|
||||||||
இரண்டாம் திருமுறை-3 |
||||||||
2.003.திருத்தெளிச்சேரி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பார்வதீசுவரர்.
தேவியார் - சத்தியம்மாளம்மை.
1491 பூவ லர்ந்தன கொண்டுமுப் போதுமும் பொற்கழல்
தேவர் வந்து வணங்கு மிகுதௌச் சேரியீர்
மேவ ருந்தொழி லாளொடு கேழற்பின் வேடனாம்
பாவ கங்கொடு நின்றது போலுநும் பான்மையே. 2.003.1
அலர்ந்தனவாய பூக்களைக் கொண்டு மூன்று வேளைகளிலும் அருச்சித்துத் தேவர்கள் வந்து வழிபடும் புகழ்மிக்க திருத் தௌச்சேரியில் விளங்கும் இறைவரே! யாவராலும் செய்தற்கரிய செயல்களைப்புரியும் உமையம்மையோடு பன்றியின் பின் வேடனாகப் பொய் வேடந்தரித்து நின்றது உம் பெருமைக்கு ஏற்ற செயல்போலும்!
1492 விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவ ரேத்தவே
திளைக்குந் தீர்த்த மறாத திகழ்தௌச் சேரியீர்
வளைக்குந் திண்சிலை மேலைந்து பாணமுந் தானெய்து
களிக்குங் காமனை யெங்ஙன நீர்கண்ணிற் காய்ந்ததே. 2.003. 2
பக்தியை விளைத்தலால் விண்ணவரும் மண்ணவரும் உம்மை வழிபடற்பொருட்டு, திளைத்து முழுகும் தீர்த்தம் விளங்கும் திருத்தௌச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! உம்மீது வளைந்த வலிய வில்லில் ஐந்து மலர்களைப் பாணமாக எய்து களிப்புற்ற மன்மதனை, நீர் நெற்றிக் கண்ணினால் காய்ந்தது எங்ஙனம்?
1493 வம்ப டுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ்
செம்ப டுத்த செழும்புரி சைத்தௌச் சேரியீர்
கொம்ப டுத்ததொர் கோல விடைமிசைக் கூர்மையோ
டம்ப டுத்தகண் ணாளொடு மேவ லழகிதே. 2.003.3
மணம் பொருந்திய மலர்களை உடைய பொழில்களால் சூழப் பெற்றதும், செம்பினை உருக்கி வார்த்துச் செய்த மதில்கள் சூழ்ந்து விளங்குவதுமான திருத்தௌச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! கொம்புகளை உடைய அழகிய விடைமீது கூரிய அம்பு போன்ற கண்களை உடைய உமையம்மையோடு மேவி வருவது அழகுதரும் செயலோ?
1494 காரு லாங்கட லிப்பிகண் முத்தங் கரைப்பெயும்
தேரு லாநெடு வீதிய தார்தௌச் சேரியீர்
ஏரு லாம்பலிக் கேகிட வைப்பிட மின்றியே
வாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே. 2.003.4
நீர் முகந்து செல்லும் மேகங்கள் உலாவும் கடல், முத்துச்சிப்பிகளையும், முத்துக்களையும் அலைகளால் கரையில் கொண்டுவந்து பெய்வதும் தேர்உலாவும் நீண்ட வீதிகளை உடையதுமான திருத்தௌச்சேரியில் விளங்கும் இறைவரே! எழுச்சி மிக்கவராய்ப் பலியேற்கச் செல்கின்ற நீர் கச்சணிந்த தனபாரங்களையுடைய உமையம்மையைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லுதற்கு இடமின்றியோ உமது திருமேனியின் ஒரு பாகமாக வைத்துக் கொண்டுள்ளீர்!
1495 பக்க நுந்தமைப் பார்ப்பதி யேத்திமுன் பாவிக்கும்
செக்கர் மாமதி சேர்மதில் சூழ்தௌச் சேரியீர்
மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வெளவவே
நக்க ராயுல கெங்கும் பலிக்கு நடப்பதே. 2.003. 5
ஒரு பாகமாக உள்ள பார்வதிதேவி உம்மைத் துதித்து, தன் உள்ளத்தே பாவித்து வழிபடுகின்ற, செம்மதிசேரும், மதில் சூழும் திருத்தௌச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! ஆடையின்றிப் பல இடங்களுக்கும் நடந்து சென்று பலியேற்றற்குக் காரணம் மைபூசப் பெற்ற இளம் பெண்களை மயக்கி அவர்களின் கை வளையல்களைக் கவர்தற்குத்தானோ? சொல்லீர்
1496 தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநல்
திவள மாமணி மாடந் திகழ்தௌச் சேரியீர் குவளை
போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய
கவள மால்கரி யெங்ஙன நீர்கையிற் காய்ந்ததே. 2.003.6
வெண்மையான பிறைதோயும் தழைகள் தாழ்ந்த பொழில் சூழ்ந்ததும், அசைகின்ற அழகிய ஒளியினையுடைய மணிகள் இழைக்கப்பட்ட மாடவீடுகள் திகழ்வதுமான திருத்தௌச்சேரியில் உறையும் இறைவரே! குவளை மலர் போன்ற கண்களை உடைய உமை யம்மை நடுங்குமாறு உம்மைக்கொல்ல வந்து அடைந்த கவளம் கொள்ளும் பெரிய யானையை எவ்வாறு நீர் கைகளால் சினந்தழித்தீர்?.
1497 கோட டுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடும்
சேட டுத்த தொழிலின் மிகுதௌச் சேரியீர்
மாட டுத்தமலர்க் கண்ணினாள் கங்கை நங்கையைத்
தோட டுத்த மலர்ச்சடை யென்கொல்நீர் சூடிற்றே. 2.003.7
மரக்கோடுகள் நிறைந்த பொழிலின்கண் இசைபாடும் குயில்கள் இருந்து கூவுவதும், பெருமைமிக்க தொழிலின்கண் ஈடுபட்டோர் மிகுதியாக வாழ்வதுமான திருத்தௌச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! செல்வம் நிறைந்தவளும் மலர்போலும் கண்ணினளும் ஆகிய கங்கை நங்கையை இதழ்கள் பொருந்திய கொன்றை மலர் அணிந்த சடையின்கண் சூடியது ஏனோ? கூறுவீர்.
1498 கொத்தி ரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர்
சித்தி ரக்கொடி மாளிகை சூழ்தௌச் சேரியீர்
வித்த கப்படை வல்ல வரக்கன் விறற்றலை
பத்தி ரட்டிக் கரநெரித் திட்டதும் பாதமே. 2.003.8
வண்டுகள் விரிந்த மலர்க் கொத்துக்களைச் சூடிய கூந்தலினள் ஆகிய பார்வதிதேவி குயில் வடிவு கொண்டு வழிபட்டதும், ஓவியம் எழுதப்பட்ட கொடிகள் கட்டப்பட்ட மாளிகைகள் சூழ்ந்ததும் ஆகிய திருத்தௌச்சேரியில் வாழும் இறைவரே! தவத்தால் பெற்ற வாட் போரில் வல்லவனும் வலிய தலைகள் பத்து, கைகள் இருபது ஆகியவற்றைக் கொண்டவனுமாகிய இராவணனைக் கால் விரலால் நெரித்தது உம்பாதம் அன்றோ? சொல்வீராக.
1499 காலெ டுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ்
சேல டுத்த வயற்பழ னத்தௌச் சேரியீர்
மால டித்தல மாமல ரான்முடி தேடியே
ஓல மிட்டிட வெங்ஙன மோருருக் கொண்டதே. 2.003. 9
காற்றால் எடுத்துக்கொணரப்பெறும் கடலின் திரைகளாகிய கைகள் கரையின்கண் வீசப் பெறுவதும், கடற்கரைச் சோலைகள் சூழ்ந்ததும், சேல் மீன்கள் தவழும் வயல்களை உடைய மருத நிலம் பொருந்தியதும் ஆகிய திருத்தௌச்சேரியில் உறையும் இறைவரே! திருமால் அடியையும், தாமரை மலரில் உறையும் நான் முகன் முடியையும் தேடமுற்பட்டுக் காணாது ஓலம் இட, நீர் எவ்வாறு ஒப்பற்ற பேருருக் கொண்டீர்? உரைப்பீராக.
1500 மந்தி ரந்தரு மாமறை யோர்கள் தவத்தவர்
செந்தி லங்கு மொழியவர் சேர்தௌச் சேரியீர்
வெந்த லாகிய சாக்கிய ரோடு சமணர்கள்
தந்தி றத்தன நீக்குவித் தீரோர் சதிரரே. 2.003. 10
மந்திரங்கள் ஓதும் மறையோர்களும் தவத்தை உடையவர்களும், செந்து என்ற பண் போன்று இனிய மொழி பேசும் மகளிரும், வாழும் திருத்தௌச்சேரியில் உறையும் ஒப்பற்ற சதுரரே! கருநிறங்கொண்ட சாக்கியர்களும் சமணர்களும் பேசும் சமய சிந்தனைகளை எவ்வாறு நீக்கியருளினீர்?.
1501 திக்கு லாம்பொழில் சூழ்தௌச் சேரியெஞ் செல்வனை
மிக்க காழியுண் ஞானசம் பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும்வல் லார்கள் தடமுடித்
தொக்க வானவர் சூழ விருப்பவர் சொல்லிலே. 2.003.11
எட்டுத் திசைகளிலும் பொழில் சூழ்ந்து இலங்கும் திருத்தௌச் சேரியில் உறையும் எம் செல்வன்மீது புகழ்மிக்க காழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய தக்க பாடல்கள் பத்தையும் வேதமுறைப்படி ஓத வல்லவர்கள் அடையும் பயனைக் கூறின், பெரிய முடிகளைச் சூடிய வானவர்கள் சூழ அவர்கள் இருப்பர் எனலாம்.
திருச்சிற்றம்பலம்
2.003.திருத்தெளிச்சேரி |
||||||||
by Swathi on 30 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|