|
||||||||
இரண்டாம் திருமுறை-112 |
||||||||
2.112.திருஆடானை
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆதிரத்தினேசுவரர்.
தேவியார் - அம்பாயிரவல்லியம்மை.
2681 மாதோர்கூறுகந் தேறதேறிய
ஆதியானுறை யாடானை
போதினாற்புனைந் தேத்துவார்தமை
வாதியாவினை மாயுமே. 2.112. 1
அம்பிகையை ஒருபாகமாக உகந்து கொண்டு விடைமேல் ஏறியருளும் முதல்வன் எழுந்தருளிய திருவாடானையை அடைந்து அவ்விறைவனை மலர்களால் அலங்கரித்தும் அர்ச்சித்தும் வழிபடுபவர்களின் வினைகள் அவர்களை வருத்தமாட்டாதனவாய் மாய்ந்துவிடும்.
2682 வாடல்வெண்டலை யங்கையேந்திநின்
றாடலானுறை யாடானை
தோடுலாமலர் தூவிக்கைதொழ
வீடுநுங்கள் வினைகளே. 2.112. 2
உலர்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி நின்று ஆடுதலை உடைய சிவபிரானது திருவாடானையை அடைந்து அவ்விறைவனை மலர்தூவித் தொழுதால் உங்கள் வினைகள் யாவும் அழியும்.
2683 மங்கைகூறினன் மான்மறியுடை
அங்கையானுறை யாடானை
தங்கையாற்றொழு தேத்தவல்லவர்
மங்குநோய்பிணி மாயுமே. 2.112. 3
மங்கை பங்கனும் மான் கன்றைக் கையில் ஏந்தியவனுமாகிய சிவபிரான் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவனைத் தம் கைகளைக் கூப்பிப் போற்றவல்லவர்களின் நோய்கள் கெடும் பிணிகள் (வினைகள் மாயும்).
2684 சுண்ணநீறணி மார்பிற்றோல்புனை
அண்ணலானுறை யாடானை
வண்ணமாமலர் தூவிக்கைதொழ
எண்ணுவாரிட ரேகுமே. 2.112. 4
சந்தனச் சுண்ணமும் திருநீறும் அணிந்த மார்பில் பூணநூலின்கண் மான்தோலைப் புனைந்துள்ள தலைமைக் கடவுளாகிய சிவபிரானுறையும் திருவாடானையை அடைந்து, அவ்விறைவனை அழகும் மணமும் கூடிய மலர்களைத்தூவிக் கைதொழ எண்ணுபவர்களின் இடர் ஏகும்.
2685 கொய்யணிம்மலர்க் கொன்றைசூடிய
ஐயன்மேவிய வாடானை
கையணிம்மல ரால்வணங்கிட
வெய்யவல்வினை வீடுமே. 2.112. 5
கொய்யப் பெற்றதும் அழகியதுமாகிய கொன்றை மலர் மாலையைச் சூடிய தலைவன் எழுந்தருளிய திருவாடானையை அடைந்து அவ்விறைவனைக் கைகளால் மலர்தூவித்தொழுது வணங்குபவர்களின் கொடிய வல்வினைகள் அவர்களை விட்டொழியும்.
2686 வானிளம்மதி மல்குவார்சடை
ஆனஞ்சாடல னாடானை
தேனணிம்மலர் சேர்த்தமுன்செய்த
ஊனமுள்ள வொழியுமே. 2.112. 6
வானில் விளங்கும் இளம்பிறையைத் தமது திருமுடியில் சூடியவரும் நீண்ட சடைமுடியை உடையவரும், பஞ்ச கௌவியத்தை விரும்பி ஆடுபவருமாகிய சிவபெருமான் எழுந்தருளிய திரு ஆடானையை அடைந்து அவ்விறைவர் திருவடிகளில் தேன் பொருந்திய அழகிய மலர்களைச் சேர்ப்பவர்களின் முன் வினைகளாக உள்ளனயாவும் ஒழியும்.
2687 துலங்குவெண்மழு வேந்திச்சூழ்சடை
அலங்கலானுறை யாடானை
நலங்கொண்மாமலர் தூவிநாடொறும்
வலங்கொள்வார்வினை மாயுமே. 2.112. 7
விளங்குகின்ற வெண்மழுவைக் கையில் ஏந்தி, சுற்றிய சடைமுடிமீது கொன்றை வில்வமாலைகளை அணிந்துள்ள 148 சிவபெருமான் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவனை அழகும் மணமும் கொண்ட மலர்களைத் தூவித் தொழுது நாள்தோறும் அவன் திருக்கோயிலை வலம்வருவார் வினைகள் மாயும்.
2688 வெந்தநீறணி மார்பிற்றோல்புனை
அந்தமில்லவ னாடானை
கந்தமாமலர் தூவிக்கைதொழும்
சிந்தையார்வினை தேயுமே. 2.112. 8
தீயிடைவெந்த திருநீற்றை அணிந்தவரும் மார்பின் கண் மான்தோலை அணிந்தவரும், தோற்றக் கேடு இல்லாதவருமான சிவபெருமான் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவரை மணமலர்களைத்தூவி வழிபடும் சிந்தனையை உடையவர் களின் வினைகள் தேயும்.
2689 மறைவலாரொடு வானவர்தொழு
தறையுந்தண்புன லாடானை
உறையும்ஈசனை யேத்தத்தீவினை
பறையுநல்வினை பற்றுமே. 2.112. 9
வேதங்களில் வல்ல அந்தணர்களோடு விண்ணில் உறையும் தேவர்களும் வந்து வணங்கும் நீர்வளம்சான்ற திருவாடானையில் உறையும் ஈசனை ஏத்தத் தீவினைகள் அழியும். நல்வினைகள் வந்துசேரும்.
2690 மாயனும்மல ரானுங்கைதொழ
ஆயவந்தண னாடானை
தூயமாமலர் தூவிக்கைதொழத்
தீயவல்வினை தீருமே. 2.112. 10
மாயவனாகிய திருமாலும், தாமரைமலர் மேலுறையும் நான்முகனும் கைகளால் தொழுது வழிபடுதற்குரியவனாகிய அந்தணன் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவனைத் தூய மலர்களைத் தூவிக்கைகளால் தொழுபவர்களின் தீய வல் வினைகள் தீரும்.
2691 வீடினார்மலி வெங்கடத்துநின்
றாடலானுறை யாடானை
நாடிஞானசம் பந்தனசெந்தமிழ்
பாடநோய்பிணி பாறுமே. 2.112. 11
ஊழிக்காலத்து இறந்தவர்களின் உடல்கள் நிறைந்து எரிந்து வேகும் சுடுகாட்டுள் நின்று உருத்திரதாண்டவமாடும் இறைவன் உறையும் திருவாடானையை அடைந்து ஞானசம்பந்தன் அருளிய இச்செந் தமிழ் மாலையைப் பாடி வழிபடுபவர்களின் நோய்களும் பிணிகளும் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
2.112.திருஆடானை |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|