|
||||||||
இரண்டாம் திருமுறை-7 |
||||||||
2.007.திருவாஞ்சியம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வாஞ்சியநாதர்.
தேவியார் - வாழவந்தநாயகியம்மை.
1536 வன்னி கொன்றைமத மத்த
மெருக்கொடு கூவிளம்
பொன்னி யன்றசடை யிற்பொலி
வித்தபு ராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை
செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட
மாக வுகந்ததே.
2.007. 1
வன்னியிலை கொன்றைமலர் ஊமத்தம் மலர் வில்வம் ஆகியவற்றைப் பொன்போன்ற தம் சடையில் சூடிய பழமையாளரும், என்னை அடிமையாகக் கொண்டவரும் ஆகிய சிவபிரான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பிய ஊர், வரிவண்டுகள் ‘தென்ன’ என்ற ஒலிக் குறிப்போடு இசைபாடும் திருவாஙசியமாகும்.
1537 கால காலர்கரி கானிடை
மாநட மாடுவர்
மேலர் வேலைவிட முண்டிருள்
கின்ற மிடற்றினர்
மாலை கோலமதி மாடமன்
னுந்திரு வாஞ்சியம்
ஞாலம் வந்து பணியப்பொலி
கோயில் நயந்ததே.
2.007. 2
காலனுக்குக் காலர்; கரிந்த இடுகாட்டில் சிறந்த நடனம் புரிபவர்; எப்பொருட்கும் எல்லா உயிர்கட்கும் மேலானவர்; கடலிடைத்தோன்றிய நஞ்சினை உண்டு இருள்கின்ற கண்டத்தை உடையவர்; அச்சிவபிரான், மாலைக்காலத்தே தோன்றும் அழகிய மதி உச்சியில் பொருந்தும் மாடவீடுகள் நிறைந்த திருவாஞ்சியத்தில் உள்ள அழகிய கோயிலை, உலகோர் வந்து தம்மைப் பணிந்து அருள் பெறுமாறு விரும்பி விற்றிருந்தருளுகின்றார்.
1538 மேவி லொன்றர் விரிவுற்ற
விரண்டினர் மூன்றுமாய்
நாவி னாலருட லஞ்சின
ராறரே ழோசையர்
தேவி லெட்டர்திரு வாஞ்சிய
மேவிய செல்வனார்
பாவந் தீர்ப்பர்பழி போக்குவர்
தம்மடி யார்கட்கே.
2.007.3
விரும்பி வழிபடின் நீ நான் என்ற வேற்றுமை யின்றி அந்நியம் ஆவர். ஒன்றாய் அரும்பிய அவர் பலவாய் விரியுமிடத்து, சிவம் சத்தி என இரண்டாவர். ஒன்றாய் வேறாய் உடனாய் மூன்றாவர். நாவினால் நான்கு வேதங்களை அருளியவர். பரை ஆதி இச்சை ஞானம் கிரியை என்னும் ஐவகைச் சத்தியாகிய திருவுருவை உடையவர். ஆறுகுணங்களை உடையவர். ஏழு ஓசை வடிவினர். அட்டமூர்த்தங்களாய் விளங்குபவர். இத்தகையவராய்த் திருவாஞ்சியத்தில் எழுந்தருளியுள்ள செல்வனார் தம் அடியவர்களின் பாவங்களைத் தீர்ப்பர். அவர் அடியவர்கட்கு வரும் பழியைப் போக்குபவர்.
1539 சூல மேந்திவளர் கையினர்
மெய்சுவண் டாகவே
சால நல்லபொடிப் பூசுவர்
பேசுவர் மாமறை
சீல மேவுபுக ழாற்பெரு
குந்திரு வாஞ்சியம்
ஆல முண்டவடி கள்ளிடம்
ஆக வமர்ந்ததே.
2.007.4
சூலம் ஏந்திய நீண்ட கையினை உடையவர்; தம் திருமேனிக்குப் பொருத்தமாக நல்ல திருநீற்றை மிகுதியாகப் பூசுபவர்; சிறந்த வேத வசனங்களைப் பேசுபவர். ஆலகாலம் உண்டருளிய அவ்விறைவர், ஒழுக்கத்தால் சிறந்தோர் வாழ்வதால் புகழ்பெற்ற திருவாஞ்சியத்தை இடமாகக் கொண்டு அமர்ந்துள்ளார்.
1540 கையி லங்குமறி யேந்துவர்
காந்தளம் மெல்விரல்
தையல் பாகமுடை யாரடை
யார்புரஞ் செற்றவர்
செய்ய மேனிக்கரி யமிடற்
றார்திரு வாஞ்சியத்
தையர் பாதமடை வார்க்கடை
யாவரு நோய்களே.
2.007.5
கையின்கண், விளங்கும் மான் கன்றை ஏந்தியவர்; காந்தள் இதழ் போன்ற மெல்லிய விரல்களை உடைய பார்வதி தேவியைத் தமது பாகமாகக கொண்டவர்; பகைவராகிய திரிபுரத்து அசுரரின் முப்புரங்களை அழித்தவர்; சிவந்த திருமேனியையும் கரிய மிடற்றையும் உடையவர்; இத்தகையோராய்த் திருவாஞ்சியத்துள் எழுந்தருளிய தலைவராகிய சிவபிரான் திருவடிகளை அடைபவர்களைப் போக்கற்கு அரிய நோய்கள் எவையும் அடையா.
1541 அரவம் பூண்பரணி யுஞ்சிலம்
பார்க்க வகந்தொறும்
இரவி னல்லபலி பேணுவர்
நாணிலர் நாமமே
பரவு வார்வினை தீர்க்கநின்
றார்திரு வாஞ்சியம்
மருவி யேத்தமட மாதொடு
நின்றவெம் மைந்தரே.
2.007.6
அரவை அணிகலனாகப் பூண்பவர்; காலில் அணியும் சிலம்பு ஆரவாரிக்க வீடுகள் தோறும் நாணிலராய் இரவிற் சென்று நல்ல பலியைப் பெறுபவர்; தம் திருப் பெயர்களைக் கூறிப் பரவுவார் வினைகளைத் தீர்க்கத் திருவாஞ்சியத்துள் நாம் சென்று வழிபடுமாறு உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ளார்.
1542 விண்ணி லானபிறை சூடுவர்
தாழ்ந்து விளங்கவே
கண்ணி னாலநங் கன்னுட
லம்பொடி யாக்கினார்
பண்ணி லானவிசை பாடன்மல்
குந்திரு வாஞ்சியத்
தண்ணலார் தம்மடி போற்றவல்
லார்க்கில்லை யல்லலே.
2.007.7
வானகத்தே தோன்றிய பிறைமதியைத் தம் திருமுடியில் தங்கி விளங்குமாறு சூடியவர்; நெற்றிக் கண்ணால் மன்மதனின் உடலை நீறாக்கியவர். பண்களில் பொருந்திய இசையோடு பாடும் புகழ்பொருந்திய திருவாஞ்சியத்துள் விளங்கும் அவ்வண்ணலாரின் திருவடியைப் போற்றவல்லார்க்கு அல்லல் இல்லை.
1543 மாட நீடுகொடி மன்னிய
தென்னிலங் கைக்குமன்
வாடியூ டவரை யாலடர்த்
தன்றருள் செய்தவர்
வேட வேடர்திரு வாஞ்சிய
மேவிய வேந்தரைப்
பாட நீடுமனத் தார்வினை
பற்றறுப் பார்களே.
2.007. 8
நீண்ட கொடிகள் நிலைத்துள்ள மாட வீடுகளைக் கொண்ட தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணன் வாடி வருந்தக் கயிலை மலையால் அவனை அடர்த்துப்பின் அருள்செய்தவர்; அருச்சுனன் பொருட்டு வேட்டுவக் கோலம் தாங்கியவர். திருவாஞ்சியத்துள் எழுந்தருளிய வேந்தர். அவ்விறைவரைப்பாட எண்ணுவார், வினை, பற்று ஆகியன நீங்கப் பெறுவர்.
1544 செடிகொ ணோயினடை யார்திறம்
பார்செறு தீவினை
கடிய கூற்றமுங் கண்டக
லும்புகல் தான்வரும்
நெடிய மாலொடய னேத்தநின்
றார்திரு வாஞ்சியத்
தடிகள் பாதமடைந் தாரடி
யாரடி யார்கட்கே.
2.007.9
நீண்டுயர்ந்த திருமாலும் பிரமனும் தம்மை வணங்குமாறு ஓங்கிநின்ற திருவாஞ்சியத்து அடிகளாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்த அடியவர்களின் திருவடிகளை அடைந்தவர்கள், துன்பம் தரும் நோய்களை அடையார். துன்புறுத்தும் தீவினைகளால் மாறுபடார். கொடிய கூற்றுவனும் அவர்களைக்கண்டு அஞ்சி அகல்வான். சிவகதி அவர்களைத் தேடி வரும்.
1545 பிண்ட முண்டுதிரி வார்பிரி
யுந்துவ ராடையார்
மிண்டர் மிண்டுமொழி மெய்யல
பொய்யிலை யெம்மிறை
வண்டு கெண்டிமரு வும்பொழில்
சூழ்திரு வாஞ்சியத்
தண்ட வாணனடி கைதொழு
வார்க்கில்லை யல்லலே.
2.007.10
பிறர் திரட்டித்தந்த சோற்றை உண்டு திரியும் சமணரும், செந்நிற ஆடையைப் போர்த்துழலும், அவரின் வேறுபட்ட புத்தரும் ஆகிய மிண்டர்கள் வலிந்துகூறும் உரைகள் மெய்யல்ல. பொய்யிலியாகிய எம் இறைவன் வண்டுகள் கிளறி உண்ணும் தேன் நிறைந்த மலர்களை உடைய பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்துள் எழுந்தருளியுள்ளான். அண்டம் முழுவதும் வாழும் அவன் திருவடிகளைக் கைகளால் தொழுது வணங்குவார்க்கு அல்லல் இல்லை.
1546 தென்றல் துன்றுபொழில் சென்றணை
யுந்திரு வாஞ்சியத்
தென்று நின்றவிறை யானை
யுணர்ந்தடி யேத்தலால்
நன்று காழிமறை ஞானசம்
பந்தன செந்தமிழ்
ஒன்று முள்ளமுடை யாரடை
வாருயர் வானமே.
2.007.11
தென்றல், பொழிலைப் பொருந்தி அதன் மணத்துடன் சென்று வீசும் திருவாஞ்சியத்துள் என்றும் நீங்கா துறையும், இறைவனியல்பை உணர்ந்து அவனடிகளை ஏத்தித் துதித்தலால், நன்மை தரும் காழிப்பதியுள் மறைவல்லவனாய்த் தோன்றிய ஞானசம்பந்தனின் இச்செந்தமிழ்ப் பாடல்களில் ஈடுபடும் மனம் உடையவர்கள், உயரிய வீடு பேற்றை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
2.007.திருவாஞ்சியம் |
||||||||
by Swathi on 30 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|