|
||||||||
இரண்டாம் திருமுறை-114 |
||||||||
2.114.திருக்கேதாரம்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் வடதேசத்திலுள்ளது.
சுவாமிபெயர் - கேதாரேசுவரர்.
தேவியார் - கௌரியம்மை.
2703 தொண்டரஞ்சு களிறும்
அடக்கிச் சுரும்பார்மலர்
இண்டைகட்டி வழிபாடு
செய்யு மிடமென்பரால்
வண்டுபாட மயிலால
மான்கன்று துள்ளவரிக்
கெண்டைபாயச் சுனைநீல
மொட்டலருங் கேதாரமே.
2.114. 1
அடியவர் ஐம்புலக்களிறுகளையும் அடக்கி ஆண்டு, நாண்மலர்களைக் கொண்டு இண்டைகட்டிச் சார்த்தி வழிபாடு செய்யுமிடம், வண்டுகள் பாடவும், மயில்கள் ஆர்ப்பரிக்கவும், மான் கன்றுகள் துள்ளவும், சுனைகளில் கெண்டைகள் பாய்வதால் நீலமலர் மொட்டுக்கள் அலரவும் விளங்கும் திருக்கேதாரமாகும்.
2704 பாதம்விண்ணோர் பலரும்
பரவிப் பணிந்தேத்தவே
வேதநான்கும் பதினெட்டொ
டாறும் விரித்தார்க்கிடம்
தாதுவிண்ட மதுவுண்டு
மிண்டிவரு வண்டினம்
கீதம்பாட மடமந்தி
கேட்டுகளுங் கேதாரமே.
2.114. 2
விண்ணோர் பலரும்பாதம் பரவித் தொழ நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பதினெண் புராணங்களையும் விரித்துரைத்த சிவபிரானுக்கு இடம், மலரின் மது உண்ட வண்டுகள் கீதம்பாட மந்திகள் கேட்டு மகிழும் திருக்கேதாரமாகும்.
2705 முந்திவந்து புரோதாய
மூழ்கி முனிகள்பலர்
எந்தைபெம்மா னெனநின்றி
றைஞ்சும் மிடமென்பரால்
மந்திபாயச் சரேலச்
சொரிந்தும் முரிந்துக்கபூக்
கெந்தநாறக் கிளருஞ்
சடையெந்தை கேதாரமே.
2.114. 3
முனிவர்கள் உதயத்துக்கு முன் எழுந்து நீராடி எந்தைபெருமான் என இறைஞ்சச் சடாதாரியான சிவபிரானுக்குரிய இடம், மந்திகள் பாய்தலால் சரேலெனத் தேனைச் சொரிந்து முரிந்து வீழ்ந்த மலர்களின் மணங்கமழும் திருக்கேதாரமாகும்.
2706 உள்ளமிக்கார் குதிரைம்
முகத்தார் ஒருகாலர்கள்
எள்கலில்லா இமையோர்கள்
சேரும் மிடமென்பரால்
பிள்ளைதுள்ளிக் கிள்ளைபயில்வ
கேட்டுப் பிரியாதுபோய்க்
கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து
வாய்ப்பெய்யுங் கேதாரமே.
2.114. 4
தியான பலம் உடையோரும், குதிரை முகமுடைய கின்னரரும், ஒற்றைக் காலுடைய பிரமதகணத்தவரும் இமையவரும் சிவபிரானை வழிபடக் கூடுமிடம், தம்குஞ்சுகள் பசியோடு தம்மை அழைப்பதைக் கேட்டுக் கிளிகள் ஏனற் கதிர்களைக் கொய்து வந்து அவற்றின் வாயிற் பெய்யும் திருக்கேதாரமாகும்.
2707 ஊழியூழி யுணர்வார்கள்
வேதத்தினொண் பொருள்களால்
வாழியெந்தை யெனவந்தி
றைஞ்சும் இடமென்பரால்
மேழிதாங்கி யுழுவார்கள்
போலவ்விரை தேரிய
கேழல்பூழ்தி கிளைக்க
மணிசிந்துங் கேதாரமே.
2.114. 5
பல்லூழிக்காலம் வேதப் பொருள்களை உணரும் அடியவர் சிவபெருமானை வாழ்த்தி இறைஞ்சிச் சேரும் இடம், உணவு பெற விரும்பிக் கலப்பையால் உழுவார்க்கு அந்நிலத்தில் மாணிக்க மணிகள் கிடைக்கும் திருக்கேதாரமாகும்.
2708 நீறுபூசி நிலத்துண்டு
நீர்மூழ்கி நீள்வரைதன்மேல்
தேறுசிந்தை யுடையார்கள்
சேரும் இடமென்பரால்
ஏறிமாவின் கனியும்பலா
வின்இருஞ் சுளைகளும்
கீறிநாளும் முசுக்கிளையோ
டுண்டுகளுங் கேதாரமே.
2.114. 6
நீரில் மூழ்கித் திருநீற்றை அணிந்து, நிலத்திடை உண்டு, நீண்ட மலையின்மேல் தௌந்த சிந்தை உடையவர்களான தாபதர்கள் வாழும் இடம், குரங்குகள் மா,பலா மரங்களில் ஏறி அவற்றின் கனிகளைக் கீறி உண்டு மகிழ்ந்து வாழும் திருக்கேதாரமாகும்.
2709 மடந்தைபாகத் தடக்கிம்
மறையோதி வானோர்தொழத்
தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க
நின்றார்க் கிடமென்பரால்
உடைந்தகாற்றுக் குயர்வேங்கை
பூத்துதிரக்கல் லறைகண்மேல்
கிடந்தவேங்கை சினமாமுகஞ்
செய்யுங் கேதாரமே.
2.114. 7
சிவபிரான் வானோர் தொழுமாறு மறை ஓதியும், மங்கை பங்கராகியும், வேதாகமங்களை அருளியும், அடியவர் வினைகளைத் தீர்த்தற்கு எழுந்தருளி விளங்கும் இடம், காற்றடிக்கப் பூத்த வேங்கை மலர்கள் பாறைகளின் மேல் உதிர்ந்து கிடந்து புலியென மற்ற புலிகளை மருள்விக்கும் திருக்கேதாரமாகும்.
2710 அரவமுந்நீர் அணியிலங்கைக்
கோனையரு வரைதனால்
வெருவவூன்றி விரலா
டலர்த்தார்க் கிடமென்பரால்
குரவங்கோங்கங் குளிர்பிண்டி
ஞாழல்சுர புன்னைமேல்
கிரமமாக வரிவண்டு
பண்செய்யுங் கேதாரமே.
2.114. 8
கடல்சூழ்ந்த இலங்கை மன்னன் இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தபோது அம்மலைக்கீழ் அகப்படுத்திக் கால்விரலை ஊன்றி அடர்த்த இறைவனுக்கு இடம், குரவம், கோங்கு, அசோகு, ஞாழல், சுரபுன்னை ஆகிய மரங்களில் பூத்த மலர்களில் முறையாக வண்டு பண்செய்து தேனுண்ணும் கேதாரமாகும்.
2711 ஆழ்ந்துகாணா ருயர்ந்தெய்த
கில்லார் அலமந்தவர்
தாழ்ந்துதந்தம் முடிசாய
நின்றார்க் கிடமென்பரால
வீழ்ந்து செற்றுந் நிழற்கிரங்கும்
வேழத்தின்வெண் மருப்பினைக்
கீழ்ந்துசிங்கங் குருகுண்ண
முத்துதிருங் கேதாரமே.
2.114. 9
பன்றியுருக் கொண்டு மண் இடந்தும் காணாத திருமாலும், அன்னப்புள்ளாய் விண் பறந்தும் காணாத பிரமனும் தாழ்ந்துதம் முடிசாய்த்து வணங்க நின்றவனாகிய சிவபிரானுக்கு உரிய இடம், சிங்கம் யானைமேல் வீழ்ந்து அழித்து அதன்மருப்பைப் பிளந்து குருத்தை உண்ணும்போது முத்துக்கள் மருப்பிலிருந்து உதிரும் கேதாரமாகும்.
2712 கடுக்கள்தின்று கழிமீன்
கவர்வார்கண் மாசுடம்பினர்
இடுக்கணுய்ப்பா ரவரெய்த
வொண்ணா விடமென்பரால்
அடுக்கநின்றவ் வறவுரைகள்
கேட்டாங் கவர்வினைகளைக்
கெடுக்கநின்ற பெருமான்
உறைகின்ற கேதாரமே.
2.114. 10
துவர்க்காய்களைத் தின்று கழிமீன்களை யாரும் அறியாமல் கவர்ந்து உண்பவரும், மாசு பொருந்திய உடலினரும் மக்களைத் துன்பநெறியில் செலுத்துவோருமாகிய சமணர்கள் சாராத இடம், அருகில் இருந்து அறநெறியான வார்த்தைகளைக் கேட்டு அடியவர் வினைகளைக் கெடுக்கும் பெருமான் உறையும் கேதாரமாகும்.
2713 > வாய்ந்தசெந்நெல் விளைகழனி
மல்கும்வயற் காழியான்
ஏய்ந்தநீர்க்கோட் டிமையோர்
உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள்
பத்தும்மிசை வல்லவர்
வேந்தராகி யுலகாண்டு
வீடுகதி பெறுவரே.
2.114. 11
வயல்வளம் உடைய காழிநகரில் தோன்றிய ஞானசம்பந்தன், நீர் அருவிகளை உடையதும், இமையோர்கள் உறைவதுமாகிய கேதாரத்து இறைவர்மீது ஆய்ந்து சொன்ன அருந்தமிழ் பத்தையும் இசையோடு பாடி வழிபட வல்லவர். வேந்தராய் உலகை ஆண்டு முடிவில் வீடுகதி பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
2.114.திருக்கேதாரம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|