோவண ஆடை மீது பாம்பை அரைநாணாகக் கட்டிக் கொண்டு வேதஒலி இசைத்துக் கொண்டு பலபல வீடுகளுக்கும் சென்று பலியேற்பவர். செஞ்சுடர் வண்ணராகிய வாய்மூரடிகள் என் சிந்தனை புகுந்து எனக்கு அருளை நல்கி ப்புறத்தே தம் அடியைப் பரவி வழிபாடு செய்யுமாறு வருவார் காணீர்.
2672 பண்ணிற் பொலிந்த வீணையர்
பதினெண் கணமு முணராநஞ்
சுண்ணப் பொலிந்த மிடற்றினார்
உள்ளம் உருகில் உடனாவார்
சுண்ணப் பொடிநீ றணிமார்பர்
சுடர்பொற் சடைமேற் றிகழ்கின்ற
வண்ணப் பிறையோ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
2.111. 3
பண்ணிசை பொருந்திய வீனைய உடையவர். பதினெட்டுத் தேவர் கணத்தினரும் உணராத வகையில் நஞ்சுண்டு விளங்கும் திருமிடற்றை உடையவர். திருநீற்றுச் சுண்ணம் அணிந்த மார்பினர். அழகிய சடைமீது இளம்பிறை சூடியவர். வாய்மூரில் விளங்கும் அவ்அடிகள் வருவார் காணீர்.
2673 எரிகிளர் மதியமொ டெழினுதன்மேல்
எறிபொறி யரவினொ டாறுமூழ்க
விரிகிளர் சடையினர் விடையேறி
வெருவவந் திடர்செய்த விகிர்தனார்
புரிகிளர் பொடியணி திருவகலம்
பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும்
வரியர வரைக்கசைத் திவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
2.111. 4
சடைமுடி மீது நெருப்புப்போல விளங்கும் பிறை மதியையும், அழகிய நுதலின் மேற்பகுதியில் பாம்பையும், கங்கையையும் அணிந்து விடையேறி வந்து மகளிராகிய எங்கட்கு இடர் செய்த விகிர்தர். திருநீறணிந்த மார்பினர். சத்திய வடிவினர். வாய்மூரில் விளங்கும் அவ்வடிகள் அழகியதொரு அரவை அரைக்கசைத்து வருவார். காணீர்.
2674 அஞ்சன மணிவணம் எழில்நிறமா
வகமிட றணிகொள வுடல்திமில
நஞ்சினை யமரர்கள் அமுதமென
நண்ணிய நறுநுதல் உமைநடுங்க
வெஞ்சின மால்களி யானையின்தோல்
வெருவுறப் போர்த்ததநிறமு மஃதே
வஞ்சனை வடிவினொ டிவராணீர்
வாய்மூரடிகள் வருவாரே.
2.111. 5
நஞ்சினைக்கண்டு தேவர்கள் உடல் நடுங்கி வேண்டியபோது நீலமணிபோலும் அழகிய நிறத்தினைப் பெறவும் கழுத்திடம் அழகுபெறவும் அமுதம்போல அதனை உண்டவரும் நறு நுதலை உடைய உமையம்மை நடுங்க யானையின் தோலைக் கண்டோர் அஞ்சுமாறு உரித்துப் போர்த்தவரும் ஆகிய வாய்மூர் அடிகள் பெண்களின் மனம் கவர வஞ்சனைவடிவோடு வருவார். அவரைக் காணீர்.
2675 அல்லிய மலர்புல்கு விரிகுழலார்
கழலிணை யடிநிழ லவைபரவ
எல்லியம் போதுகொண் டெரியேந்தி
யெழிலொடு தொழிலவை யிசையவல்லார்
சொல்லிய அருமறை யிசைபாடிச்
சூடிள மதியினர் தோடுபெய்து
வல்லியந் தோலுடுத் திவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
2.111.6
அடுக்கடுக்கான இதழ்களை உடைய மலர்களைச் சூடிய விரிந்த கூந்தலை உடைய மகளிர் தம் திருவடிகளைப் பரவ இராப்போதில் எரியேந்தி ஆடும் அவ்விறைவர் அம் மகளிரது பரவு தலை ஏற்றருளுபவர். வேதங்களைப் பாடிக்கொண்டு, இளமதி சூடி ஒருகாதில் தோடணிந்து புலித்தோலுடுத்துவருவார். அவ்வாய்மூர் இறைவரைக் காணீர்.
2676 கடிபடு கொன்றைநன் மலர்திகழுங்
கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்
முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார்
முறைமுறை பலிபெய முறுவல்செய்வார்
பொடியணி வடிவொடு திருவகலம்
பொன்னென மிளிர்வதொர் அரவினொடும்
வடிநுனை மழுவினொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
2.111. 7
மணம் கமழும் கொன்றை மலர் மாலையைத் தலையில் அணிந்தவர். தேவர்கள் தலையில் சூடிய முடிகளில் பதித்த முழு மணிகளின் ஒளி சிதறும் திருவடியினர். வீதிகளில் பெண்கள் பலியிடலைக் கண்டு முறுவல் செய்பவர். திருநீறு அணிந்த வடிவோடும், பொன்போல் மிளிரும் பாம்பணிந்த மார்போடும், கூரிய மழுவை ஏந்தி அவ்வாய்மூர் இறைவர் வருவார். காணீர்.
2677 கட்டிணை புதுமலர்க் கமழ்கொன்றைக்
கண்ணியர் வீணையர் தாமுமஃதே
எட்டுணை சாந்தமொ டுமைதுணையா
இறைவனா ருறைவதொர் இடம்வினவில்
பட்டிணை யகலல்குல் விரிகுழலார்
பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வட்டணை யாடலொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
2.111. 8
இணை இணையாகக் கட்டப்பட்ட புதிய கொன்றை மலர் மாலையைத் தலையில் அணிந்தவர். வீணை வாசிப்பவர். அவ்விறைவர் சந்தனமணிந்து உமையம்மை துணையாக உறையுமிடம் வாய்மூராகும். பட்டாடை அணிந்த தாருகாவன மகளிரிடம் பலி கேட்டு அவர்களை மயங்குமாறு செய்து தாளமிட்டுச் சதிராடும் வாய்மூர் இறைவராகிய அப்பெருமானார் வருவார். காணீர்.
2678 ஏனருப்பினொ டெழிலாமை
யிசையப் பூண்டோ ரேறேறிக்
கானம திடமா வுறைகின்ற
கள்வர் கனவிற் றுயர்செய்து
தேனுண மலர்கள் உந்திவிம்மித்
திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற
வானநன் மதியினொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
2.111. 9
பன்றிக் கொம்போடு ஆமைஓட்டையும் அணிந்து எருதேறிக் காட்டை இடமாகக் கொண்டு உறையும் இவர் நம் உள்ளங்களைக் கவரும் கள்வராவர். கனவிடைத் தோன்றி நமக்குத் துயர் விளைத்துத் தேன்பொருந்திய மலர்களை அணிந்த அழகிய சடைமீது பிறையணிந்து அவ்வாய்மூர் இறைவர் வருவார். காணீர்.
2679 சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர்
சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர்
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார்
பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்
கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார்
குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வாடல்வெண் டலைபிடித் திவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
2.111. 10
பிறைசூடியவராய், சுடர்முடியவராய், திருநீறு பூசியவராய் மழுவேந்தியவராய், கொன்றைமாலை சூடியவராய், பாம்பும் முப்புரி நூலும் அணிந்தவராய், காந்தள் போன்று முகிழ்த்த கையினராகி, தாருகாவன முனி பன்னியர் பலிபெய்யுமாறு பிரமகபாலத்தை ஏந்தியவராய் வாய்மூர் இறைவர் வருவார். காணீர்.
2680 திங்களொ டருவரைப் பொழிற்சோலைத்
தேனலங் கானலந் திருவாய்மூர்
அங்கமொ டருமறை யொலிபாடல்
அழல்நிற வண்ணர்தம் மடிபரவி
நங்கள்தம் வினைகெட மொழியவல்ல
ஞானசம் பந்தன் தமிழ்மாலை
தங்கிய மனத்தினால் தொழுதெழுவார்
தமர்நெறி யுல்குக்கோர் தவநெறியே.
2.111. 11
சந்திரனைச் சென்று தொடும் மதில்களையும் சோலைகளையும் உடையதிருவாய்மூரிலுள்ள, வேதங்கள், வேதாங்கங்கள் ஆகிய பாடல்களின் பொருளாயுள்ள தீ வண்ணரின் திருவடிகளைப் பரவி நம்வினை கெடுமாறு ஞானசம்பந்தன் மொழிந்த இத்தமிழ் மாலை தங்கிய மனத்தோடு அவரைத் தொழும் அடியவர் நெறி, உலகில் மேலான தவநெறியாகும்.
திருச்சிற்றம்பலம்
2.111.திருவாய்மூர் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|