|
||||||||
இரண்டாம் திருமுறை-5 |
||||||||
2.005.திருவனேகதங்காபதம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் வடதேசத்திலுள்ளது.
சுவாமிபெயர் - அருள்மன்னர்.
தேவியார் - மனோன்மணியம்மை.
1513 நீடன் மேவுநிமிர் புன்சடை மேலொர் நிலாமுளை
சூடன் மேவுமறை யின்முறை யாலொர் சுலாவழல்
ஆடன் மேவுமவர் மேயவ னேகதங் காவதம்
பாடன் மேவுமனத் தார்வினை பற்றறுப் பார்களே. 2.005. 1
நீண்டுயர்ந்த சடைமுடிமீது பிறைமதியைச் சூடியவராய் வேத விதிப்படி வளர்க்கப்பெற்றுச் சுழன்றெரியும் தீயில் ஆடு தலை விரும்பும் இறைவர் உறையும் அனேகதங்காவதம் என்னும் தலத்தைப் பாடுதலை விரும்பும் மனத்தினராய பக்தர்கள் வினைகளையும் அவற்றால் விளையும் பற்றுக்களையும் அறுப்பர்.
1514 சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல்
ஆல முண்டபெரு மான்ற னனேகதங் காவதம்
நீல முண்டதடங் கண்ணுமை பாகநிலாயதோர்
கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே. 2.005. 2
சூலத்தையும் மழுவையும் படைக்கலங்களாகக் கொண்டு, உலகைச் சூழ்ந்துள்ள ஆழமான கடலில் தோன்றிய விடத்தை உண்டு உலகைக் காத்தருளிய பெருமான், அனேகதங்காவதத்தில் நீலநிறம் பொருந்திய பெரிய கண்களையுடைய உமையம்மை ஒரு பாகமாக விளங்கும் அழகினராய்,அவ்வம்மையோடு குலாவும் செயல்களுக்கு அளவில்லை.
1515 செம்பி னாருமதின் மூன்றெரி யச்சின வாயதோர்
அம்பி னாலெய்தருள் வில்லி யனேகதங் காவதம்
கொம்பி னேரிடை யாளொடுங் கூடிக்கொல் லேறுடை
நம்ப னாமநவி லாதன நாவென லாகுமே. 2.005. 3
செம்பினால் இயன்ற ஒப்பற்ற மும்மதில்களும் எரியச் சினத்தை முனையிலே உடைய ஓர் அம்பினால் எய்து தேவர்கட்கு அருள்புரிந்த வில்லாளியும், அனேகதங்காவதத்தில் பூங்கொம்பு போன்ற இடையினை உடைய உமையம்மையோடு கூடிக் கொல்லேற்றைத் தனது ஊர்தியாகக் கொண்ட நம்பனுமாகிய பெருமான் திருப்பெயரைச் சொல்லாதவை நாக்கள் எனல் ஆகுமோ?
1516 தந்தத் திந்தத்தட மென்றரு வித்திரள் பாய்ந்துபோய்ச்
சிந்த வெந்தகதி ரோனொடு மாசறு திங்களார்
அந்த மில்லவள வில்ல வனேகதங் காவதம்
எந்தை வெந்தபொடி நீறணி வார்க்கிட மாவதே. 2.005.4
‘தந்தத் திந்தத் தடம்’ என்ற ஒலிக்குறிப்போடு அருவிகள் பாய்ந்து சென்று ஒழுக, வெம்மையான கதிர்களை உடைய கதிரவன் ஒளியும், குற்றமற்ற திங்களின் ஒளியும் பரவ, முடிவு அற்ற அளவுபடுத்த முடியாத அனேகதங்காவதம், எந்தையாகிய, திருநீற்றைப் பூசி மகிழும் சிவபெருமானுக்கு இடமாக உள்ளது.
1517 பிறையு மாசில்கதி ரோனறி யாமைப் பெயர்ந்துபோய்
உறையுங் கோயில் பசும்பொன் னணியா ரசும்பார்புனல்
அறையு மோசை பறைபோலு மனேகதங் காவதம்
இறையெம் மீச னெம்மா னிடமாக வுகந்ததே. 2.005.5
திங்களும் ஞாயிறும் உயர்ச்சியை அறிய முடியாது, பக்கத்தே விலகிச் சென்று உறையும் வானளாவிய கோயிலை உடைய தாய்ப் பசும்பொன் போன்ற அழகிய நீர்த்துளிகளை உடையவாய்ப் பறை போன்று ஒலித்து ஒழுகும் அருவிகளை அடுத்துள்ளது ஆகிய அனேகதங்காவதத்தை, எம் ஈசனாகிய இறைவன் தனது இடமாகக் கொண்டு உகந்தருளுகின்றான்.
1518 தேனை யேறுநறு மாமலர் கொண்டடி சேர்த்துவீர்
ஆனை யேறுமணி சார லனேகதங் காவதம்
வானை யேறுநெறி சென்றுண ருந்தனை வல்லிரேல்
ஆனை யேறுமுடி யானருள் செய்வதும் வானையே. 2.005. 6
தேனை மிகுதியாகப் பெற்ற மணம் கமழும் சிறந்த மலர்களைப் பறித்து இறைவன் திருவடிகளில் சேர்ப்பிக்கும் அடியவர்களே! வீடுபேறு அடைதற்குப் பின்பற்றும் சரியை, கிரியை முதலான நெறிகளில் நின்று அவனை உணர நீவிர் வல்லீராயின் யானைகள் ஏறி உலாவும் அழகிய சாரலை உடைய அனேகதங்காவதத்துள் விளங்கும் ஆன் ஐந்தாடும் முடியானாகிய சிவபிரான் உங்கட்கு அவ்வானுலகப் பேற்றினை வழங்கியருளுவான்.
1519 வெருவி வேழமிரி யக்கதிர் முத்தொடு வெண்பளிங்
குருவி வீழவயி ரங்கொழி யாவகி லுந்திவெள்
அருவி பாயுமணி சாரல னேகதங் காவதம்
மருவி வாழும்பெரு மான்கழல் சேர்வது வாய்மையே. 2.005. 7
யானைகள் அஞ்சி ஓடுமாறு ஒலித்துப்பாய்வனவும், ஒளிபொருந்திய முத்துக்கள், வெண்பளிங்கு ஆகியன நீரை ஊடுருவி வீழ்வனவும், வயிரங்களைக் கொழித்து அகில்மரங்களை உந்திக்கொண்டு வருவனவும் ஆகிய வெண்மையான அருவிகள் பாயும் அழகிய சாரலை உடைய அனேகதங்காவதத்தை அடைந்து அங்கு வாழும் பெருமான் திருவடிகளை அடைவதே மெய்ந்நெறியாகும்.
1520 ஈர மேதுமில னாகி யெழுந்த விராவணன்
வீர மேதுமில னாக விளைத்த விலங்கலான்ஆரம்
பாம்ப தணிவான்ற னனேகதங் காவதம்
வார மாகிநினை வார்வினை யாயின மாயுமே. 2.005.8
அன்பு ஒருசிறிதும் இன்றித் தன் வலிமையைப் பெரிது என எண்ணி எழுந்த இராவணனை வீரம் அற்றவனாகச் செய்தருளிய, கயிலை மலைக்குரியவனும், ஆரமாகப் பாம்பை அணிபவனும் ஆகிய சிவபிரானின் அனேகதங்காவதத்தை அன்போடு நினைபவர் வினைகள் மாயும்.
1521 கண்ணன் வண்ணமல ரானொடுங் கூடியோர்க் (கையமாய்
எண்ணும் வண்ணமறி யாமை யெழுந்ததோ ராரழல்
அண்ண னண்ணுமணி சாரல னேகதங் காவதம்
நண்ணும் வண்ணமுடை யார்வினை யாயின நாசமே. 2.005.9
திருமால் நான்முகனோடு கூடி அடிமுடி அறிய முற்பட்டபோது அவர்கள் அறிய முடியுமா என எண்ணி ஐயுறும் வண்ணம் அவர்கட்கு இடையே எழுந்ததோர் அழற்பிழம்பாகிய சிவபெருமான் எழுந்தருளிய அழகிய சாரலை உடைய அனேகதங்காவதத்தை நண்ணும் இயல்புடையார் வினைகள் நாசமாகும்.
1522 மாப தம்மறி யாதவர் சாவகர் சாக்கியர்
ஏப தம்பட நின்றிறு மாந்துழல் வார்கள்தாம்
ஆப தம்மறி வீருளி ராகில னேகதங்
காப தம்மமர்ந் தான்கழல் சேர்தல் கருமமே. 2.005.10
சிறந்த சிவபதத்தை அறியாதவராகிய சமண புத்தர்கள் ‘ஏஏ’ என இகழத்தக்கவர்களாய் இறுமாப்புடையவர்களாய் உழல்கின்றவர் ஆவர். நாம் அடையத்தக்கது ஆகிய சிவபதத்தை அறியும் அவா உடையீராயின் அனேகதங்காவதத்துள் எழுந்தருளிய சிவபிரான் திருவடிகளை ஆராய்ந்துணர்தல நீவிர் செய்யத்தக்க கருமம் ஆகும்.
1523 தொல்லையூ ழிப்பெயர் தோன்றிய தோணிபு ரத்திறை
நல்லகேள் வித்தமிழ் ஞானசம் பந்தனல் லார்கண்முன்
அல்லல் தீரவுரை செய்த வனேகதங் காவதம்
சொல்ல நல்லவடை யும்மடை யாசுடு துன்பமே. 2.005.11
பழமையான ஊழிக்காலத்தே தோணியாய் மிதந்த காரணத்தால் அப்பெயர் பெற்ற தோணிபுரம் என்னும் சீகாழிப்பதியின் தலைவனும், நல்ல நூற்கேள்வியை உடையவனும் ஆகிய தமிழ் ஞானசம்பந்தன் நல்லோர்கள் திருமுன்னர், அல்லல்தீர உரைத்தருளிய அனேகதங்காவதத்தைப் புகழ்ந்து போற்றின், நல்லன வந்துறும். நம்மைச் சுடும் துன்பங்கள் நம்மை அடைய மாட்டா.
திருச்சிற்றம்பலம்
2.005.திருவனேகதங்காபதம் |
||||||||
by Swathi on 30 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|