|
||||||||
இரண்டாம் திருமுறை-2 |
||||||||
2.002.திருவலஞ்சுழி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காப்பகத்தீசுவரர்.
தேவியார் - மங்களநாயகியம்மை.
1480 விண்டெ லாமல ரவ்விரை
நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யால்இசை
பாடும்வ லஞ்சுழித்
தொண்டெ லாம்பர வுஞ்சுடர்
போல்ஒளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி
பாடல்ப யின்றதே.
2.002. 1
மலர்கள் எல்லாம் விண்டு மணம் வீசவும், அம்மலர்களில் நிறைந்துள்ள தண்ணிய தேனை உண்ணும்விருப்பினால் வண்டுகள் இசைபாடவும், விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழியில் தொண்டர்கள் பரவச் செஞ்சுடர் போன்ற ஒளியினை உடையவராய் எழுந்தருளிய இறைவரே! முன்னெல்லாம் நீர் ஒலியோடு பாடல்களைப் பாடிக்கொண்டு பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
1481 பாரல் வெண்குரு கும்பகு
வாயன நாரையும்
வாரல் வெண்டிரை வாயிரை
தேரும்வ லஞ்சுழி
மூரல் வெண்முறு வல்நகு
மொய்யொளி யீர்சொலீர்
ஊரல் வெண்டலை கொண்டுல
கொக்கவு ழன்றதே.
2.002.2
நீண்ட கழுத்தினை உடைய வெள்ளிய கொக்குகளும், பிளந்த வாயை உடைய நாரைகளும், ஓடுகின்ற தண்ணீரின் வெண்மையான அலைகளில் இரை தேடுகின்ற திருவலஞ்சுழியில் புன்னகையோடு வெள்ளி பற்கள் விளங்க, செறிந்த ஒளிப்பிழம்பினராய் எழுந்தருளிய இறைவரே! முடியில் வெண்மையான தலை மாலை பொருந்தியவராய் உலகம் முழுவதும் சென்று திரிந்து பலி ஏற்கக் காரணம் யாதோ? சொல்வீராக.
1482 கிண்ண வண்ணமல ருங்கிளர்
தாமரைத் தாதளாய்
வண்ண நுண்மணன் மேலனம்
வைகும்வ லஞ்சுழிச்
சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய்
பூசவல் லீர்சொலீர்
விண்ண வர்தொழ வெண்டலை
யிற்பலி கொண்டதே.
2.002. 3
கிண்ணம் போல் வாய் விரிந்து செவ்வண்ணம் பொருந்தியதாய் மலர்ந்து விளங்கும் தாமரை மலர்களின் தாதுகளை அளாவி அழகிய நுண்மணற் பரப்பின் மேல் அன்னங்கள் வைகும் திருவலஞ்சுழியில், உடலிற்பூசும் சுண்ணமாகத் திருநீற்றுப் பொடியை மேனிமேற் பூசுதலில் வல்லவராய் விளங்கும் இறைவரே! தேவர்கள் எல்லாம் உம்மை வந்து வணங்கும் தலைமைத்தன்மை உடையவராயிருந்தும் வெள்ளிய தலையோட்டில் பலிகொண்டு திரிதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
1483 கோடெ லாநிறை யக்குவ
ளைம்மல ருங்குழி
மாடெ லாமலி நீர்மண
நாறும்வ லஞ்சுழிச்
சேடெ லாமுடை யீர்சிறு
மான்மறி யீர்சொலீர்
நாடெ லாமறி யத்தலை
யில்நற வேற்றதே.
2.002.4
கரைகளெல்லாம் நிறையுமாறு குழிகளில் பூத்த குவளை மலர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருத்தலால் அங்குள்ள தண்ணீர், குவளை மலரின் மணத்தை வீசும் திருவலஞ்சுழியில் விளங்கும் பெருமைகள் எல்லாம் உடையவரே! சிறிய மான் கன்றைக் கையில் ஏந்தியவரே! நாடறியத் தலையோட்டில் பிச்சை ஏற்றல் ஏனோ? சொல்வீராக.
1484 கொல்லை வென்றபுனத் திற்குரு
மாமணி கொண்டுபோய்
வல்லை நுண்மணன் மேலனம்
வைகும்வ லஞ்சுழி
முல்லை வெண்முறு வன்னகை
யாளொளி யீர்சொலீர்
சில்லை வெண்டலை யிற்பலி
கொண்டுழல் செல்வமே.
2.002.5
முல்லை நிலத்தைப் போன்ற காடுகளில் கிடைக்கும் நிறம் பொருந்திய மணிகளை எடுத்துச்சென்று விரைவில் அன்னங்கள் நுண்ணிய மணற் பரப்பின்மேல் தங்கி வாழும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிய, முல்லை அரும்பு போன்ற வெண்மையான முறுவலோடு புன்சிரிப்பையுடைய உமாதேவியை ஆளும் ஒளி வடிவுடையவரே! சிறுமையைத்தரும் வெண்டலையோட்டில் பலிகொண்டுழல்வதைச் செல்வமாகக் கருதுதல் ஏனோ? சொல்வீராக.
1485 பூச நீர்பொழி யும்புனற்
பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடை வாரிடர்
தீர்க்கும்வ லஞ்சுழித்
தேச நீர்திரு நீர்சிறு
மான்மறி யீர்சொலீர்
ஏச வெண்டலை யிற்பலி
கொள்வ திலாமையே
2.002.6
நீர் பெருகி வரும் காவிரியில் பூச நன்னாளில் பல மலர்களோடு கூடி மணம் கமழ்ந்துவரும் நீரில் மூழ்குபவர்களின் இடர்களைத் தீர்த்தருளும் திருவலஞ்சுழித் தேசரே! அழகிய சிறிய மான்கன்றைக் கையில் ஏந்தியவரே! பலரும் இகழ வெண்டலையில் நீர் பலிகொள்வது செல்வம் இல்லாமையினாலோ? சொல்வீராக.
1486 கந்த மாமலர்ச் சந்தொடு
காரகி லுந்தழீஇ
வந்த நீர்குடை வாரிடர்
தீர்க்கும்வ லஞ்சுழி
அந்த நீர்முத னீர்நடு
வாமடி கேள்சொலீர்
பந்த நீர்கரு தாதுல
கிற்பலி கொள்வதே.
2.002.7
மணம் பொருந்திய சிறந்த மலர்களையும் சந்தன மரங்களையும், கரிய அகில் மரங்களையும் தாங்கிவந்த காவிரிநீரில் குளிப்பவர்களின் இடர்களைத் தீர்க்கும் திருவலஞ்சுழியில் எழுந்தருளி உலகிற்கு ஆதியும் நடுவும் அந்தமுமாகி விளங்கும் அடிகளே! உலகிற்பற்றை விளைப்பது என்று மக்களை போலக் கருதாமல் பலிகொள்வது ஏனோ! சொல்வீராக.
1487 தேனுற் றநறு மாமலர்ச்
சோலையில் வண்டினம்
வானுற் றநசை யாலிசை
பாடும்வ லஞ்சுழிக்
கானுற் றகளிற் றின்னுரி
போர்க்கவல் லீர்சொலீர்
ஊனுற் றதலை கொண்டுல
கொக்கவு ழன்றதே.
2.002.8
தேன் பொருந்திய பெரிய மலர்ச்சோலையில் வண்டுகள் தேனுண்ணும் நசையால் உயரிய இசையைப் பாடும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிக் கொல்லவந்த காட்டு யானையின் தோலை உரித்துப் போர்த்த வலிமையை உடைய இறைவரே! ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் கொண்டு உலகெங்கும் உழன்றது ஏனோ? சொல்வீராக.
1488 தீர்த்த நீர்வந் திழிபுனற்
பொன்னியிற் பன்மலர்
வார்த்த நீர்குடை வாரிடர்
தீர்க்கும்வ லஞ்சுழி
ஆர்த்து வந்தவ ரக்கனை
அன்றடர்த் தீர்சொலீர்
சீர்த்த வெண்டலை யிற்பலி
கொள்வதுஞ் சீர்மையே.
2.002.9
புனிதமான நீர் வந்து செல்லும் காவிரி ஆற்றில் பன்மலர்களைத் தூவி அவ்வாற்று நீரில் மூழ்குவோரது இடர்களைப் போக்கியருள்பவராய்த் திருவலஞ்சுழியில் மேவி, தன் வலிமையைப் பெரிது எனக் கருதி ஆரவாரித்து வந்த இராவணனை அக்காலத்தில் அடர்த்தவரே! சீர்மை பொருந்திய வெள்ளிய தலையோட்டில் பலி ஏற்றுண்பது உம் பெருமைக்கு அழகோ? சொல்வீராக.
1489 உரம னுஞ்சடை யீர்விடை
யீரும தின்னருள்
வரம னும்பெற லாவது
மெந்தைவ லஞ்சுழிப்
பிரம னுந்திரு மாலும
ளப்பரி யீர்சொலீர்
சிரமெ னுங்கல னிற்பலி
வேண்டிய செல்வமே.
2.002. 10
பெருமை பொருந்திய சடையினை உடையவரே! விடையை ஊர்ந்து வருபவரே! நிலையான வரம் பெறுதற்குரிய இடமாய் உள்ள வலஞ்சுழியில் விளங்கும் எந்தையே! பிரமன் திருமால் ஆகியோரால் அளத்தற்கு அரியரானவரே, நீர் தலையோடாகிய உண் கலனில் பலியைச் செல்வமாக ஏற்றதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
1490 வீடும் ஞானமும் வேண்டுதி
ரேல்விர தங்களால்
வாடின் ஞானமென் னாவது
மெந்தைவ லஞ்சுழி
நாடி ஞானசம் பந்தன
செந்தமிழ் கொண்டிசை
பாடும் ஞானம்வல் லாரடி
சேர்வது ஞானமே.
2.002.11
வீடும் அதற்கு ஏதுவாய ஞானமும் பெறவிரும்பு வீராயின், விரதங்களை மேற்கொண்டு உடல் வாடுவதனால் ஞானம் வந்துறுமோ? திருவலஞ்சுழியை அடைந்து ஞான சம்பந்தர் ஓதி யருளிய செந்தமிழை இசையோடு பாடும் ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின் திருவடிகளை வழிபடுவதொன்றே ஞானத்தைத் தருவதாகும்.
திருச்சிற்றம்பலம்
2.002.திருவலஞ்சுழி |
||||||||
by Swathi on 30 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|