|
||||||||
இரண்டாம் திருமுறை-115 |
||||||||
2.115.திருப்புகலூர்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர்.
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
2714 வெங்கள்விம்மு குழலிளைய
ராடவ்வெறி விரவுநீர்ப்
பொங்குசெங்கட் கருங்கயல்கள்
பாயும்புக லூர்தனுள்
திங்கள்சூடித் திரிபுரம்ஓர்
அம்பால்எரி யூட்டிய
எங்கள்பெம்மான் அடிபரவ
நாளும்இடர் கழியுமே.
2.115. 1
விரும்பத்தக்க தேன் விம்மும் மலர்கள் கூடிய கூந்தலினராகிய இளம்பெண்கள் ஆட, மணம் விரவும் நீர்நிலையில் வாழும் செம்மைமிக்க கண்களை உடைய கரிய கயல்மீன்கள் துள்ளிப் பாயும் புகலூரில் விளங்கும் திங்கள் சூடித் திரிபுரங்கள் ஓரம்பால் எரியூட்டிய எங்கள் பெருமான் திருவடிகளைப்பரவ இடர் கெடும்.
2715 வாழ்ந்தநாளும் இனிவாழு
நாளும்இவை யறிதிரேல்
வீழ்ந்தநாளெம் பெருமானை
யேத்தாவிதி யில்லிகாள்
போழ்ந்ததிங்கட் புரிசடையி
னான்றன் புகலூரையே
சூழ்ந்தவுள்ளம் முடையீர்கள்
உங்கள்துயர் தீருமே.
2.115. 2
இதுவரை வாழ்ந்த நாளையும் இனி வாழும் நாளையும் அறிவீரேயானால் எம்பெருமானை ஏத்தாத நாள்கள் வீழ்ந்த நாட்கள் என்றறிந்தும், எம்பெருமானை ஏத்தும் நல்லூழாகிய விதி இல்லாதவர்களே! பிறை மதிசூடிய சடையினான்தன் புகலூரை மறவாது நினையும் உள்ளம் உடையீர்களாயின் உங்கள் துயர் தீரும்.
2716 மடையின்நெய்தல் கருங்குவளை
செய்யமலர்த் தாமரை
புடைகொள்செந்நெல் விளைகழனி
மல்கும்புக லூர்தனுள்
தொடைகொள்கொன்றை புனைந்தானொர்
பாகம்மதி சூடியை
அடையவல்லவர் அமருலகம்
ஆளப்பெறு வார்களே.
2.115. 3
மடைகளில் நெய்தல், குவளை, செந்தாமரைமலர் ஆகியன விளங்க, அருகில் செந்நெல் விளையும் வயல்களை உடைய புகலூரில் தன்பாகத்தே கொன்றை மாலை சூடி மதிபுனைந்து உமையோடு விளங்கும் சிவபிரானை அடைய வல்லவர் அமருலகு ஆள்வர்.
2717 பூவுநநீரும் பலியுஞ்
சுமந்து புகலூரையே
நாவினாலே நவின்றேத்த
லோவார்செவித் துளைகளால்
யாவுங்கேளார் அவன்பெருமை
யல்லால்அடி யார்கடாம்
ஓவும்நாளும் உணர்வொழிந்த
நாளென் றுள்ளங்கொள்ளவே.
2.115. 4
பூவும், நீரும், நிவேதனப் பொருள்களும் எடுத்துவந்து புகலூரை அடைந்து, அங்குள்ள பெருமானை நாவினால் நவின்று, ஏத்த வல்லவராய், செவிகளால் அவன் பெருமையல்லால் யாதும் கேளாதவராய்த் தொண்டுபூண்ட அடியவர்களே இறைவனை நினைதல் பேசுதல் இல்லாத நாள்களைப் பயனின்றிக் கழிந்த நாள் என்றும் உணர்வு ஒழிந்த நாள் என்றும் கருதுவர்.
2718 அன்னங்கன்னிப் பெடைபுல்கி
யொல்கியணி நடையவாய்ப்
பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன
மாலும்புக லூர்தனுள்
முன்னம்மூன்று மதிலெரித்த
மூர்த்திதிறங் கருதுங்கால்
இன்னரென்னப் பெரிதரியர்
ஏத்தச் சிறிதௌயரே.
2.115. 5
அன்னங்கள் கன்னிப் பெடைகளைத் தழுவி ஒதுங்கி அழகிய நடையினவாய்ப் பொன்போன்று அலரும் காஞ்சி மரங்களின் நிழலில் ஆரவாரிக்கும் புகலூரில், முன் நாளில் முப்புரங்களை எரித்த மூர்த்தியின் இயல்புகளைக் கருதுமிடத்து இத்தகையவர் என்னப் பெரிதும் அரியராய் அடியார்கள் ஏத்த மிக எளியவர் ஆவர்.
2719 குலவராகக் குலமிலரும்
மாகக்குணம் புகழுங்கால்
உலகினல்ல கதிபெறுவ
ரேனும்மலர் ஊறுதேன்
புலவமெல்லாம் வெறிகமழும்
அந்தண்புக லூர்தனுள்
நிலவமல்கு சடையடிகள்
பாதம் நினைவார்களே.
2.115. 6
உயர் குலத்தினராயினும் அல்லாதவராயினும் அவருடைய குணங்களைப் புகழுமிடத்து அவர் நற்கதி பெறுவர். ஆதலின், அடியவர்கள் மலர்களில் விளைந்த தேனால், புலால் நாறும் இடங்களிலும் மணம் வீசுகின்ற, அழகிய புகலூரில் பிறையணிந்த சடையுடைய அடிகளின் திருவடிகளையே நினைவார்கள்.
2720 ஆணும்பெண்ணும் மெனநிற்ப
ரேனும்அர வாரமாப்
பூணுமேனும் புகலூர்தனக்
கோர்பொரு ளாயினான்
ஊணும்ஊரார் இடுபிச்சை
யேற்றுண்டுடை கோவணம்
பேணுமேனும் பிரானென்ப
ரால்எம்பெரு மானையே.
2.115. 7
புகலூரைத் தமக்குரிய இடமாகக் கொண்ட இறைவர் ஆணும் பெண்ணுமான வடிவுடையரேனும், பாம்புகளை உடல் முழுதும் அணிகலன்களாகப் பூண்பவரேனும், ஊரார் இடும்பிச்சையை ஏற்று உண்பவரேனும், கோவணம் ஒன்றையே உடையாகக் கொண்டவரேனும், அடியவர் அவரையே பிரான் என்பர்.
2721 உய்யவேண்டில் எழுபோத
நெஞ்சேயுயர் இலங்கைக்கோன்
கைகளொல்கக் கருவரை
யெடுத்தானை யோர்விரலினால்
செய்கைதோன்றச் சிதைத்தருள
வல்லசிவன் மேயபூம்
பொய்கைசூழ்ந்த புகலூர்
புகழப் பொருளாகுமே.
2.115. 8
நெஞ்சே! உய்தி பெற வேண்டில் எழுக, போதுக; உயரிய இலங்கைக்கு அரசனாகிய இராவணனை, கைகளால் கயிலை மலையைப் பெயர்த்தவனை ஓர் விரலால் தன் வன்மை தோன்றச் சிதைத்து அருளவல்ல சிவன் மேவிய, பூம் பொய்கை சூழ்ந்த புகலூரைப் புகழ்ந்து போற்ற அதுவே அடைதற்குரிய மெய்ப் பொருள் ஆகும்.
2722 நேமியானும் முகநான்
குடையந்நெறி யண்ணலும்
ஆமிதென்று தகைந்தேத்தப்
போயாரழ லாயினான்
சாமிதாதை சரணாகு
மென்றுதலை சாய்மினோ
பூமியெல்லாம் புகழ்செல்வம்
மல்கும் புகலூரையே.
2.115. 9
சக்கராயுதம் உடைய திருமாலும், நான்முகனும் இதுவே ஏற்ற வழி எனக்கூறுபடுத்திப் பன்றியாயும் அன்னமாயும் வடிவு கொண்டு தேட அழலுரு ஆனவனும் முருகனின் தந்தையும் ஆகிய புகலூர்ப் பெருமானே நாம் சரண் அடைதற்குரியவன் ஆவன், என்று தலைதாழ்த்தி வணங்குமின் உலகம் புகழும் செல்வமும் நலமும் நிறையும்.
2723 வேர்த்தமெய்யர் உருவத்
துடைவிட் டுழல்வார்களும்
போர்த்தகூறைப் போதிநீழ
லாரும் புகலூர்தனுள்
தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த
தேவன்திறங் கருதுங்கால்
ஓர்த்துமெய்யென் றுணராது
பாதந்தொழு துய்ம்மினே.
2.115. 10
வியர்வை தோன்றிய உடலினோரும், உடலில் உடையின்றித்திரிபவரும், ஆடையைப் போர்த்திக் கொண்டு அரசமரநிழலில் உறைவாரும் ஆகிய சமணரும் புத்தரும் கூறும் நெறிகளை விடுத்து, புகலூரில் கங்கைசூடிய பெருமான் திருவடிகளைக் கருதி வழிபடுமிடத்து அவனுடைய இயல்புகளை ஆராய முற்படாமல் அவன் திருவடிகளை வணங்கி உய்மின்.
2724 புந்தியார்ந்த பெரியோர்கள்
ஏத்தும் புகலூர்தனுள்
வெந்தசாம்பற் பொடிப்பூச
வல்லவிடை யூர்தியை
அந்தமில்லா அனலாட
லானையணி ஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாடி
யாடக்கெடும் பாவமே.
2.115. 11
அறிவார்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூரில் நன்கு வெந்த திருநீற்றுப் பொடியைப் பூசவல்லவனும் விடையூர்த்தியனும்,, அழிவற்ற அனலில் நின்று ஆடுபவனும் ஆகிய பெருமானை ஞான சம்பந்தன் சொன்ன இத்தமிழ்மாலையைப் பாடி, ஆடிப் போற்ற, பாவம் கெடும்.
திருச்சிற்றம்பலம்
2.115.திருப்புகலூர் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|