|
||||||||
இரண்டாம் திருமுறை-116 |
||||||||
2.116.திருநாகைக்காரோணம்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர்.
தேவியார் - நீலாயதாட்சியம்மை.
2725 கூனல்திங்கட் குறுங்கண்ணி
கான்றந்நெடு வெண்ணிலா
ஏனற்பூத்தம் மராங்கோதை
யோடும்விரா வுஞ்சடை
வானநாடன் அமரர்பெரு
மாற்கிட மாவது
கானல்வேலி கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே.
2.116. 1
வளைந்த பிறையாகிய சிறிய தலைமாலை, ஒளி உமிழும் வெண்ணிலவில் குறிஞ்சி நிலத்தில் தினைக்கொல்லையில் பூத்த கடம்பமலர் மாலை ஆகியவற்றைப் புனைந்த சடையை உடைய வானநாடனும், அமரர் பெருமானும் ஆகிய இறைவற்கு இடமாவது சோலைகளை வேலியாகக் கொண்டதும் உப்பங்கழிகளை உடையதுமாகிய கடல்நாகைக்காரோணமாகும்.
2726 விலங்கலொன்று சிலையாமதில்
மூன்றுடன் வீட்டினான்
இலங்குகண்டத் தெழிலாமை
பூண்டாற் கிடமாவது
மலங்கியோங்கிவ் வருவெண்டிரை
மல்கிய மால்கடல்
கலங்கலோதங் கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே.
2.116. 2
மேருமலை ஒன்றை வில்லாகக் கொண்டு மும்மதில்களை அழித்தவனும் அழகிய கழுத்தில் ஆமை ஓட்டைப் பூண்டவனும் ஆகிய இறைவனுக்கு இடம், கலங்கி ஓங்கி வரும் வெண் திரைகளை உடைய கடலின் கரையில் கலங்கிய நீர்ப்பெருக்கோடு கூடிய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக்காரோணமாகும்.
2727 வெறிகொளாருங் கடற்கைதை
நெய்தல்விரி பூம்பொழில்
முறிகொண்ஞாழல் முடப்புன்னை
முல்லைமுகை வெண்மலர்
நறைகொள்கொன்றைந் நயந்தோங்கு
நாதற் கிடமாவது
கறைகொளோதங் கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே.
2.116. 3
தளிர்களோடு கூடிய ஞாழல்மலர், வளைந்த புன்னை மரத்தில் பூத்தமலர்கள், வெள்ளிய முல்லையரும்புகள், தேன் நிறைந்த கொன்றைமலர் ஆகியவற்றை விரும்பி அணியும் பெருமானுக்கு இடம், மணம் கமழும் தாழைமலர், நெய்தல்மலர் ஆகியவை நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட, கரிய ஓதம் பரவி விளங்கும் கடல் நாகைக்காரோணமாகும்.
2728 வண்டுபாட வளர்கொன்றை
மாலைமதி யோடுடன்
கொண்டகோலங் குளிர்கங்கை
தங்குங்குருள் குஞ்சியுள்
உண்டுபோலும் மெனவைத்து
கந்தவொரு வற்கிடம்
கண்டல்வேலி கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே.
2.116. 4
வண்டுகள் பாடுமாறு மலர்ந்த கொன்றை மலர் மாலையை இளம்பிறையோடு ஒருசேர அணிந்து, சுருண்ட சடையுள் குளிர்ந்த கங்கையை ஐயப்படுமாறு மறைத்துவைத்து, மகிழ்ந்த இறைவனுக்கு இடம், தாழைவேலி சூழ்ந்ததும் உப்பங்கழிகள் நிறைந்ததும் ஆகிய கடல் நாகைக்காரோணமாகும்.
2729 வார்கொள்கோலம் முலைமங்கை
நல்லார்மகிழ்ந் தேத்தவே
நீர்கொள்கோலச் சடைநெடு
வெண்திங்கள் நிகழ்வெய்தவே
போர்கொள்சூலப் படைபுல்கு
கையார்க் கிடமாவது
கார்கொளோதங் கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே.
2.116. 5
நல்லவர் மகிழ்ந்தேத்த, கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையோடு கூடிய அழகோடு, தண்மையான அழகிய சடையில் நீண்டநிலாக்கதிர்களைப் பரப்பும் இளம்பிறை விளங்கப் போருடற்றும் சூலப்படையைக் கையின்கண் கொண்டுவிளங்கும் சிவபிரானுக்குரிய இடம் ஓதம் பெருகும் கரிய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக் காரோணமாகும்.
2730 விடையதேறிவ் விடவர
வசைத்தவ் விகிர்தரவர்
படைகொள்பூதம் பலபாட
ஆடும்பர மரவர்
உடைகொள்வேங்கை யுரிதோ
லுடையார்க் கிடமாவது
கடைகொள்செல்வங் கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே.
2.116. 6
விடைமீது ஏறி வருபவனும், விடம்பொருந்திய பாம்பை இடையில்கட்டிய விகிர்தனும், பூதப்படைகள் பாட ஆடும் பரமனும், புலித்தோலை உடையாக உடுத்தவனும் ஆகிய சிவபெருமானுக்குரிய இடம், மீன்களாகிய செல்வங்கள் நிறைந்த கழிசூழ்ந்த கடல்நாகைக்காரோணமாகும்.
2731 பொய்துவாழ்வார் மனம்பாழ்
படுக்கும் மலர்ப்பூசனை
செய்துவாழ்வார் சிவன்சேவடிக்கே
செலுஞ் சிந்தையார்
எய்தவாழ்வார் எழில்நக்க
ரெம்மாற் கிடமாவது
கைதல்வேலி கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே.
2.116. 7
மனத்தைப் பாழ்படுத்தி வாழும் பொய்ம்மை வாழ்வுடையாரும், சிவன் சேவடிக்கே செல்லும் சிந்தையராய் மலர் தூவிப் பூசனைசெய்து வாழ் அடியவரும் தம்மை எய்தவாழ்வாராகிய அழகிய பெருமானுக்கு இடம், தாழைவேலியையும் உப்பங் கழிகளையும் உடைய கடல் நாகைக்காரோணமாகும்.
2732 பத்திரட்டி திரடோ
ளுடையான் முடிபத்திற
வத்திரட்டி விரலா
லடர்த்தார்க் கிடமாவது
மைத்திரட்டிவ் வருவெண்டிரை
மல்கிய மால்கடல்
கத்திரட்டுங் கழிசூழ்
கடனாகைக் காரோணமே.
2.116. 8
இருபது தோள்களை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியச் சிவந்த கால் விரல்களால் அடர்த்த பெருமானுக்குரிய இடம், கரிய மணலைத்திரட்டி வரும் வெண்திரைகளை உடைய பெரியகடலைச் சூழ்ந்துள்ள கழிகள் ஒளிசிறந்து ஒலியெழுப்பும் கடல் நாகைக்காரோணமாகும்.
2733 நல்லபோதில் லுறைவானு
மாலுந் நடுக்கத்தினால்
அல்லராவ ரெனநின்ற
பெம்மாற் கிடமாவது
மல்லலோங்கிவ் வருவெண்டிரை
மல்கிய மால்கடல்
கல்லலோதங் கழிசூழ்
கடனாகைக் காரோணமே.
2.116. 9
நல்ல தாமரை மலரில் உறையும் நான்முகனும், திருமாலும் நடுக்கத்தால் இவரே சிவபரஞ்சுடர் எனவும் அல்லர் எனவும் ஐயுற நின்ற பெருமானுக்குரிய இடம், வளமோங்கிவரும் வெள்ளிய அலைகள் நிரம்பிய பெரிய கடலினது ஒலிக்கும் ஓதங்களையுடைய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக்காரோணமாகும்.
2734 உயர்ந்தபோதின் னுருவத்
துடைவிட் டுழல்வார்களும்
பெயர்ந்தமண்டை யிடுபிண்ட
மாவுண் டுழல்வார்களும்
நயந்துகாணா வகைநின்ற
நாதர்க் கிடமாவது
கயங்கொளோதங் கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே.
2.116. 10
தாமரைமலர் போன்று சிவந்த கல்லாடையை உடுத்தவர்களும் உடையின்றித் திரிபவர்களும் கையில் ஏந்திய மண்டையில் பிறர் இடும் பிச்சையை உணவாகக் கொண்டு உழல்பவரும் ஆகிய புத்தர்களும் சமணர்களும் விரும்பிக் காணாதவாறு நின்ற பெருமானுக்கு உரிய இடம் ஆழமும் நீர்ப் பெருக்கும் உடைய கழிகள் சூழ்ந்து விளங்கும் கடல்நாகைக் காரோணமாகும்.
2735 மல்குதண்பூம் புனல்வாய்ந்
தொழுகும்வயற் காழியான்
நல்லகேள்வித் தமிழ்ஞான
சம்பந்தன்நல் லார்கள்முன்
வல்லவாறே புனைந்தேத்துங்
காரோணத்து வண்தமிழ்
சொல்லுவார்க்கும் இவைகேட்ப
வர்க்குந்துய ரில்லையே.
2.116.d
நீர்நிறைந்த வயல்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றியவரும் நல்ல கேள்வியை உடையவரும் ஆகிய தமிழ் ஞானசம்பந்தர் நல்லோர்கள்முன் வல்லவாறு பாடிய காரோணத்துத் திருப்பதிகமாகிய இவ்வண்தமிழைச் சொல்பவர்கட்கும் கேட்பவர்கட்கும் துன்பம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
2.116.திருநாகைக்காரோணம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|